Monday, January 21, 2013

னைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

இதை செய்ய வேண்டும், அதை நிறுத்த வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என பல்வேறு உறுதிமொழிகளுடன் ஒவ்வொரு புத்தாண்டையும்  தொடங்கி, அந்த உறுதிமொழிகளெல்லாம் காலண்டர் தாள்களைவிடவும் வேகமாய் உதிர்ந்து மறைந்த வேகத்தில் ஆண்டின் இறுதியை நெருங்கி, மீன்டும் ஒரு புத்தாண்டினை புது சத்தியத்துடன் தொடங்கி...

ஆகையால் தோழர் தோழிகளே... உறுதியற்ற உறுதிமொழிகளும் சாத்தியபடாத சத்தியங்களும் வேண்டாம் !

மகிழ்ச்சியாய் இருப்போம் ! இந்த ஆண்டு முழுவதையும் சந்தோசமாய் கழிப்போம் !!

நீண்ட ஆயுள், ஆரோக்யம், செல்வம் என்றெல்லாம் வாழ்த்துகிறோமே தவிர சந்தோசமாக இருங்கள், அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள், உங்களை சுற்றி உள்ள இவ்வுலகின் அற்புதங்களை உணருங்கள் என வாழ்த்துவது அரிது !

சற்றே ஓடுவதை நிறுத்திவிட்டு யோசித்தோமானால் இந்த நொடி மட்டுமே நிரந்தரம் என்பது புரியும் ! நிலையற்ற இவ்வாழ்க்கையின் நிலயான இத்தருணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இன்னும் நிறைய நேரமிருக்கிறது இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன என்றே நினைக்கிறோம். ஆனால் நாளையே இந்த வாழ்க்கை நின்றுவிடுமானால்... நீங்கள் சாதிக்க நினைத்தையெல்லாம் சாதித்து விட்டீர்களா ? நீங்கள் நேசிப்பவர்களிடம் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லி விட்டீர்களா ? நான் எப்படி வாழ நினைத்தேனோ அப்படி வாழ்ந்துவிட்டேன் அல்லது வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என நம்மில் எத்தனை பேரால் சொல்ல முடியும் ?!

உங்களுக்கு நல்லது என நீங்கள் மனதில் வரித்துகொண்ட கற்பனைகளை தேடி நித்தமும் ஓடுவதை சற்றே நிறுத்திவிட்டு நிதானித்து பார்த்தோமானால் நம்மை சுற்றி நமக்காக நிகழ்ந்து கொண்டிருக்கும் நல்லவைகள் புலப்படும் ! நம்மை தேடிவரும் நன்மைகளை நாம் உணராதது புரியும் !

உங்களின் பெற்றோர்களை கொண்டாடுங்கள். வயோதிகத்தின் நிழல் வேகமாய் படரும் அவர்கள் உங்களுடன் இருக்கும் பொழுதை பெருமையுடன் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

உங்க்ளை இன்னும் பிள்ளைகளாய் நேசிப்பது அவர்கள் மட்டும்தான். அவர்கள் உங்களை வளர்த்த விதத்தில், உங்களுக்கு அளித்த வசதிகளில் குறைகள் இருந்திருக்கலாம், ஆனால் அவர்களால் முடிந்ததை முழு மனதுடன் உங்களுக்கு அளித்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றும் அவர்கள் உங்களின் பின்னால் இருக்கிறார்கள். உங்களின் வெற்றிகளை பாராட்ட ! தோல்வியின் போது தோள்தொட்டு தூக்க ! உங்களின் மகிழ்ச்சியை அவர்களுடையதாய் கொண்டாட ! உங்களின் துக்கத்தை தாங்கள் ஏற்று கொள்ள !

உங்களின் குழந்தைகளுடனான நேரத்தை அவர்களுக்காக முழுமையாய் செலவிடுங்கள். மிக வேகமாய் வளரும் அவர்களின் சிறகுகள் விரிந்து அவர்களின் வாழ்க்கைக்காக அவர்கள் பறந்து விடுவார்கள்.

நம் குழந்தைகளை கண்காணிப்பதிலும், கண்டிப்பதிலும், அறிவுரைகள் கூறுவதிலுமே அவர்களுக்கான நேரத்தை செலவிடும் நாம் நம் குழந்தைகளை பற்றி பெருமைபட்டது எப்போது ? அவர்களை கடைசியாய் பாராட்டியது எப்போது ? அவர்களின் வளர்ச்சிக்கு தேவை நம் ஊக்கம். அது மட்டும் தான் நாம் நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அளிக்கும் உறுதியான அஸ்த்திவாரம்.

காதலனோ காதலியோ அல்லது கணவனோ மனைவியோ, உங்கள் துணைக்கான நேரத்தை அவர்களுடன் முழுமையாக செலவிடுங்கள்.

நம் வேலை பளு, குடும்ப தேவைகள், அன்றாட காரியங்கள் என பலவற்றுக்கு மத்தியில் நமக்கென காத்திருக்கும், நமக்கென வாழும் நம் துணையின் தேவைகளை பல நேரங்களில் மறந்து விடுகிறோம் ! ஆனால் வாழ்க்கை படகு ஒரு துடுப்பை விட இரு துடுப்புகளால் செலுத்தபடும்போது சீராய் போகும் என்பதை மறந்துவிடாதீர்கள் !பரஸ்பர புரிதலும், ஒற்றுமையும், விட்டுகொடுத்தலும் இல்லையென்றால் இல்லறத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் !

நண்பர்களை நினைவில் கொள்ளுங்கள் !

எந்த எதிர்ப்பார்ப்புகளும் அற்ற பால்ய பருவத்தில் நம் தோள் மீது கைபோட்டு நடந்தவர்கள் தொடங்கி, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்முடன் இணைந்தவர்கள் எத்தனைபேர் ? ஓடி வந்து உதவியவர்கள் எத்தனை பேர் ? அவ்வப்போது அவர்கள் நமக்காக நம் பாதையை மறைத்த தடைகளை நகர்த்தியிராவிட்டால் நாம் இன்று இங்கிருந்திருப்போமா ? தவறான புரிதல்களால் அவர்களுக்கும் நமக்குமான உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் ! தொடர்பு நின்று போயிருக்கலாம் ! ஆனால் அவர்களுடன் நாம் கழித்த இனிய தருணங்கள் நம் மனங்களில் கல்வெட்டுகளாய் பதிந்தேதான் இருக்கும் !

அந்த நண்பர்களை மீன்டும் சந்திக்க நேர்ந்தால் முதல் புன்னகை நம்முடையதாக இருக்கட்டும் !

மொத்தத்தில் இந்த உலகத்தை, அது நாம் கேட்காமலே நமக்கு கொடுத்திருக்கும் கொடைகளை நேசிப்போம் ! மகிழ்ச்சியாக இருப்போம் ! நிரந்தரமற்ற இவ்வாழ்வின் நிரந்தரமான இத்தருணத்தை நிறைவாக அனுபவிப்போம் ! நம்மை சுற்றியுள்ள இவ்வுலகின் அற்புதங்களை ரசிப்போம் ! நம் அன்பினால் இவ்வுலகுக்கு இன்னும் கொஞ்சம் அழகூட்டுவோம் !

வாழ்க்கை அழகானது ! அதனை அழகாக நீங்கள் நினைக்க நினைக்க, அது இன்னும் அழகாக உருவெடுக்கும் ! ஒரு குழந்தையாய் விளையாடுங்கள் ! பைத்தியமாய் நடனமாடுங்கள் ! கிறுக்கனைபோல் கத்தி ஆழ சுவாசியுங்கள் !!!

இவ்வுலகம் அற்புதங்கள் நிரம்பியது ! இத்தருணத்தில் வாழ்வதால் மட்டுமே அந்த அற்புதங்களை உணர முடியும் !

ஒவ்வொரு விடியலையும் ஒரு புத்தாண்டாய் கொண்டாடுங்கள் !

 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.