Friday, April 18, 2014

தேர்தல் திருவிழா !

ந்தியாவை பொறுத்தமட்டில் தேர்தல் என்பது இத்தேசத்தை ஒன்றினைக்கும் அதன் சினிமாவை போன்றே ஆடல், பாடல், கொண்டாட்டங்களுடன், காமெடி, குத்துவெட்டு, ஆக்சன்களுடன், பெரும்பாலும் எதிர்பாராத முடிவை கொண்ட மாபெரும் ஜனநாயக திருவிழா ! உலகின் மிகபெரிய ஜனநாயக தேசத்தின் தேர்தல் அதன் உண்மையான காரணங்களுக்காக அல்லாமல் வழிதவறிய வேறுபல காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது ! முக்கியமாய் அதன் மூலம் ஒரு சில மாதங்களுக்கு செழிக்கும் கறுப்பு பொருளாதாரம் !

தொண்டரடிபொடிகளுக்கு கிடைக்கும் பிரியாணி பொட்டலங்களும் தாராள டாஸ்மார்க் தீர்த்தமும் ! நடுத்தரவர்க்கத்துக்கோ டிவி பெட்டிக்கும் முன்னாலான பொழுதுபோக்கை தாண்டி,

" அஞ்சு வருசம் ஏஸியில இருந்தாலும் இப்ப எங்ககிட்ட ஓட்டு வாங்க வேகாத வெயிலில நடந்துதானே வாரீக "


என்பதான சாடிஸ்ட் மகிழ்ச்சி ! ஐந்து வருட ஏமாற்றங்கள் அனைத்தையும் ஒரே ஓட்டில் புரட்டிபோட முயலும் நப்பாசை !

எதிலும் கலக்காமல் ஒதுங்கி நின்றுகொண்டு அனைத்தையும் குறைகூறும் அறிவுஜீவிகள் !

கெள்கை என உச்சரிக்கும் தலைவரிடம் கொள்கை கேட்டு பேட்டி, பவர் ஸ்டாருக்கும் பக்கம் ஒதுக்கி கருத்து கேட்பு, எரிந்த கட்சி, எரியாத கட்சி, எரிக்கும் கட்சி என அனைத்தையும் அலசி கழுவும் மீனில் நழுவும் மீனாய் ஒரு கருத்துகணிப்பு வெளியிட்டு, இறுதி முடிவை வாக்காளரிடமே விட்டுவிடும் ஊடகங்கள் !

எரியும் கொள்ளியில் ஏதோ ஒரு கொள்ளி ஜெயித்து ஆட்சி அமைத்த சில நாட்களிலேயே டிவி தொகுப்பாளினிகள்,

" ம்ம்ம்...ஹலோ சொல்லுங்க ?! நான் அழகா இருக்கேனா.... தேங்யூ தேங்யூ ! "

என நிகழ்ச்சிகளுக்கு திரும்ப, எல்லாமே ஒரே கதைதானோ என தோன்றும் பல டிவி சீரியல்களுக்கு உச் கொட்டிய நேரம் போக, ஒரு கோடி வெல்வதிலும், தமிழகத்தின்  மாபெரும் குரல் தேடலிலும் மும்முரமாகிவிட்ட பொதுஜனம் ! கள்ளகாதலுனுக்காக கணவனை கொலை செய்த மனைவி பற்றிய பரபரப்பு செய்திக்கு நடுவே அவ்வப்போது ஊடகங்கள் அரசியல் ஊழல்களை வெளிச்சமாக்கும் நேரங்களில் மட்டுமே ஜனநாயக உணர்ச்சி தலைதூக்கும் !

சிறுவயதில் தேர்தல் பற்றிய முதல் செய்திகள் வெளியாகும்போதே எங்களுக்குள் பரபரப்பு பற்றிகொள்ளும் ! வீட்டின் பெரியவர்கள் எந்த கட்சியோ நாங்களும் அந்த கட்சி ! எங்களின் கருத்துகணிப்பு சுவர் விளம்பரங்களை வைத்துதான் ! எந்த கட்சி அதிக சுவர் விளம்பரங்களை வரைந்திருக்கிறதோ அந்த கட்சிதான் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை !

பெரிய கட்சிகளின் அலப்பறைகளுக்கு மத்தியில் எங்கள் ஊரின் அமெச்சூர் அப்பாடக்கர் வேட்பாளர்களின் அலம்பலுக்கும் பஞ்சமிருக்காது !

" நான் மட்டும் ஜெயிக்கலேன்னா தொழில் செய்ய முடியாதும்மா... ! "

எங்கள் தெருவின் பால்காரரோடு அவரின் பசுமாடும் ஓட்டு கேட்டு வரும் !

" எந்த தேர்தல்ன்னாலும் நம்ம ஓட்டு எம்.ஜி.ஆருக்குதாம்மா... ஆனா சங்க தலைவரு நின்னுட்டாருல்ல... தலைவனை ஜெயிக்க வைங்கம்மா ! "

 ரிக்சா ஓட்டுனர்கள் சங்க தலைவருக்கு ஓட்டு சேகரிக்கும் ரிக்சாக்காரர் பாண்டியன் !

அறிவு ஜீவி பைஜாமாவுடன் நண்பர்கள் புடை சூழ பவனிவரும் நந்தகுமார் அண்ணன் !

" பாட்டி இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க... காலேஜ் பஸ்சை நம்ம தெருவுக்கே திருப்பிவிடறேன் ! "


ஜன்னல் ஓரத்தில் தெரியும் வனஜாக்காவை பார்த்து பேசியபடியே நந்தகுமார் அண்ணன் கொடுக்கும் துண்டு சீட்டை வெடுக்கென பிடுங்கும் பாட்டி,

 " பஸ்சை திருப்பற முகரகட்டையை பாரு ! முதல்ல உன் மூஞ்சை திருப்பனும்டா ! "

அண்ணன் நகர ஆரம்பித்தவுடனேயே நோட்டீசை சாக்கடையில் வீசியடிக்கும் !

" யாருகிட்ட வந்து கொடுக்கற ? தேர்தல் ஆபீசர்கிட்ட சொன்னா என்ன நடக்கும் தெரியும்ல ? "

பூத் ஸ்லிப் கவரை கொடுக்கவந்தவரிடம் தாத்தா கத்திகொண்டிருக்க,

" ஐயோ... கவரு மாறிடிச்சிங்க... "

என பம்மி கொண்டிருந்தார் வந்தவர்.


சிறிது நேரம் கழித்து,

" நண்பா ! படத்துக்கு போலாமா ?! "

என்றபடி வந்த எதிர்வீட்டு காதரின் சட்டை பையில் நீட்டிகொண்டிருந்தது இருபது ரூபாய் தாள் !

" எங்க வீட்டுக்கு வந்த பூத் ஸ்லிப் கவரை நான் வாங்கிட்டேன் ! "

என்றபடி காலரை தூக்கிவிட்டுக்கொண்டான் !  ! தாத்தாவின் கோபத்துக்கான காரணம் அப்போதுதான் புரிந்தது !  எங்களுக்கு " பணநாயகம் " அறிமுகமான நாளது !

ஏதாவது ஒரு பெரிய கட்சியின் வேட்பாளர்தான் எங்கள் தொகுதியில் ஜெயிப்பார். ஜெயித்தது யாராக இருந்தாலும் நன்றி சொல்ல ஊர்வலம் வருபவரை நிறுத்தி பெரிய மாலை ஒன்றை போட்டுவிடுவார் தாத்தா !

" ம்ம்ம்... இனிமே அஞ்சு வருசத்துக்கப்புறம் ஓட்டுகேட்டுதான் வருவ... ஏதாச்சும் நல்லதா பண்ணு ! "

தாத்தாவின் லொல்லுக்கும் பெரிய கும்பிடாய் போட்டுவிட்டு போனவர் அநேகமாய் அடுத்த தேர்தலின்போதுதான் திரும்புவார் !

" என்னா...? உம்ம குடும்பத்துக்காரன் மொத்தமா போட்டிருந்தாகூட அதிக ஓட்டு கிடைச்சிருக்கனுமே ? "

தாத்தாவின் கேள்வியையே காதில் வாங்காதவர்போல பாலை ஊற்றிவிட்டு ஓடுவார் பால்காரர் !

ரிக்சாக்காரர் பாண்டியன் ஒரு வாரத்துக்கு யாருடனும் பேசமாட்டார் !

" என்னாடீ ? இவ்ளோ கம்மி மார்க்கு ? "

ரவிகடை வாசலில் சிகரெட் பிடிக்கும் நந்தகுமார் அண்ணனை கடைக்கண்ணால் பார்த்தபடியே எக்ஸாமே நடக்காத சமயத்தில் மார்க்கை பற்றி பேசும் வனஜாக்கா !

" நாமெல்லாம் யூத்துடா... இன்னும் காலம் இருக்குடா வெல்ல ! "

டி.ராஜேந்தர் பாணியில் நண்பனிடம் சிலும்புவார் அண்ணன் !

தேர்தலின் இறுதி முடிவு தெரிந்த சிறிது நேரத்தில் தன் ஸ்கூட்டரில் ஜெயித்த கட்சியின் கொடியும் மாலையுமாய் கிளம்பிவிடுவார் லோக்கல் காண்ட்ராக்டர் !

" நம்ம பிழைப்பு ஆட்சியில இருக்கறவங்களாலதானே ! என்ன நான் சொல்றது ? "

என சில நாட்களுக்கு பார்ப்பவர்களிடமெல்லாம் கூறிக்கொண்டு திரிவார் !

" டேய் ! அங்கன பாருடா ! நாமதான் கட்சிகட்டி அடிச்சிக்கிட்டிருக்கோம்... அவங்க பிரெண்ட்ஸ்தான்டா ! தேர்தல்ல எப்டி திட்டிக்கிட்டாங்க... "

கல்யாண வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிகொண்டிருந்தபோது கீழே ஒதுக்குபுறமாய் தோளில் கைபோட்டு பேசிக்கொண்டிருந்த ஜெயித்த எம் எல் ஏவையும் அவரிடம் தோற்ற கட்சியின் பிரமுகரையும் காட்டி எங்களுக்கு ஜனநாயக அரசியல் ஒற்றுமையை அறியவைத்தான் பாலகிருஸ்ணா !



பிரான்ஸ் நாட்டின் தேர்தல் எனக்கு இன்றுவரை ஆச்சரியம் ! அதிபர் தேர்தல் அறிவிக்கபட்ட பிறகு தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் மட்டுமே களைகட்டும். கட்சிகளை பற்றியும் கட்சிகளின் தலைவர்கள், அவர்களின் கொள்கைகள் பற்றியும் அரசியல் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் நடக்கும். முதல் வாரம் நீல கட்சி என்றால் அடுத்த வாரம் பாராபட்சமின்றி ரோஸ் கட்சி பற்றிய கலந்துரையாடல். இங்கே அம்மா, அய்யா, டாக்டர், கேப்டன் அனைவருக்குமே அரசு தொலைக்காட்சியில் ஒரே அளவு அலவன்ஸ் நேரம்தான் ! தினசரி, வார, மாத இதழ்களிலும் அதே !

தேர்தல் நெருங்க, நெருங்க கட்சிகளின் பெரிய தலைகள் தொலைக்காட்சி பேட்டிகளில் தோன்றுவார்கள். பேட்டியின் நடுவே பிடிக்காத கேள்விக்கு எழுந்து போவதெல்லாம் சாத்தியப்படாது ! தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிபரும், அவரை எதிர்த்து பிரதானமாய்  போட்டியிடுபவரும் அடுத்தடுத்து பேட்டியளிப்பார்கள். இருவருக்கும் ஒரே நேரம். பேட்டி காண்பவர் அதிபரை Monsieur le President ( Mister President ) என்றே விளிப்பார் ! உச்சகட்டமாய் இரு வேட்பாளர்களும் நேருக்குநேர் பங்கேற்கும் விவாதம். நொடிகளை முதற்கொண்டு கணக்கிட்டு இருவரும் பேசுவதற்கு சம உரிமை !

ஊர் சந்தைகளில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகிப்பது மட்டுமே தன்னார்வலர்கள் என விளிக்கப்படும் தொண்டர்களின் வேலை. பெரும்பாலும் அனைத்து கட்சியினரும் ஒரே இடத்தில் நின்று அவரவர் கட்சியின் பிரசுரங்களை விநியோகிப்பார்கள். சோடா பாட்டில்களெல்லாம் பறக்காது ! நகராட்சி மண்டபங்களில் ஆளுக்கு ஒரு வாரம் என கட்சியினர் கூட்டங்களை ஏற்பாடு செய்வார்கள். நூறு இருநூறு பேர் அமரக்கூடிய மண்டபங்களின் பெரும்பகுதி காலியாக இருக்கும். பேச வரும் தலைவர் கோபித்துகொண்டெல்லாம் போக மாட்டார் !

தேர்தல் இரண்டு கட்டமாக நடக்கும்.தேர்தல் நாளில் ஊர்களின் அனைத்து பள்ளிகளும் வாக்குச்சாவடிகளாக மாற்றப்பட்டிருக்கும். பூத் அதிகாரி, கட்சிகளின் பிரதிநிதிகள், மற்றும் இரண்டு பொது சாட்சிகள் தவிர ஈ காக்காய் இருக்காது ! சாதாரண நாட்களில் தென்படும் போலீஸ் தலைகளை கூட அன்று காணமுடியாது. முதல் சுற்றில் ஐம்பது சதவிகிததுக்கும் அதிகமாக ஒருவர் வாக்குகள் பெற்றால், அவர் வெல்வார். இல்லயென்றால் அதிக வாக்குகள் பெற்ற முதல் இரண்டு பேர் அடுத்தகட்ட தேர்தலுக்கு போட்டியிடுவார்கள். மற்ற கட்சிகள் தங்களின் கொள்கைகளுக்கு ஏற்றபடி இருவரில் ஒருவரை ஆதரிக்கும் அல்லது அவரவர் விருப்பத்துக்கு தேர்வு செய்யும்படி தம் கட்சியினரை அறிவுறுத்தும் !

நான் வேலை பார்க்கும் கம்பெனியின் எல்க்ட்ரீசியன் ஆளும்கட்சியின் நீல கலர் உறுப்பினர் அட்டையை பாக்கெட்டில் சொருகியிருப்பான். ஒரு வருடத்துக்கு முன்னால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு வந்தவனின் பாக்கெட்டில் ஆட்சியை பிடித்த ரோஸ் கட்சியின் உறுப்பினர் அட்டை !

" இனி நாலு வருசத்துக்கு இதுதான் ! "

என அவன் கண்ணடிக்க, எனக்கோ எங்கள் ஊர் லோக்கல் காண்ட்ரக்டரின் ஞாபகம் !


" அவனா நீயி ?! "

என மனதுக்குள் வடிவேலு அங்கலாய்த்தார் !

 இன்னைக்கி சல்தா ஹைன்னு தேசிய புலம்பலா இருக்கறத நம்ம கவுண்டர்தான் அன்னைக்கே சொல்லிட்டாரே....

" அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா ! "

20 comments:

  1. 'ரொம்ப சீரியஸ் பதிவோ?' என்று நினைத்தேன்! :) பழைய நினைவுகளை நகைச்சுவையுடன் பகிர்ந்திருக்கிறீர்கள். தேர்தல் வேடிக்கைகள், இன்றளவும் அதிகம் மாறவில்லை தான்!

    ReplyDelete
    Replies
    1. சற்றே மிகைப்படுத்தபட்ட " Cliché " ரக நகைச்சுவை கட்டுரையாக தான் எழுதினேன் என்றாலும், நீங்கள் கூறியது போல இந்திய தேர்தல் வேடிக்கைகளில் அதிக மாற்றம் இல்லைதான் ! நன்றி.

      Delete
  2. உலகின் அனைத்து பகுதிகளிலும் கவுண்டரின் இந்த வேதவாக்கு செல்லும்: “அரசியல்ல இதெல்லாம் சாதாரண்மப்பா”.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே, நீண்ட சொற்பொழிவை விடவும் வலுவானது சிந்திக்க தூண்டும் ஒரு நகைச்சுவை வாக்கியம்.

      Delete
  3. ரொம்பவும் கலகலப்பான கட்டுரை. வாழ்த்துக்கள். கடைசியாக வந்த கவுண்டமணியின் பஞ்ச் கிங் விஸ்வா சொல்வதைபோல கிளாசிக்.அரசியல் மட்டுமல்ல எப்போது மூக்கு உடை பட்டாலும் யாரையும் காப்பாற்ற வருவது கவுண்டமணியின் இந்த கலக்கல் வசனம்தான்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி. இந்த கலக்கல் வசனம் இவ்வளவு பிரபலமானதற்கு காரணம் அதிலிருக்கும் உண்மை என்றாலும், அதைவிட கவுண்டர் அதனை படத்தில், ஒரு கணம் ஸ்தம்பித்து மறுகணம் சட்டென வசனத்தை Delivery செய்த பாணி மற்றும் அவரின் அலட்சியமான Body language !

      Delete
  4. என்னைப் பொறுத்த வரை நகைச்சுவையாகச் சொல்லப் பட்டாலும்.
    மனித மனங்களைத் தட்டிக் கேட்கும் கருத்துள்ள பதிவு

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஊக்கத்துக்கு நன்றி நண்பரே.

      Delete
  5. நல்ல பதிவு.அந்த நந்தகுமாரை வைத்து சின்ன காதலையும் சொல்லி விட்டீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. செய்திக்குள் இருந்த மற்றொரு செய்தியையும் உள்வாங்கி படித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.

      Delete
  6. அந்தக் கால தேர்தல் கலகலப்புக்களையும் நம்ம ஊர் தேர்தல் அளப்பரைகளையும் பிரான்ஸ் தேர்தல் கட்டுப்பாடுகளையும் சுவாரஸ்யமாய் தந்தீர்கள், பதிவில்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி.

      Delete
  7. சாமானியன் ஜீ

    ரொம்ப இயல்பா எழுதி இருக்கீங்க. படிச்சதும் மனம் இலகுவானது போல் உணர்வு. நீங்க குறிப்பிட்டது போல் தமிழக தேர்தலை நான் பார்த்ததில்லை. மிக சமீபத்தில் தான் வாக்காளனாக மாறியுள்ளேன். பணநாயகமே பிரதானம். போதாகுறைக்கு தேர்தல் கமிட்டி பல சட்டதிட்டங்கள் வேறு போட்டுள்ளார்கள். என் வாழ்வில் நடைபெறாத உங்கள் வாழ்வில் நடைபெற்றதை எட்ட நின்று வேடிக்கை பார்த்தேன் சிரித்துக் கொண்டே

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களை போன்ற இளம் வாக்காளர்கள் நினைத்தால் நம் தேசத்தின் கோமாளித்தங்களை மாற்றலாம் !

      Delete
  8. நண்பரே,

    மிகவும் இயல்பாக எழுதுகிறீர்கள்.
    அனுபவபூர்வமாக எழுதுகிறீர்கள்.

    பிரென்ச் தேர்தல்கள் குறித்து -
    இவ்வளவு இருந்தும்,
    பிரிட்டனைப் போல் - ஒழுங்கான, நிலையான அரசுகள்
    பிரான்சில் அமைவதில்லையே.....

    நான் கவனித்த மற்றொரு விஷயம் - தனி மனித பண்புகள் பற்றி
    அவர்கள் கவலைப்படுவதே இல்லை....!
    இந்திய அரசியலில் இது நடக்காது.

    நிறைய எழுத வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    காவிரிமைந்தன்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முதல் வருகை தொடர்வருகைகளாகுக காவிரிமைந்தன் அவர்களே !

      உங்களின் பின்னூட்டத்துக்கு நன்றி.

      " பிரிட்டனைப் போல் - ஒழுங்கான, நிலையான அரசுகள்
      பிரான்சில் அமைவதில்லையே..... "

      இல்லையே ! நான் அறிந்த இருபத்தைந்து வருடங்களில் இங்கு அமைந்த அனைத்து அரசுகளுமே நிலையான, ஆட்சி காலங்களை முழுமையாய் முடித்த அரசுகள்தான் ! ஆனால் பிரிட்டனின் லேபர் கட்சியை போல நிலையான கட்சிகள் கிடையாது. ஒவ்வொரு முறையும் பிரதம வேட்பாளரின் தலைமையில் கூட்டணிகள் மாறும். இந்திய ஆட்சிமுறையே பிரிட்டன் ஆட்சி முறையில் அமைந்தது என்பதால் இங்கிலாந்தின் அரசியலமைப்பை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஆனால் நெப்போலியன் காலத்தில் தொடங்கி, இதுவரையில் ஐந்து முறை அரசியல் சாசணம் திருத்தப்பட்ட பிரெஞ்சு குடியாட்சி முறை பிரிட்டனின் மாதிரிக்கு நேர் எதிர் ! இதனை விளக்க நீண்ட கட்டுரைகள் தேவை !

      " நான் கவனித்த மற்றொரு விஷயம் - தனி மனித பண்புகள் பற்றி
      அவர்கள் கவலைப்படுவதே இல்லை....! "

      உண்மைதான் ! தனிமனித சுதந்திரத்தை முன்னிலைப்படுத்தும் அவர்களின் பண்பாடும், ஒழுக்கம் சார்ந்த கோட்பாடுகளும் வேறு நிலையில் அமைந்தவை ! இந்தியர்களால் எளிதில் ஜீரணிக்கமுடியாதவை ! உதாரணம்... சமீபத்தில் பிரான்சில் இயற்றபட்ட ஓரிண திருமண சட்டம் ! ( இதனை அவசர அவசரமாக இயற்ற காரணம் மக்களை மற்ற பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பும் யுக்தி என்பதை விளக்கவும் ஒரு கட்டுரை தேவை ! இந்திய மக்களின் கண்களை கட்ட இலவசம்... பிரான்சில் ஓரின திருமணம் !! )

      நன்றி
      சாமானியன்

      Delete
  9. சகோ,
    ஒரு நண்பனின் வாழ்கையை உடனிருந்து பார்ப்பதுபோல் இருந்தது பதிவு! பதிவின் நீளத்தை பார்த்து சற்று மிரட்சியுடன் படிக்கதொடங்கினேன். ஏன்னா பேசிக்கலி நான் ரொம்ப சோம்பேறி. but படிக்கதொடங்கியவுடன் முடிச்சுட்டுதான் பார்த்தேன், அவ்ளோ பிரீன்ட்லியான நடை. விகிதாரச்சார அடிப்படையிலான தேர்தலுக்கான காலம் ஏன் இன்னும் வரவில்லை? வகுப்பில் மக்கள் ஆட்சி பற்றிய விளக்கத்தை கொடுக்கும் போதெல்லாம் மனதுக்குள் ஒரு ஆயாசம். ஆனாலும் வருங்காலத்தில் மாற்றம் வரும் என்கிற நம்பிக்கையை விழிகளில் தேக்கிபாடம் நடத்த வேண்டி உள்ளது. அவலங்களை பகடி செய்திருக்கும் விதம் தங்கள் எழுத்தாளுமை காட்டுகிறது. நான் இதை உள்ளத்தில் இருந்தே கூறுகிறேன், வலை உலகுக்கு உங்கள் வரவு நல் வரவாகட்டும் :))) வாழ்த்துக்கள் சகோ!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோதரி !

      இந்தியா போன்ற பல்வேறு ஜாதி,மத கூறுகளை கொண்ட சமூகத்துக்கு விகிதாரச்சார தேர்தல் முறையே சிறந்தது.அப்படி நடக்குமானால் அனைத்து தரப்புக்கும் உண்மையான பிரதிநிதித்துவம் கிடைக்கும் ! ஆனால் அதனை செயல்படுத்துவதற்கு அரசியல் சாசணத்தையே புரட்டிபோடும் ஆளுமை கொண்ட ஒரு அரசால் தான் முடியும் ! பெரும்பான்மை, சிறுபான்மை என பிரித்து எரித்து குளிர் காய்ந்து கொண்டிருக்கும் இன்றைய தலைவர்களில் இதனை முன்னெடுப்பது யார் ?!!!

      சாமானியன்


      Delete