Saturday, October 4, 2014

தமிழர் என்றோர் இனமுண்டு...

 இது " தாய் மண்ணே வணக்கம் " பதிவின் தொடர்ச்சி . ..

மது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறோமே, அந்த குவளையில் குடிக்க ஒன்றுமே இல்லையா ?! தமிழ் சமூகத்தில், தமிழனிடத்தில் பாராட்டத்தக்கது எதுவுமே கிடையாதா என்றெல்லாம் விமான பயணத்தின் போது தோன்றிய எண்ணங்களை பற்றி சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

சென்னை சர்வதேச விமான நிலையம்...

என் தந்தைக்கு மூட்டுவலி பிரச்சனை. ஏற்கனவே டெல்லி விமான நிலையத்தில் அதிக தூரம் நடந்ததினால் வலி அதிகமாகி தொடர்ந்து நடக்கவோ, ஒரே இடத்தில் நிற்கவோ முடியவில்லை. விமானச்சீட்டு பதிவின் போதே குறிப்பிட்டு சக்கரநாற்காலிக்கு கேட்டிருக்கலாம். செய்யவில்லை !

குடியேற்ற சோதனை அதிகாரியை நெருங்கி பாஸ்போர்ட்டுகளை ( பிரயாண உரிமைச்சீட்டு ! சரியா ?! ) கொடுத்தேன்.

" ஏர் இந்தியால வந்தீங்களா சார் ?! ஹூம் ! அவங்கமட்டும்தான் இதை மறப்பாங்க ! "

அவர் எங்கள் அனைவருக்குமாக ஐந்து நீண்ட படிவங்களை கொடுத்து நிரப்ப சொல்லிவிட்டார்  ! பொதுவாக அந்த படிவங்களை விமானத்திலேயே கொடுத்துவிடுவார்கள். அனைத்துவிபரங்களையும் முன்கூட்டியே நிரப்பி தயாராக கொண்டுவரலாம் !

 எனது விமான பயண வரலாற்றிலேயே முதல்முறையாக தாமதமின்றி சரியான நேரத்துக்கு வந்திறங்கிய தாய் மண்ணின் முதன்மை விமான நிறுவனத்தை ( இங்கு முதன்மை என்பது லாபத்தை குறிக்கும் சொல் அல்ல ! ) சிலாகித்துகொண்டிருந்ததால் அவர்கள் படிவங்களை கொடுக்க மறந்தது பெரிதாக படவில்லை !


நான் படிவங்களை நிரப்ப தொடங்க,

" அப்பா, அம்மா பிள்ளைகளை அங்க போய் உக்கார சொல்லுங்க சார் ! நீங்க மட்டும் இருந்தா போதும் ! "

நிற்க முடியாமல் தடுமாறும் என் தந்தையை பார்த்துவிட்டு அதிகாரி காட்டிய இடம் குடியுறிமை சோதனை மையத்துக்கு வெளியே தூரத்தில் இருந்தது. சட்டப்படி விசாவை சரிபார்க்காமல் அங்கிருந்து நகரக்கூடாது.

" பரவாயில்லை சார் ! வயசானவங்க... குழந்தைங்க.... "

எனது தயக்கத்தை படித்தவராய் பேசிய அதிகாரியின் குரல் மிக பரிச்சயமானது போல் தெரிய யோசித்தேன்... காரைக்காலில் எங்கள் குடும்ப மருத்துவரின் குரலை   ஒத்திருந்தது அவரின் குரல். அதைவிட ஆச்சரியம் இருவருக்கும் ஒரே பெயர் !

இதையெல்லாம் அவரிடம் குறிப்பிட்டபோது ஒரு நண்பரை போன்ற  சிரிப்புடன் கேட்டுக்கொண்டே தன் கடமையை செய்துமுடித்தார் !

பொதுவாக அனைத்து நாடுகளின், ஏன் இந்தியாவின் டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் கூட குடியுறிமை அதிகாரிகள் இறுகிய முகத்துடனேயே இருப்பார்கள். அதிகமாய் ஒரு வார்த்தை பேசினால் முறைப்பே பதிலாக கிடைக்கும் ! சலனமற்ற பார்வையுடன் இயந்திரம் போல சோதனைகளை முடித்து அனுப்புவார்கள் !

கிளம்புபோது அவரை திரும்பி பார்த்தேன். என்னுடன் வந்திருந்த பிரெஞ்சு மற்றும் ஆங்கில பயணிகளிடமும் அதே கனிவுடன் பேசிக்கொண்டிருந்தார் !

எனது பள்ளி பருவத்தின் என் சி சி கேம்பின் போது ஹிந்தி தெரியும் என்று பேச்சுவாக்கில் சொன்ன ஒரு நண்பனுக்கு தனக்கு வந்த சப்பாத்திகளில் ஒன்றை அனுப்பிய ஹவில்தாரும், ( பல தலைமுறைகளாக தமிழ்நாட்டிலேயே வசிக்கும் அந்த நண்பன் காய்ந்த சப்பாத்தியை விக்கலுடன் விழுங்கியபடி எங்கள் தட்டிலிருந்த் சோற்றை ஏக்கமாய் பார்த்தது வேறு விசயம் ! ) சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஜட்டியுடன் நிற்க வைத்த மும்பை போலீஸ் அதிகாரி தான் ஹிந்தியில் பேசியதும் உடைகளை திருப்பி கொடுத்தை சொல்லும் என் நண்பன் ஒருவனின் அப்பாவின் அனுபவமும் சட்டென ஞாபகம் வந்தது !

சென்னை திநகர் பகுதியின் பரபரப்பான சரவணபவன்...

ஒவ்வொரு மேசையின் முன்னாலும் இடம்பிடிக்க வரிசை...

" தோ ! சீக்கிரமா முடிச்சிடறேன் தம்பி ! "

அவருக்கு பின்னால் நின்ற என்னை கண்டதும் இலையிலிருப்பதை அவசரமாய் விழுங்கியபடி பேசிய பெரியவரை பார்த்து அதிசயித்தேன் !

" ஒண்ணும் அவசரமில்லைங்க ! நீங்க பொறுமையா சாப்பிடுங்க ! "

" இல்ல தம்பி நான் முடிச்சிட்டேன் ! நீங்க பசியோட நிக்கறீங்கள்ல... ! "

மனிதர் அவசரமாய் எழுந்துவிட்டார் ! இத்தனை பாடுகளும் ஒரு ஞான் வயிற்றுக்குத்தான் ! அவர் ஒன்றும் இலவசமாய் சாப்பிடவில்லை ! கொடுத்த காசுக்கு பொறுமையாய், அமைதியாய், அவர் விரும்பும் நேரம்வரை உண்டு முடிக்கும் முழு உரிமையும் அவருக்குண்டு !



ன்னதான் ஆயிரம் வேலைகளுடன் ஓடிக்கொண்டிருந்தாலும் கண்ணெதிரே ஒரு விபத்தினை கண்டுவிட்டால் சட்டென ஓடித்தூக்கும் குணம்... மழையோ, புயலோ, அரசு இயந்திரம் விழிக்கும் முன்பே ஜாதிமத பேதமின்றி வரிந்துக்கட்டிகொண்டு நிவாரணத்திலிறங்கும் சராசரி மனிதர்கள்... வடகோடியின் வெள்ள நிவாரணத்துக்குக்கூட தன்னால் இயன்றதை அள்ளிக்கொடுக்கும் நெஞ்சம்...

" யாரு பெத்த பிள்ளையோ... "

தீக்குளித்த, ஆசிட் வீசிய சம்பவங்கள் காதில் விழும்போதெல்லாம் அந்த முகம் அறியாத உயிர்களை தங்கள் பிள்ளைகளாய் எண்ணி விம்மும் மனங்கள் ...

" இனி அவன் பொண்டாட்டி புள்ளையோட கதி... "

கொடூர குற்றங்களுக்காக தூக்குத்தண்டனை  பெற்ற கைதியின் குடும்பத்தை நினைக்கும் குணம்...

" என்ன இருந்தாலும் அவரை இந்த நிலமையில பார்க்க முடியலப்பா ! "

தனக்கு பிடிக்காத கட்சியின் தலைவராக இருந்தால் கூட அவரின் வீழ்ச்சியை தாங்காமல் தவிப்பவர்கள் !

இதுதான், இந்த மனிதநேயம் தான், இரக்ககுணம் தான் தமிழனின் தலையாய குணம் என தோன்றுகிறது !

" போகட்டும் விடு ! இதுக்குமேல என்ன செய்ய சொல்ற ?! "

தன் வீட்டின் தலைவாசல் தாண்டி நுழைந்து தலைகுணிந்தவனின் குற்றம் மறந்து மன்னிக்கும் மனிதநேயம் ! ( தமிழனின் இந்த மனித நேயத்தை மறதியாய் நினைத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அவன் வீட்டிலேறும் அரசியல்வாதிகளையும் அவன் மன்னிப்பது வேறுவிசயம் ! )

இந்தியாவெங்கும் பரவிவிட்ட மததுவேச அரசியல் தமிழ்நாட்டில்மட்டும் இன்னும் தடுமாறுவதன் காரணம் தமிழனின் மனிதநேயம்தான் ! 

" என்னாய்யா ? அங்கேருந்து இங்க வந்ததுக்கு இவ்ளோ ரூபாயா ?!... "

" சரி ! சரி ! உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் ! ஒரு பத்து ரூபா குறைச்சிக்குங்க ! "

" இல்ல... அதிகம் ! "

" என்னா சார்... எல்லாத்துக்கும் செலவு பண்ணிட்டு எங்ககிட்ட மட்டும் இவ்ளோ கறாரா... எதோ உன் பேரை சொல்லி... "

அவன் இறங்க, இவன் கொடுக்க....

நயந்த வார்த்தைகளுக்கு முன் சட்டென இளகும் அன்பினன் தமிழன் !  காலங்காலமாய் பெரிதாய் போர்களை சந்திக்காத மண்வாசி ! அன்பையும் அறத்தையும் போதித்து, அவமானம் நேர்ந்தால் துடைத்தெரிவதைவிட உயிர்த்துறப்பதை மேலாக கருதிய மரபில் வந்தவன் !  " யாதும் ஊரே யாவரும் கேளிர் " என்ற பண்பாட்டு பரம்பரை சேர்ந்தவன்  !  சக மாநிலத்தவனோ அல்லது அயல் நாட்டானோ எவராகினும் நேசக்கரம் நீட்டுபவன் !

என்னங்க நீங்க ? வெளிநாட்லயெல்லாம் வயசானவங்களுக்கு ஒரு வாசல், முடியாதவங்க  உக்கார தனி சீட்டு அது  இதுன்னு அவ்ளோ பண்ணிக்கிட்டிருக்கான்... "

உண்மைதான் ! ஆனால் மேலை நாடுகளிலெல்லாம் மனிதநேயம் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்ட விசயம் ! என்னால் நடக்க முடியாது, என்னால் நிற்க முடியாது என்றெல்லாம் சட்டப்படி நிருபித்தால் சட்டம் காட்டும் உதவிகள் கிடைக்கும் ! அங்கெல்லாம் சகமனிதன் என்ற எண்ணத்தைவிட சட்டத்தை மதிக்கவேண்டும் என்ற நிலையிலிருந்து செய்யும் உதவிகளே அதிகம் ! ஆழ்ந்து யோசித்தால் தடுக்கி விழுந்தவனை அனிச்சையாய் ஓடித்தூக்குவதற்கும் அப்படி தூக்க வேண்டியது கட்டாயம் என்று சட்டம் சொல்கிறது என தூக்கிவிடுவதற்குமான வித்யாசம் புரியும் !

மேலை நாடுகளில் உறவுகள் கூட சட்டங்களுக்கு உட்பட்டவைதாம் ! எழுபதை தாண்டிய பெற்றோருக்கு கட்டாயம் முதியோர் இல்லங்கள்தான் ! வாழ்க்கை முழுவதையுமே சட்டத்துக்கு உள்ளே, வெளியே என பிரித்து பழகிய நிலை அது !

ஆனால் மேலை நாடுகளின் நுகர்வோர் கலாச்சார அரசியலில் சிக்கிய தமிழனின் இந்த தலையாய மனிதநேயம் மிக வேகமாக மறைந்துகொண்டு வருவதையும் இங்கே குறிப்பிட வேண்டும் !  மததுவேச அரசியல் சூழ்ச்சிக்கு நாமும் பலியாகிவிடுவோமோ என பயமாக உள்ளது !



மீன்டும் சென்னை விமான நிலையம் !

" ரூல்ஸ்படி நீங்க முன்னாடியே பதிஞ்சிருக்கனும் சார்... பரவாயில்லை ! முடியாமதானே கேக்கறீங்க ! "

வரும்போது தந்தையால் நடக்க முடியாமல் போனதை கூறி சக்கரநாற்காலி கேட்கவும் உடனடியாக ஏற்பாடு செய்தார் ஒரு அதிகாரி.

டெல்லியில் விமானத்திலிருந்து இறங்கியபோது ஒரு சிப்பந்தி சக்கரநாற்காலியுடன் காத்திருந்தார். சென்னை அதிகாரி டெல்லிக்குமாக சேர்த்து பதிந்திருந்தது அப்போதுதான் புரிந்தது !

ரும்போது ஏர் இந்தியா விமானம் காலதாமதமின்றி இறங்கியதை ஆச்சரியமாய் குறிப்பிட்டிருந்தேன்... அதைவிட ஆச்சரியமாய், அரைமணி நேரம் முன்னதாகவே பாரீஸ் விமானநிலையம் வந்தடைந்தோம் !

விமான வாயிலில் ஒரு இளம்பெண் அதிகாரி சக்கரநாற்காலில்கள் மற்றும் சிப்பந்திகளுடன் நின்றிருந்தாள்...

" உங்கள் தந்தையின் பெயர் முன்னரே பதிவு செய்யப்பட்டுள்ளதா ?... "

" இல்லை... ஆனால்... "

" மன்னிக்கவும் ! முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும்தான் உதவ முடியும் ! நடக்கவே முடியவில்லையென்றால் சொல்லுங்கள்... ஆம்புலன்ஸை கூப்பிடுகிறேன் ! "

குடியுறிமை மையம் அமைதியாய் இருந்தது...

கண்ணாடி தடுப்புக்கு பின்னாலிருந்து சலனமற்ற முகத்துடன் மாலை வணக்கம் கூறிய அதிகாரி எங்கள் பாஸ்போர்ட்டுகளை வாங்கினார்... அதே சலனமற்ற தொனியில் நன்றி கூறியபடி திருப்பிகொடுத்தார்.... எனக்கு பின்னால் வந்த பிரெஞ்சுக்காரர்களுக்கும் அதே தொனி !

அன்பு, காதல், காமம் அனைத்தையும் சட்டங்களுக்குள் அடைத்த ஐரோப்பிய யூனியன்  எங்களை மகிழ்வுடன் வரவேற்றது !




இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

61 comments:

  1. வணக்கம்.

    கிட்டதட்ட என் நண்பருக்கும் இதே அனுபவம் தான்.

    ReplyDelete
  2. வாருங்கள் விஸ்வா !

    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ! வலைப்பூக்களில் உங்கள் வருகை இரும்புக்கை மாயாவி போல ஆகிவிட்டது !

    Whatsappல் மிக பிஸியோ ?!

    நன்றி

    ReplyDelete
  3. அப்படி இல்லை சார். மொபைலில் இருந்து இயங்குவது வசதியாகிவிட்டது.

    அதான்.

    ReplyDelete
    Replies
    1. அப்பப்ப நம்மளையும் கண்டுக்கிடுங்க பாஸ் !

      Delete
  4. இந்தியாவில் அன்பு
    அயல்நாட்டில் சட்டம்
    தாங்கள் புகுந்த நாட்டின் பெருமைகளைப் பேசும் பதிவுகளையே அதிகம் படித்துள்ளேன்
    முதன் முறையாக , வித்தியாசமான கோணத்தில்த தங்களின் பதிவு
    மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ! பிறந்த நாட்டின் நல்ல பண்புகள் தானே புகுந்த நாட்டிலும் நமக்கு பெருமை சேர்க்கின்றன ?!

      உங்கள் தொடர் வருகை எனக்கு உவகை !

      நன்றி

      Delete
  5. கடமையாய்ச் செய்வதற்கும் கனிவாய்ச் செய்வதற்கும் உள்ள வேறுபாடு. சிலவற்றைச் சட்டங்களால் செய்ய வைக்கலாம். ஆனால் எல்லாவற்றையுமே அன்பால் செய்ய வைக்கலாம். வாழ்க, நீங்கள் குறிப்பிட்டுள்ள மனிதர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ! எல்லா மனிதர்களும் எங்கும் இருக்கிறார்கள் என்றாலும் நான் இந்த பதிவில் குறிப்பிட்டது மனிதநேயம் கொண்டவர்களை !

      உங்கள் வருகைக்கும் கருத்தும் நன்றி

      Delete
  6. சாம்: நம்ம இளகியமனம்தான் பிச்சைக்காரகளையும், பொறம்போக்கு நில ஆக்கிரமிப்புகளையும், லஞ்சம் ஊழல் எல்லாவற்றையும் வளர்த்துவிட்டதுக் காரணம். வேலையில் "மிஷின் போல" உணர்ச்சிகளை வெளியில் காட்டாமல் வேலை செய்பவர்கள் நாட்டில் இதுபோல் பிரச்சினை இல்லை! அவர்களுக்கு இளகிய மனம் இல்லை இல்லைனு சொல்ல முடியாது!

    அப்பா அம்மாவிடம் இந்த வாரம் தொலைபேசியில் பேசும்போது, ஜெயா பற்றிதான் அப்பா பேசினார்.. ஊரெல்லாம் ஒரே ஒப்பாரியா இருக்காம். "அம்மா அம்மா!'னு தலைவிரி கோலமா ஒப்பாரி வைக்கிரார்களாம் திராவிட கண்மணிகள்!! உடனே நான் "நீங்களும் அழுதீங்களா?"னு லந்துக்குக் கேட்டேன். அப்பா சிரித்தார். இல்லை நீங்களும் "அம்மா பக்தர் தானே?" என்றேன். மகன் என்ன பேசினாலும் அப்பாவுக்கு அழகாகத்தான் இருக்கும். அதனால் இதையெல்லாம் ரசித்தார்.

    அடுத்து அம்மாவுடன் பேசும்போது, அம்மா (என் தாயார்) சொன்னாங்க, "நகராட்சி கவுன்சிலர் எலக்ஷன்ல கூட வீட்டில் ஒவ்வொருவருக்கும் ரூ 200 (தலை ஒண்ணுக்கு)னு போட்டு அ இ அ தி மு க காரவங்க வந்து கொடுத்தாங்களாம். இப்போத்தான் சமீபத்தில்! "எதுக்கு காசை வாங்கினீங்க?"னு கேட்டேன். வேணாம்னு சொன்னால் கொடுக்க வந்தவன் கொடுத்த்விட்டதாகச் சொல்லி அவர் பைக்குள் போட்டுக்கிறானாம்..இவர்களிடம் கொடுத்ததாக கணக்குக் காட்டிவிடுவானாம்!

    உங்க தாய் மண் பத்திதான் சொல்லிக்கிட்டு இருக்கேன்! கேட்டுக்கோங்க! :)

    இந்தக் கண்ராவில எல்லாம் மாட்டாமல் நானாவது வாழமுடியுதேனு சந்தோஷமாகத்தான் நான் வாழ்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் வருண்...

      " தமிழனின் இந்த மனித நேயத்தை மறதியாய் நினைத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அவன் வீட்டிலேறும் அரசியல்வாதிகளையும் அவன் மன்னிப்பது வேறுவிசயம் ! "

      என்றெல்லாம் நானும் "தாயின்" தலையில் அவ்வப்போது குட்டிக்கொண்டுதானே இருக்கிறேன் !!!

      உங்கப்பா அம்மா பக்தர்ன்னா எங்கப்பா அய்யா பக்தர் ! ( மருத்துவர் அய்யா அல்ல பெரிய அய்யா !!! )

      " மகன் என்ன பேசினாலும் அப்பாவுக்கு அழகாகத்தான் இருக்கும்... "

      நான் எழுதியதையும் அதுமாதிரின்னு வச்சுக்கோங்களேன் !

      " இந்தக் கண்ராவில எல்லாம் மாட்டாமல் நானாவது வாழமுடியுதேனு சந்தோஷமாகத்தான் நான் வாழ்கிறேன்... "

      நீங்கள் தாண்டிவிட்டீர்கள் ! நான் அங்கொரு கால்... இங்கொரு கால்.... உங்களின் இதே வரிகள் எனக்கும் அவ்வப்போது தோன்றுவதுண்டுதான் !... ஆனால் இந்த எண்ணம் உண்மையிலேயே நமது சந்தோசமா அல்லது நம்மால் திருத்தமுடியாது என்றெண்ணி ஒளிந்துகொள்ளும் நிலையா ?!

      மனதில் படுவதை மறைக்காமல் சொல்லும் உங்கள் கருத்துகளை தொடருங்கள் வருண்

      நன்றி

      Delete
    2. வருண் வேர்கள் அசிங்கமானவைதான் ஆனால் அவையில்லாமல் நீங்கள் மரத்தை யோசிக்க முடியாது.

      மாணவர்களிடம் ஊழலற்ற இந்தியா என்கிற தலைப்பில் ஒரு கட்டுரைப்போட்டியை நடத்துங்கள் ... நூறுபேர் கலந்துகொண்டால் ஒரு நான்குபேர் உண்மையிலேயே பின்பற்றுவார்கள் இது தான் நிதர்சனம் ...
      கன்றாவியை சுத்தப்படுத்தும் பொறுப்பு உங்கலுக்கும் உண்டு பாஸ்... என்ன செய்யலாம்னு யோசித்து செய்ய ஆரம்பிங்க..
      ஆயிரம் ஆண்டு காரிருள் ஓடுவது ஒரு சிறு மேழுகுவர்த்திகுத்தான் .. so try brighten a corner with a candle...
      நன்றி.

      Delete
  7. சட்டம் எல்லாருக்கும் சமம் தானே அங்க சார்.
    எந்த ஒரு பாகுபாடு எல்லாம் பார்க்க மாட்டார்கல் அல்லவா.
    அனைவருக்கும் சமமாக வாய்ப்பு வசதிகல் கிடைக்கும் அல்லவா?

    இங்க அப்படியா
    உங்கலுக்குதான் தெரியுமே?

    ! ஆழ்ந்து யோசித்தால் தடுக்கி விழுந்தவனை அனிச்சையாய் ஓடித்தூக்குவதற்கும் அப்படி தூக்க வேண்டியது கட்டாயம் என்று சட்டம் சொல்கிறது என தூக்கிவிடுவதற்குமான வித்யாசம்
    புரியும் !///

    யோசிக்க வைத்த வரிகல்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் மகேஸ்... இங்கு அனைவருக்கும் ஒரே உரிமை என்பது உண்மைதான். நமது பல சட்டங்கள் பல்வேறு தரப்பினரையும் திருப்திபடுத்துவதாக நினைத்துக்கொண்டு கொண்டுவரப்பட்டு கடைசியில் எவருக்கும் பயன்படாது போவது வேதனை !

      " ஆழ்ந்து யோசித்தால் தடுக்கி விழுந்தவனை அனிச்சையாய் ஓடித்தூக்குவதற்கும் அப்படி தூக்க வேண்டியது கட்டாயம் என்று சட்டம் சொல்கிறது என தூக்கிவிடுவதற்குமான வித்யாசம்
      புரியும் "

      ஆனால் நான் சொல்ல வந்தது இதைதான் ! சரியாக உள்வாங்கி கருத்திட்டதுக்கு நன்றி !

      Delete
  8. சாம் அண்ணா,
    எப்டி இருக்கீங்க:) எவ்ளோ நாள் ஆச்சு !! வீட்டில் எல்லோரும் நலம் தானே?
    அண்ணா நான் பள்ளியில் படிக்கும்போதுன்னு நினைகிறேன். வகுப்பு நினைவில்லை, ரஜினியின் பேட்டி ரெண்டுநாள் ப்ரைம் டைமில் தொடர்ந்து ஒளிபரப்புனாங்க, அது கேபிள் டி.வி ரொம்ப பிரபலம் ஆகாத காலம், அதில் ஒரு கேள்வி இந்தியர்களின் பலம் என்ன ? பலவீனம் என்ன? ரஜினி மேல் கிரேஸ் எல்லாம் கிடையாது ஆன அந்த கேள்விக்கு அவர் அளித்தபதில் இன்னும் நினைவில் இருக்கு:) செண்டிமெண்ட்ஸ், அது இருக்கதால தான் இந்தியர்கள் சந்தோசமா இருக்கோம்:) அது இருக்கதால தான் இவ்ளோ கவலைகளும் இருக்கு. இந்த பதிவு படிக்க ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. விடுமுறைக்கு பின்னர் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன் சகோதரி ! அனைவரும் நலம் ! தங்கள் குடும்பம், சுற்றத்தாரின் நலம் நம்புகிறேன்.

      உள்ளதையும், நல்லதையும் யார் சொன்னாலும் எடுத்துக்கொள்ளலாம் சகோ !!!

      உங்களின் யதார்த்தமான கருத்துக்கு நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

      Delete
    2. நாட்டுப்பற்றை உணர்த்தும் மனப்பாடலை நடத்தும் போது உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டேன் அண்ணா! மிக்க நன்றி!!

      Delete
    3. வகுப்பில் என் பதிவினை நினைத்து பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் அதனை ஞாபகமாய் எனக்கும் தெரியப்படுத்தி... என்ன தவம் செய்தேன் நான் சகோதரி ?

      Delete
  9. தங்களுக்குள் இருக்கும் அனுபவக் கல்வியை அனைவருக்கும் அள்ளித் தரும் பண்பை போற்றி பாராட்டுகிறேன் நண்பரே "அள்ளித் தந்த வானமாய் உங்களை நான் அண்ணந்து பார்க்கின்றேன். பதிவின் இடையில் மத ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மூன்று மதக் கடவுள்களையும் படமாய் போட்டுருப்பது இன்றைய இளைய தலைமுறைக்கு நீங்கள் கற்றுத் தரும் பாடம். மொத்தத்தில் ஆசை முத்தமாய் தெரிவது மக்களின் மனித நேயத்தை பதிவில் பகிர்ந்தளித்த விதம்.
    புதுவை வேலு (KUZHALINNISAI.BLOGSPOT.COM)

    ReplyDelete
    Replies
    1. மனிதனின் ஆறாம் அறிவே இந்த நேயம்தானே நண்பரே ?! மத ஒற்றுமை... இந்தியா மட்டுமல்லாமல், இன்று உலகம் முழுமைக்கும் தேவையானது ! மதங்கள் தோன்றியதே மனிதர்களை பிணைக்கவேயன்றி பிரிக்க அல்ல என்பதை அனைவரும் உணரவேண்டும்.

      நன்றி

      Delete
  10. தங்களது அனுபவத்தை உணந்து உணர்வுடன் எழுதியிருக்கிறீர்கள் நண்பரே,,, அருமை.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு வாழ்க்கை கொடுக்கும் அனுபவங்களையும் அவை எனக்குள் ஏற்படுத்தும் மாற்றங்களையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்!

      நன்றி

      Delete
  11. மனித நேயமும் சட்டென இளகும் மனமும் தமிழர்களுக்கே உரியது என்பதை அழகாக புரிய வைத்துள்ளீர்கள்! அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே ! உங்களின் ஊடகம் பற்றிய பதிவு நெத்தியடி ! தொடருங்கள்.

      Delete
  12. சாம்,

    எதிர்பார்ப்பை வீணடிக்காத அசத்தும் பதிவு. மனித நேயத்தை சாதாரண மக்கள் இன்று மட்டுமல்ல என்றைக்கும் மறக்க மாட்டார்கள் என்பதை மிக அழுத்தமாகச் சொல்கிறது உங்களின் தரமான வார்த்தைகள். பாராட்டுக்கள். இதைப் படித்ததும் எனக்குத் தோன்றுவது என்னவென்றால் சாமானியனின் கிறுக்கல்கள் என்ற உங்களின் வலைப்பூ தலைப்பை வேறுமாதிரி மாற்றிக்கொள்ளுங்கள். கிறுக்கல்கள் அல்லவே உங்களின் எழுத்து. பின் என் இந்த அபத்தமான வார்த்தை?

    மனிதம் மண்ணில் இன்னும் சாகவில்லை என்பதற்கு பல சிறிய உதாரணங்கள் உங்கள் கட்டுரையில் தெறித்து விழுகின்றன. உண்மைதான். அதுவே நமது முத்திரையாக இருக்கும் பட்சத்தில் நாம் கண்டிப்பாக அதற்காக பெருமை கொள்ளலாம். அதேசமயம் தனியாக புலியிடம் மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவியின் கடைசி கணங்களை மனது வலிக்காமல் ரத்தம் உறையாமல் குற்ற உணர்வேயில்லாமல் அவன் சாகும் வரை முழுவதும் படம் பிடிக்கும் வக்கிர மனங்களும் இங்கே ஏகத்துக்கு உண்டு.

    மனித நேயம் அயல்நாடுகளில் சட்டமாகப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் அவர்கள் எல்லோருமே அதனால்தான் மற்றவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள் என்பது போன்ற ஒரு தொனி உங்கள் எழுத்தில் தெரிகிறது. நமது நாட்டில் பாமரர்கள் செய்யும் திடீர் உதவிகள் நமது மனதை பிழியச் செய்வதைப் போலவே அங்கும் உண்டு. நாம் இங்கே போரிட்டுக்கொண்டிருந்த சமயங்களில் அங்கே பிளாரன்ஸ் நைடிங்கேல் போர் முனைக்கு கையில் விளக்குடன் வேதனை குரல்களுக்கு மத்தியில் சென்று மரணத்தின் வீரியத்தைக் குறைத்தார். காயங்களைப் போக்கும் கலை அங்கேதானே உண்டானது.

    உங்களின் வசீகர எழுத்து தொடர்கிறது. வாழ்த்துக்கள். வழக்கம் போலவே அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் காரிகன் !

      தாமதமான பதில் பின்னூட்டம்....!

      சாமானியன் என்ற புனைப்பெயரை பற்றியும் " கிறுக்கல்கள் " பற்றியும் சமீபத்தில் நிறைய கேள்விகள் ! பிரான்சில் எந்த குடிமகன் தன் கருத்துகளை முன் வைத்தாலும் சரி, தவறு என்ற வட்டத்துக்குள் மட்டுமே விவாதிக்கப்படும். உலகின் மிக பெரும்பான்மையான நாடுகளிலும் இதுவே இயல்பு ! ஆனால் பல்வேறு மத பிரிவுகளையும், ஜாதி அடுக்குகளையும் மொழி வேற்றுமைகளையும் கொண்ட நமது இந்திய சமூகம் இதற்கு விதிவிலக்கு ! எவன் ஒருவன் கூறும் கருத்தையும் அதன் உண்மை அறிய முயற்சிக்காமல் அவனின் ஜாதி, மத, மொழி அடையாளங்களுடன் ஒப்பிட்டு புறந்தள்ளும் சாபம் கொண்டது ! அதற்காகவே இந்த " சாமானியன் " முகமூடி ! ( " அந்நியன் " முகமூடி தமிழ் சினிமாவில் மட்டும்தான் சாத்தியம் இல்லையா ?! )

      தன்னருகே இடியே விழுந்தாலும், தேர்தல் முடிந்துவிட்டது ! இனி ஐந்து வருடத்துக்கு ஒன்றும் செய்ய இயலாது என்ற ஏக்கபார்வையுடன் தன்னை சுற்றி நிகழும் அபத்தங்களை பார்த்து நிற்கும், ஆர்.கே. லெக்ஸ்மணின் கேலிச்சித்திர பாத்திரமான மிஸ்டர்.காமன்மேன் நினைவாக வைத்துக்கொண்டது !

      கிறுக்கல்கள்... இன்றும் பல வலைப்பூக்களை படிக்கும் போது ( அவற்றில் உங்களுடையது முதல் வரிசையில் வரும் ! ) என்னுடய பதிவுகள் கிறுக்கல்கள்தான் என்ற எண்ணமே மேலோங்குகிறது ! ( இது தன்னடக்கமல்ல ! உண்மை )


      " தனியாக புலியிடம் மாட்டிக்கொண்ட... "

      உண்மைதான் காரிகன் ! நேர்றுவரை வாழ்க்கையின் அர்த்தமாய், வாழ்வின் திசையாய் நின்றவள் இன்று தன்னை நிராகரித்துவிட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக அவளின் உடலை ஆசிட்டால் சிதைக்கும் மனங்களும்....

      " மனித நேயம் அயல்நாடுகளில் சட்டமாகப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் அவர்கள் எல்லோருமே அதனால்தான் மற்றவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள் என்பது போன்ற ஒரு தொனி உங்கள் எழுத்தில் தெரிகிறது... "

      இல்லை, அப்படி உரைப்பது என் நோக்கமல்ல !

      " காயங்களைப் போக்கும் கலை அங்கேதானே உண்டானது... "

      அக காயங்களை போக்கும் கலை அங்கே உருவாகிய அதே வேலையில் புறக்காயங்களை போக்கிடும் மனிதநேயம் என்ற மாமருந்து நம்மிடம் இருந்தது ! என்றோ தொலந்துவிட்ட ( தொலைத்துவிட்ட ? ) அந்த விளக்கின் ஒளிச்சிதறல்கள் நம் சமூகத்தில் இன்னும் சிலரிடையே பளிச்சிடுவதை சொல்லத்தான் இந்த பதிவு !

      மற்றப்படி உங்கள் கருத்து உண்மை ! என்னதான் சொன்னாலும் சமூக நிர்வாகத்தில் மேலை நாட்டினரிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறதுதான் !

      என் வலைப்பூ கண்ட நாள் முதலாய் பின்னூட்டத்தையும் தாண்டி என்னை தொடர்ந்து பட்டைத்தீட்டும் உங்களுக்கு வெறும் நன்றி என்ற வார்த்தை மட்டும் போதாது காரிகன் !




      Delete
    2. சாம்,

      உங்களின் தன்னடக்கத்திற்கு மிகவும் நன்றி. உங்களின் அடுத்த பதிவு ஒரு அசத்தல்.

      Delete
    3. காரிகன் சாம் எங்கே தமிழ் படித்தார் ... உங்களுக்கு தெரியுமா ?
      நடை அசத்தலா கீதே..

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. மனித நேயம் அயல்நாடுகளில் சட்டமாகப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் அவர்கள் எல்லோருமே அதனால்தான் மற்றவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள் என்பது போன்ற ஒரு தொனி உங்கள் எழுத்தில் தெரிகிறது.நண்பர் காரிகனின் கருத்தை நான் முற்றிலும் வரவேற்கிறேன்.நன்றி!
    புதுவை வேலு (kuzhalinnisai.blogspot.com)

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, தோழர் காரிகனுக்கு பதிந்த பதிலின் இந்த பகுதி உங்கள் பின்னூட்டத்துக்கு பொருந்தும் என எண்ணுவதால்...

      " தனியாக புலியிடம் மாட்டிக்கொண்ட... "

      உண்மைதான் காரிகன் ! நேர்றுவரை வாழ்க்கையின் அர்த்தமாய், வாழ்வின் திசையாய் நின்றவள் இன்று தன்னை நிராகரித்துவிட்டாள் என்ற ஒரே காரணத்துக்காக அவளின் உடலை ஆசிட்டால் சிதைக்கும் மனங்களும்....

      " மனித நேயம் அயல்நாடுகளில் சட்டமாகப்பட்டிருப்பதாக நீங்கள் சொல்வது உண்மை என்றாலும் அவர்கள் எல்லோருமே அதனால்தான் மற்றவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள் என்பது போன்ற ஒரு தொனி உங்கள் எழுத்தில் தெரிகிறது... "

      இல்லை, அப்படி உரைப்பது என் நோக்கமல்ல !

      " காயங்களைப் போக்கும் கலை அங்கேதானே உண்டானது... "

      அக காயங்களை போக்கும் கலை அங்கே உருவாகிய அதே வேலையில் புறக்காயங்களை போக்கிடும் மனிதநேயம் என்ற மாமருந்து நம்மிடம் இருந்தது ! என்றோ தொலந்துவிட்ட ( தொலைத்துவிட்ட ? ) அந்த விளக்கின் ஒளிச்சிதறல்கள் நம் சமூகத்தில் இன்னும் சிலரிடையே பளிச்சிடுவதை சொல்லத்தான் இந்த பதிவு !

      மற்றப்படி உங்கள் கருத்து உண்மை ! என்னதான் சொன்னாலும் சமூக நிர்வாகத்தில் மேலை நாட்டினரிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறதுதான் !

      Delete
  15. நல்லதொரு அலசலும் அனுபவமும் பேசியது கண்டு மகிழ்ந்தேன். நியாமானவற்றையே எடுத்து வந்தீர்கள். ஒவொன்றையும் பற்றி அழகாக சொன்னீர்கள். மதங்களை பற்றி சொன்னதும், கனிவோடு காரியங்கள் செய்வதும் சிறந்தது என்பதும் வரவேற்கத் தக்க விடயம். பயனுள்ள பதிவு. நன்றி

    ReplyDelete
    Replies
    1. என் வாழ்க்கையின் அனுபவங்களை, அன்பினால் நான் அடைந்தவற்றை என்னால் இயன்ற மட்டும் எழுதுவதே நோக்கம். தங்களின் தொடர் வருகைக்கும் ஊக்கத்துக்கும் நன்றி

      Delete
  16. நெஞ்சை அசைத்துப் பார்க்கும் பதிவு... எவ்வளவோ பிரச்சனை இருந்தாலும், இந்தியாவின் நேயத்தை நினைத்து சந்தோசப் படாமலும் இருக்கவில்லை... சந்தோஷமாகப் படித்தேன்...

    அப்புறம் ஒரு அல்ப சின்ன விஷயம்... பாஸ்போர்ட் என்பதற்கு தமிழில் 'கடவுச்சீட்டு' என்று சொல்லலாமா??? 'பிரயாண உரிமைச்சீட்டு' என்பது எனக்கென்னமோ போர்டிங் பாஸ்'ஐ குறிக்கும் என்று தோன்றுகிறது... சரியா என்று நீங்கள் கேட்டிருப்பதால் சொன்னேன்... :)

    ReplyDelete
    Replies
    1. எனது பதிவு உங்களை மகிழச்செய்ததில் சந்தோசம் !

      நீங்கள் கூறியது சரிதான். 'கடவுச்சீட்டு' தான் ! தாங்கள் குறிப்பிட்டதற்கு நன்றி.

      ஒன்றாய் தொடருவோம் !

      நன்றி

      Delete
  17. அண்ணா,
    வணக்கம்.
    அநேகமாக நீங்கள் இதைப்பதிவேற்றிய பொழுதே உடனடியாகப் படித்த மிகச்சிலரில் நானும் ஒருவனாய் இருப்பேன்.
    வரவர ஒரு முறை படித்துவிட்டுக் கருத்திடமுடிவதில்லையே உங்கள் பதிவுகளை!
    எனக்கேதோ அக்கரைக்கு இக்கரை பச்சை என்றுதான் தோன்றுகிறது.
    அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலசம்பவங்கள் நீங்கள் கூறியது போல இருக்கலாம். சில நல்லவர்களும் அங்கும் இங்கும்... என எல்லா இடங்களிலும் இருக்கிறத்தான் செய்கிறார்கள்.
    ஒரு மகாபாரதக் கதை நினைவுக்கு வருகிறது.
    கிருஷ்ணன் தருமனிடமும் துரியோதனனிடமும் நாட்டில் தேடிப்பார்த்து ஒரே ஒரு நல்லவனைக் கொண்டுவரச் சொன்னானாம்.
    நாள் முழுவதும் நாடெங்கும் அலைந்த பின் இருவரும் வெறுங்கையுடன் திரும்பி வந்தனராம்.
    துரியோதனன் சொன்னானாம், “ நல்ல வேலை கொடுத்தாய் கிருஷ்ணா! இங்க ஒரு நல்லவனக்கூடக் காணோம்!“
    தருமன் சொன்னானாம்.“ எல்லாருமே இங்க நல்லவங்களா இருக்கிறப்ப ஒரே ஒருத்தனை மட்டும் எப்படிக் கிருஷ்ணா கூட்டிட்டு வர முடியும்!
    பார்வைதானே வித்தியாசம்!
    எப்பொழுதும் போலவே நல்ல நடை அண்ணா!
    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. " அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிலசம்பவங்கள் நீங்கள் கூறியது போல இருக்கலாம். சில நல்லவர்களும் அங்கும் இங்கும்... என எல்லா இடங்களிலும் இருக்கிறத்தான் செய்கிறார்கள்."

      வாழ்க்கை தத்துவம் முழுவதையும் மிக எளிதாக கூறிவிட்டீர்கள் ஜோசப் ! பாரதி சொன்ன " தோற்ற மயக்கங்களை " தாண்டி பார்த்தால் நீங்கள் கூறியது உண்மை !

      " ஐரோப்பாவில், பாரீஸ் மாநகர்... பனிபடர்ந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகும் மக்கள் கூட்டம்... பணக்காரர்கள் SAMARITAINE, GALLERY LA FAYETTE போன்ற பெரும் ஷாப்பிங் மால்களில் மொய்க்க, நடுத்தர மக்கள் சூப்பர் மார்க்கெட்டுகளில் வரிசையில் நிற்கிறார்கள். மால்களுக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் வெளியே கடும் குளிரை பொருட்படுத்தாது கையேந்தி நிற்கும் ஏழைகள் ! உரையாடல்களை உற்று கேட்டால்... அரசியல் நிலவரம்... வேலை பிரச்சனை... நேரமின்மை... காதல்... பிரிவு.... நம்பிகை... துரோகம்... ! கண்களை மூடினால் பூகோள எல்லைகள் தொடங்கி சாதி, மதம், மொழி, இனம், கலாச்சாரம் என அனைத்தும் மறந்துவிடுகிறது. சந்தைகளும் திருவிழா கூட்டங்களும் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. தாயின் அன்பும், மழலையின் சிரிப்பும், காதலின் கிளுகிளுப்பும், பிரிவின் துயரமும், நட்பின் கதகதப்பும், துரோகத்தின் வலியும், தோல்வியின் கழிவிறக்கமும், இளமை முறுக்கும், முதுமையின் தளர்வும் உலகெங்கும் ஒரே அதிர்வைதான் ஏற்படுத்துகின்றன. "

      " வட்டியும் முதலும் " ராஜுமுருகன் ! " பதிவில் நான் எழுதிய வரிகள் !


      சகமனிதனை மதித்து மனிதத்தை போற்ற தொடங்கிவிட்டால் நாட்டின் எல்லைகளும் கொடிகளும் ஏது ?!

      நல்ல நீதிக்கதையை உங்கள் மூலம் தெரிந்துகொண்டதில் மகிழ்ச்சி.

      " என் வலைப்பூ கண்ட நாள் முதலாய் பின்னூட்டத்தையும் தாண்டி என்னை தொடர்ந்து பட்டைத்தீட்டும் உங்களுக்கு வெறும் நன்றி என்ற வார்த்தை மட்டும் போதாது காரிகன் !"

      இது உங்களுக்கும் பொருந்தும் ஜோசப் !

      Delete
  18. ///இந்தியாவெங்கும் பரவிவிட்ட மததுவேச அரசியல் தமிழ்நாட்டில்மட்டும் இன்னும் தடுமாறுவதன் காரணம் தமிழனின் மனிதநேயம்தான் ! ////

    மிக மிக உண்மை

    ReplyDelete
    Replies
    1. இந்த உண்மை இனிவரும் காலங்களிலும் பொய்க்காமல் இருக்க வேண்டும் !

      Delete
    2. அதற்கு ஆப்பு வைத்தால்தான் தாமரை மலரும்... எனவே...
      தமிழன் விழிப்புடன் இருபது அவசியம் ...

      Delete
    3. நான் இதை ஏற்கிறேன்

      Delete
    4. பகுத்தறிவு சூரியன் தமிழனின் புத்தியில் உதித்திருக்கும் வரை தாமரை மலர்வதற்கு சாத்தியம் இல்லை !!!

      Delete

  19. இன்றுதான் நான் உங்கள் தளத்திற்கு முதன் முதலாக வருகிறேன் என்று நினைக்கிறேன் படித்ட முதல் பதிவும் பிடித்தது. அதனால் இணைந்துவிட்டேன் மீண்டும் வருகிறேன்

    ReplyDelete
    Replies
    1. மிகவும் நன்றி ! தொடருவோம் ...

      Delete
  20. அயல்நாடு பொருளாதாரத்த்தில் வளர்ந்த நாடு, மூட நம்பிக்கைகள் சற்று குறைந்த நாடு....இந்தியாவில்...அதுவும் தமிழ்நாட்டில் முதன்மையாக இருப்பது ஜாதி துவம்சமும“ மத துவம்சமும்தான்..... அப்படி இருநதும் ஒன்றிரண்டு மனித நேயமிக்கவர்களால்தான் மனித நேயம் உயிர் பிழைத்து இருக்கிறது. நன்றி! தங்களின் அனுபவம் எனது அனுபவத்தையும் கிளறி விட்டுள்ளது..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துரைக்கு நன்றி வலிப்போக்கன் அவர்களே ! இன்னும் மனித நேயம் உயிர்ப்பித்திருக்க "வலிப்போக்கனான " உங்களை போன்றவர்களும் காரணம் தோழரே !

      Delete
  21. இந்த மனிதநேயம் தான், இரக்ககுணம் தான் தமிழனின் தலையாய குணம் என தோன்றுகிறது !// மிக மிகச் சரியே! இந்த மனித நேயத்தை எந்த நாட்டிலும் இந்த அளவு பார்க்க முடியுமா என்று தெரியவில்லை! என்ற காலம் கடந்த காலம் ஆகிவ்ருகின்றதோ?!! அந்த மனித நேயம் இங்கும் மறையத் தொடங்கி உள்ளது! அதேசமயம் வெளி நாடுகளில் மலரத்தொடங்கி உள்ளதோ என்றும் தோன்றுகின்றது. இதுதான் காலச் சக்கரம் என்பார்களோ?!!! அங்கும், இங்கும் நல்லவர்களும், மோசமானவர்களும் கலந்து இருக்கின்றார்களோ என்று தான் தோன்றுகின்றது! இங்கும் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றனவே! அடுத்த வீட்டவன் கதவை நெடு நேரமாகத்திறக்கவில்லை என்றால் என்னாயிறு என்று கூட யோசிக்க நேரமில்லாமல், மனம் இல்லாமல் ஓடுகின்ற வாழ்வும், அடுக்குமாடிக் கலாச்சாரமும் இங்கும் ஆரம்ட்பித்து விட்டதே!

    அருமையான எழுத்து நடை நண்பரே! ஒரு முறை அல்ல இரு முறை வாசித்தோம்!

    ReplyDelete
    Replies





    1. ‘" அப்பா, அம்மா பிள்ளைகளை அங்க போய் உக்கார சொல்லுங்க சார் ! நீங்க மட்டும் இருந்தா போதும் ! "

      நிற்க முடியாமல் தடுமாறும் என் தந்தையை பார்த்துவிட்டு அதிகாரி காட்டிய இடம் குடியுறிமை சோதனை மையத்துக்கு வெளியே தூரத்தில் இருந்தது. சட்டப்படி விசாவை சரிபார்க்காமல் அங்கிருந்து நகரக்கூடாது.

      " பரவாயில்லை சார் ! வயசானவங்க... குழந்தைங்க.... "

      எனது தயக்கத்தை படித்தவராய் பேசிய அதிகாரியின் மனித நேயத்தை வெளிப்படுத்திய விதத்தை வியந்திருந்தீர்கள்...உண்மையிலேயே தமிழன் பெருமை கொள்ள வேண்டியது!

      பாரீஸ் விமானநிலையம் வந்தடைந்தோம் !

      விமான வாயிலில் ஒரு இளம்பெண் அதிகாரி சக்கரநாற்காலில்கள் மற்றும் சிப்பந்திகளுடன் நின்றிருந்தாள்...

      " உங்கள் தந்தையின் பெயர் முன்னரே பதிவு செய்யப்பட்டுள்ளதா ?... "

      " இல்லை... ஆனால்... "

      " மன்னிக்கவும் ! முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும்தான் உதவ முடியும் ! நடக்கவே முடியவில்லையென்றால் சொல்லுங்கள்... ஆம்புலன்ஸை கூப்பிடுகிறேன் ! "

      குடியுறிமை மையம் அமைதியாய் இருந்தது...

      அன்பு, காதல், காமம் அனைத்தையும் சட்டங்களுக்குள் அடைத்த ஐரோப்பிய யூனியன் எங்களை மகிழ்வுடன் வரவேற்றது !

      அக்கரையில் சட்டப்படி...
      இக்கரையில் மனிதநேயத்தின்படி....
      ஆமாம் அய்யா...‘வந்தே மாதரம்’ பாடலில் ஏ.ஆர். ரகுமான் பாடியிருப்பார்...‘’தாய் மண்ணே...வணக்கம்” என்று உச்சஸ்தாயில்...கேட்டிருப்பீர்கள்!

      பாரதி கூட தேசிய கீதமாக பாடியிருப்பாரே...!

      வந்தே மாதரம் என்போம் - எங்கள்
      மாநிலத் தாயை வணங்குதும் என்போம்...

      நொந்தே போயினும் வெந்தே மாயினும்
      நந்தே சத்தர் உவந்தே சொல்வது... வந்தே மாதரம்!

      எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
      இருந்ததும் இந்நாடே - அதன்
      முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
      முடிந்ததும் இந்நாடே- அவர்
      சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
      சிறந்ததும் இந்நாடே-இதை
      வந்தனைகூறி மனதில் இருத்தி என்
      வாயுற வாழ்த்தேனோ? இதை
      ‘வந்தே மாதரம், வந்தே மாதரம்’
      என்று வணங்கேனோ?
      -என்று வணங்கியவன் அல்லவா பாரதி.

      ‘ ஆசையே துன்பத்திற்குக் காரணம்...ஆசையை ஒழிக்க ஆசைப்பட்ட புத்தர் பிறந்த பூமியல்லவா?’

      ’ உன்னைப்போல பிறரை நேசி’- இயேசு என்ற மனிதமகானின் கூற்றைப் பின்பற்றி வாழ்பவர்கள் அல்லவா?

      ‘தனக்கென அன்றி நெஞ்சே!...சகத்துக்கே வாழும் வீரன்’ என்று பாரதிதாசன் போற்றிய ஏழைகளுக்காக அரையாடை தரித்த சரித்திர காந்தி மகான் வாழ்ந்த பூமியல்லவா?’

      ‘எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி...வேறொன்றும் அறியேன்’ என்று வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய நின்ற வள்ளலார் வாழ்ந்த பூமியல்லவா?

      மனித நேயத்தை விதைத்து...வளர்த்து...அகிலத்தில் செழித்து வளரும் பூமி நம் பூமியல்லவா?

      தினத்தந்தி நாளிதழில் 05.10.2014-ஆம் தேதியன்று 9-ஆம் பக்கத்தில் வந்த செய்தி...

      ‘ காஞ்சீபுரத்தை அடுத்த நீர்வள்ளுர் கிராமத்தை சேர்ந்தவர் பாபு(35). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி பாரதி (30). இவர்களது மகன் ஜீவானந்தம் (வயது ஒன்றரை). மகள் தீபிகா (ஒன்றரை மாதம்). நேற்று புரட்டாசி சனிக்கிழமையையொட்டி கோவிலுக்கு செல்வதற்காக பாபு தனது மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து செல்ல மாமனார் வீடான வையாவூருக்கு சென்றார்.

      அங்கு மனைவி மற்றும் குழந்தைகளை ஒரே மோட்டார் சைச்கிளில் அழைத்துக்கொண்டு நீர்வள்ளுர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார். சின்னையன்சத்திரம்-ஆட்டுபுத்தூர் என்ற இடத்தில் சென்றபோது திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

      இதில் மோட்டார் சைக்கிள் 100 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. இடிபாடுகளில்சிக்கி பாபு, அவரது மனைவி பாரதி, மகன் ஜீவானந்தம் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். விபத்து நடந்த உடன் பாரதி தன்னுடைய கையில் இருந்த ஒன்றரை மாத குழந்தை தீபிகாவை தூக்கி வீசினார். இதில் அந்த குழந்தை லேசான காயத்துடன் உயிர் தப்பியது.

      Delete
    2. இது திரு. துளசிதரன் அவர்களின் பின்னூட்டத்துக்கான பதில்...

      " இங்கும் முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றனவே! அடுத்த வீட்டவன் கதவை நெடு நேரமாகத்திறக்கவில்லை என்றால் என்னாயிறு என்று கூட யோசிக்க நேரமில்லாமல், மனம் இல்லாமல் ஓடுகின்ற வாழ்வும், அடுக்குமாடிக் கலாச்சாரமும் இங்கும் ஆரம்ட்பித்து விட்டதே! "

      ஆமாம் ! இந்த பயத்தின் வெளிப்பாடே இந்த பதிவு எனலாம். ஓவ்வொரு முறை ஊர் வரும்போதும், இருபது வருடங்களுக்கு முன்னர் நான் கண்ட உயிர்ப்பு என் மண்ணிலிருந்து மங்கிவருவதை காண மனம் பதைக்கிறது !

      அருமையான எழுத்து நடை நண்பரே! ஒரு முறை அல்ல இரு முறை வாசித்தோம்!

      வலைப்பூ வசிஷ்டர்களில் ஒருவரின் வாயால் பிரம்மரிஷி பட்டம் !

      நன்றிகள் பல.

      Delete
  22. இது திரு. மணவை ஜேம்ஸ் அவர்களின் பின்னூட்டத்துக்கான பதில்.

    அய்யா,

    தங்களின் வருகைக்கும், நீண்ட, பல தகவல்களை கொண்ட பின்னூட்டத்துக்கும் நன்றிகள் பல.

    ஆனாலும் சமூகத்திலிருந்து வேகமாக மறையும் இந்த மனித நேயத்தை உங்களை போன்ற நல்லாசிரியர்களால் மட்டுமே செழித்தோங்கச்செய்ய முடியும்.

    நன்றி

    ReplyDelete
  23. அன்புள்ள திருமிகு.சாமானியன் அய்யா அவர்களுக்கு,

    வணக்கம். தங்களது ‘தமிழர் என்றோர் இனமுண்டு’...’தனியே அவர்க்கொரு குணம் உண்டு’ என்பதை வெகு அழகாகத் தங்களின் பதிவு விளக்குகிறது. பாராட்டி மகிழ்கின்றேன்.

    மேலும் எனது பின்னூட்டத்தை படித்து நன்றி தெரிவித்த நீங்கள்... ‘ஆனாலும் சமூகத்திலிருந்து வேகமாக மறையும் இந்த மனித நேயம்’ என்று சொல்லி இருக்கீறிர்கள்... உண்மைதான்...அதற்காக ஒரு சிறுகதை எனது பதிவில் விரைவில்...

    தங்களுக்கு நேரம் இருப்பின் எனது சிறுகதைகளைப் படித்து கருத்திடவும்...!

    நன்றி.

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    manavaijamestamilpandit.blogspot.in

    ReplyDelete
  24. நல்ல பதிவு, நாம் நாட்டில் மனிதநேயம், வாழும் நாட்டின் சட்டம், எழுத்தின் வசீகர நடை (மறுபடியும் படிக்கதூண்டும்), மிக அருமை. ஏதோ நானே நேரடியாக சந்தித்த்தை போல் உணருகிறேன். வாழ்த்துகள்.

    sattia vingadassamy

    ReplyDelete
  25. எனது வலைப்பூவுக்கு தொடர்ந்து வருகை தரும் உங்களை போன்றவர்களின் ஊக்க வார்த்தைகளே என்னை மேன்மேலும் சிறப்பாக எழுத முயற்சிக்க வைக்கின்றன ! நன்றி

    ReplyDelete
  26. வெகு சிறப்பான அனுபவப் பகிர்வு ஐயா. தமிழ்நாட்டில் மதமாச்சர்யங்கள் தங்கள் கைவரிசையைக் காட்டாமல் மனித நேயம் என்றும் தழைத்திருக்க வேண்டும் என்றே நானும் வேண்டுகிறேன். நீங்கள் சாமானியன் அல்ல.... அசாத்தியன்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கும் பாராட்டு வார்த்தைகளுக்கும் நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.

      Delete
  27. தமிழனின் இந்த மனித நேயத்தை மறதியாய் நினைத்து ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை அவன் வீட்டிலேறும் அரசியல்வாதிகளையும் அவன் மன்னிப்பதை கேடாக பயன் படுத்திக் கொள்கிறார்கள். இது தமிழகம் உள்ள இந்தியாவின் சாபக் கேடு என்று கொள்ளலாமா..???. திரு. சாமானியன் அவர்களே!!

    ReplyDelete
    Replies
    1. அரசியல் அவலங்களை பற்றிய செய்திகளை படித்து கருத்திடும்போது சாபக்கேடு என்ற வார்த்தையை நானே பயன்படுத்தியிருக்கிறேன் என்றாலும், அப்படி சொல்லி ஒதுக்குவதில் எனக்கு உடன்பாடு கிடையாது தோழர் ! காரணம் விதி, சாபக்கேடு என்ற வார்த்தைகள் நமது இயலாமையின் வெளிப்பாடு ! இந்த சாபக்கேடான நிலைமையிலிருந்து மீளும் விழிப்புணர்வுக்கு முயற்சிக்க வேண்டும் ! முறையான கல்வியறிவின் மூலமே அது சாத்தியம். வலைப்பூ எழுத்தாளர்களான நம்மால் கூட இதற்கான பங்களிப்பை கொடுக்க முடியுமென்பது என் தாழ்மையான கருத்து ! அப்படி முயற்சிப்பவர்களில் வலிப்போக்கன் என்பவரும் ஒருவர் !

      நன்றி

      Delete
  28. முதன்முதலாக உங்கள் தளத்தை தொடர ஆரம்பித்துள்ளேன்.

    பொதுவா எல்லோரும் இந்தியாவை மட்டம் தாடியும், வெளிநாடுகளை மேன்மை படுத்தியும் எழுதுவார்கள். ஆனால் தாங்களோ அதற்கு விதிவிலக்காக இந்தியாவை பெருமைப்படுத்தி எழுதியிருக்கிறீர்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகை தொடர வேண்டுகிறேன்...

      சுற்றுலா பயணிகளாய் சில வாரங்கள் செல்லும் போது அனைத்து நாடுகளும் சொர்க்கங்களே ! வாழ்ந்து பார்த்தால் அனைத்து நாடுகளிலும் ஏதோ ஒரு குறை இருக்கத்தான் செய்கிறது !

      மேலை நாடுகளைவிடவும் அதிகமாய் சாட நமது சமூகத்தில் பல பிரச்சனைகள் உள்ளன என்றாலும், நாம் வந்த வேர் இதுவல்லவா ? நம் குடும்பத்தின் குறைகளை சாடும் அதே நேரத்தில் அதன் நிறைகளை பாராட்டவில்லயென்றால் எப்படி ?!

      நன்றி

      Delete
  29. சாம் அய்யா பதிவின் பின்னூட்டங்களையும் படித்தேன்..
    அருமை என்கிற ஒரு சொல் போதாது..
    தொடர்க ..
    தமமதமாக படிப்பதே ஒரு சுகமாக இருக்கிறது காரிகன் பாலகணேஷ் விஜு என கலக்கல் பின்னூடங்கள்...
    வருண் வழக்கம்போல் தடாலடி

    இந்தமாதிரிப் பதிவுகள் மூலம் உலகைப் பார்க்கிற பொழுது பொழியும் அழகு
    அருமை , நம்பிக்கை வாவ்.

    ஒரு தேர்வுக்கு சென்றிருந்த பொழுது எனது வேலைவாய்ப்பு அட்டையில் ஒரு புள்ளியும் எக்ஸ்.பதினான்கு என்கிற குறியீடும் விட்டுப் போய்விட்டது.

    அது முழுக்க முழுக்க என் தவறல்ல ... அந்த பிரிவு எழுத்தரின் பொறுப்பற்ற செயல்.

    ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்த ஒரு ஆயா சொன்னார்கள் சார் நீங்க போய் மயிலாப்பூரில் இருக்கிற வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இந்தக் குறியீடை வாங்கி வாருங்கள். அவர்கள் தந்தால் வாங்க இல்லை என்றால் அப்படியே ஊருக்கு போய்விடுங்கள் ...
    வெகு சாதரணமாக ஏதோ நீங்க ஆர்டர்பண்ணிய துணி இல்லை எனவே போய்ட்டுவாங்க என்று சொன்னமாதிரி இருந்தது அது ... (எனக்கு பிரஷர் எகிறியது நல்லவேளை நண்பர் மாரியப்ப பிள்ளை இருந்தார்)

    பதறிய படி மயிலை சென்றேன் அங்கே ஒரு கண்ணாடி அணிந்த அலுவலர்( பெண் )ஏன் பதறுறீங்க இருங்க ஒரு நிமிஷம் என்று பத்து நிமிடங்களில் பணியை முடித்து தந்தார் ...

    அவரது தன்னம்பிக்கையும் செயல்பாடும் அந்த தருணத்தில் இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட தேவதைபோலவே இருந்தார்
    அவர்களின் முகம் மறந்துவிட்டது ஆனால் எனது வாழ்நாள் முழுக்க அவர்களின் அந்த உறுதியான தன்னம்பிக்கை தவழும் ஏன் பதறுறீங்க ... இருங்க செய்துதரேன் என்று சொன்னதோடு மட்டுமில்லாது அலுவலகப் பணியாளர்களிடம் வேலையை கூறி முடித்து தந்த பாங்கும் மறக்க இயலாது..

    அந்த ஆசிரியர் தேர்வாணைய ஆயாவையும் மறக்கவில்லை இந்நேரம் முழு ஓய்வூதியத்துடன் பணிநிறைவை செய்திருப்பார் ...
    போட்டித் தேர்வை எழுதி,
    அரசுப் பணிக்கு நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கும் ஒரு ஆசிரியரிடம் எப்படி பேசுவது என்று அவருக்குத் தெரியவில்லை .. ஈவு இரக்கம் இல்லாத "அப்படியே ஊருக்கு போயிருங்க" என்கிற அவரது வார்த்தை இன்னும் எனக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது.

    உங்கள் அதிர்ஷ்டம் உங்களுக்கு தரமான அலுவலர்கள் வாய்த்தார்கள்...

    ReplyDelete
  30. நீங்கள் மேற்கொண்ட பயணத்தில் நல்ல மனிதர்களைத் தேடியிருக்கிறீர்கள்; சந்தித்து மகிழ்ந்திருக்கிறீர்கள்.

    மனித நேயம் செத்துவிடவில்லை என்பதறிந்து ஆறுதல் கொண்டிருக்கிறீர்கள்.

    நீங்கள் பிறந்த மண்ணின் மைந்தர்களை இப்போது வாழும் நாட்டின் மனிதர்களோடு ஒப்பிட்டுப் பெருமைப்பட்டிருக்கிறீர்கள்; இவர்களிடம் குறைகள் கண்டவிடத்து வருந்தியுமிருக்கிறீர்கள்.

    மொத்தத்தில், இது ஒரு பயணக் கட்டுரை மட்டுமல்ல; மனிதர்களைப் படிக்கும் கட்டுரையும்கூட.

    மனதார உங்களை வாழ்த்துகிறேன் சாமானியன்.

    ReplyDelete
  31. Are you in need of a loan?
    Do you want to pay off your bills?
    Do you want to be financially stable?
    All you have to do is to contact us for
    more information on how to get
    started and get the loan you desire.
    This offer is open to all that will be
    able to repay back in due time.
    Note-that repayment time frame is negotiable
    and at interest rate of 2% just email us:
    reply to us (Whats App) number: +919394133968
    patialalegitimate515@gmail.com
    Mr Jeffery

    ReplyDelete