Monday, December 15, 2014

விடாது துரத்திய விஷ்ணுபுரம் !



பால்ய வயதில், ஒரு மழைக்கால மாலை நேரத்தில் எனக்கு பரிச்சயமான அட்டை  கிழிந்த  காமிக்ஸில் தொடங்கிய வாசிப்பு என்னை இன்னும் தொடர காரணம் என் பெற்றோர்கள் !

அந்த மாலையிலிருந்து நான் புத்தக புழுவாய் மாறிப்போனேன். வளர்ச்சிக்கு ஏற்ப என் வாசிப்பு ரசனையும் மாற, பள்ளிக்கூடத்துக்கு அடுத்ததாக நான் அதிகம் இருந்தது நூலகங்களில் ! பொது நூலகங்கள் தொடங்கி லெண்டிங் லைப்ரரி வரை ஊரின் அனைத்து நூலகங்களும் எனக்கு அத்துப்படி ! அன்று எனது பெற்றோர்கள் எந்த விதத்திலாவது வாசிப்புக்கு தடைபோட்டிருந்தார்களேயானால் என் வாழ்க்கையே மாறியிருக்கும்... நிச்சயமாக சாமானியனாய் உங்களை தொடர்ந்திருக்க முடியாது ! காமிக்ஸில் தொடங்கி கண்ணில் கண்ட நூல்களையெல்லாம் வாசிக்க தொடங்கிய காலம் வரை எனக்கு எந்த தடையும் போட்டதில்லை அவர்கள் !

 பத்தாம் வகுப்பு தேர்வின்போது நான் வாசித்துக்கொண்டிருந்தது பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் !

 நானூற்றி பதிமூன்று மதிப்பெண்கள் என ஞாபகம்...

" அந்த கன்றாவியை வாசிக்காமல் இருந்திருந்தா இன்னும் அதிகமா மார்க் எடுத்திருக்கலாம்ல... "

ஒரு சொந்தக்காரர் புலம்ப,

" பள்ளிக்கூட கன்றாவியை மட்டும் படிச்சிட்டு வாந்தியெடுத்து அப்படி ஒண்ணும் அதிகமா வாங்க வேண்டாம் ! "

என் அம்மா சட்டென கூறினார். என் கல்வி மதிப்பெண்களை பற்றி பேசுவதைவிட, நான் படிக்கும் புத்தகங்களை பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்கள் !

விகடன் பிரசுரம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பிரான்சில் இருந்தேன். நான் வாங்கி அனுப்ப சொல்லியிருந்த புத்தகங்களில் எய்ட்ஸ் எரிமலையும் ஒன்று ! அந்த புத்தகத்தின் அட்டை தெரியாமல் பைண்ட் பண்ணி அனுப்பி வைத்தார் என் தந்தை ! நான் பிரான்சிலிருந்து குறிப்பிடும் புத்தகங்களுக்க்காக என் பெற்றோரும், குடும்ப நண்பர் தேத்தரவுராஜும் பட்டபாடுகள் சொல்லி மாளாது !

ரண்டாயிரத்தின் தொடக்கம்... இந்தியாவில் முழுவீச்சை அடைந்திருந்த நுகர்வோர்  கலாச்சாரம் எங்கள் ஊரிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்த காலகட்டம். எனது பால்யத்தின் அற்புதங்களில் ஒன்றான ரஹ்மானியா பேப்பர் ஸ்டோர்ஸ் எல்லாம் காணாமல் போக ஆரம்பித்த காலம் !
கி.ராஜநாராயணன்


" கொஞ்சம் புக்ஸ் வாங்கனும்... எங்க கிடைக்கும் ? "

பிறந்த ஊருக்கு அந்நியனாய் மாற தொடங்கியிருந்த நான் சொந்தக்காரர் ஒருவரிடம் கேட்டேன்.

" அட நம்ம பரட்டை டீக்கடையிலேயே விக்கிறானே ?! "

அவர் சட்டென கூற, குழம்பினேன் !

" வாங்க ! இப்பவே ஒரு நடை போயிட்டு வந்துடலாம்... பய பிஸினசை டெவலப் பண்ணிட்டான்ல... எல்லா பொஸ்த்தகமும் வச்சிருக்கான் ! "

பரட்டை கால ஓட்டத்துக்கு ஏற்ப தொழில் விருத்தி பண்ணிக்கொண்டார் போலிருக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் கிளம்பினேன் !

" பாத்தீங்களா ?! நான் சொன்னேன்ல... எது வேணுமோ வாங்கிக்குங்க ! "

கடையை நெருங்கிய சொந்தக்காரர் எனக்கு உதவிய மகிழ்ச்சியுடன் கூற...

 பரட்டை பிஸினஸ் டெவலப் பண்ணியிருந்தது உண்மைதான் ! வடை, டீ, போண்டாவுடன்  தமிழின் முன்னணி வார, மாத சஞ்சிரிகைகளும் கடையில் தொங்கின ! 

நம் சமூகத்தின் பெரும்பாலானவர்களுக்கு வார, மாத சஞ்சிரிகைகளுக்கும், புத்தகங்களுக்குமான வித்யாசம் தெரிவதில்லை ! இன்னும் பலருக்கு வாசித்தல் என்றாலே பள்ளி பாட புத்தகங்கள் மட்டும்தான் !

நமது சமூகத்தில் வாசிப்பு பழக்கம் உள்ளவன் வேலைவெட்டி இல்லாதவன் ! கிடைத்த காசையெல்லாம் வீணாய் செலவு செய்யும் பிழைக்கத்தெரியாதவன் ! புத்தகம் வாங்கி கொடுக்கும் நண்பனைவிட குவார்ட்டருக்கு செலவு செய்பவன் " நண்பேன்டா ! "

ஒன்றுக்கும் உதவாத அரசியல் அலும்புகளையும், அரைவேக்காட்டு சினிமா செய்திகளையும் தலைப்புகளாக்கி, இலக்கியத்தரமிக்க எழுத்தாளர்களின் பேட்டியில்கூட அவர்களின் படைப்புகளை பற்றி விரிவாக குறிப்பிடாத, சிலவேளைகளில் அவர்களின் பதில்களை நையாண்டி பேட்டியாக்கி பிரசுரிக்கும் ஊடங்களை கொண்ட சமூகத்தின் மக்கள் இப்படி இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை !

ஒரு நாட்டின் நூலகங்களின் தரத்தை வைத்தே அந்த சமூகத்தின் வாசிப்பு தகுதியை கணித்துவிடலாம். மேலை நாடுகளில் நூலகர் பணிக்கெனவே மேல்நிலை படிப்புகள் உண்டு. அதையும் தாண்டி, பல்வேறு தேர்வுகளுக்கு பின்னரே அந்த பணியில் அமர முடியும். அங்கெல்லாம் நூலகர்கள் தங்கள் நாட்டின் இலக்கியம் தாண்டி உலக இலக்கியம் வரை அனைத்தையும் அறிந்து விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

அங்கு குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே அவரவர் நாட்டின் இலக்கியங்கள், குழந்தைகள் புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் எளிமையான படக்கதைகளாய் அறிமுகம் செய்யப்படுகின்றன. முதலாம் வகுப்பு குழந்தைகள் கூட நூலகங்களுக்கு தொடர்ந்து அழைத்து செல்லப்படுகிறார்கள். கலை, இலக்கிய ரசனை அவர்களுக்கு பால்யத்திலிருந்தே பயிற்றுவிக்கப்படுகிறது.

னது பதிணென்பருவத்து நண்பர்களில் ஒருவன் கிரி. கலாட்டா கிரி என்றால் தான் ஊரிலுள்ளவர்களுக்கு புரியும். ஒரு பாட்டில் பீருக்கே சுருதி ஏறி கண்மண் தெரியாமல் கலாட்டாவில் இறங்கிவிடுவான் என்பதால் அந்த பெயர்.

லோக்கல் எம் எல் ஏவின் தொண்டரடிப்பொடியாகி, எப்படியோ  நூலகத்தில் கடைநிலை ஊழியனாக சேர்ந்தவனை சில வருடங்களுக்கு முன்னர் சந்திக்க நேர்ந்தது... தினத்தந்தியை கூட புரட்டியறியாத கிரி நூலகராக பதவி உயர்வு பெற்றிருந்தான் !

தோப்பில் முகம்மது மீரான்


ந்தியா வரும் ஒவ்வொரு முறையும் புத்தகங்கள் தேடி அலையும் போது ஏற்படும் அனுபவங்களையே ஒரு புத்தகமாக எழுதிவிடலாம் !

கி. ராஜநாராயணின் கோபல்லபுரத்து மக்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற நேரம்...  அவர் புதுச்சேரியில் குடியேறியதை பத்திரிக்கைகள் பேசிக்கொண்டிருந்த காலம்...

புதுச்சேரியில்  அந்த புத்தகத்துக்காக அலைந்து கொண்டிருந்தேன் !

" ராஜநாராயணனா ? அவரு யாருங்க ?! "

ஹிக்கின்பாதம்ஸ் புக் ஸ்டாலில் விசாரித்தபோது வந்த கேள்வி !

பல வாரங்கள் விசாரித்து, சென்னையின் முட்டு சந்தின் முனையிலிருந்த ஒரு கடையிலிருந்து " கோபல்லபுரத்து மக்களை " கண்டுபிடித்து பிரான்ஸ் அனுப்பி வைத்தார் நண்பர் தேத்துரவு ராஜ் !

அதே புதுச்சேரியில் அருந்ததி ராயின் " Gods of small things" மற்றும் அப்துல் கலாமின் " wings of fire " ஆகிய ஆங்கில நூல்கள் மிக எளிதாக கிடைத்தன ! பிரதான நேரு வீதியின் பளபள ஷாப்பிங் மால்களின் முகப்பு கண்ணாடியில் பரத்தப்பட்டிருந்தன அந்த நூல்கள்.

பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் புத்தக கடைகளில் அவரவர் மொழி புத்தங்களை மட்டுமே காண முடியும் ( ஆங்கிலம் கற்பதற்கான பாட புத்தகங்கள் இதில் சேர்த்தி இல்லை ! ) இவ்வளவுக்கும் ஆங்கில தேசமான இங்கிலாந்து இவர்களுக்கு பக்கத்து வீடு ! பிரபலமான ஆங்கில நூல்களும் " Best  seller " வகைகளும் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனைக்கு வருமே தவிர, ஆங்கில மூலத்தை தேடி அலைய வேண்டும் !

நமக்கு புத்தகத்தினுள் என்ன இருக்கிறது என்பது முக்கியமில்லை ! அது ஆங்கிலத்தில் இருந்தால், கையில் கொண்டு போவதில் ஒரு பெருமை !  Gods of small things செம cantroversial என பெருமைப்பட்டுக்கொள்பவர்கள் தி. ஜானகி ராமனின் அம்மா வந்தாள் நாவலை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் !  ( தி.ஜானகிராமனின் படைப்புகளை நோக்கி என்னை திருப்பியவர் சகோதரர் ஜோசப் விஜு அவர்கள். )

அந்த ஆங்கிலத்தையும் நம்மவர்கள் உருப்படியாக கற்பதில்லை என்பது இன்னும் கொடுமை !

ஜெ. கிருஷ்ணமூர்த்தியின் Freedom from the  known புத்தகம்...  நம்அன்றாட வாழ்வின் அனுபவங்களின் மூலம் அறிந்த மனப்பிம்பங்களிலிருந்து நாம் விடுபட்டால்தான் பிரபஞ்ச உண்மையை உணர முடியும் என்பது இந்த புத்தகத்தின் ஒரு வரி விளக்கம்.

இதன் தமிழ்மொழியாக்கம் ஒன்றினை படிக்க நேர்ந்தது. தலைப்பு  "உண்மையிலிருந்து விடுதலை " ! ஜே. கே சொல்ல நினைத்ததோ  Freedom from the  known ,  அதாவது அறிந்தவைகளிலிருந்து விடுதலை.  அறிந்தவைகளிலிருந்து மனம் விடுதலை அடைந்தால்தான் உண்மையை காண முடியும். தமிழில் எழுதியவர் புரிந்து கொண்டதோ உண்மையிலிருந்து விடுதலை ! அதாவது  Freedom from the truth !!!

ற்றொரு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான். ராஜநாராயணன் கரிசல் மக்களின் வாழ்வை கண் முன் நிறுத்தினார் என்றால் இவர் நெல்லை முஸ்லீம் சமூகத்தின் வாழ்வியலை, மும்மதங்கள் கலந்த சமூகத்தின் குழப்பங்களை, அத்தனை கலகங்களுக்கிடையேயும் பாமரனிடம் பொங்கும் மனித நேயத்தை ரத்தமும் சதையுமாய் எழுத்தில் கொடுத்தவர்.

இவரது சாய்வு நாற்காலி, ஒரு கடலோர கிராமத்தின் கதை, கூனன் தோப்பு  போன்ற நாவல்களை எனக்காக தேடி ஒரு நண்பர் படையே அலைந்தது !

மீன்டும் அதே கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் தேடி சென்னையில் அலைந்த போது , பழம்பெரும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் கிடைத்த அனுபவம்....

புத்தக பிரிவில் நுனிநாக்கு ஆங்கில இளம் பெண்...

தமிழ் புத்தக அடுக்கில் வழக்கம் போலவே பாலகுமாரன் மட்டும் சிரித்து கொண்டிருந்தார்... கூடவே ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார்.... அவர்களை சுற்றி சமையல் கலை, ஜோதிடம், வாஸ்து.... நட்ட நடுவே,  " முப்பது நாளில் கோடீஸ்வரர் ஆவது எப்படி ? " மற்றும் " சுகமான தாம்பத்ய வாழ்வுக்கு சுவையான யோசனைகள் ! "

" கி. ராஜநாராயணன் எழுதிய  கோபல்ல கிராமம் இருக்கிறதா ? "

புதுச்சேரியின் ஹிக்கின் பாதம்ஸ் ஆசாமியாவது கி.ராஜநாராயணனை யார் என்றுதான் கேட்டார்...

" அதெல்லாம் இங்க கிடையாதுங்க ! "

நான் ஏதோ " அந்த மாதிரி " புத்தகம் கேட்டது போல் பதறினார் நுனிநாக்கு ஆங்கிலி !

சட்டென திரும்பிய என் கண்களில் பட்டது... " அந்த மாதிரி " நூல்களே தான் !  அவற்றில் ஒன்று காம சூத்திரம் முழுவதையும் காமிக்ஸ் வடிவில் கொண்ட புத்தகம் ! மிக உயர்ந்த தரத்திலான ஆங்கில புத்தகம் ! சத்தியமாய் சொல்கிறேன் நண்பர்களே ! நம்மவர்கள் " அந்த சுதந்திரத்துக்கு " உதாரணமாய் அடிக்கடி குறிப்பிடும் பிரான்ஸில் கூட அப்படிப்பட்ட புத்தகத்தை பார்த்ததில்லை நான் !
தி.ஜானகிராமன்


எனக்கு விடலைப்பருவ ஞாபகம்...

எங்கள் ஊரின் பேருந்து நிலையத்தினருகே இருந்த  அந்த பெட்டிக்கடையில் அனைத்து தினசரி, வார, மாத இதழ்களுடன் பருவகாலம் தொடங்கி அவ்வப்போது பெயர் மாறும் குயிலி, டிஸ்கோ, கிளாமர் போன்ற கில்மாக்களும் கிடைக்கும் ! அந்த கடைக்காரர் ஒரு உடல் ஊனமுற்ற இளைஞர். சக்கர நாற்காலியில் வரும் அவரை ஒரு நாள் போலீஸ்க்காரர்கள் இழுத்துபோனார்கள்.

" மாப்ள... ரகசியமா சரோஜாதேவி வித்திருக்கான்டா ! "  என்றான் முபாரக் !

ஏழை பாழைகளுக்காக சரோஜாதேவியை ஒளித்து விற்றால் குற்றம், மேல்தட்டு ஷாப்பிங் மால்களில் குழந்தைகள் எடுத்து புரட்டகூடிய தூரத்தில் காமசூத்திரம் விற்கலாம்  ! இது ஜனநாயகம் !

ப்போது அலைந்தது சரி, இன்றுதான் இணையத்தின் மூலம் எந்த நூலையும் வாங்கலாமே என கேட்கலாம்...

எனக்கு புத்தகங்களை நேரில் சென்று வாங்க வேண்டும் ! நான் தேடியது கிடைத்த பரவசத்துடன்  பார்த்து , அதன் அட்டையை தடவி, புது வாசனையை முகர்ந்து ...முன் அட்டை கிழிந்த புத்தகத்தை என்னால் வாசிக்க இயலாது !

என்னை சைக்கோ என்று வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள் !

சில மாதங்களுக்கு முன்னர், இந்தியா கிளம்புவதற்கு முன்பாக ஆனந்த விகடனை புரட்டிக்கொண்டிருந்தேன்.  உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்பது போல விகடன் புத்தக கண்காட்சி முதல்முறையாக எனது ஊரில் ! அதுவும் நான் அங்கிருக்கும் சமயத்தில் ! பரவசமாக முகவரியை பத்திரப்படுத்திக்கொண்டேன்.

ஊர் வந்த நாள் முதலாய் அந்த முகவரி தேடி அலைகிறேன்,  கிடைக்கவில்லை ! அந்த தெரு என்னவோ எனக்கு நன்கு தெரிந்ததுதான் ! அங்கு கண்காட்சி நடக்கும் அறிகுறியே இல்லை !

என் பால்ய நண்பனிடம் கேட்டேன்...

" கண்காட்சினா திருவிழா கூட்டம்ன்னு நெனைச்சிட்டியா ? நீ திருந்தவே மாட்டடா ! வா ... "

இரண்டு பெரிய கடைக்களுக்கிடையே சொருகலாய் அந்த புத்தகக்கடை.  இருட்டில் அமர்ந்திருந்த கடைக்காரர் எங்களை கண்டதும் அவசரமாய் விளக்குகளை போட்டார் !

கடையின் நடுவே விகடன் பிரசுர புத்தகங்கள் !

நான் பாய்ந்து பாய்ந்து சேகரிப்பதை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் ! பணம் செலுத்தும் வரை அனைத்தையும் வாங்குவேன் என்பதை நம்பவில்லை அவர் !

" லெண்டிங் லைப்ரரிக்கா சார் ? "

" ம்ம்ம்... கேக்குறாருல்ல... சொல்லுடா ! "

நக்கலாய் என் நண்பன் !

" இல்ல சார்... படிக்கத்தான் ! "

அவர் என்னை பார்த்ததின் அர்த்தம் மட்டும் இன்னும் விளங்கவில்லை !

சில நாட்கள் கழித்து மற்றொரு புத்தக கண்காட்சியின் விளம்பரம் கண்டேன்... இந்த முறை சற்றே பெரிய கடை.

தி.ஜானகிராமனின் புத்தகங்கள் இருக்கிறதா எனக்கேட்டேன்...

" நிச்சயமாய் இருக்கும் சார்... தோ அங்க பாருங்க ! "

 கை காட்டினார் கடை முதலாளி...

அவர் காட்டியது கண்காட்சி புத்தகங்கள். கிழக்கு பதிப்பக வெளியீடுகள். எனக்கு தெரிந்து தி.ஜானாகி ராமனின் படைப்புகளை கிழக்கு பதிப்பகம் வெளியிடவில்லை. ஆனாலும் ஜெயமோகனின் சில புத்தகங்கள், சாரு நிவேதிதா என அள்ளிக்கொண்டு வந்தேன்.

" கிடைச்சிதா சார் ? "

நான்கு இலக்கத்தில் நான் செலுத்திய தொகை கொடுத்த மகிழ்ச்சியில் கேட்டார் கடைக்காரர்.

" ஜானகிராமன் இல்லீங்களே... "

" சார் ! ரொம்ப கஸ்ட்டமர்ஸ் ஜானகிராமன் கேக்குறாங்க சார் ! வாங்கி போடுங்க சார் ! "

நான் முடிக்கும் முன்னரே குறுக்கிட்ட கடைப்பெண்னை பார்த்தாரே ஒரு பார்வை... நல்லவேலை அவரது நெற்றிக்கண் திறக்கவில்லை ! அந்த கோபத்துக்கு கடைப்பெண் மட்டுமல்லாது புதகங்களுடன் சேர்ந்து நானும் எரிந்திருப்பேன் !

 இவ்வளவு புலம்பினாலும் புத்தக கண்காட்சிகள், வலைப்பூ சமூகம் என வாசிப்பின் ரசனை நிறைய உயர்ந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் வாசிப்பில் நம் சமூகம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் மிக மிக அதிகம் !
ஜெயமோகன்


ன்னும் தலைப்பை தொடவில்லையே ?... விடாது துரத்திய விஷ்ணுபுரம்...

நீண்ட நாட்களாய் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை வாங்க ஆவல். விகடன் பிரசுர கடைக்காரரிடம் கேட்டபோது வரவழைத்து தருகிறேன் என்றார். சில நாட்களில் இருப்பு இல்லை என கைவிரித்துவிட்டார். இரண்டாம் கடைக்காரரோ அப்படி ஒரு புத்தகமே இல்லை என சாதித்துவிட்டார் ! நான் சென்ற ஒரு மாத காலத்தில் சென்னை போன்ற நகரங்களுக்கு செல்ல நேரமில்லை !

குடும்ப நண்பர் ஒருவருடன் எனக்கு வீடு கட்டித்தந்த பொறியாளரின் வீட்டுக்கு சென்றிருந்தேன்....

வீட்டு ஹாலில் நான் தேடிய விஷ்ணுபுரம் !

" என் பொண்ணு படிப்பா சார் ! "

என்றவர், அவரது மகளை கூப்பிட்டார்.

இருபதிலுள்ள அந்தப்பெண் விஷ்ணுபுரம் படிப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுக்கொண்டே எங்கு வாங்கினாள் என்று கேட்டேன். ஒரு இணைய தளத்தின் பெயரை குறிப்பிட்டது அந்தப்பெண். இன்றைய இளைய தலைமுறையினர் முகநூலுக்கு மட்டுமே லாயக்கு என நான் நினைத்துகொண்டிருந்ததை பொய்யாக்கினாள் அந்தப்பெண் !

ஊர் திரும்ப சில நாட்களே இருந்தன. இணையம் மூலம் வரவழைக்க நாட்கள் போதாது. அதுமட்டுமல்லாமல் எனது ஐரோப்பிய வங்கி அட்டையின் மூலம் இந்தியாவில் பணம் செலுத்த சில நடைமுறை சிக்கல்கள் !

சரி, இந்த முறையும் விஷ்ணுபுர தரிசணம் நமக்கு கிட்டாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...

ஊர் திரும்ப போவதை சொல்லிக்கொள்ள எனது ஆசான் திரு. மைக்கேல் ஜோசப் அவர்களை காண சென்றேன்...  ( நான் படித்த பள்ளியின் ஆதர்ஷம் அவர் ! அந்த நல்லாசிரியரை பற்றி சொல்ல நிறைய இருப்பதால் வேறொரு பதிவிடுகிறேன் !  )

எங்கள் பேச்சு வழக்கம் போலவே புத்தகங்கள், வாசிப்பு என ஓடியது.

" யோவ் ! இருய்யா... ஒரு புக் இருக்கு... உனக்கு பிடிக்குமான்னு தெரியல... ! "

சட்டென புத்தக அலமாரியிலிருந்து எடுத்து நீட்டினார்...

விஷ்ணுபுரம் ! 848 பக்க நாவல் !

" சார்... நான் இன்னும் ரெண்டு நாள்ல... "

" பரவாயில்லய்யா... எடுத்துக்கிட்டு போ ! நான் படிச்சிடேன்... இதைப்பத்தி நிறைய பேசனும்... முதல்ல படி ! "

இப்படியாக  விடாது துரத்தி என்னை வந்தடைந்தது விஷ்ணுபுரம் !

கல்லூரி ஒன்றில் தான் உரையாற்றியபோது ஒரு மாணவர் எழுந்து எல்லோரும் புரிந்து கொள்வது போல இலகுவான நாவலாக விஷ்ணுபுரத்தை ஏன் எழுதவில்லை என தன்னை கேட்டதற்காக எரிச்சல் அடைந்ததை தனது மற்றொரு நூலில் குறிப்பிட்டிருந்தார் ஜெயமோகன்...

தமிழின் சிறுவர் இலக்கியத்துக்காக மட்டுமே தன் வாழ்நாளை அர்ப்பணித்த வாண்டுமாமா என்ன ஆனார் எனத் தேடாமல், நடிகையின் நாபிச்சுழிக்கு டூப் போட்டது உண்மையா என கலந்துரையாடல் நடத்தும் ஊடங்களை கொண்ட சமூகத்து இளைஞனுக்கு விஷ்ணுபுர காலச்சக்கரம் எப்படி புரியும் ?!




இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

73 comments:

  1. நண்பா மன்னிக்கவும் பிறகு வருவேன்... ஆப்கோ, மாலும் படேகானா...

    ReplyDelete
  2. வலைச்சர பணியின் மத்தியிலும் முதல் பின்னூட்டமிட்டதற்கு நன்றி நண்பரே... நேரம் கிடைக்கும்போது பதிவுக்கு பின்னூட்டமிடுங்கள்.

    ReplyDelete
  3. புத்தகதேடல் குறித்த ஒரு ஆவணமாக இந்த பதிவை காக்கலாம் அண்ணா!!!! அதனை அழமான, இலகுவான நடை. நம்மூர் புத்தகப்பிரியர்களின் நிலையை விலக்கியபடியே பெட்டிக்கடை, பெரியகடை என சமூகமும் பேசி மனதை இழுத்துக்கொண்டே எழுத்து இந்தியாவில் இருந்து பிரான்ஸ் சென்று மீளாமல் மயிலிறகாய் அந்த புத்தங்களுக்கு உள்ளேயே தங்கிவிட துடிக்கிறது. நம்ம ஊர்ல நாலு புத்தகக்கடை இருக்கு:) அப்புறம் அந்த புத்தகங்களை புதுமணம் மாறும் முன் அதுவும் முதல் ஆளாய் படிக்கும் பழக்கம் எனக்கும் உண்டு!! ரெண்டு முறை என் அறைத்தோழி நான் வாங்கி வந்த விகடனை நான் படிக்கும் முன் படித்துவிட்ட காரணத்தால், அவளுக்கே அதை கொடுத்துவிட்டு புதிதாய் வாங்கியும் படித்திருக்கிறேன், இரண்டாம் முறை அதை தோழி கண்டுபிடித்தபோது,"பாவம் உங்க கட்டிக்கபோறவன்" என்றாள்:))) ஒரு சிறுகதையின் அளவுக்கு நீளமான, சுவையான இன்னும் சில அனுபவங்களும் உண்டு:)) உங்கள் நடையின் நேர்த்தியில் நீங்கள் வாசித்த புத்தகங்களின் நிழல் தெரிகிறது அண்ணா!

    ReplyDelete
  4. வாருங்கள் சகோதரி,

    எழுத அதிக நாட்கள் எடுத்துகொண்ட பதிவு இது ! சற்றே நீளமான, ஆழமான இந்த பதிவு வலைப்பூவுக்கு பொருந்துமா என்ற தயக்கமும் இருந்தது !

    உங்களின் இதமான பின்னூட்டம் மனதை தொட்டுவிட்டது.

    தோழியின், " பாவம் உங்களை கட்டிக்கப்போறவன்... "

    உங்கள் பதில்....?????????????????????? :-)

    " ஒரு சிறுகதையின் அளவுக்கு நீளமான, சுவையான இன்னும் சில அனுபவங்களும் உண்டு:)) "

    அந்த அனுபவங்களின் தொகுப்பை உங்களிடமிருந்து மிக விரைவில் எதிர்பார்க்கிறேன் !

    " உங்கள் நடையின் நேர்த்தியில் நீங்கள் வாசித்த புத்தகங்களின் நிழல் தெரிகிறது அண்ணா! "

    நிழலற்றது எது சகோதரி ? அனைவருமே வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தில் எவராலோ, எதனாலோ ஈர்க்கப்பட்டு அதன் தாக்கம் தாங்குபவர்கள் தானே ? வாழ்வின் சுவாரஸ்யமும் அதுதான் இல்லயா ?

    மனதுக்கு இதமான மயிலிறகு பின்னூட்டத்துக்கு நன்றி



    ReplyDelete
  5. புத்தகத்தைத் தேடி அலைவதும், தேடிய புத்தகம் கிடைத்தபின் கிடைக்கின்ற மகிழ்ச்சி இருக்கின்றதே
    அம்மகிழ்ச்சிக்கு எல்லையேது

    ReplyDelete
  6. ஆமாம் அய்யா,

    உங்களை போன்ற, புத்தகங்களின் அருமை தெரிந்தவர்களின் அந்த உணர்வை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதுதான் ! வாசித்தலும் வாழ்தல் அல்லவா ?!

    கருத்துக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  7. "விடாது துரத்திய விஷ்ணுபுரம்"
    கட்டுரையின் தலைப்பை பார்த்ததுமே ஏதோ ஒரு மர்ம நாவலை படிக்கபோகிறோம் போல் உள்ளது என்றுதான் எண்ணி உள்ளே நுழைந்தேன். தனது வாழ்வியல் அனுபத்தை
    வாழைப் பழத்தை தோலுரித்து உண்ணத் தருவது போல் தனது நூலறிவு நுட்பத்தை நுங்காக நமக்களித்து நூலகத்திற்கே நூல் தரும் நுண்ணறிவாளராகி விட்டார் நண்பர் சாமானியன்.
    புதுவையின் மைய பகுதியில் (நகர் புறம்) நான் வசித்துவந்தததால் எனக்கு தெரிந்தது எல்லாம் ரோமண்ட் ரோலண்ட் நூலகம், நியூமன் லைபிரரி, விஸ்டம் லைபிரரி, குழந்தை வேல் புக் ஸ்டால் போன்ற இடங்கள் தான்! இதுதான் எங்களது இளமைக்கு
    நிழல் தந்த போதிமரம்! சரி இதை எதற்கு இங்கு இவன் பதிவு செய்கிறேன் என்று கேட்கிறீர்கள்,?

    இழந்த இந்த இளமைக் கால நினைவுகளை எல்லாம் மீட்டுக்கொடுத்த, காணாதக் காட்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது உமது இந்த கட்டுரை பதிவு.
    இதுதான் ஒரு படைப்பாளியின் உண்மை வெற்றி!

    பதிவில் நீங்கள் கூறிய நூலாசிரியர் யாவரும் அறிந்தவர்கள்தான்! இருப்பினும் அவர்களது படைப்பினை பெறுவதற்கு நீங்கள்பட்ட வலி அது ஒரு வகையான் அறிவு சார்ந்த பிரசவ வலி என்றுதான் சொல்ல தோன்றுகிறது. இருப்பினும் நமது மண்ணின் மைந்தர் புதுவை பிரபஞ்சனை பற்றிக் கூறாதது ஏனோ?
    எனது நெஞ்சை அள்ளிய ஒரு வாசகம் இந்த பதிவில் இடம் பெற்று இருந்தது!
    அது!" பள்ளிக்கூட கன்றாவியை மட்டும் படிச்சிட்டு வாந்தியெடுத்து அப்படி ஒண்ணும் அதிகமா மார்க் வாங்க வேண்டாம் ! இதுபோன்ற அறிவு சார்ந்து நின்று சிந்தித்து செயல் பட்ட
    தங்களது தாய்க்கு எனது தலை சிறந்த வணக்கங்கள் நண்பரே!
    இதுபோன்று இன்னும் நிறைய சொல்லத்தான் நினைக்கின்றேன் ஆனால் வார்த்தை இன்றி தவிக்கிறேன்.
    முடிவாக ஒன்றே ஒன்று மட்டும் நண்பரே!


    தங்களது பதிவில் இடம் பெற்று உள்ள கி.ராஜநாராயணன் அவர்கள் அணிந்துள்ள
    பொன்னாடையை போன்று ஒரு பொன்னாடையை தங்களூக்கு அணிவித்து வாழ்த்த வேண்டும் விடாது துரத்திய விஷ்ணுபுரம் ! பதிவினைத் தந்தமைக்காக!
    நன்றி!
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. அழ்ந்து படித்து, நிறைவான கருத்துரையிட்டமைக்கு நன்றி நண்பரே !

      " இழந்த இந்த இளமைக் கால நினைவுகளை எல்லாம் மீட்டுக்கொடுத்த, காணாதக் காட்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது உமது இந்த கட்டுரை பதிவு..."

      பெரிய வார்த்தைகளுக்கு நிறைய நன்றிகள்.


      " நீங்கள்பட்ட வலி அது ஒரு வகையான் அறிவு சார்ந்த பிரசவ வலி என்றுதான் சொல்ல தோன்றுகிறது "

      அற்புதமான வரி அன்பரே !

      இந்த பதிவில் நான் சொல்ல நினைத்தது வாசிப்பு பற்றிய நமது சமூகத்தின் கண்ணோட்டத்தையும், நன்கறிந்த சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் கூட எளிதில் கிடைக்காத சூழலையும்தான். அப்படி நான் அலைய நேர்ந்த நாவல்களை பற்றி குறிப்பிடும்போது ஆசிரியர்களின் பெயர்களும் இயல்பாக வந்துவிழுந்து நூல் அறிமுக பதிவு போன்ற தோற்றம் வந்துவிட்டது. பிரபஞ்சனை பற்றி குறிப்பிடாமல் போனதற்கு காரணம் இதுதான் !

      மேலும் தொடர்ந்து வாசிப்பவன் என்பதை தவிர எனது வாசிப்பு அனுபவம் எள்ளளவே !

      இலக்கியக்கடல் கண்முன்னே ஆர்ப்பரிக்க, கிளிஞ்சல்களைக்கூட அல்ல, வெறும் சில மண் துகள்களை மட்டுமே கண்ணில் கண்டவன் நான் !

      உங்களின் இதமான வார்த்தைகளே மனதை தொட்ட பிறகு பொன்னாடை தேவையா நண்பரே ?!

      Delete
    2. நூலகத்திற்கே நூல் தரும் நுண்ணறிவாளராகி விட்டார் நண்பர் சாமானியன்.
      புதுவை வேலு
      www.kuzhalinnisai.blogspot.fr

      Delete
  8. வாருங்கள் அண்ணா!
    இம்முறை சற்று விரைவாகவே வந்துவிட்டீர்கள். தலைபோகிற அவசரத்தில் ஒரு கட்டுரையைத் தட்டச்சுச் செய்யும் வேலையை ஒதுக்கிவிட்டு இங்கே வந்தால்.........................................................!!!
    சிலரைப் பார்க்கும் போது கேட்கத்தோன்றும், “ இத்தனை நாள் எங்கிருந்தீர்கள் ?“
    உங்கள் பதிவுகள் நான் வலைத்தளத்திற்கு வரும்முன்னரே வரத்தொடங்கிவிட்டன.
    ஆனால் ஒவ்வொரு பதிவிலும் சுடர் விடும் உங்கள் எழுத்தாளுமை, வசீகரமானது.
    என்னையும் இழுத்துவிட்டீர்களே அண்ணா?
    நான் உங்களுக்குத் தி.ஜா வைப்பற்றிச் சொல்லியது இரண்டு காரணங்களுக்காக..!
    ஒன்று உங்கள் சிறுகதை ஒன்றில் தெரிந்த அவரது வடிவ சாத்தியம்,
    இரண்டாவது அவனது இடங்களைச் சித்தரிக்கும் துல்லியம்.
    இது கடந்து இன்னொன்று உண்டென்றால் அது அவனது இசைஞானம்.
    எழுத்தில் இழைபிரித்து எடுக்க முடியாத சங்கீதத்தின் நுண்மை விளக்கம்!
    தமிழில் இரு நாவல்களை இசை பற்றிய செய்திகளை நுட்பமாய்க் கூறுகின்றதற்காய் எடுத்துக்காட்ட வேண்டுமென்றால்,
    தி.ஜா வின் மோகமுள்ளும், சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதமுமே என்பேன்.
    அதிலும் தி.ஜா வின் மோகமுள் ஒரு பாமரனைக்கூட இசையின் பால் திருப்பும் வலிமை கொண்டது.
    எழுத்தில் இராக தாளங்களின் சப்தத்தைச் செவிமடுத்தது அப்போதுதான். இதயநாதத்தில் இசையின் கலப்பைத் தனித்தறிய முடியும். மோக முள்ளில் அது இரண்டறக் கலந்திருக்கிறது. இது என் வாசிப்பானுபவமே!
    காமிக்ஸில் தப்பி ஓடிய இளவரசியின் பளபளப்பான அட்டை இன்னும் என் நினைவில் இருக்கிறது.
    எனது ஆறாம் வகுப்பில் நாவல்கள் பக்கம் பார்வை திரும்பியபோது அதன் விவரணைகளுக்காகவே அதை வெறுத்தேன்.
    படங்களோடு உரையாடல்கள் இருக்கும் காமிக்ஸிலிருந்து நாவலுக்கு நகரும் யாருக்கும் ஏற்படும் அனுபவமாய் இருக்கும் அது.
    சித்திரங்களுக்குப் பதில் இந்த சித்தரிப்புகள் என்று உணரும் முன்னே கிரைம் நாவல்கள், கல்கி, சாண்டில்யன், சுஜாதா, பின் பாலகுமாரன் என நகர்ந்தது வாசிப்பு.
    மீண்டும் படக்கதைகளின் அனுபவத்தை நாவல்களில் தந்தது தி.ஜா. தான். அதன் சித்தரிப்புகள் ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சையை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தின.
    வீடுகள் வீதிகளும் அதில் அலையும் முகங்களும் என அத்துணை துல்லியமாய் ஒரு சித்திரிப்பு எழுத்தில் முடியுமா?
    மனம் அதிர்ந்து போனது..!
    மாற்றுக் கருத்திருந்தாலும் ஜனரஞ்சக எழுத்தாளர்களான ந பா , அகிலன் , போன்றோரை ஒப்பிடும் போது, தி.ஜா வின் உயரம் பெரிது.
    வாசிப்பு என்னை தூக்கிச் சென்ற பயணத்தில் சற்று வேகமாய் வளைவுகளுடனான திருப்பம் அது..!
    அடுத்து ஜெயமோகனின் விஷ்ணுபுரம்,
    புதுமைப் பித்தனின் கபாடபுரத்திற்கு அடுத்து எழுதப்பட்ட புராணக்கருவுடன் கூடிய நாவல் என்ற தம்பட்டத்தால் நானும் அதை வாசித்தேன்.
    ஜெயமோகனுக்கு உள்ள இடத்தை நாம் கொடுத்து விட வேண்டும்.
    பி.டி.சாமிக்கும் தமிழில் இடமுண்டு.
    நிறைய வாசிப்பனுவம், நல்ல நடை , சில குறுங்கதைகள் இவற்றுடன்““ தமிழில் இதுவரையில் எழுதப்படாத இனிமேலும் எனையன்றி யாரும் எழுத முடியாத நாவல்““ என வெண்முரசறைந்து அறிவிக்கும் அவரது திமிர்வாதம், இந்துத்துவம் இழையோட, ஆங்காங்கு அவரது எழுத்துத் தெளித்துச் செல்லும் நச்சு விதைகளை விட ஆபத்தானது.
    கபாடபுரத்துச் சிவனுக்கும் விஷ்ணுபுரத்துத் திருமாலுக்கும் அவர் கோர்க்கும் சரடின் நோக்கம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
    வித்யா கர்வம் என்றாலும் “தான் தற்புகழ்தல் தகுதியன்றே“ என்று சொன்ன தமிழில்தான் அவர் பிழைப்போடுகிறது.
    முடிந்தால் நீயும் எழுதிப் பாரு என்று சொன்னால் நான் எழுத்தாளனில்லை. அது என் துறையுமில்லை.
    அண்ணா,
    உங்களுக்குக் கருத்திட வந்து இவர்களைச் சுற்றி நான் நழுவிப்போகிறேன்.
    இது உங்களை நான் தி.ஜா பக்கம் திருப்பினேன் என்றதால் நேர்ந்தது.
    அதையும் கடந்து வர வேண்டுமண்ணா!
    “ தாண்டி அல்ல “ என்பதற்காக நான் பார்க்கச்சொன்னேன் அவரை அவ்வளவே!
    வாசிப்பை அதிலும் குறிப்பாய்த் தமிழ்வாசிப்பைத் தொலைத்துவிட்ட இந்தத் தலைமுறையை நினைக்க வேதனையாய்த் தான் இருக்கிறது.
    அதைவளர்த்தெடுக்க வேண்டிய ( நூற்றிருபது) ஆசிரியர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றில் எத்தனைபேர் வாசிக்கிறீர்கள் என்றதற்கு, “ ஏழு பேர் கைத்தூக்கி வாசிப்பதாக நாளிதழ்கள் சிலவற்றின் பெயர்களைச் சொன்னது “ நினைவுக்கு வருகிறது.
    ஜெயமோகன் பற்றியும் விஷ்ணுபுரம் பற்றியும் கூறியவை எனது கருத்துகளே!
    புத்தகங்களின் வாசனையை மீண்டும் உங்களின் எழுத்தில் நுகர்ந்தேன்.
    நன்றி!!!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே,

      உங்கள் தளத்தில் நீங்கள் அதிகம் கவிதை மற்றும் இலக்கணம் பேசினாலும், அவற்றில் நீங்கள் எந்த அளவுக்கு ஈடு இணையற்ற புலமை படைத்தவரோ அதே அளவு புலமையும் தீவிரமான விமர்சன பார்வையும் உரைநடை இலக்கியத்தின் பாலும் கொண்டவர் நீங்கள் என்ற கணிப்பு எனது பதிவின் மூலம் வெளிவந்ததில் மிகவும் பெருமை படுகிறேன்.

      நீங்கள் குறிப்பிட்ட இரண்டு காரணங்களை நானும் உணர்ந்ததால்தான் தி.ஜாவை பற்றிய குறிப்பில் உங்களை இழுத்துவிட்டேன்... இழுத்துவிட்டேன் என்பதைவிட நான் ஒன்றும் சுயம்பு இல்லை என உணர்த்துவதற்க்காகவும்தான். எனது எழுத்தில் ஏதாவது வசீகரத்தை உண்மையிலேயே உணர்ந்தீர்களேயானால் அதற்கு உங்களை போன்றவர்களின் ஊக்கமும், இல்லையில்லை ஊக்கம்தான் காரணம்.

      " மாற்றுக் கருத்திருந்தாலும் ஜனரஞ்சக எழுத்தாளர்களான ந பா , அகிலன் , போன்றோரை ஒப்பிடும் போது, தி.ஜா வின் உயரம் பெரிது... "

      உங்கள் இந்த கருத்தில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறதோ அதே அளவு உண்மை உங்களின்

      " ஜெயமோகனுக்கு உள்ள இடத்தை நாம் கொடுத்து விட வேண்டும்.
      பி.டி.சாமிக்கும் தமிழில் இடமுண்டு."

      வரிகளிலும் உண்டு சகோதரரே !

      நண்பர் யாதவன் நம்பியின் பின்னூட்டத்துக்கான என் பதிலில்,

      " இந்த பதிவில் நான் சொல்ல நினைத்தது வாசிப்பு பற்றிய நமது சமூகத்தின் கண்ணோட்டத்தையும், நன்கறிந்த சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் கூட எளிதில் கிடைக்காத சூழலையும்தான். அப்படி நான் அலைய நேர்ந்த நாவல்களை பற்றி குறிப்பிடும்போது ஆசிரியர்களின் பெயர்களும் இயல்பாக வந்துவிழுந்து நூல் அறிமுக பதிவு போன்ற தோற்றம் வந்துவிட்டது. பிரபஞ்சனை பற்றி குறிப்பிடாமல் போனதற்கு காரணம் இதுதான் !

      மேலும் தொடர்ந்து வாசிப்பவன் என்பதை தவிர எனது வாசிப்பு அனுபவம் எள்ளளவே !

      இலக்கியக்கடல் கண்முன்னே ஆர்ப்பரிக்க, கிளிஞ்சல்களைக்கூட அல்ல, வெறும் சில மண் துகள்களை மட்டுமே கண்ணில் கண்டவன் நான் ! "

      என நான் குறிப்பிட்டிருந்தது வெறும் அவையடக்கதுக்காக அல்ல, உண்மையே அதுதான் !

      " ஜெயமோகன் பற்றியும் விஷ்ணுபுரம் பற்றியும் கூறியவை எனது கருத்துகளே! "

      நிச்சயமாக சகோதரரே, ஆனால் உங்களின் அந்த கருத்துகளும் உண்மை.

      " இந்திய காவிய மரபின் வளமைகளையும், அழகுகளையும் உள்வாங்கிஎழுதப்பட்ட, நூறு வருடத் தமிழ்லக்கியத்தின் மிகப்பெரிய முயற்சி... "

      என்பதாக போகும் அந்த நாவலின் முன்னூட்டத்திலேயே நீங்கள் குறிப்பிட்ட கருத்துகள் எனக்கும் தோன்ற, துணுக்குற்றேன் தான் ! அது தத்துவ ரீதியாய் என்னை கவர்ந்த நாவல் என்பது உண்மை. ஆனால் எனது பதிவின் முடிவு ஜெயமோகனை ஆராதிப்பது போல முடிந்ததுவிட்டதோ என இப்போது தோன்றுகிறது...

      " நிறைய வாசிப்பனுவம், நல்ல நடை , சில குறுங்கதைகள் இவற்றுடன்““ தமிழில் இதுவரையில் எழுதப்படாத இனிமேலும் எனையன்றி யாரும் எழுத முடியாத நாவல்““ என வெண்முரசறைந்து அறிவிக்கும் அவரது திமிர்வாதம்,... "

      உலகின் ஆகச்சிறந்த கவிதையும், கதையும் இன்னும் புனையப்படவே இல்லை ! ஓவியமும் அப்படியே ! இன்றைய அற்புதம் நாளைய அபத்தமாக முடியலாம் !

      " அதையும் கடந்து வர வேண்டுமண்ணா!
      “ தாண்டி அல்ல “ என்பதற்காக நான் பார்க்கச்சொன்னேன் அவரை அவ்வளவே! "

      அதே ! தாண்டி வர இருந்த என்னை கடக்கச்செய்தது நீங்களே என்பதை குறிப்பிடுவதில் பெருமையே !

      மிக ஆரோகியமான, உண்மையான, நேர்மையான உங்களின் பின்னூட்டம் இந்த பதிவினை வேறு ஒரு நிலைக்கு நகர்த்திவிட்டது. நன்றி சகோதரரே.



      Delete
  9. இது வாழ்வு முழுவதும் தொடர வேண்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வாசிப்பு நம் வாழ்வு முழுவதும் தொடரத்தான் வேண்டும் ! நன்றி வலைசித்தர் அவர்களே.

      Delete
  10. மிக மிக அருமையான பதிவு! எப்படி விட்டுப் போனது என்று தெரியவில்லை...

    வாசித்தல், புத்தகத் தேடல் ....ஆஹா..நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர். அருமையான பெற்றோர் கிடைத்திருப்பதற்கு. எத்தனை பெற்றோர்கள் வாசித்தலை ஊக்கப்படுத்துகின்றார்கள்?!1 நீங்கள் சொல்லியிருப்பது போல் ஆங்கில நூல்கள் மலிந்து கிடக்கும் வேளையில் தரமான உயர்வான எழுத்தாளர்களின் பெயர் கூட பலருக்கும் தெரிந்திருப்பதில்லை...அதிலும் லாபி விளையாடுகின்றதோ..?!

    தி.ஜானகிராமனின்மோக முள்...எப்பேர்பட்டது...சிலாகிக்க வேண்டிய புத்தகம். ..அது போல் கிரா....

    உங்கள் வாசித்தல் பிரமிக்க வைக்கின்றது. அதனால்தான் உங்களால் இத்தனை தரமான பதிவுகள் தர முடிகின்றது. வாசித்தல் என்பது நமக்கு பல விஷ்யங்களைக் கற்றுத் தருகின்றது அதுவும் மரணம் வரை, நமது புலன் கள் நல்ல முறையில் இருந்தால்...இறுதி மூச்சு வரைத் தொடவேண்டிய ஒரு விடயம்.

    அருமையான ஒரு பதிவு! தரம் வாய்ந்த பதிவு! இலக்கியம் விளையாடுகின்றது. நீங்களும் புத்தகம் இடலாம்...

    ReplyDelete
    Replies
    1. வலைச்சரம் போற்றும் ஆசானே வருக !

      பெற்றோர் விசயத்தில் மட்டுமல்ல, உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துகள் கிடைப்பது வரை... நான் ஆசிர்வதிக்கப்படவன் தான்.

      உங்களின் அன்பும், மற்றவர்களின் படைப்புகளை பாராட்டும் பண்பும் இந்த பின்னூட்டத்தில் தெரிகிறது. வாசித்தலை தொடருபவன் என்பது உண்மையே தவிர, நான் அறிய வேண்டிய நூல்களின் எண்ணிக்கை மிக அதிகம் !

      நன்றி

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. சாம்,

    வாசிப்பின் சுக அனுபவத்தை உங்களின் தரமான எழுத்தில் செதுக்கியதற்கு பாராட்டுக்கள். தலைப்பைப் பார்த்துவிட்டு எதோ ஜெமோ கட்டுரையின் நீட்சி என்று நினைத்தேன். ஆனால் இத்தனை உயிரோட்டமாக தெளிந்த நீரோடை போல எழுத சாம் போன்ற சிலரே இருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் எனது நண்பர் என்பதில். நீங்கள் எனது பாராட்டைத் தாண்டி வேறு இடத்திற்கு வந்துவிட்டீர்கள். நான் உங்களிடம் எதிர்பார்த்ததும் இதுவே.இன்னும் நீண்ட தூரம் மற்றும் பெரிய அங்கீகாரங்களுக்கு உங்களின் எழுத்து உங்களை அழைத்துச் செல்ல எனது வாழ்த்துக்கள்.

    புத்தக வாசிப்பை நேசிக்கும் நெஞ்சங்கள் இன்று அரிதாகிவிட்டன. பரந்த வாசிப்பின்றி ஒரு அழகான எழுத்தை நாம் வசப்படுத்த முடியாது. இது உங்களின் வாசிப்பு மற்றும் எழுத்து இரண்டுக்கும் இடையே உள்ள இணைப்புக் கோடு என்பதாக நான் எண்ணிக்கொள்கிறேன். சற்றும் அலுப்பின்றி முதல் வரியிலிருந்து கடைசி வார்த்தைவரை ஒருவரை படிக்க வைக்க பலரால் நிச்சயம் முடியாது. இதில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்.

    உங்களுக்கு வந்த பின்னூட்டங்களே இந்த உண்மையை சொல்லிவிடுகின்றன. இதில் நானென்ன புதிதாக சொல்வது? ஊமைக் கனவுகள் தி ஜா வின் எழுத்தை அனுபவித்துச் சொல்லியிருந்தது என்னை யோசிக்கவைத்தது. அவர் --தி ஜா---ஒரு சகாப்தம். ஜே மோ வை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எனவே விஷ்ணுபுரம் பற்றி எனக்கு அதிக கவலைகளில்லை.

    வழக்கம் போலவே நாகரிக நகைச்சுவை அங்கே இங்கே என்று தெறிக்க, மிகவும் ரசிப்பான பதிவை எழுதியிருப்பதற்காக எனது பாராட்டுக்கள். உங்களைப் போலவே மெட்ராஸ் தமிழன் என்று ஒருவர் தனது அனுபவங்களை ஏறக்குறைய இதே அளவு புரிதலோடும் நகைச்சுவையோடும் எழுதிவருகிறார். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்ய எனக்கு ஆர்வம். முடிந்தால் அவர் எழுத்தையும் படியுங்கள்.

    http://madrasthamizhan.blogspot.in/2014/03/blog-post_21.html

    நிறைய எழுதுங்கள் என்று இனிமேலும் நான் உங்களைச் சொல்ல முடியாது. நிறைய உங்களின் எழுத்தால் எங்களை மகிழ்ச்சிக்குட்படுத்துங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் காரிகன்,

      நீங்கள் குறிப்பிடும் இடத்துக்கு நான் வந்தது உண்மையென்றால் இங்கு என்னை அழைத்து வந்ததில் உங்களுக்கும் பங்குண்டு காரிகன் !

      ஆழ்ந்து அனுபவித்து வாசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.

      மெட்ராஸ்தமிழனை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்... காரிகன், உங்களிடம் நான் நேசிக்கும், மதிக்கும், போற்றும் குணம் இதுதான் ! எனது வலைப்பூ பெரும்பாலும் வாழ்வியல் அனுபவங்களை பேசுவது. அதனை தொடர்வதுடன் அதே ரீதியில் அமைந்த மற்றொரு தளத்துடம் ஒப்பிட்டு, அறிமுகப்படுத்தி... வாசித்தலில், நேர்மையாக வாசிப்பவர்கள் இன்னும் உயர்வு. நீங்கள் அந்த ரகம் !


      நிச்சயமாய் எழுதுவோம், ஒன்றாய் தொடருவோம் நண்பரே !

      Delete
  13. வாருங்கள் சாமானியரே!
    களிற்றின் சிறப்பை பார்த்தீர்களா?
    களிற்றை பற்றி சிறப்பான கருத்தை தந்தீர்கள்!
    இன்று!
    களிற்றின் மீது அமர்ந்து ஊர்வலம் போகிறீர்கள்!
    என்ன கருத்து கருப்பு சாமி!
    புரிய வில்லையோ!
    இன்று!
    வலைச் சரத்தில் வலம் வந்ததைத் தான்
    சொல்லுகிறேன்!
    வாழ்த்துக்கள்!
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. எனது வலைச்சர வலத்தை படம் பிடித்து அனுப்பியதற்கு நன்றி நண்பரே... ஆனால் படத்தில் ஒன்றும் தெரியவில்லையே... ஒரே கருப்பு... அட ஆமாம் ! களிறும் நானும் ஒரே கலரல்லவா !

      Delete
  14. இரும்புக் குதிரைகள் வாசிப்பு குறித்த உங்கள் தாயாரின் கருத்து புரட்சிகரமானது!
    அம்மா அப்டீனா அப்பா பைன்ட் பண்ணி அனுப்புறார்.
    நைஸ்
    நானும் படிக்கிறேன் ...
    ஒரு நாள் நான் இதை ஆங்கிலத்தில் புக் ஹன்ட் என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்ய விரும்புகிறேன். விருப்பங்கள் நிறைவேறலாம் ...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் மது,

      தாராளமாக ! இந்த பதிவுக்கு ஆங்கில பொழிபெயர்ப்பு தகுதி உண்டென நீங்கள் கருதினால் தாராளமாக செய்யுங்கள் நண்பரே.

      நல்ல விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும்.

      நன்றி


      Delete
  15. நான் பொய்யெதுவும் சொல்ல இஷ்டப்படவில்லை..

    ஜெயமோஹன் சிந்தனைகளே என்னால் ஏற்றுக்க முடியாது. அவர் அகந்தை எரிச்சலூட்டும் ஒண்ணு. எழுத்தாளன் முதலில் தன்னடக்கம் உள்ள மனிதனாக இருக்கணும். பிறர் மனதைப் புரிந்து கொள்ளணும். மத வெரியனா இருக்கக்கூடாது. தான் பெரிய இவன் என்கிற எண்ணம் உள்ள எவன் படைப்பையும் பறக்கணிப்பது என் ஆட்டிட்டூட். ஜெயமோகன் படைப்புகள் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு கெடையாது. ஜெயமோஹனை புறக்கணிப்பதால் (விஷ்ணுபுரத்தையும்) நான் வாழ்க்கையில் பெருசா எதையோ இழந்துவிட்டேன் என்கிற கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை. :)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வருண்,

      ஒவ்வொரு பதிவுக்கு பின்னும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் பின்னூட்டங்களில் உங்களுடையதும் உண்டு !

      நான் இந்தியாவிலிருந்து கிளம்பிய காலத்திலிருந்து இன்றுவரை புத்தக தேடலில் எனக்கு கிடைத்த சுவாரஸ்ய, சங்கடமான அனுபவங்களின் தொகுப்பே இந்த பதிவு. பல வருடங்களுக்கு முன்னர் கி. ராவின் புத்த்கம் தேடியபோது கிடைத்த அனுபவத்திலிருந்து ஆரம்பித்து சில மாதங்களுக்கு முன்னர் ஜெயமோகனின் புத்தகம் தேடியபோது கிடைத்ததுவரை எனக்கு வாய்த்த அனுபவங்களை பற்றி பதிய நினைத்தேனே தவிர வாசிப்பு அனுபவங்களை அல்ல !

      ஆனால் தலைப்பும், பதிவினை முடித்த விதமும் இது ஏதோ விஸ்ணுபுர விமர்சனம் போன்ற ஒரு தோற்றத்தை எற்படுத்திவிட்டது !

      ஜோசப் விஜு, காரிகன், நீங்கள் அனைவரும் வேவேறு இடங்களில், வெவெவேறு தொழில்களில், சமூக பின்புலங்களில் வசிப்பவர்கள்... ஆனால் ஆச்சரியமாய் ஜெயமோகன் பற்றிய உங்கள் அனைவரின் கருத்தும் ஒத்துபோகிறது. மேலும் அவரின் படைப்புகளுக்கு வெளியே அவரை பற்றிய என்னுடய கருத்தும் உங்களுடையதை ஒத்ததே ! ஆக, உண்மையும் அதுதான் !!!

      அதுசரி வருண், ஒரு நட்பான சிறு ஆதங்கம்... ஜெயமோகன் அலையில் நான் இந்த பதிவில் குறிப்பிட்டிருந்த பல சுவாரஸ்யங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டீர்களே...



      Delete
    2. காரிகன் சொல்வதுபோல் எப்போதுமே உங்க பதிவு வாசிக்க மிகவும் சுவாரஸ்மாகவே இருக்கும். அதைப் பத்தி பிறகு எழுதுறேன் சாம். :)

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. ****நமக்கு புத்தகத்தினுள் என்ன இருக்கிறது என்பது முக்கியமில்லை ! அது ஆங்கிலத்தில் இருந்தால், கையில் கொண்டு போவதில் ஒரு பெருமை ! Gods of small things செம cantroversial என பெருமைப்பட்டுக்கொள்பவர்கள் தி. ஜானகி ராமனின் அம்மா வந்தாள் நாவலை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ! ( தி.ஜானகிராமனின் படைப்புகளை நோக்கி என்னை திருப்பியவர் சகோதரர் ஜோசப் விஜு அவர்கள். )***

      அம்மா வந்தாள் நான் படிச்சு இருக்கேன் சாம். என்னைக் கேட்டால் இது ஒரு பிரச்சினைக்குரிய நாவல்தான் என்பேன். தி ஜா மிகப் பெரிய எழுத்தாளர்தான். அவர் நடை யாருக்குமே வராது. எனக்கு தி ஜா வைப்பிடிக்கும். இருந்த போதிலும் அம்மா வந்தாள் கதையை ஏற்றுக் கொள்வது கஷ்டம்.

      நான், நீங்கள், விஜு மூவருமே ஆண்கள்தான். அலங்காரத்தை (அப்புவுன் அம்மா) படைத்தவரும் ஒரு ஆம்பளைதான். சரியா?

      சரி.

      தி ஜா அலங்காரத்தை உருவாக்கிய ஒரு ஆம்பளை. அதாவது "பெண் மனம்" புரியாத ஒரு ஆம்பளை. பெண்களிம் உள்ள எசஸ்ட்ரோஜன்கள் ஹார்மோன் இல்லாத ஒரு ஆம்பளை, சரியா?

      சரி.

      இப்போ அலங்காரத்தைப் பார்ப்போம். தகாத உறவு நமது கலாச்சாரத்தில் இல்லாமல் இல்லை. அதில் தாய்களும் மாட்டிக் கொள்வதுண்டு. அதுபோல் அலங்காரம் னு சொல்லலாம்தான்.. ஆனால் அலங்கராத்தை இன்னும் கொஞ்சம் கவனித்துப்பார்த்தால், தி ஜா அவர் வசிதிக்காக உருவாக்கிய பெண் என்றே தோன்றுகிறது.

      அப்புக்குப் பிறகு பிறந்த 3 குழந்தையிமே தகாத உறவில் பிறந்தது என்கிறார்..

      ஆனால் அலங்காரம் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் தான் செய்த தவறுக்காக அப்புவை வேதம் கற்க அனுப்புகிறாள்..

      இதையெல்லாம் நீங்க கவனித்து அலங்காரத்தை புரிந்து கொள்ள முயன்றால், தி ஜா வின் "கை பொம்மை" அலங்காரம் என்றே தோன்றுகிறது. அவள் ஒரு உண்மையான கேரக்டர் கெடையாது என்றே தோன்றுகிறது.. :)

      அம்மா வந்தாள் படிச்சு இருக்கீங்க இல்ல சாம்??

      விஜூ என்னிடம் வாதம் செய்ய யோசிப்பார்.. நீங்கதான் படிச்சுட்டு வந்து விவாதிக்கணும்.. :))

      Delete
    5. வருண்,
      படைப்பு எந்த அளவுக்கு ஒரு படைப்பாளியின் அனுபவம் சார்ந்ததோ அதே அளவுக்கு வாசிப்பவரின் அனுபவமும் கருத்தும் அவரது சூழல் சார்ந்தது. தனது படைப்பு குதிரையை வாசகனுக்கு அறிமுகம் செய்வதோடு எழுத்தாளனின் கடமை முடிந்துவிடுகிறது என்றே தோன்றுகிறது ! அந்த குதிரையை தடவிக்கொடுப்பதில் தொடங்கி... அதன் மீது பிரயாணம் செய்வது, அதனை பராமரிப்பது, வெறுமனே பார்த்து நிற்பது... அல்லது எட்டி உதைப்பது என அனைத்துமே வாசகரின் விருப்பம் சார்ந்தது.

      உங்கள் பார்வையிலிருந்து, " அலங்காரத்தம்மாள் " பற்றிய கருத்தினை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்.

      ( என் கருத்தை நான் நிறுவுவதற்கு எனக்கிருக்கும் அதே அளவு கருத்துசுதந்திரம் என் கருத்தை எதிர்ப்பவருக்கு உண்டு - விக்டர் ஹூகோ )

      நன்றி நண்பரே.

      Delete
  16. ஜெயமோகன் : கட்அவுட்டை முந்தும் கீ போர்டு ! படிக்க....http://www.vinavu.com/2013/05/29/jeyamohan-super-ego/

    ReplyDelete
  17. படித்தேன் தோழரே... சில சங்கடமான அனுபவங்களால் வினவில் பின்னூட்டமிடுவதை நிறுத்தி கொண்டேன்.

    ( நீங்களும் ஆரம்பம் மற்றும் முடிவை வைத்து இதை ஜெயமோகன் பற்றிய பதிவாக நினைத்துவிட்டீர்கள்... )

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  18. தலைப்பை வாசித்த உடன் ஏதோ புராண வலைப்பதிவு போல இருக்கும் என்று தான் நினைத்தேன். பதிவு முழுவதும் படித்து முடித்த பின் சில நிமிடங்கள் ஆழ்ந்த மெளனத்தின் இருந்தேன். அப்பப்பா! இவ்வளவு அருமையான நடை. அற்புதம் ஐயா. இத்தனை நாட்களாக எங்கே இருந்தீர்கள்? அழிந்து வரும் புத்தக வாசகர்களின் ஏக்கங்களை மிக தத்ரூபமாக கூறியியுள்ளீர்கள். ஒவ்வொரு வரியும் இதயத்திலிருந்து வந்து விழுந்த வைர வரிகள். ஒருவர் நன்றாக எழுதுகிறார் என்றால் அவர் நல்ல புத்தகங்களை நன்றாக வாசிக்கிறார் என்று பொருள். அதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      உங்களின் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. என் எழுத்து அருமை எனில் அதற்கு நீங்கள் குறிப்பிட்ட வாசிப்புடன் உங்களை போன்றவர்களின் பாராட்டுதல்களும் ஊக்கமுமே காரணம்.

      உங்களின் தொடர் ஊக்கம் தேவை ! நன்றி.

      Delete
  19. அன்புள்ள அய்யா,

    நான் ‘விடாது கருப்பு’ என்றுதான் வேடிக்கையாகக் கிராமத்தில் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன். ‘விடாது
    துரத்திய விஷ்ணுபுரம் !’.... பற்றி அறிந்து கொள்ள ஆவலாய்ப் பார்த்தேன். தாங்கள் விடாது புத்தகம் படித்ததை வழக்கமாகக் கொண்டிருந்ததை அறிந்து எனக்கு பெருமையாக இருந்தது. வாசிப்பு தொடரக் காரணம் தங்களது பெற்றோர்கள் என்று சொன்ன போது ... அவர்களை எண்ணி நான் வியந்து போனேன். காரணம்... பாடத்தை தவிர வேறு ஏதாவது படித்தால்... பாடத்தைப் படி... தேர்வில் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் வேளையில் தங்களின் பெற்றோர்...வித்தியாசமாக இருந்தது கண்டு மகிழ்ச்சி. இப்பொழுதெல்லாம் மாணவர்கள் பாடப்புத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களை படிக்க எண்ணுவதே இல்லை என்பதுதான் செய்தி. அவர்களுக்கு தொலைக்காட்சி பார்ப்பதற்கே நேரம் போதவில்லை!

    பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் ! படித்துக் கொண்டே நானூற்றி பதிமூன்று மதிப்பெண்கள் என ஞாபகம்...என்பதிலிருந்தே நாம் விரும்புகிற செயல்களைத் தடையின்றிச் செய்ய விட்டால்... வழக்கமாக செய்ய வேண்டிய செயல்கள் சிறப்பாக அமையும் என்பதற்கு நீங்கள் உதாரணம். பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ அவர் டாபே டிராக்டர் கம்பெனியில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து எழுதப்பட்ட பரிசு பெற்ற அருமையான நாவலை நானும் படித்து மகிழ்ந்திருக்கிறேன். தி.ஜா.ராவின்‘ மரப்பசு’ என்று ஞாபகம்.... அதுவும் படித்திருக்கிறேன்.

    கி. ராஜாவின் ‘ கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்கான தேடலை அறிந்தேன்.
    " சார் ! ரொம்ப கஸ்ட்டமர்ஸ் ஜானகிராமன் கேக்குறாங்க சார் ! வாங்கி போடுங்க சார் ! "

    நான் முடிக்கும் முன்னரே குறுக்கிட்ட கடைப்பெண்னை பார்த்தாரே ஒரு பார்வை... நல்லவேலை அவரது நெற்றிக்கண் திறக்கவில்லை ! அந்த கோபத்துக்கு கடைப்பெண் மட்டுமல்லாது புதகங்களுடன் சேர்ந்து நானும் எரிந்திருப்பேன் ! கடையின் உரிமையாளருக்குத்தானே எந்த நூல் விற்கும் என்பது தெரியும்!


    ‘இந்தியா வரும் ஒவ்வொரு முறையும் புத்தகங்கள் தேடி அலையும் போது ஏற்படும் அனுபவங்களையே ஒரு புத்தகமாக எழுதிவிடலாம் !’ உண்மைதான். தங்களின் புத்தகம் படிக்கும் ஆர்வம்...அதற்குள் மறைந்திருப்பது வெளியே தெரிகிறது.

    காம சூத்திரம் முழுவதையும் காமிக்ஸ் வடிவில் கொண்ட புத்தகம் ! மிக உயர்ந்த தரத்திலான ஆங்கில புத்தகம் ! பிரான்ஸில் கூட அப்படிப்பட்ட புத்தகத்தை பார்த்ததில்லை.
    ஏழை பாழைகளுக்காக சரோஜாதேவியை ஒளித்து விற்றால் குற்றம், மேல்தட்டு ஷாப்பிங் மால்களில் குழந்தைகள் எடுத்து புரட்டகூடிய தூரத்தில் காமசூத்திரம் விற்கலாம் ! இது ஜனநாயகம் ! ஆமாம் அய்யா நீதி கூட பணம் படைத்தவனுக்கு ஒன்றும்... பாமரனக்கு ஒன்றும் தானே செய்கிறது. தோப்பில் முகம்மது மீரான் நெல்லை முஸ்லீம் சமூகத்தின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டியிருப்பதை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். வாய்ப்பு கிடைக்கும் போது வாசிக்கிறேன்.

    வீட்டு ஹாலில் நான் தேடிய விஷ்ணுபுரம் !

    " என் பொண்ணு படிப்பா சார் ! "
    -தேடிய பெண் கிடைத்த மகிழ்ச்சியைப்போல இருந்திருக்கும்.... நம்ம ஊரில் என்றால்... ‘இந்த புத்தகத்தைத்தான் இவ்வளவு நாளா தேடிக்கிட்டே இருந்தேன்... நல்ல வேளை நம்ம வீட்ல இருந்ததை நா அறியாமலே போயிட்டேன்... நா படிச்சிட்டு தர்றேன்’ என்று சொல்லிவிட்டு எடுத்துச் சென்று விடுவார்... அந்த புத்தகத்தை தரமாட்டேன் என்று நம்மால் மறுக்கவும் முடியாமல்... மறுபடி அந்தப் புத்தகம் நம்ம கைக்கு வரும் என்றும் சொல்லவும் முடியாது போய் விடும்... போயே விடும்... நாகரிகம் கருதி நீங்கள் அவ்வாறு செய்யவில்லை.

    ஊர் திரும்பப் போவதைஅறிந்து தங்களின் ஆசான் திரு. மைக்கேல் ஜோசப்
    " யோவ் ! இருய்யா... ஒரு புக் இருக்கு... உனக்கு பிடிக்குமான்னு தெரியல... ! "

    -சட்டென புத்தக அலமாரியிலிருந்து எடுத்து நீட்டினார்...விஷ்ணுபுரம் !
    இதுதான் கும்பிடப் போற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்களே கிராமத்தில் அதுபோல்..‘தேடினேன்... கண்டுகொண்டேன்... நன்றி சொல்வேன்... தெய்வமே!’ என்று தெய்வமகன் படத்தில் சிவாஜி கணேசன் பாடியதுபோல் இருந்திருக்கும்!
    நன்றி.
    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.
    manavaijamestamilpandit.blogspot.in









    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      ஆழ்ந்து வாசித்ததுடன் மட்டுமல்லாமல் வரிக்கு வரி உதாரணங்களுடன் நீண்ட பின்னூட்டமிட்ட உங்களுக்கு முதலில் என் நன்றிகள் பல !

      " நீதி கூட பணம் படைத்தவனுக்கு ஒன்றும்... பாமரனக்கு ஒன்றும் தானே செய்கிறது. "

      பல நேரங்களில் நீதியும் பணம் படைத்தவர்களால் " வாங்கப்பட்டுவிடுவதுதான் " பெரும்சோகம் !

      புத்தக இரவல் பற்றி குறிப்பிட்ட நீங்கள் "...நாகரிகம் கருதி நீங்கள் அவ்வாறு செய்யவில்லை. " என குறிப்பிட்டிருந்தீர்கள் !

      முதலில் நான் புத்தகங்களை இரவல் கொடுப்பதில்லை ! காரணம்... பெரும்பாலானவர்கள் நம் முன்னால் தானும் படிக்கும் பேர்வழி என காட்டிக்கொள்வதற்க்காக எடுத்து செல்கிறார்களே தவிர உண்மையான வாசிப்பு ஆசையுடன் கிடையாது ! உண்மையான வாசிப்பு ஆர்வம் இல்லாததால் நூலின் அருமை தெரியாமல் வீட்டில் எங்காவது போட்டு விடுவார்கள்... அப்புறாம் அவர்களே விரும்பினாலும் நம்மிடம் திருப்ப முடியாது ! இரண்டாவது காரணம், அட்டை கிழிந்த புத்தகத்தை படிக்க பிடிக்காது என குறிப்பிட்டிருந்தேன்... அதே போல இரவல் புத்தகத்தையும் என்னால் படிக்க இயலுவதில்லை ! ஜோசப் சார் போன்றவர்களிடம் உரிமையுடன் வாங்குவது விதிவிலக்கு ! மற்றப்படி தெரிந்தவர்கள் வீட்டில் கண்ணில்படும் புத்தகம் பிடித்தால் பேசாமல் புத்தகத்தின் பெயர் மற்றும் வெளியீட்டு விபரங்களை குறித்துகொண்டு, என்ன விலையானாலும் நானே வாங்கிவிடுவேன் ! இது நல்ல பழக்கமா என தெரியவில்லை ?!

      " தேடிய பெண் கிடைத்த மகிழ்ச்சியைப்போல இருந்திருக்கும்.... "

      புத்தகதை தேடியதில் சில பெண்களின் கடைக்கண் பார்வையை தவறவிட்ட அனுபவமும் எனக்குண்டு... ஆனால் அதற்காக இன்று வரையில் வருத்தமில்லை !!!

      மீன்டும் நன்றி !

      Delete
    2. அன்புள்ள அய்யா,

      தாங்கள் புததகங்களை இரவல் கொடுப்பதில்லை...இரவல் புத்தகத்தை படிக்க இயலுவதில்லை...இது நல்ல பழக்கமா என தெரியவில்லை என்று கேட்க வேண்டியதேயில்லை... மிகமிக நல்ல பழக்கம்! ஆனால் முன்னமே சொன்னது கடைபிடிப்பது சிரமானது என்று நினைக்கின்றேன். மிகவும் வேண்டியப்பட்டவர்கள்... அல்லது நண்பர்கள் புத்தகத்தைக் கேட்கின்ற பொழுது கொடுக்க முடியாது என்று கூறுவது சற்ற சிரமாக இருக்கும். பின்னது சொன்னது தாரளமாக அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.

      இரவலாக புத்தகம் படிப்பது திருடி படிப்பதற்கு ஒப்பாகும். புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிப் படிப்பது எழுத்தாளரின் உழைப்புக்கு நாம் கொடுக்கும் சிறிய வெகுமதி.அப்படிப் படிப்பதிலே முழு திருப்தி உண்டாகும்.
      நான் பல புத்தகங்களை விலைக்கு வாங்கி இன்னும் படிக்கப்படாமலே காத்து கொண்டு இருக்கின்றன. காலம் வரும் போது அந்தப் புத்தகங்கள் என்னைப் பார்க்கும் என்றே நினைக்கின்றேன்.
      அகிலனின் ‘சித்திரப்பாவை’ படித்திருக்கிறேன். படிக்கப் படிக்கப் அவ்வளவு நன்றாக இருக்கும்.
      ஜெயகாந்தன் நாவல் முழுக்கு என்னிடம் இருக்கின்றன. சிலவற்றைப் படித்திருக்கிறேன். ஜெயகாந்தன் சிறுகதை&நாவல் எனக்குப் பிடிக்கும்.
      சமீபத்தில் கவிப்பேரரசின் வைரமுத்தின் ‘மூன்றாம் உலகப்போர்’ படித்தேன். வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள்.

      புத்தகதை தேடியதில் சில பெண்களின் கடைக்கண் பார்வையை தவறவிட்ட அனுபவமும் எனக்குண்டு... ஆனால் அதற்காக இன்று வரையில் வருத்தமில்லை என்பதிலிருந்தே தங்களின் புத்தகம் படிக்கின்ற ஆர்வம் வெளிப்படையாகத் தெரிகின்றது. பெண்ணின் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால் இயமும் கடுகாமே என்று சொன்ன புரட்சிக்கவி பாராதிதாசனின் வரிகளைப் பொய்யாக்கிவிட்டீர்கள்!

      -நன்றி.

      Delete
  20. வாசிப்பு ஒரு மனிதனை பூரண மனிதன் ஆக்கும். face book தேடாது நூலகம் தேடும் பெண்ணையும் அறிமுகப் படுத்தியுள்ளீர்கள் . இன்றும் உடல் பெருத்த நூலுடன் பிரயாணம் மேற்கொள்வோரை நான் காண்கின்றேன். சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. " இன்றும் உடல் பெருத்த நூலுடன் பிரயாணம் மேற்கொள்வோரை நான் காண்கின்றேன் "

      அழகிய வரி ! தீராத அறிவுப்பசி கொண்டவர்களுக்கு எவ்வளவு பெருத்தநூலும் போதாது தானே ?!

      வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி

      Delete
  21. வாசிப்பு 80 எல்லோருக்கும் வராது அது உள்ளத்திலிருந்து உணர்வுப்பூர்வாய் வெளி(றி)யாகும் இனம் புரியாத பந்தம் நண்பா நானும் ஒரு புத்தகப் புழுவே

    சிலநேரங்களில் பற்று அதிகமாகி நான் ஜப்பான் மொழி தெரியாவிட்டாலும் படிப்பதுண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வலைச்சரம் வென்ற வேந்தரே !

      " சிலநேரங்களில் பற்று அதிகமாகி நான் ஜப்பான் மொழி தெரியாவிட்டாலும் படிப்பதுண்டு... "

      நண்பரே, இதை படிக்கவும்தான் ஞாபகம் வருகிறது...முதல் பதிவில் " ஆப்கோ, மாலும் படேகானா..." என்றிருந்தீர்களே..

      " ஹா முஜே மானும் படே கா ! "

      எனக்கு சில நேரங்களில் பற்று அதிகமானால் ஹிந்தி தெரியாவிட்டாலும் வந்துவிடும் !

      சத்தியமா எனக்கு ஹிந்தி தெரியாதுஜீ....!!!!

      ( ஹிந்தி உபயம் : ரோஜா ! )

      நன்றி நண்பரே




      Delete
  22. அருமை! அருமை!! அருமை!!! படிக்கும் பழக்கம் பற்றித் தாங்கள் கூறும் ஒவ்வொரு சொல்லும் உண்மை! தமிழ்ச் சமூகம் நூல்களிடமிருந்து வெகுவாக விலகியிருக்கிறது. அதே நேரம், தமிழில் நூல்கள் வெளியிட்டால் தலையில் துண்டு போட்டுக் கொள்ளும் நிலைமையும் இன்று இல்லை. தங்கள் பொறியாள நண்பரின் மகள் போல, படிக்கும் பழக்கமுள்ள இளைஞர்களும் இன்று இருக்கவே செய்கிறார்கள். படிக்கும் பழக்கம் பதிப்பகங்கள் வருவாய் ஈட்டும் அளவுக்கு இருக்கவே செய்கிறது என்பதற்கு, நாளும் புதிது புதிதாக முளைக்கும் இணைய நூல் கடைகளும், நூல்களை இலவசத் தரவிறக்கத்துக்கு அளித்தே முன்னணிக்கு வந்துவிடும் வலைப்பூக்களுமே நல்ல சான்றுகள்! ஆனால், படித்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்பொழுது விழுக்காட்டளவில் படிக்கும் பழக்கமுடையோரின் எண்ணிக்கை வெகு குறைவே! சமூகத்தின் மீதான ஏக்கத்தை வருந்தச் சொல்லும் இந்தப் பதிவு, இன்றைய இளைஞர்களும், படிக்கும் பழகத்தைக் குழி தோண்டிப் புதைக்கவே தொழிலுக்கு (!) வந்திருக்கும் கல்வியாளர்களும், அவர்களின் கோலாட்டத்திற்கு ஏற்பத் துள்ளிக் குதிக்கும் இன்றைய அரசியலாளர்களும் படிக்க வேண்டிய பதிவு!

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      தங்களின் முதல் வருகைக்கு நன்றி.

      ஆழமாய் உள்வாங்கி படித்து, இந்த பதிவுக்கான காரணத்தை மிக அழகான வார்த்தைகளில் கொடுத்துவிட்டீர்கள் !

      " இன்றைய இளைஞர்களும், படிக்கும் பழகத்தைக் குழி தோண்டிப் புதைக்கவே தொழிலுக்கு (!) வந்திருக்கும் கல்வியாளர்களும், அவர்களின் கோலாட்டத்திற்கு ஏற்பத் துள்ளிக் குதிக்கும் இன்றைய அரசியலாளர்களும் படிக்க வேண்டிய பதிவு! "

      மிகவும் உண்மை ! கல்வித்துறையும் "ஓட்டுபிச்சை" மேடையாய் மாற்றப்பட்டதின் விளைவு !!!

      உங்களின் தொடர் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

      Delete
  23. சாம் சார்

    அழகிய நடையில் உங்களின் வாசிப்புத் திறனை வளர்க்கத் தேடிய தேடலைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள் . தேடல்களில் தோல்வி வந்தாலும் ஒரு நாள் தேடியது தானாக வந்து சேரும் அனுபவம் எல்லோருக்கும் இருக்கும் . அது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது . இந்த அனுபவம் அழகான கதை வாசித்தது போலவே இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சார்லஸ்,

      ஒவ்வொரு பதிவின் போதும் உங்களின் வருகையை எதிர்பார்ப்பேன்... நல்ல வார்த்தைகளுக்கு நன்றி நண்பரே !

      Delete
  24. Sorry to write in English. Very many thanks for giving this best article to us. Your article didn't allow me to move away before finished reading it. I have no
    words to congrats your writing. I am also a book worm like you. I started reading good books at the age of Eleven. My parents never objected my reading.
    I have my own library at home. I love your writings. Once again I thank you for this article.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,

      தங்களின் முதல் வருகைக்கும் இதமான வார்த்தைகளுக்கும் நன்றி.

      " My parents never objected my reading... "

      நமது சமூகத்தில் அப்படிப்பட்ட பெற்றோர்கள் அமைவது பேறு. அந்த வகையில் நாம் கொடுத்துவைத்தவர்கள் !

      தொடர்ந்து வருகை தாருங்கள். நன்றி

      Delete
  25. தங்களின் நூலுக்கான தேடலும் ஆர்வமும் என்னை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனென்றால் எனக்கு நூல்களைப் படிப்பதும், பகிர்வதும் மிகவும் பிடித்தது. நேரு தன் நூல்களில் பல நூல்களை மேற்கோள் காட்டுவார். அவ்வாறே நட்வர்சிங் அண்மையில் எழுதியுள்ள நூல்களில் (குறிப்பாக One life is not enough) அதிகமான நூல்களைப் பற்றி விவாதிக்கிறார். பெரிய அரசியல் தலைவர்களிடமும் உரையாடுகிறார். இந்த நூல் என்று நான் வரையறுத்துக்கொள்வதில்லை. முடிந்தவரை அனைத்து நூல்களையும் படிக்க முயற்சிக்கிறேன். அவ்வப்போது அவை பற்றி பகிரவும் செய்கிறேன். வாசிப்பு தொடர்பாக கட்டுரைகளும் தினமணி மற்றும் தமிழ் இந்து இதழ்களில் எழுதியுள்ளேன். எனது இல்லத்தில் ஒரு நூலகம் உள்ளது. நண்பர்களிடமும், உறவினர்களிடமும் வீட்டில் நூல்களைச் சேர்க்கவேண்டும் என்றும் நூலகம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவருகிறேன். உங்களது பதிவைப் படித்ததும ஏதோ ஒரு நூலகத்திற்குள் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. தொடர்ந்து எழுதுங்கள், படியுங்கள், பகிருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      தங்களை போன்ற, ஆழ்ந்த வாசிப்பையும் தாண்டி விமர்சனங்கள் எழுதும் பெரியவர்கள் எனது பதிவுகளை படித்து பின்னூட்டமும் இடுவது மகிழ்ச்சியையும், இனி எழுதுவதை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற பொறுப்பையும் ஒரு சேர தோற்றுவிக்கிறது.

      ஆமாம் அய்யா, நூலகம் உள்ள வீடுகளில் ஆலய பக்தியும் தானாகவே குடியேறிவிடும்.

      தங்கள் வருகைக்கு நன்றிகள் பல

      Delete
  26. புதிய புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்க வேண்டும் என்றால் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை ,முன்பு பழைய புத்தக கடைகளில் பொக்கிஷமாய் பல புத்தகங்கள் கிடைக்கும் .ஆனால் ,அங்கேயும் இப்போது முழுக்க முழுக்க கல்வி பாடப் புத்தகங்கள் மட்டுமே !சில நாட்களுக்கு முன் அருப்புக் கோட்டையில்,எனக்கு பிடித்தமான பழைய புத்தகங்கள் கிடைத்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது !

    ReplyDelete
    Replies
    1. ஒரு சமூகத்தின் வேதனை முழுவதையுமே ஓரிரு வரிகளில் பதிந்துள்ளீர்கள் நண்பரே !

      டாஸ் மார்க் நடத்தி, இலவச பிச்சைகளிடும் அரசாங்கம் உருப்படியாக செய்திருக்கவேண்டியது அனைவருக்கும் வாசிக்க கிட்டும் நூலகங்கள்... ஹும் !

      நன்றி

      Delete
  27. உங்கள் புத்தக தாகம் அசாதரணமானது . விஷ்ணு புரத்திற்கே இந்த நிலையா. இன்னும் சில நாட்களில் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடக்கப் போகிறது . ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் .புத்தகம் வாசிப்பதை பெருமையாக கருதிய தாய் கிடைக்க கொடுத்துவைத்தவர்தான் தாங்கள். எனக்கும் பள்ளி வயதில்தான் பாலகுமாரன் அறிமுகமானார். அப்போது ஒன்றும் புரியாவிட்டாலும் அனைத்தும் படித்து விடுவேன். மறுவாசிப்பின்போதுதான் அதன் சிறப்புகளை உணர முடிந்தது.
    உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை நிறைய உள்ளன. தொடர்ந்து வருவேன்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்தில் பெருந்தன்மையுடன் எழுதியிருந்தாலும் மூத்த வலைப்பதிவரான உங்களிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டியது தான் அதிகம்...

      கற்றது கையளவு என்பதால்... ஒன்றாக கற்போம் ! ஒற்றுமையாய் தொடர்வோம் !

      நன்றி

      Delete
  28. //தமிழில் எழுதியவர் புரிந்து கொண்டதோ உண்மையிலிருந்து விடுதலை ! அதாவது Freedom from the truth !!!//

    ஐயோ....!

    புத்தகத்திருவிழாவில் சாஹித்ய அகாதமி அரங்கில் புத்தகங்களை, குறிப்பாகப் பழைய புத்தகங்களை நல்ல தள்ளுபடி விலையில் கொடுக்கிறார்கள்.

    கிழக்குப் பதிப்பகத்தின் புத்தகங்கள் வெளியூர்கள் செல்லும்போது மோட்டல் கடைகளின் கயிய்ரில் கூடத் தொங்கும். அவர்களின் விளம்பர வீச்சு, உழைப்பு அப்படி.

    தி.ஜா புத்தகங்கள் ஐந்திணைப் பதிப்பகத்தில் கிடைக்கும்.

    கடற்கரையில் கடலை வாங்கித் தின்றால் கூட தூக்கி எறியுமுன் அந்த பேப்பரில் எழுதியிருப்பதையும் படித்து விட்டுத் தூக்கி எரியும் கூட்டத்தில் நானும் ஒருவன்.

    ஆனாலும்,

    சமீபத்தில் விஷ்ணுபுரம் உட்பட வாங்கி வைத்திருக்கும் புத்தகங்கள் பலவற்றைப் படிக்க நேரமில்லாமல் வைத்திருப்பது குற்ற உணர்வைத் தருகிறது. முன் போல அவ்வளவு வேகமாகப் படிக்க முடியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. " கடற்கரையில் கடலை வாங்கித் தின்றால் கூட தூக்கி எறியுமுன் அந்த பேப்பரில் எழுதியிருப்பதையும் படித்து விட்டுத் தூக்கி எரியும் கூட்டத்தில் நானும் ஒருவன்.... "

      வாங்கிய வடையை மறந்துவிட்டு வடை மடித்த துண்டு பேப்பரை படித்து, டீயை ஆறிவிட்ட அனுபவம் எனக்கும் உண்டு நண்பரே !

      " சமீபத்தில் விஷ்ணுபுரம் உட்பட வாங்கி வைத்திருக்கும் புத்தகங்கள் பலவற்றைப் படிக்க நேரமில்லாமல் வைத்திருப்பது குற்ற உணர்வைத் தருகிறது. முன் போல அவ்வளவு வேகமாகப் படிக்க முடியவில்லை! "

      வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்குமே உள்ள வருத்தம்தான் இது !

      நன்றி

      Delete
  29. ராணி காமிக்ஸில் ஆரம்பித்து கோகுலம், பூந்தளிர், அம்புலிமாமா, குமுதம் ,விகடன் என்று வளர்ந்தது என் வாசிப்பு! எங்கள் ஊரில் நூலகவசதி இல்லை! பொருளாதாரமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை! இருந்தாலும் சில புத்தகங்களை தேடி வாசித்து இருக்கிறேன். கி.ராஜநாராயணனின் எழுத்துக்களை விகடனில் வாசித்து இருக்கிறேன்! இப்பொழுதுதான் நிலைமை ஓரளவு சரியாகி இருக்கிறது. புத்தகங்களுக்கு என ஒரு தொகை ஒதுக்கி நிறைய நூல்களை வாசிக்க வேண்டும். தி.ஜா.வின் ஒரு சிறுகதை தொகுப்பை வாசித்ததாக ஞாபகம், எருமைப்பொங்கல் என்று நினைவு. விஷ்ணுபுரம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன்! இந்தவருட புத்தகச்சந்தையில் முடிந்தால் வாங்கி வாசிக்க வேண்டும். சிறப்பான கட்டுரை! பகிர்வுக்கு நன்றி! இந்த இடுகை வெளியான சமயம் என் சித்தப்பா மகன் இறந்து துக்கத்தில் இருந்தமையால் உடனே வாசிக்க முடியாமல் போய்விட்டிருக்கிறது. உங்கள் இடுகைகளை தொடர்கிறேன் நண்பா! விஷ்ணுபுரம் படித்து முடித்த பின் நூலை பற்றி எழுதவும் இது ஒரு வேண்டுகோளே! கட்டளை இல்லை! நேரமும் விருப்பமும் இருந்தால் எழுதுங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,

      பொருளாதாரம் வாசிக்கும் வாய்ப்பை உங்களுக்கு வழங்காமல் இருந்திருக்கலாம், ஆனால் உங்கள் பதிவுகள் நீங்கள் ஒரு சமூக அக்கறையுள்ள நல்ல எழுத்தாளர் என்பதை பறைசாற்றுகின்றன. உங்கள் வாழ்த்துக்கு நன்றி

      உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆழுந்த அனுதாபங்கள். குடும்பம் முக்கியம் தோழரே... படைப்புகள் இங்குதான் இருக்கும் ! பொறுமையாக படித்துகொள்ளலாம் !

      உங்களின் வருகை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

      நன்றி

      Delete
  30. என் பள்ளி பருவ நினைவகள் சில நிமிடம் வந்து சென்றன. நான் எந்த ஊருக்கு சென்றாலும் நூலகத்தை தேடிச் சென்று படித்ததுண்டு. அது ஒரு சுகமான நினைவுகள்.... எளிய நடையில் இனிமை நினைவுகள். பகிர்வுக்கு நன்றி....!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முதல் வருகைக்கும்,அனுபவம் பகிரும் வார்த்தைகளுக்கும் நன்றிகள் பல. தொடர்ந்து வாருங்கள்.

      நன்றி

      Delete
  31. வணக்கம் சாம் ! தங்கள் வாசிப்பானுபவம் எழுத்தாற்றல் எடுத்தாளும் விடயம் அனைத்தும் வியக்கும் வண்ணமே அமைந்துள்ளது. கண்கள் அகல அனைத்தும் ஆர்வத்தோடு வாசித்தேன். அம்மாவின் ஊக்கம் தரும் பேச்சும் என்னைக் கவர்ந்தது. நூல்களை தேடித் தேடி அறிவுப் பசியை தீர்த்ததும் என்னைக் கவர்ந்தது எனக்கு இந்த சூழல் அமையவில்லை. இப்போது தான் புரிகிறது வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பது நான் இவற்றை இழந்து விட்டேனே என்று வருந்துகிறேன். விஷ்ணு புரத்தை தேடித் திரிந்ததும் அடைந்த விதமும் கூட ஆச்சரியப் பட வைத்தது. அதையும் முன்னரே படித்து விட்டு சாதாரணமாக அந்நூலை தூக்கி தந்த உங்கள் நண்பர். ம்..ம்..ம்.. பேச்சிழந்து நிற்கின்றேன். வாசிப்பு உங்கள் இருவரையும் வளமாக வைத்திருகிறது. வசதியை சொல்லவில்லை ஹா ஹா மூளைவிருத்தியை சொல்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ....! அன்றே வாசித்து விட்டேன் இன்று தான் கருத்திட முடிந்தது.தாமதத்திற்கு மன்னிக்கவும்.
    தங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!
    எனக்கும் விஷ்னுபுரம் வாசிக்கவேண்டும் என்று ஆவலாகவே உள்ளது கிடைக்குமா தெரியலை. பார்க்கலாம். இது நிச்சயம் தேவையான நல்ல பதிவே நல்ல அனுபவம்.ரசித்தேன் அனைத்தையும்.

    ReplyDelete
    Replies
    1. " இப்போது தான் புரிகிறது வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பது நான் இவற்றை இழந்து விட்டேனே என்று வருந்துகிறேன். "

      பிரெஞ்சு மொழியில் " Jamais trop tard ! " என்பார்கள்... தாமதமாகிவிட்டது என்பதே கிடையாது. ஆரம்பித்தல்தான் முக்கியம் ! வாசிப்பின் முக்கியம் உணர்ந்த நொடியே அனைத்தையும் பெற்றுவிட்டீர்கள் சகோதரி !

      ஹா...ஹா...ஹா... அதீத வசதி யாருக்கு வேண்டும் சகோதரி ?! வாசிப்பினால் உண்டாகும் தெளிவுக்கும் பகுத்தறிவுக்கும் முன்னால் பொருட்செல்வம் ஈடாகுமா ?!

      அந்த வாசிப்பின் தைரியத்தில்தானே எமனையே எத்த நினைத்தான் பாரதி ?!

      ரசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி

      Delete
  32. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள் பல ஆசானே !

      இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.


      Delete
  33. மிகவும் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.

    "//முதலாம் வகுப்பு குழந்தைகள் கூட நூலகங்களுக்கு தொடர்ந்து அழைத்து செல்லப்படுகிறார்கள். கலை, இலக்கிய ரசனை அவர்களுக்கு பால்யத்திலிருந்தே பயிற்றுவிக்கப்படுகிறது.//"

    உண்மை தான். இங்கு பாலர் வகுப்புகளிலேயே (kinder) பள்ளியில் இருக்கும் நூலகத்திலிருந்து வாரம் ஒரு முறை ஒரு புத்தகத்தை கொடுத்து அனுப்புகிறார்கள்.

    நான் இந்தியா போகும்பொழுது, சென்னையில் இருக்கும் புத்தக வெளியீட்டாளர்களின் அலுவலகத்துக்கே சென்று எனக்குத் தேவையான புத்தகத்தை வாங்கி வந்துவிடுவேன்.

    உங்களின் புத்தக தேடல், கண்டிப்பாக நீண்டதொரு பதிவை கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

    அந்த கடைசி வரிகள் - நெற்றியடி.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே,

      மன்னிப்பு என்ற வார்த்தைகளெல்லாம் தேவையா ?!

      " அந்த கடைசி வரிகள் - நெற்றியடி. "

      சில காரணங்களால் கண்டுக்கொள்ளப்படாமலேயே விடுபட்ட கடைசி வரிகளின் பொருள் உணர்ந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி !

      Delete
  34. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடனும், நட்புடனும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆசானே

      இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

      Delete
  35. எனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,
    அனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,

    "புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"

    என்றும் நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
  36. சாம் அண்ணா wish you a happy and healthy new year:)

    ReplyDelete
  37. நன்றி நண்பரே !

    இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

    ReplyDelete
  38. Thank you my dear sister... I wish you the same in French... " MEILLEURS VOEUX ET BONNE SANTE ! "

    ReplyDelete
  39. தெரியாமல் அழித்துவிட்டீர்களா? பரவாயில்லை விடுங்கள்... எனக்கும் கொஞ்சம் திருப்தி...நான்தான் இப்படி தொழில்நுட்ப அறிவு-கணினிஅனுபவக் குறைவோடு இருக்கிறேனோ என்ற என் ஐயத்தைப் போக்கி நானும் இருக்கிறேன் என்று எனக்கு ஆறுதலாக இருப்பதால்(?!) எனக்கும் இந்தமாதிரி அனுபவங்கள் உண்டு.. பின்னூட்டத்தை அப்லோட் பண்ணுவதாக நினைத்து அழித்த அனுபவம் மட்டுமல்ல, புத்தகங்களோடு திரிந்த அனுபவத்தைச் சொல்கிறேன். நான் எழுதிய நீண்ட பின்னூட்டத்தின் சுருக்கம் இதுதான் - பள்ளிக்காலத்தில் -அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்புக் கணித ஆசிரியர் திரு உலகநாதன் அவர்கள் அறிமுகப்படுத்திய- கல்கியின் பொன்னியின் செல்வன் தொடங்கி, சாண்டில்யன், மு.வ., நா.பா, பின்னர் கல்லூரிக்காலத்தில் தி.ஜா., பு.பி.,ஜெ.கா...என நகர்ந்து டி.செல்வராஜ், கு.சி.பா., தமிழ்ச்செல்வன், மேலாண்மை, கந்தர்வன் அம்பை, பாமா எனத் தொடர்வதுதான்.. இன்னும் சுருக்கமாகச் சொல்வதெனில் இலக்கியம் பயனுடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை, மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கவேண்டும் என்பதே இப்போதைய எனது புரிதல். இதை, ஜெயகாந்தன் மற்றும் க.நா.சு.பற்றிய எனது கட்டுரைகளில் பார்க்கலாம் -
    முறையே - http://valarumkavithai.blogspot.com/2013/01/blog-post_7.html , http://valarumkavithai.blogspot.com/2012/02/blog-post.html ஆகவே, தங்களின் வாசிப்பு ருசியை வாழ்த்தி வரவேற்கும்போதே, கி.ரா. தோப்பில் தி.ஜா. எல்லாம் சரி, ஆனால் ஜெயமோகனுக்காக இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை என்பதே. ஏனெனில், நம்போன்றோர் வீடுகளுக்குத் தேவை துளசிச் செடிகளே அன்றி குரோட்டன்சுகள் அல்ல.. நன்றி நண்பரே.. வாழ்க உங்கள் தேடல். வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,

      என் பதிவுகளுக்கான உங்களின் பின்னூட்டங்கள், முக்கியமாய் இந்தப் பதிவுக்கான பின்னூட்டம் எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுக்கிறது. உங்கள் முதல் பின்னூட்டம் என் தவறினால் அழிந்துவிட, உடனடியாக மீன்டும் ஒரு நீண்ட பின்னூட்டம் கொடுத்தமைக்கு நன்றிகள் பல.

      நீங்களெல்லாம் தமிழ்க்களமாடி வென்றவைகளை ஓரமாய் நின்று ஆச்சரியத்துடன் ரசிக்கும் என்னைப் போன்ற ஒரு சாமானியனின் பதிவை ஆழமாய் வாசித்து, உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளீர்கள்...

      "...இலக்கியம் பயனுடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை, மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கவேண்டும் என்பதே இப்போதைய எனது புரிதல்..."

      மிகவும் உண்மை அய்யா ! பயனுள்ள எண்ணங்களின் ஊற்றுக்கண் மகிழ்ச்சியுற்ற இதயம் தானே ?!

      எனது வாசிப்பு அனுபவம் கடுகளவிலும் குறைவு."வாசிப்புக்காக " அலைந்த அனுபவங்களின் தொகுப்பே இந்தப் பதிவு. நான் கடைசியாய் அலைந்தது விஷ்ணுபுரம் நாவலுக்காக என்றதால் முடிவு அப்படி அமைந்துவிட்டது.

      அதுவே காவல்கோட்டத்துக்காக அலைந்திருந்தால்...

      தமிழின் சிறுவர் இலக்கியத்துக்காக மட்டுமே தன் வாழ்நாளை அர்ப்பணித்த வாண்டுமாமா என்ன ஆனார் எனத் தேடாமல், நடிகையின் நாபிச்சுழிக்கு டூப் போட்டது உண்மையா என கலந்துரையாடல் நடத்தும் ஊடங்களை கொண்ட சமூகத்தில் காவல்கோட்டம் கிடைக்காததில் ஆச்சரியம் இல்லை ! "

      என உணர்ச்சிவசப்பட்டிருப்பேன் !

      மேலும் என்னைப் போன்ற வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குத் தமிழின் நூல் பற்றிய தகவல் கிடைக்கும் அளவுக்கு அதன் ஆசிரியரின் சுயதம்பட்டப் பேட்டிகள அதிகம் கிடைப்பதில்லை !

      " இந்திய காவிய மரபின் வளமைகளையும், அழகுகளையும் உள்வாங்கிஎழுதப்பட்ட, நூறு வருடத் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய முயற்சி... "

      என்பதாகப் போகும் அந்த நாவலின் முன்னூட்டத்திலேயே நீங்கள் குறிப்பிட்ட கருத்துகள் எனக்கும் தோன்ற, துணுக்குற்றேன் "

      என்று சகோதரர் ஜோசப் விஜுவின் பின்னூட்டப் பதிலில் குறிப்பிட்டிருக்கிறேன்.

      நிறைய தர்க்கமும், வாதமும் செய்ய வழியுள்ள விஷ்ணுபுரம் தத்வார்த்தமான ஒரு நல்ல நூல்... அவ்வளவே !

      மற்றப்படி அதன் ஆசிரியர் அறைகூவும் " இந்திய காவிய மரபின் வளமைகளையும், அழகுகளையும் உள்வாங்கிஎழுதப்பட்ட, மிகப்பெரிய முயற்சி... " ஜெர்மனிய எழுத்தாளன் ஹெர்மான் ஹேஸ் எழுதிய சித்தார்த்தாவிலேயே தொடங்கிவிட்டது !!!

      டிசம்பர் 3, 2014 இந்தியா டுடேயின் ஜெயமோகன் நேர்காணலில்...

      " ஒரு விஷ்ணுபுர வாசகனோ, வெண்முரசு வாசகனோ மற்ற எந்த படைப்பையும் தன் காலடில்தான் வைக்கிறான். இங்கிதமில்லாம மற்ற எழுத்தாளர்களப் பாத்து நீ ஏன் இப்படி எழுத மாட்டேன்றன்னு நேரடியா கேட்டிருறான். "

      எனத் திருவாய் மலர்ந்துள்ளார் !

      வித்யாகர்வம், அறிவுச்செருக்கு என்பதையெல்லாம் தாண்டிய அறியாமை அகந்தையிது !!!

      இதைப் படித்ததும் அவரது வாசகர்கள் புரிந்துகொண்ட அளவுக்கு கூட, விஷ்ணுபுரத்தின் தத்துவங்களை அதன் படைப்பாளி புரிந்துகொள்ளவில்லை என்றே எனக்கு தோன்றியது !

      குரோட்டன்சுகளாகவாவது இருந்திருக்கவேண்டிய படைப்புகள் அவற்றை படைத்தவரின் அகந்தையால் பார்த்தீனியங்களாக மாறிவிடுவது நகைமுரண் !

      மீன்டும் நன்றிகள் அய்யா.

      Delete
    2. நன்றி சாம். விஷ்ணுபுரத்தை மட்டுமல்ல... காவல் கோட்டத்தை நான் இன்னும் படிக்கவில்லை என்றால் நம்புவீர்களா? (என் தோழன் சு.வெ.யிடமே “கொஞ்சம் இருப்பா.. உன் நாவலை வாங்கணும்னா நான் ஜி.பி.எஃப் லோன் போடணும், படிக்கணும்னா 15நாள் மெடிக்கல் லீவ் போடணும் போலயே?”னு கிண்டல் பண்ண, அவன் என்னை முறைக்க... அது இன்னும் நிறைவேறவில்லை... என்னவோ இப்போதெல்லாம் நாவல் படிக்க அலுப்பாக வருகிறது.. ஜே.கே.யின் நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் அத்தனையும் படித்து நான் எழுதிய கட்டுரை இணைப்பை ஒருமுறை படிக்கக் கேட்டுக் கொள்கிறேன். அதோடு, உங்கள் நண்பா்கள் யாரும் இங்கிருந்து அங்கு வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள் எனது நூல்களை அவர் முகவரிக்கு அனுப்பி உங்களிடம் சேர்க்க முயல்வேன். உங்கள் படிப்பின் அகலம் படைப்பின் ஆழமாகத் தொடரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

      Delete
  40. அய்யா,

    பின்னூட்டத்தையும் தொடர்ந்து பதலளித்ததற்கு நன்றிகள்.

    நானும் காவல்கோட்டத்தை இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன்...

    " ... மனம் பித்தாகி, பிறழ்ந்து, நினைவு மங்கிய ஒரு காலவெளி போல நிகழ்காலத்தைக் கடந்துபோவது ஓர் எழுத்தாளனுக்கு இயற்கை விதித்த நியதி... "

    மேலே குறிப்பிட்டது காவல் கோட்டம் முன்னுரையில் சு. வெங்கடேசன் அவர்களின் வார்த்தைகள் ! அந்த நாவலுக்கான அவரின் பிரம்மாண்ட உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது.

    நிச்சயமாய் உங்கள் பதிவுகளை படித்து பின்னூட்டமிடுவேன் அய்யா.

    " உங்கள் நண்பா்கள் யாரும் இங்கிருந்து அங்கு வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள் எனது நூல்களை அவர் முகவரிக்கு அனுப்பி உங்களிடம் சேர்க்க முயல்வேன் "

    நிச்சயமாய் ! உங்கள் பேரன்புக்கு நன்றி.

    " உங்கள் படிப்பின் அகலம் படைப்பின் ஆழமாகத் தொடரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். "

    அய்யா... உங்களின் வேண்டுகோள் இனி காலத்துக்கும் என் நெஞ்சில் பதிந்திருக்கும்.


    ReplyDelete