Monday, December 14, 2015

சென்னை நலமா ?

" நான் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது... "

எனது நல விசாரிப்புக்கு நண்பர் காரிகனின் பதில் இது !

இதனைப் படித்ததும் எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விமான விபத்து ஒன்றின் போது பத்திரிக்கைகளில் பார்த்த, அந்த விமானத்தின் சிதறிய பாகங்களுக்கிடையே பாதிக் கருகிய திருமணப் பத்திரிக்கையும் ஒரு கரடி பொம்மையும் கிடக்கும் புகைப்படம் ஒன்றும் , சுனாமி பேரிடரின் போது கடற்கரையில் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தை ஒரு பெரிய கடல் அலைக்குப் பிறகு மாயமாய் மறையும் காட்சியும் நினைவுக்கு வந்தன ...

விபத்தையும் அழிவையும் உணர்த்தக் கூக்குரல்களையும் சிதறிய உடல்களையும்தான் காட்சி படுத்த வேண்டும் என்பதில்லை. கருகிய திருமணப் பத்திரிக்கையும், தனியே கிடக்கும் ஒரு கரடி பொம்மையும் கூடப் பார்ப்பவருக்கு முழுப் பாதிப்பையும் உணர்த்தி அவரது ஆன்மாவை உலுக்கிவிட முடியும்.

காரிகனின் பதிலில் சென்னை மக்களின் உணர்வு முழுவதும் அடங்கி உள்ளதாகத் தோன்றுகிறது.

தலைநகர் என்பதால் சென்னையைப் பிரதானப்படுத்திக் குறிப்பிட்டாலும் தமிழ்நாடு, புதுவை மாநிலம் என இந்த ஊழி மழை ஏற்படுத்திய பாதிப்பும் இழப்பும் வரலாறு காணாதது. உலகின் ஆகப் பெரும் தேசங்கள் ஒன்றின் நான்காவது முக்கிய நகரம் தனித்தீவாய் துண்டிக்கப்பட்டு ஸ்தம்பித்து நிற்பதைப் பேசாத நாடுகளில்லை !

புயலும், பெருமழையும், பூகம்பமும் இயற்கையின் சீற்றங்கள். மனிதனின் இத்தனை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகளுக்குப் பிறகும் அவை ஏற்படுத்த போகும் முதல்கட்ட பாதிப்பை துல்லியமாக மதிப்பிட அவனிடம் எந்த அளவுகோலும் கிடையாது என்பது நிதர்சனமான உண்மைதான் !

2011ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமி பேரிடரில் பாதிப்புக்குள்ளான புக்கூஷிமா அணு உலையின் கதிரியக்க விபத்தை இன்றுவரை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை ! அதே சுனாமியின்போது கடல் அலையினால் தூக்கி எறியப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இடையே தொங்கி கொண்டிருந்த காட்சியைக் கண்டவர்களுக்கு இயற்கையின் முன்னால் மனிதனும் அவனது கண்டுபிடிப்புகளும் எத்தனை பலவீனம் என்பது புரியும் !

ஆனால் இதையெல்லாம் உதாரணமாகக் காட்டி சென்னையின் அவலத்தை நியாயப்படுத்தலாமா ?...

சென்னை ஒரு கடற்கரை நகரம். நகருக்கு நடுவே கூவம் நதி அமைந்த வசிப்பிடம். இயற்கையின் நியதிப்படி இதுபோன்ற நகரங்களுக்கு நீரினால் வரும் ஆபத்து கடல் ஏறுவதால் மட்டுமே நிகழ முடியும். மாற்றாய் மழைநீர் வேகமாய் வெளியேறி கடலில் கலக்க ஏதுவாக அமைந்த பகுதி !

சென்னை அமிழ்ந்திருப்பது வெள்ளத்தில் அல்ல... மழை நீர்த் தேக்கத்தில் ! ஆமாம் ! இத்தனை இழப்புக்கும் காரணம் மழைநீர் வேகமாக ஓடி வடிவதற்கான வழிகள் அடைக்கப்பட்டதும், புதிய கழிவு பாதைகள் தொலைநோக்கு பார்வையுடன் அமைக்கப்படாததும்தான் !

சென்னை போன்ற பழம்நகரத்தில் அமைந்த வடிகால்கள் எனப்படும் வாய்க்கால்கள் பல நூறுஆண்டுகள் படிப்படியாய் அமைந்தவை. ஒவ்வொரு மழையின் போதும் நீர்ப்பெருக்கு பூமியை ஊடறுத்து நதி மற்றும் கடல் நோக்கி ஓடி இயற்கையாய் அமைந்த வடிகால்கள் ஒருவகை என்றால் சென்னையின் ஆதி மனிதர்கள் அவ்வப்போது தோண்டி ஏற்படுத்திவைத்த வடிகால்கள் மறுவகை.

எத்தனையோ நூறு ஆண்டுகள், காலப்போக்கில் அமைந்த இந்த வடிகால்களையும் வாய்க்கால்களையும் முப்பதே ஆண்டுகளில் திட்டமிட்டு தூர்த்து, மேடு பள்ளம் பார்க்காமல் வீட்டுமனைகளாய் விற்பனை செய்ததின் விளைவை இன்று அனுபவிக்கின்றோம் ! மக்களின் அத்யாவசிய அடிப்படை தேவைகள், பாதுகாப்பு, பேரிடர் நிவாரணம் போன்றவற்றில் எந்த அக்கறையும் இல்லாத, கையாலாகாத, சுயநல அரசியல்வாதிகளை மாற்றி மாற்றி ஆளவிட்டதின் பலன் இது !

மழையினால் மக்கள் படும் இன்னல்களையும், நேர்ந்த இழப்புகளையும் மாற்றாந்தாய் கண்ணோட்டத்தில் பார்க்கும் மத்திய அரசு ! அயல்நாடுகளில் நிகழும் இயற்கை பேரிடர்களுக்கு வல்லரசு கனவுடன் மில்லியன் டாலர் கணக்கில் கொடுக்கும் இந்திய அரசாங்கம் தன் சொந்த நாட்டு அவலத்துக்கு என்ன செய்யத் திட்டம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை ! தென்னாட்டில் எல்லாம் சுகம் என்பதாய் செய்தி வாசிக்கும் வடநாட்டு ஊடகங்கள் !

மாநில அரசு முற்றிலுமே மழை நீரில் மறைந்துவிட்டதோ எனப் பயப்படும்படியான அரசு செயல்பாடுகள் ! யாருமே வரவில்லை என மக்கள் அலறும் எதிர்க்கட்சிகளின் தொலைக்காட்சி தகவல்கள் ! மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கும் ஏனோதானோ நிவாரணப் பொருட்களில் கூட முதல்வர் படம் ஒட்டி அரசியல் ஆதாயம் தேடும் ஆளுங்கட்சி செய்திகள் ! முப்பது ரூபாய் பாலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் வியாபாரிகள் ! அனைத்தையும் இழந்து தவிப்பவனின் அரைஞாண் கயிற்றையும் உருவிக்கொண்டு ஓடும் கொள்ளையர்கள் !

இத்தனை அவலங்களையும்தாண்டி தெரியும் மனித நேயம் ! வழக்கம் போலவே சக மனிதனின் துயர்துடைத்து தோள் கொடுக்கும் சாமானிய மக்கள் ! தங்கள் ஜாதி மதம் மறந்து இரவு பகல் பாராமல், உயிரையும் பணையம் வைத்து நிவாரணப் பணிகளிலும், துயர்துடைப்புகளிலும் தொடர்ந்து ஈடுபடும் தன்னார்வலர்கள் !

இந்தத் தேசத்தின் முரண்கள் அனைத்தும் மனதை உறுத்துகின்றன !

மழையினால் பாதித்த மக்களின் கண்ணீர், சுனாமி அலையாய் எழுந்து, அறுபது ஆண்டுகளாக மக்களாட்சி என்ற பெயரில் மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கும் அரசியல்வாதிகளையும், அவர்களின் விரல் ஆட்டலுக்கு வளைந்தே அரசு இயந்திரத்தை அவலமாக்கிய அதிகாரிகளையும் அடித்துச் சுருட்டி வீசி விடாதா என மனம் ஏங்குகிறது !

சுனாமி பாதிப்புக்கு பிறகு எனது பூர்வீகமான காரைக்காலுக்குச் சென்றிருந்தேன்... அந்தப் பெரும் துயரம் நிகழ்ந்து ஒரு வருடம் கூட முடிந்திருக்கவில்லை...

புதிதாய் முளைத்திருந்த ஆடியோ ரெக்கார்டிங் செண்டரின் பெயர் " சுனாமி ரெக்கார்டிங் செண்டர் " என்றிருந்தது !

மறதிதான் நம் தேசிய குணமாயிற்றே !!!

சென்னை மிக விரைவில் நலம் பெறும்.





பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

27 comments:

  1. நான் எல்லாம் பெருசா எதுவும் பண்ணவில்லை சாம். கண்ணீர்விட்டு கதறி அழவும் இல்லை. அருகில் இருந்து இருந்தால் என்னால் ஆனதை செய்து இருப்பேன். சென்னையில் க்ளோஸ் ரெலடிவ்ஸ் ரெண்டு பேரு இருக்காங்க. கால் பண்ணி நலம் விசாரிச்சேன். இருவரும் ரொம்ப பாதிக்கப் படவில்லை! அவ்வளவுதான்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வருண்...

      உண்மையும் யதார்த்தமும் அதுதான் வருண் ! அருகிலிருந்தால் ஆனது எதையாவது செய்திருக்கலாம் ! எனக்கு வருத்தம் என்பதைவிட கையாலாகாத ரசு இயந்திரத்தை எண்ணி கோபம்தான் வருகிறது...

      முதல் வருகைக்கு நன்றி வருண்

      Delete
  2. மறதி நமது தேசிய குணம்தான் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா...

      இதுபோன்ற சம்பவங்களின் போதெல்லாம் நான் பயப்படுவது, " எவ்வளவு சீக்கிரத்தில் மறக்க போகிறார்கள் " என்பதை நினைத்துதான் !

      என்ன செய்ய ?

      நன்றி

      Delete
  3. எனக்கு உள்ள கவலையெல்லாம் மக்கள் இந்த பாதிப்பில் இருந்தும் பாடம் கற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் நண்பரே...

      எனது பயமும் கவலையும் அதுதான் ! மக்கள் மறந்தாலும் அதனை நினைவுப்படுத்தி, இதுபோன்ற இயற்கை சீற்றங்களின்போது நடந்துக்கொள்ளவேண்டிய முறைகள் மற்றும் தற்காப்பு பயிற்சிகளை கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை... ஆனால்...

      வருகைக்கு நன்றி

      Delete
  4. விரைவில் நலம் பெறும்.//வேண்டுதல் சென்னைக்கு மட்டுமல்

    ReplyDelete
  5. "//மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கும் அரசியல்வாதிகளையும், அவர்களின் விரல் ஆட்டலுக்கு வளைந்தே அரசு இயந்திரத்தை அவலமாக்கிய அதிகாரிகளையும் அடித்துச் சுருட்டி வீசி விடாதா என மனம் ஏங்குகிறது !//"
    -- ஆஹா அந்த மாதிரி மட்டும் நடந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  6. மறதி மட்டும் காரணமல்ல..சுயநலமுமு் சோம்பேறித்தனமும் ஒதுங்கும்போக்கும்தான் காரணம் நண்பரே..

    ReplyDelete
  7. அப்பாவி மக்களைத் தானே வாரி சுருட்டி போகிறது,, அவர்கள் நலமுடன் தான் கொழுத்து,,,,,,,

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  8. //மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கும் அரசியல்வாதிகளையும், அவர்களின் விரல் ஆட்டலுக்கு வளைந்தே அரசு இயந்திரத்தை அவலமாக்கிய அதிகாரிகளையும் அடித்துச் சுருட்டி வீசி விடாதா என மனம் ஏங்குகிறது !// அதைத்தான் நாங்கள் எங்கள் பதிவாகிய எப்படி இருந்த நான் இப்படி ஆகிப் போனேன் என்று பக்கிங்காம் கால்வாய் தன் சோகக் கதையைச் சொல்வதாக எழுதியுள்ளோம். அதன் இறுதியில் ஒரு உபரித் தகவல். சென்னைக் கார்ப்பரேஷன் இணை கமிஷனராக இருந்த டாக்டர் விஜய் பிங்களே சென்னை சாலைகள், பாலங்கள் பருவ மழையை வடிய விடும் அளவிற்கு கட்டப்படாமல் முறைகேடான முறையில் கட்டப்பட்டிருப்பதாக முதலில் அந்த 9 கான்ட்ராக்டர்களின் பெயரையும் வெளியிட்டு பின்னர் அந்த கான்ட்ராக்டர்களின் மாஃபியா வையும் வெளியிடப்போவதாகச் சொல்லி, எல்லாவற்றையும் பருவமழைக்கு முன் சரி செய்ய வேண்டும், இல்லை என்றால் 2 கோடி ரூபாய் ஒவ்வொருவரும் அபராதம் கட்ட வேண்டும் என்று சொல்லியதும் அவரை மாற்றியே விட்டார்கள்.

    நண்பரே சென்னையின் அவலத்திற்கு நிச்சயமாக மழை காரணமல்ல. மக்களும் அரசும்தான் காரணம். சென்னையைச் சுற்றி ஓடும் ஆறுகளும், ஏரிகளும், ஏன் சுனாமியின் போது ஆந்திரப்பகுதியில் ஒரு ஹீரோயினாக விளங்கிய பக்கிங்காம் கால்வாயும் இருக்கும் போது 100 வருடத்திற்குப் பின் பெய்த அதீதமான மழை என்று மழையின் மீது மிக எளிதாகப் பழியைச் சுமத்திச் செல்கின்றனர் பாருங்கள் அவர்களை எல்லாம்....வேண்டாம் வரம்பு மீறிய வார்த்தைகள் வெளிவந்துவிடும். 2005 ஆம் ஆண்டு பெய்த மழை பின்னர் தானே புயலின் போது பெய்த மழை தண்ணீர் தேக்கம் எல்லாம் எப்படி மறைந்து போனது என்று தெரியவில்லை.

    கடலூர் ஒவ்வொரு மழையின் போதும் அடிவாங்கும் என்று தெரிந்தாலும் அதிலிருந்துக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து எந்த முயற்சியும் எடுக்காத நம் ஆட்சியாளர்களை என்ன செய்வது என்று சொல்லுங்கள். மக்கள் தான் இனி திருந்தி புரட்சி செய்ய வேண்டும்.

    சுயநலம்தான் தலைவிரித்தாடுகின்றது. தமிழகத்தின் தலைவிதி மாற்றி எழுதப்படவேண்டிய நேரம் இது...

    ReplyDelete
  9. இப்போது காஞ்சிபுரம் மாவட்டக் கலெக்டர் கஜலட்சுமி அதிரடியாக தாம்பரம் பகுதி வரை உள்ள அடையாறு நதியின் ஆக்ரமிப்புகளைத் தகர்த்தெறிய ஆணை பிறப்பித்து தகர்த்துள்ளார். அவரை ஒன்றும் செய்ய இயலாது இப்போது. ஏனென்றால் சென்னை வெள்ளத்தில் மிதந்தது அல்லவா. பிங்களே பருவ மழைக்கு முன்னர் அதனால் அவரை மாற்றிவிட்டார்கள். இப்போது கஜலட்சுமி அதிரடி. தொடர வேண்டும். அவர் சென்னைக்கு வந்தால் நல்லது பல நீர்நிலைகளையும் இணைக்க பல் அகோடிகள் விரையமாகி அது எங்கு போயிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இனியேனும் நீர்நிலைகள் இணைக்கப்பட்டு மழை நீர் வடியப்பெற்றால் நல்லது....திருந்த வேண்டும்.

    ReplyDelete
  10. இந்த மாமழையில் பூத்த மனிதம் ஒரு பெரிய பாஸிட்டிவ் நண்பரே.. இந்தக் கால இளைஞர்களை எவ்வளவோ குறை கூறி இருப்போம். ஆனால் மீட்பு என்று முன் நின்றவர்கள் அவர்கள்தான் எனும்போது பெருமையால் நெஞ்சம் விம்முகிறது.

    ReplyDelete
  11. தனிமனிதச் சுயநலமும் தரங்கெட்ட அரசியலும்தான் இக்கேட்டிற்கும் இனிவரும் இதுபோன்ற இன்னும்பல கேடுகளுக்கும் காரணம் அண்ணா!

    பிறர் பார்த்துப் பொறாமை படத்தக்க ஒரு பண்பாட்டுப் பின்புலமுள்ள சமூகத்தை இன்று பிறர் எள்ளி நகையாடவும், பழித்துரைக்கவும் யார் காரணம் என்று அறியாத அறியவிரும்பாதவர்களாகவே பெரும்பாலானவர்கள் இங்கு இருக்கிறார்கள்.
    குறை சொல்லிப் போக என்னைப் போன்ற ஆயிரம் குரல்கள் இங்கு இருக்கின்றன.

    ஆனால்,

    பிறர் துன்பம் தன்துன்பமாய்க்கண்டு உதவ ஓடோடிச் சென்ற அந்தக் கால்களை, தன்னிடம் அதிகமொன்றும் இல்லாதபோதும் தனக்குள்ள உணவும் உடையும் பிறவற்றையும் வேண்டுபவர்களுக்குத் தந்து உயிர்காத்த கரங்களை முத்தமிடத் தோன்றுகிது.

    வள்ளுவன் சொல்வான்,

    எத்தகைய துன்பம் வந்தாலும் அதில் உனக்கொரு நன்மை இருக்கிறதடா தம்பி.
    உனக்கு உண்மையான உறவு யார் என்று அப்போதானடா தெரியும் என்று

    “ கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதாங் கோல்“

    தமிழரின் உறவுகள் யார் உதவாக்கரைகள் யார் என்பதை நாட்டு மக்களுக்கு இம்மழை புரியவைத்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  12. காலத்திற்கு காலம் இப்படிப் பேரழிவுகள் நடப்பதைக் காண வெறுக்கிறது வாழ்வு. நெஞ்சு பொறுக்குதில்லையே.ஆனால் நாமளே நமக்கு குழி தோண்டுவது போன்ற செயல்களைத் தான் நினைக்க வேதனையாக உள்ளது. இதனால் எத்தனை இன்னல்கள் அப்பப்பா...... இனிமேல் ஆவது நாட்டை திட்டமிட்டு வளப்படுத்த ஆவன செய்வார்கள் என நம்புவோம். எல்லா நாடுகளும் தங்கள் நாட்டை முன்னேற்ற எத்தனை திட்டங்கள் வகுத்து செயல் படுகிறார்கள். வல்லரசாக வேண்டும் என விரும்பும் இந்தியா ஏன் வாளாவிருக்கிறதோ.

    ReplyDelete
  13. சாம்,

    இங்குள்ள பலரும் சினிமா கவிதை அனுபவம் சமையல் குறிப்பு என்று பலவிதமாக பதிவுகள் எழுதிக்கொண்டிருக்க நீங்கள் சென்னைப் பற்றி எழுதியது குறித்து வியப்பு ஏற்பட்டது. உண்மையான நிலையை உணர்ந்து எழுதியது போலவே தோன்றியது. (நீங்கள் இதை நேராக காணவில்லை என்பதால் இதைச் சொல்கிறேன்.) வழக்கமான உங்கள் எழுத்தின் தரம் நயம் இரண்டும் இங்கேயும் அற்புதமாக வெளிப்பட்டு உங்கள் எண்ணங்கள் படிப்பவர் முன் அழகாக அமர்ந்துவிடுகின்றன. கோபம், இயலாமை, துக்கம், வேதனை, படபடப்பு போன்ற உங்களின் அனைத்து உணர்ச்சிகளையும் இங்கேயுள்ளவர்கள் கணம் கணமாக அனுபவித்தவர்கள்தான்.

    இந்த சமயத்தில் அரசியல் நிறைய பேசப்பட்டுவிட்டது. அதை மீறி மனிதம் அதைவிட அதிகமாக உணரப்பட்டுவிட்டது. இதுவே இந்த மழையின் கொடை என நான் எண்ணுகிறேன். இந்த மழை பல பிழைகளை கரைத்துவிட்டது.

    என்னை சுட்டிக்காட்டி இதை எழுதியிருப்பதற்கு எனது நன்றி.

    -----சுனாமி பாதிப்புக்கு பிறகு எனது பூர்வீகமான காரைக்காலுக்குச் சென்றிருந்தேன்... அந்தப் பெரும் துயரம் நிகழ்ந்து ஒரு வருடம் கூட முடிந்திருக்கவில்லை...புதிதாய் முளைத்திருந்த ஆடியோ ரெக்கார்டிங் செண்டரின் பெயர் " சுனாமி ரெக்கார்டிங் செண்டர் " என்றிருந்தது !மறதிதான் நம் தேசிய குணமாயிற்றே !!!---

    சரிதான்.

    யார்கண்டது இனி சென்னையில் "எல் நினோ" சலூன்களும், டீ கடைகளும். ரெடிமேட் துணிக் கடைகளும் வரலாம். வேதனையிலும் ஒரு வேடிக்கை நமக்கு அவசியப்படுகிறதல்லவா?

    ReplyDelete
  14. சென்னை மீளும் நாளை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  15. அன்புள்ள அய்யா,

    இயற்கையை அழிக்க நினைத்த மனிதனை... இயற்கை புரட்டிப்போட்டுத் தான் யார் எனக் காண்பித்துவிட்டது. மழையின் அழிவைவிட தீடிரென ஏரியிலிருந்து மிகமிக அதிக நீரை... மக்களுக்கு முன் அறிவிப்பின்றித் திறந்துவிட்டதே மனித உயிர்கள் இவ்வளவு அழிந்ததற்கு முக்கிய காரணம்.

    தன்னார்வத் தொண்டுள்ளங்கள் தூய தன்னலமற்ற பணியால் தலைநிமிர்ந்து நிற்கும் சென்னை! இவ்வளவு தீமையிலும் ஒரு நன்மை நடந்தேறியிருக்கிறது... கூவம் ஆற்றை இயற்கை சுத்தப்படுத்திக் கொடுத்துச் சென்றிருக்கிறது. இனியாவது சுத்தமாக வைத்துக் கொள்வார்களா...?
    இன்னொன்று மனிதம் தளைக்கச் செய்திருக்கிறது.

    நேசக்கரங்கள் பாசமுடன் நீண்டுகொண்டு இருப்பதை எண்ணுகின்ற பொழுது நெஞ்சம் நன்றிப் பெருமூச்சு விடுகிறது.

    ReplyDelete
  16. "மழையினால் பாதித்த மக்களின் கண்ணீர், சுனாமி அலையாய் எழுந்து, அறுபது ஆண்டுகளாக மக்களாட்சி என்ற பெயரில் மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கும் அரசியல்வாதிகளையும், அவர்களின் விரல் ஆட்டலுக்கு வளைந்தே அரசு இயந்திரத்தை அவலமாக்கிய அதிகாரிகளையும் அடித்துச் சுருட்டி வீசி விடாதா என மனம் ஏங்குகிறது !"
    என் ஏக்கமும் இதுவே தான் சாம்! வெள்ளத்தின் போது நாம் கண்ட இளைஞர் எழுச்சி இத்துடன் நின்றுவிடாமல் தமிழக அரசியலிலும் தடம் பதித்துப் புதுயுகத்தைப் படைக்காதா என்று ஏங்குகிறேன்!

    ReplyDelete
  17. இயற்கை அரசையும் அதிகாரிகளையும் அடையாளம் காட்டிவிட்டது. மக்கள் எத்தனை பேருக்கு புரிய போகிறது என்று தெரியவில்லை. ஆட்சி மாற்றம் மக்களின் வாழ்க்கை மாற்றத்தை கொண்டு வருமா என்பது சந்தேகம்தான்! எல்லாருமே திருடர்களே . யார் நல்ல திருடன் என்று வேண்டுமென்றால் யோசிக்கலாம் . இளைஞர் படை ஒரு எழுச்சிப்படை என்றாலும் ஆளும் நிலைக்கு யார் அவர்களை கொண்டு வருவது என்பதும் பெரிய கேள்வி. விழிப்புணர்வு மக்களிடம் கிளம்பட்டும்.

    ReplyDelete
  18. அன்புள்ள நண்பரே,
    வணக்கம்.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016
    நட்புடன்,
    புதுவைவேலு

    ReplyDelete
  19. அன்பின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  20. அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

    ReplyDelete
  21. எத்துனை முறை மூழ்கினாலும் நாம் திருந்தப் போவதில்லை சாம்ஜி ...

    பிரச்சனைகள் நம்மிடையேவும் இருக்கின்றன ...


    காரிகன் அவர்களின் பின்னூட்டம் நேர்த்தியாக இருந்தது..

    ReplyDelete
  22. Are you in need of a loan?
    Do you want to pay off your bills?
    Do you want to be financially stable?
    All you have to do is to contact us for
    more information on how to get
    started and get the loan you desire.
    This offer is open to all that will be
    able to repay back in due time.
    Note-that repayment time frame is negotiable
    and at interest rate of 2% just email us:
    reply to us (Whats App) number: +919394133968
    patialalegitimate515@gmail.com
    Mr Jeffery

    ReplyDelete