Sunday, January 1, 2017

நடப்பவை நன்மைகளாகட்டும் !



மீன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது ! .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது ! அப்படி ஓடி மறையும் ஆண்டுகளுடன் தனிமனித ஒழுக்கம், மனிதநேயம்,சகிப்புத்தன்மை, இரக்கம் போன்றவையும் வேகமாக அடித்துச் செல்லப்படுகின்றனவோ என்ற அச்சம் எழுகிறது...

" நாம் இத்தனை காலமாய்ப் பேணி போற்றும் தனிமனித சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மனிதகுல மதிப்பீடுகள் அனைத்தும் சட்டெனத் தலைகீழாக மாறக்கூடிய நிச்சயமற்ற ஆண்டாக அமையலாம்... "

பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹோலாந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றிய புத்தாண்டு உரையின் வரிகள் ! ஒர் அரசியல்வாதியாய் அவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில் ஒருவர்தான் என்றாலும் இந்த வரிகள் நிதர்சனமானவை !

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமைந்த இடதுசாரி மற்றும் வலதுசாரி அரசுகளின் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. அவர்களின் எழுபது ஆண்டுகால ஆட்சியில் அலுத்துப்போன உலக மக்களின் தேர்வாய் தீவிர வலதுசாரிகள் பல நாடுகளில் ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்... மதத்தின் நிழலில் குளிர்காயும் பயங்கரவாதமும், பிராந்திய போர்களும் உலகெங்கும் பரவுகின்றன !

மொழி, இனம், நிறம், ஜாதி, பிராந்தியம் என மக்களைப் பிளவுபடுத்தி " பய அரசியல் " நடத்தும் இத்தீவிர வலதுசாரி அரசுகளையும் பின் நின்று ஆட்டுவிப்பது ஒரு பெருவணிகக் கூட்டம் ! ஒவ்வொரு நாட்டின் விதியும், அந்நாட்டு ஏழைபாழைகளின் தலையெழுத்தும் விரல் எண்ணிக்கைக்குள் அடங்கிவிடும் அந்நாட்டு பெருதொழிலதிபர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது !

இலங்கையில் நடந்ததையும், சிரியாவில் நடப்பதையும் சலனமற்றுத்தான் பார்த்துக்கொண்டிருந்தோம்... பார்த்துக்கொண்டிருக்கிறோம் ! இஸ்ரேலில் பூகம்பம் என்றால் பாலஸ்த்தீனியர்களுக்குக் கொண்டாட்டம் ! இந்தியாவில் புயலடித்தால் பாகிஸ்தானில் மகிழ்ச்சி தெரிகிறது ! பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் இந்தியாவில் குதூகலம் !

"மக்களின் மென்முனைகளைத் தட்டிவிட்டால் நாகரீகத்தின் உச்சியில் இருப்பவர்களுக்கும் இதுதான் நடக்கும் " என, நண்பர் மீரா செல்வக்குமார் காவிரி நதி கலவரத்தின் போது பதிந்த வரிகள் உலகின் அனைத்து பகுதிக்கும் பொருந்துகிறது !

இயற்கைக்கு முன்னால் இஸ்ரேலும் பாலஸ்த்தீனமும், இந்தியாவும் பாகிஸ்தானும், அமெரிக்காவும் ரஷ்யாவும் அனைத்தும் ஒன்றுதான் என்பது ஏனோ இன்னும் புரியவில்லை !

பூமியை, அதன் இயற்கை வளங்களை வன்புணர்ந்த பாவமும் " அந்தப் பெருவணிகக் கூட்டத்தையே " சாரும் ! அந்தந்த கால விஞ்ஞான வளர்ச்சியினால் கண்டு பிடித்தவற்றையும், உற்பத்தி செய்தவற்றையும் நீண்ட காலக் கேடுகளைப் பற்றிச் சிந்திக்காமல், சரியாக ஆராயாமல் வியாபாரம் ஒன்றையே நோக்கமாக்கி சந்தைபடுத்தி, இருந்த ஒரே பூமி பந்தையும் ஓட்டையாக்கிவிட்டார்கள் ! அவர்கள் சந்தை படுத்திய அனைத்தையும் வாங்கித் தின்ற, அடுக்கிச் சேர்த்த ஆட்டுமந்தை கூட்டங்களான நமக்கு இன்னும் விழிப்பு வாய்க்கவில்லை !

சாமானிய மக்கள் சகிக்க முடியாமல் பொங்கியெழுந்த போதெல்லாம் சரித்திரம் சரியாகத் திருத்தப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுச் சான்று ஒன்று தான் இத்தனை அவநம்பிக்கைகளையும் தாண்டித் தெரியும் பெருநம்பிக்கை ஒளி !

ஒவ்வொருவரும் பகுத்தறிவுடன் சற்றே சிந்தித்து அவரவர் " மென்முனைகளை " விழிப்புடன் பாதுகாத்தாலே போதும்... இவ்வுலகின் தலைவிதி மாறும் !

இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !


 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

 பட உதவி : GOOGLE

Monday, December 5, 2016

இரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்





ந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் அவரவர் கேட்டது, யார் யாருக்கோ தெரிந்தது, ஆதரப்பூர்வமானது, ஆதாரமற்றது எனச் சமூக ஊடகங்களில் நூற்றுக்கணக்கான செய்திகள்... பகிர்வுகள்...

முதல்வரின் மறைவை அறிந்த நொடியில், நேற்று வாட்ஸ் ஆப் மூலம் நான் படித்த பகிர்வு ஒன்று சட்டென நினைவில் தோன்றியது !

சில திருத்தங்களுடனான அப்பதிவு...

" வர் சிறந்த முதல்வரா இல்லையா ? அவர் கொண்டுவந்த திட்டங்கள் எல்லாம் மக்களுக்குப் பலனளித்தனவா ? எம்ஜிஆர் அளவுக்கு நற்காரியங்களைச் செய்திருக்கிறாரா ? கலைஞரை விட அரசியல் ஞானம் கொண்டவரா ? தமிழகத்தின் மேல் உண்மையிலேயே பற்று கொண்டவரா ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெரியாது என்பதே பதிலாக வந்தாலும்கூட ஒன்று மட்டும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்...

அந்தப் பெண்மணியின் தைரியம் !

ஆண் சிங்கங்கள் மட்டுமே கோலோச்சிய அரசியல் காட்டுக்குள் ஒற்றைப் பெண்சிங்கமாய் நுழைந்து தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகள் ராஜ தர்பார் செய்தவர் !

இவர்களைப் போன்ற ராஜதந்திரிகளுக்கு மத்தியில் வேறொரு பெண்ணால் இப்படிச் சாதித்திருக்க முடியுமா என்றால் நிச்சயம் பெருத்த சந்தேகம் தான் ! கணவனோடும் குடும்பத்தோடும் சிறு சிறு பிரச்சனைகள் என்றாலே உடைந்து போவதும், சிதைந்து போவதும், செத்துப்போவதுமாய் இருக்கின்ற பெண்களுக்கு மத்தியில் கடைசிவரை போர்க்களத்தில் நின்று, வென்றாலும் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து நடந்து எல்லோரையும் அதிரவைத்த அந்தத் தைரியத்தை ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள வேண்டும்!

சம காலத்தில் வாழ்ந்த, இவரை விடச் சிறந்த சாதனை பெண்மணி வேறு யாருமில்லை!

அவர் வருவாரோ மாட்டாரோ தெரியாது, ஆனால் அவருடைய வாழ்க்கை நெருப்பின் ஊடே நிகழ்ந்த நெடும் வெற்றிப்பயணம் ! அந்த நெருப்புப் பயணத்தை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓராயிரம் கைதாங்கும் பலம் வந்து கஷ்டங்களைக் கடந்துவிடுவார்கள்! குறைகள் பல இருந்தாலும் பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருக்கிறது ! இயற்கை அவர் பக்கம் நிற்கவே வேண்டுகிறேன் ! "


ன்று இயற்கை அந்த இரும்பு பெண்மணியைத் தன் பக்கம் அழைத்துக்கொண்டுவிட்டது !

" எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் ! தேசிய தலைவரோ,  பிரதம வேட்பாளரோ யாராயிருந்தாலும் என் தயவு வேண்டுமானால் அவர்கள்தான் என்னைத் தேடி வரவேண்டும்  " என்ற துணிச்சலும் தைரியமும்தான் அவரின் வெற்றிக்கான காரணங்கள் !

ஆழ்ந்து யோசித்தால் சொந்தபந்தங்களை விட்டு விலகி, ஒரு கை விரல்களின் எண்ணிக்கைகளுக்குள் அடங்கிவிடக்கூடிய ( அவருக்கு ) நம்பிக்கையானவர்களுடன் மட்டுமேயான ஒரு தனிமை வாழ்க்கை வட்டத்தினுள் அவர் தன்னை ஒடுக்கிக்கொண்டதுகூட அந்தத் தைரியத்துக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதால்தானோ எனத் தோன்றுகிறது...

னி அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தைப் பிடிக்கவும், நிரப்பவும் மற்ற அரசியல்வாதிகள் ஆடுபுலி விளையாடலாம்... அவரது பெயரையும் புகழையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த திட்டமிடலாம்... அவர் கட்டிக்காத்த கட்சிக்கு அவர் விரும்பியவரோ விரும்பாதவரோ தலைவராகலாம்... அவரது பெயரை இருட்டடிப்புச் செய்து தங்களை முன்னிறுத்த முயற்சிக்கலாம்... அரசியலில் எதுவும் நிகழலாம்... நிகழும் !

ஆனால் அடிமட்ட அதிமுகத் தொண்டனின் மனதில் அவனது இறுதி மூச்சுவரை " அம்மா " நிறைந்திருப்பார் !

 பட உதவி : GOOGLE

Tuesday, May 3, 2016

முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 2



தாத்தா, சித்தப்பாக்கள் எனக் குடும்பத்தினர் பலர் பிரான்சில் இருந்ததால் அவர்கள் ஊர் திரும்பும் போதெல்லாம் சென்னை சென்று அழைத்து வருவோம். அந்த வயதில் விமான நிலையம் இருக்கும் மீனம்பாக்கத்தையே சென்னை என நம்பியிருந்தேன் !

தனியாக அல்லது குழுவாக எனப் பிரான்சிலிருந்து திரும்புபவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் கொண்டு வரும் பெட்டிகளின் அளவுக்கேற்ப வாடகை காரிலோ வேனிலோ பயணம் அமையும் ! பைபாஸ் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளெல்லாம் தோன்றாத என்பதுகளில் எங்கள் ஊரிலிருந்து சென்னை செல்ல பத்து பதினோரு மணி நேரம் பிடிக்கும். அதுவும் மதுராந்தகம் எல்லையில் லாரிகளுக்கு மத்தியில் சிக்கிகொண்டால் இன்னும் இரண்டு மணி நேரம் கூடிவிடும் !

பின்னிரவு மூன்று மணிவாக்கில் தூக்கம் கலையாத கண்களின் எரிச்சலுடன் கிளம்பினால் அதிகாலையில் சிதம்பரத்தினுள் நுழைவோம். சென்னை போகும்போதெல்லாம் அங்கிருந்த நாயர் கடை ஒன்றில் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அப்பா ! ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, அதிகாலையில் ஐந்தே நிமிடம் நீடிக்கும் நட்பு என்றாலும் ஞாபகமாக வரவேற்று உபசரிப்பார் நாயர் ! வழக்கமாய்ச் சாப்பிடும் உணவகங்கள், டீக்கடைகள் தொடங்கி அவ்வப்போது இளைப்பாற நிற்கும் சிற்றூர்கள் மற்றும் கிராமங்களின் சிலர் கூட எங்களை அறிந்துவைத்திருந்தனர் !

மிகவும் நெரிசலான சிதம்பரம், சீர்காழி சாலைகள், திருத்தமான அகலமான சாலைகளுடன் பளிச்சென்ற பாண்டிச்சேரி, லாரிகள் வரிசைகட்டி நிற்கும் மதுராந்தகம், கார்பாய்டு தொழிற்சாலையின் மணத்துடன் வரவேற்கும் கடலூர் என மனிதருக்கு மனிதர் வேறுபடும் குணம் மற்றும் மணம் போலவே ஒவ்வொரு ஊருக்கும் மணமும் குணமும் உண்டு !

ஒவ்வொரு ஊரை தாண்டும் போதும் ஒவ்வொரு விதமான உணர்வு தோன்றும் !

ன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியிலிருந்து கொடைக்கானல், கேரளா என மூன்று நாட்கள் சுற்றுலா சென்றோம்...

வகுப்பு தோழன் ஒருவனின் தந்தை தனியார் போக்குவரத்துக்கழக உரிமையாளர். சுற்றுலா பேச்சு ஆரம்பித்ததுமே தன் தந்தையிடம் பேசி " சகாய விலையில் " பேருந்து ஏற்பாடு செய்வதாகச் சொல்லி தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கிவிட்டான் அவன் ! வகுப்பு லீடரான என்னையும் சேர்த்து ஒரு பத்து மாணவர்கள் பள்ளியின் " பெரிய பையன்கள் ! " ஆசிரியர் தினம், குடியரசு தினம் தொடங்கி ஆண்டு விழா போட்டிகள், நாடகம் என அனைத்திலும் முன்னால் நிற்கும் சட்டாம்பிள்ளைகள் !

பள்ளி சுற்றுலா என்றால் பேருந்து கணக்குதான். ஆனால் அவன் எப்படியோ பேசி பேருந்து மட்டுமல்லாது ஏ சி வேன் ஒன்றுக்கும் சேர்த்து அனுமதி வாங்கிவிட்டான் ! " பெரிய பையன்கள் " நாங்களெல்லாம் வேனிலும், மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேருந்திலும் கிளம்பினோம். பள்ளிக்கூடத்திலிருந்து கிளம்பிய போது எங்கள் வேனில் ஏறிய ஆசிரியர், எங்களின் திட்டமிட்ட ரகளைத் தாங்காமல் ஊர் எல்லையைத் தாண்டுவதற்கு முன்னரே பேருந்தில் தொற்றிக்கொண்டுவிட்டார் !

செங்கோட்டை வழியே கேரளா செல்லும் உத்தேசம். செங்கோட்டையின் கேரள சோதனை சாவடியில் " ரூட் பெர்மிட் " எனப்படும் பயணத் திட்ட அனுமதியை வாங்கிப்பார்த்த மலையாள சேட்டன் இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை !

" இது செங்கோட்டா... நீ சாரிக்கோட்டா வழியா போய்க்கோ ! "

அவர் கோபத்துடன் பறைய, எங்களுக்குப் பதைத்தது !

காரணம், எங்கள் போக்குவரத்துக்கழக நண்பன் வேன் ஏற்பாட்டுடன் நிறுத்திக்கொள்ளாமல் தன் ஆங்கிலப் புலமையைத் தந்தைக்குக் காட்ட பயண அனுமதியையும் தானே தட்டச்சுச் செய்திருக்கிறான். அவனுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் செங்கோட்டையைச் சாரிக்கோட்டை எனத் தவறாகத் தட்டச்சு செய்ததின் விளைவு !

" டேய் ! இதையெல்லாம் வேற மாதிரி டீல் பண்ணனும் ! "

நாதன் சார் பணப்பையுடன் இறங்கி இன்ஸ்பெக்டரை ஒதுக்குப்புறமாய் அழைத்துச் சென்றார். திரும்பி வந்த இன்ஸ்பெக்டர் சிரிப்புடன் அனுமதி கொடுத்ததோடு அல்லாமல் " குட் ஜர்னி ! " என்று வாழ்த்தி வழியனுப்பினார் !

எங்களுக்கு லஞ்சம் புரிந்த தருணம் அது !

கேரளாவிலிருந்து திரும்பும் வழியில், ஆளரவமற்ற சாலையின் இருமருங்கிலும் மலையடி போல உயர்ந்த மண்மேட்டின் மீது தென்னை மரங்களுக்கிடையே அமைந்த வீடுகள். சூரியன் தன் கதிர்களில் குளுமை கலந்து அடங்கும் நேரம். ஒரு வீட்டின் வாசலில் குத்துக்காலிட்டு கைகளைக் கன்னங்களுக்கு முட்டுக்கொடுத்து அமர்ந்திருந்தாள் எங்கள் வயதையொத்த ஒரு பெண்பிள்ளை. பேருந்திலிருந்த எங்களின் கூச்சலை கேட்டு துள்ளி எழுந்தவள் மகிழ்ச்சியும் சிரிப்புமாய்க் கைகளை ஆட்டி குதித்தாள் !

ஒரு சில நொடிகளே நீடித்த அந்த நிகழ்வு ஒர் ஓவியமாய், காட்சிக்குள் அடங்கிய கவிதையாய், தேர்ந்த நிழல்படக் கலைஞன் படம் பிடித்த காட்சியாய் எனக்குள் தங்கிவிட்டது !

யணத்தின் சுவாரஸ்யம் போகும் பாதைகளில் நாம் சந்திக்கும் மனிதர்களும், நிகழ்வுகளும்தான். சொந்தம், நட்பு, சுற்றம் என வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணிப்பவர்கள் மீது நமக்கிருக்கும் நேசத்தின் அதே அளவு பயணங்களில் சில நிமிடங்களே நாம் சந்திக்கும் ஒரு சில மனிதர்களின் மீதும் படிந்துவிடுவதை உணர்ந்ததுண்டா ?


" நமக்கு எந்த ஊரு ?... "

சில பனைமரங்களுக்கு நடுவே அமைந்த குடிசை வீட்டுத் திண்ணையில் சிகரெட், கோலி சோடா, சர்பத் தொடங்கிப் பழைய பாலித்தீன் பைகளில் தொங்கும் முறுக்கு, கடலைமிட்டாயுடன் ஒரு வாழைத்தாரும் தொங்கும் கடை. கோடையின் அனலுடன் நாம் பயணிக்கும் வாகனத்தின் வெப்பமும் சேர்ந்து வாட்டும் பொட்டல்வெளி பயணத்தின் நடுவே இளைப்பாற நிறுத்துமிடத்தில் பேச்சு தொடங்கும் !

" அங்க நம்ம ஒண்ணுவிட்ட மாமா பையன் ஒருத்தன் இருக்கான்... எப்படிக் காஞ்சு கிடக்கு பாத்தீங்களா ?... உங்க பக்கம் எப்படி ?... "

" பொம்பளைங்களை வீட்டுக்கு பின்னால கால் கழுவ சொல்லுங்க... "

வாகனத்தினுள் தெரியும் பெண்களைக் கண்டு பேசுபவர் பதிலுக்குக் காத்திருக்காமல் தன் வீட்டுப் பெண்களைத் துணைக்கு அனுப்புவார் !

" திரும்பறப்போ முடிஞ்சா நிறுத்தி சொல்லிட்டு போங்க !... "

திரும்பும் வழியில் பெரும்பாலும் நிறுத்த தோன்றாது ! பின்னர் அந்த இடத்துக்குப் போகும் வாய்ப்பே கிட்டாது என்றாலும் அந்த மனிதரின் உபசரிப்புக் கோடை பயணங்களின் போதெல்லாம் இளநீர் இனிப்பாய் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஊற்றெடுக்கும் !

பூம்புகாரில் நண்பர்களுடன் நாள் முழுவதும் சுற்றி அலைந்து அரட்டையடித்த நினைவுகளைவிட அங்கிருந்து திரும்பும் வழியில் தரங்காம்பாடி அருகில் காரை நிறுத்தி ஒன்றும் பேசிக்கொள்ளாமல் அமைதியாய் டீயும் பக்கோடாவும் சாப்பிட்ட நினைவு கறுப்பு வெள்ளை புகைப்படத்தின் அழகுடன் மனச்சுவரில் இன்னும் தொங்குவதின் விந்தை புரியவில்லை !

ன்று கரைக்கால் நாகூர் சாலையின் முகம் மாறிவிட்டது !

இரு போக மகசூல் தந்த நிரவிச்சாலை நிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றப்பட்டு, வீட்டுமனை விற்பனையாளார்கள் நட்ட எல்லை கற்களுக்குள் அடங்கிவிட்டன ! தைக்கால் குளம்கூடக் குட்டையாய்ச் சுருங்கிவிட்டது ! சிறு தோட்டம் சூழ்ந்த குடிசைவீடுகளின் திண்ணைக்கடைகள் இருந்த நிலங்களிலெல்லாம் நாளுக்கு ஒரு நட்சத்திர ஹோட்டல் தோன்றி, சனிப்பெயர்ச்சிக்கு வரும் பிரபலங்களை எதிர்பார்த்து நிற்கின்றன !

வாஞ்சூர் சாலை வயல்வெளியின் ஒரு பக்கத்தைக் கார்பாய்டு தொழிற்சாலை விழுங்க, மறுபக்கம் துறைமுக வளர்ச்சிக்கு தாரை வார்க்கப்படுவிட்டது ! சிறு கடைகளெல்லாம் ஷாப்பிங் மால்களாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை ! இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் எனது பால்ய அனுபவத்தின் மிச்சமாக நிற்பது மதகடியும், வாஞ்சூரும் ! இன்றும் பச்சை விளக்கு மதுக்கடைகள் அப்படியே இருக்கின்றன.தடுமாறும் குடிமகன்கள் தள்ளாடி பாலம் கடந்து செல்கிறார்கள் !

விரைவுச் சாலைகள், அதிவிரைவுச் சாலைகள் என இன்றைய பயணங்கள் இலக்கை மட்டுமே அண்ணாந்துபார்த்துக்கொண்டு ஓடும் ஓட்டங்களாக மாறிவிட்டன !

சில மாதங்களுக்கு முன்னர் பாரீசிலிருந்து முன்னூறு கிலோ மீட்டர்கள் தள்ளி அமைந்த தோவீல் என்னும் கடற்கரை சிற்றூருக்கு வார இறுதி ஒன்றினை கழிக்கச் சென்றேன்...

கட்டணத்துடன் கூடிய அதிவிரைவுச்சாலைகள் நாடு முழுவதையும் இணைத்தாலும், அவற்றினைத் தவிர்த்து ஊர்களுக்குள் செல்லும் சாலைகளையும் பயன்படுத்தலாம். விரைவுச்சாலைகளிலிருந்து மாற வசதியாக இருவகைச்சலைகளையுமே அருகருகே அமைத்து இணைத்த, தொலைநோக்கு பார்வையுடைய உள்கட்டமைப்பு ! விரைவுச்சாலைகள் வழியே செல்லாமல் சிற்றூர்கள், கிராமங்கள் வழியே பயணித்தேன்.இனம், மொழி, கலாச்சாரம் என அனைத்துமே வேறுபட்டாலும் சந்தித்த மனிதர்களாலும், இயற்கையின் அழகினாலும் அந்தப் பயணம் என் பால்ய பருவத்து பயணங்களின் மீட்சியாய் அமைந்தது !

விரைவுச்சாலைகளைத் தவிர்த்து சென்று வந்ததை நண்பர்களிடம் கூறியபோது, மூன்று மணி நேர பிரயாணத்தை ஆறுமணி நேரத்தில் கடந்த ஆமை என்ற பட்டம் கிடைத்தது ! இன்றைய விடுமுறை பயணங்கள் கூடச் சீக்கிரமாய் ஊர் போக வேண்டும் என ஓடி, ஊர் சென்றவுடன் சீக்கிரமாய்த் திரும்ப வேண்டும் என்ற அவசரம் தொற்றிக்கொள்ளும் படபடப்பு பிரயாணங்களாய் தான் அமைகின்றன !

சென்ற முறை பிரான்ஸ் திரும்பச் சென்னைக்குக் கிளம்பிய போது கிழக்கு கடற்கரைச் சாலை வழியே சென்றால் ஐந்து மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்றார் நண்பர்.

இரவு நேரம்...

ஊர்களுக்கு வெளியே அமைக்கப்பட்ட அந்த விரைவுச் சாலை எனக்குக் கான்கிரீட் பாலைவனம் போலத் தோன்றியது !

பனைமரங்கள் கூட இல்லாத வெட்டவெளிகளில் " அதிநவீன வசதிகளுடன் " கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள், மனிதர்களின் அருகாமையற்று மனிதர்களாய் வாழ ஆசைப்படும் புதிய மேட்டுக்குடி தலைமுறை குடும்பங்களுக்காகக் காத்திருக்கின்றன ! ஐம்பது நூறு குடியிருப்புகளைக் கொண்ட தொகுப்புகளில் ஒன்றிரண்டில் மட்டுமே விளக்கு வெளிச்சம் !

ஏதோ வேற்றுக்கிரகத்தில் பயணிக்கும் உணர்வுடன் கண்ணயர்ந்தேன் !

சென்னையை நெருங்கிய சமயத்தில் கண்விழித்தபோது சாலையின் இருபுறமும் பீட்சா ஹட், கே எப் சீ, குவிக் எனப் பிரான்சில் நான் அன்றாடம் காணும் உணவகங்கள் ! தூக்க கலக்கத்தில் பாரீஸ் விமான நிலையத்தை வந்தடைந்துவிட்டதாக ஒரு கணம் திகைத்து உடமைகளைத் தேட தொடங்கினேன் !

உள்நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்துக்காக அறிமுகப்பத்தப்படும் நுகர்வோர் கலாச்சாரம் என்ற கரப்பான் உலகின் ஆதி நாகரீகங்களில் சில தோன்றிய, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட தேசத்தின் அடையாளங்களையும், கலாச்சாரப் பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் மிக வேகமாய் அரித்துக்கொண்டிருப்பது புரிந்தது !

முகலாய மன்னர் அக்பர் பீர்பாலை முதல்முறையாய்ச் சந்தித்தது பற்றிய கதை ஒன்று உண்டு.

வேட்டையின் போது வழி தவறிய மன்னர் காட்டு பாதை ஒன்றில் தன்னை மறந்து பாடிக்கொண்டு செல்லும் இளைஞர் பீர்பாலை எதிர்க்கொள்கிறார். படை பரிவாரங்களுடன் வரும் மன்னருக்கு கூட ஒதுங்காமல் செல்பவரை நிறுத்தி,

" இந்தப் பாதை எங்கே செல்கிறது ? " எனக் கேட்கிறார்.

அந்த இளைஞரோ,

" இந்தப் பாதை எங்கும் செல்லாது ! மன்னரே ஆனால் கூட நீங்கள் தான் இந்தப் பாதையில் எங்குச் செல்ல வேண்டுமோ அங்குச் செல்ல வேண்டும் ! " என்கிறார் !

அந்த இளைஞரின் புத்தி சாதுர்யத்தில் வியந்து அவரைத் தன்னுடன் அழைத்துக்கொள்கிறார் அக்பர் !

பீர்பால் கூறியது உண்மையென்றாலும், பயணிப்பவரின் பார்வைக்கும், நோக்கத்துக்கும் ஏற்ப விரிபவை பாதைகள் ! முட்டுச்சந்தில் முடியும் பாதைகள் கூட அதற்கு முன்னால் ஒரு கிளைப்பாதையைத் திறந்து வைத்து விட்டுத்தான் முடிகின்றன ! ஆண்டிப்பட்டியில் தொடங்கும் பாதை ஒரு நாடோடியின் நோக்கத்துக்காக அண்டார்டிகாவில் முடியும் ! அங்கே பனியில் சரிந்து தொடங்கிய பாதைவெளி ஆண்டிப்பட்டிக்கும் அழைத்துவரும் ! முடிவுகள் அற்றவை பாதைகள் !

ராபர்ட் ப்ராஸ்டின் கவிதை வரிகள் மழை நீர் அருந்திய மண்ணின் மனமாய் மனதில் எழுகிறது...

அடர்ந்து பரந்து அழகாய் இருக்குது காடு,
ஆனாலும் என் கடமைகள் முடியவில்லை,
உறக்கத்துக்கு முன்னான என் பயணமும் ,
உறக்கத்துக்கு முன்னான என் பயணமும் .

பாதைகளைப் போலவே நம் பயணங்களும் முடிவதில்லை !

 பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.