Wednesday, January 21, 2015

மதமாற்றம் மனமாற்றமாகுமா ?

லகெங்கும் அடிப்படைவாத குழுக்களின் ஆதிக்கம் அதிகமாகி வரும் இன்று அடிக்கடி ஊடக தலைப்புகளில் தோன்றும் வார்த்தைளில் ஒன்று  மதமாற்றம். மதமாற்றம் என்பது நேற்று தோன்றியது அல்ல. என்று இரண்டாவதாக ஒரு மதம் பூமியில் தோன்றியதோ அன்றே மதமாற்றமும் நிகழ தொடங்கிவிட்டது ! மதமாற்றத்துக்கு தனிமனித உணர்வு தொடங்கி சமூகம், பொருளாதாரம் என பல காரணங்கள் உண்டு. ஆனாலும் இன்று மதமாற்றம் அதிகமாக பேசப்படுவதற்கு காரணம் மதம் சார்ந்த அரசியல் மற்றும் கடைக்கோடி வரை பாயும்  ஊடக வீச்சு !

ஒரு மொழி, ஒரு மத பெரும்பான்மையை கொண்ட மேற்கத்திய நாடுகள் தொடங்கி உலகின் வேறு எந்த நாட்டையும்விட, உலகின் அனைத்து மதங்களையும் தன்னுள்ளே கொண்டு, சிக்கலான ஜாதி அடுக்குகளுடன் பலமொழி கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில் மதமாற்றம் ஏற்படுத்தும் தாக்கமும் அதிர்வும் மிக அதிகம் !

தங்களின் தோற்றம் மற்றும் தேவை பற்றிய கருத்தை முன்வைப்பது இந்த பதிவின் நோக்கம் அல்ல என்றாலும், சற்றே சுருக்கமாக அதனை இங்கு குறிப்பிடவேண்டியது அவசியமாகிறது... எனவே, ஆத்திக, நாத்திக மற்றும் இரண்டுக்கும் நடுவில் அல்லாடும் அன்பர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்படாமல் இறுதிவரை படித்துவிட்டு பின்னூட்டம் பற்றி யோசிக்க வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள் !


உலகின் ஏனைய உயிர்களைப்போல பசிக்கு வேட்டை, ஆபத்தை உணர்ந்தால் ஓடி ஒளிதல் என்ற அடிப்படை உயிர்ச்சுழலிலிருந்து விடுபட்டு, என்ன செய்தால் உயிரை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் ஆறாம் அறிவு உதித்த தருணத்திலேயே வழிப்பாட்டுக்கான அவசியமும் தோன்றியிருக்க வேண்டும் !

மற்ற உயிரினங்களை அடக்கியும், அழித்தும் மனிதன் தன்னை மேலானவனாய் பாவிக்க தொடங்கிய கணத்தில் தன்னால் அடக்க முடியாத இயற்கை சீற்றங்களை தன்னைவிட மேலானதாக பாவிக்கத்தொடங்கி, அவற்றிலிருந்து தன்னை காத்துக்கொள்ள, அதாவது உயிரை தக்கவைத்துக்கொள்ள தோற்றுவித்ததே வழிப்பாடு ! மதம் தொடங்கி மனிதனின் கண்டுபிடிப்புகள் அனைத்துமே உயிரை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டம்தான்.

த நம்பிக்கைகளுக்கான அடிப்படை என்ன ? மரணம் பற்றிய பயம். இத்தனை போராட்டமும் வீணா என்ற அச்சம். மரணத்துக்கு பிறகு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியாததே மத தேடலுக்கான  காரணம் !

இரண்டு சூழ்நிலைகளில் மனிதன் மதத்தை உதறத்துணிவான் !

அவன் மரணத்தை வெல்லும் சூழ்நிலையில் ! மரணமே கிடையாது எனும் போது அதற்கு பிறகான சொர்க்கம், நரகம், தீர்ப்பு நாளுக்கெல்லாம் தேவையில்லாதபோது மனிதனுக்கு மதத்தின் தேவை இல்லாமல் போகும் !

அல்லது இறப்புக்கு பின்னர் இதுதான் நடக்கும் எனும்போதும் மதம் மற்றும் மார்க்கங்கள் அவசியமற்று போகலாம் ! உதாரணமாக இறந்தவர்கள் அனைவருக்கும் பூமியை விட மேலான அற்புத உலகம் காத்திருக்கிறது என்பது உறுதிப்பட நிருபிக்கப்படுமானால் மனிதர்கள் மரணத்தைவிரும்பி ஏற்கும் நிலைக்கூட ஏற்படலாம் !


ரி, இனி மதமாற்றத்துக்கு வருவோம்...

இன்று பொதுகருத்தாக இருப்பது போல இந்தியாவில் மதமாற்றம் மற்றும் கட்டாய மதமாற்றம் முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் மட்டுமே ஆரம்பிக்கப்படவில்லை. இவர்களின் வருகைக்கெல்லாம் முன்னால் இந்திய சமயங்களுக்கிடையேயான மோதல்களுடன்  ஒப்பிட்டால் முகலாய, ஆங்கிலேயே காலத்திய மத கொடுமைகள் குறைவுதான் !

முகலாய, ஆங்கிலேய காலத்தில் மதமாற்றத்துக்கான தூண்டிலாக அமைந்தது இந்திய சமூகத்தின் ஜாதிய அடுக்கும், அடக்குமுறையும் ! மெரும்பாலான இந்தியர்கள் இஸ்லாமிய மற்றும் கிருஸ்த்தவ மதங்களுக்கு மாறியதற்கான காரணம் ஜாதிக்கொடுமையே !

ஆனால் மதமாற்றத்தால் மறைந்திருக்க வேண்டிய ஜாதிகள் புதிய மதங்களிலும் குடியேறியதுதான் ஆச்சரியம். தேவாலயங்களில் கீழ்சாதிக்காரர்களுக்காக தனி இடம் ஒதுக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் குறுக்குச்சுவர் கூட எழுப்பப்பட்டது. இதனை எதிர்த்த பாதிரிமார்கள் மாற்றப்பட்டார்கள் ! இந்த அளவுக்கு இல்லையென்றாலும் கூட இந்திய இஸ்லாமிய மார்க்கத்துக்கு என சில பிரிவுகள் உண்டு. தென்னிந்திய மரைக்காயர் முஸ்லிம்கள் வட இந்திய பூர்வீக பதான் முஸ்லீம்களுடன் அவ்வளவாக ஒட்ட மாட்டார்கள். லெப்பை பிரிவும் உண்டு !

புதிய மத தேடலை இரண்டு வகையாக பிரிக்கலாம்...

ஒன்று நாத்திகனின் தேடல். மற்றொன்று ஆத்திகனின் வேறு மத தேடல் !

ஒரு நாத்திகன் தன் அந்திம காலத்தில் ஏதோ ஒரு மதத்தின் மீது பற்றுக்கொள்வது இயல்பானதாகவே தோன்றுகிறது ! காரணம் இந்த பதிவின் ஆரம்பத்தில் சொன்ன மரண பயம்  ! வாலிபத்தில் பகுத்தறிவு பேசும் பலருக்கு வயோதிகம் நெருங்க நெருங்க, இறப்புக்கு பின்னர் என்ன  என்ற கேள்வி எழும்போது மதத்தின் நினைவும் வந்துவிடுகிறது !

ஆத்திகர்களின் மாற்றத்துக்கு வாழ்க்கை சூழல், தங்கள் மதத்தில் அவர்கள் நடத்தப்படும் முறை என பல காரணங்கள். இனி என்ன செய்வது என தெரியாமல் வாழ்க்கையில் திக்கற்று நிற்கும் தருணங்களிலும், ஏதோ ஒரு காரணத்தால் சொந்த மதத்தை சேர்ந்தவனே தன்னை ஒதுக்கும் நிலையிலும் ஆத்திகன் தன் பூர்வீக மதத்திலிருந்து விடுபட விரும்புகிறான் !

உணர்ச்சிவசப்படாமல் உள்வாங்கி யோசித்தால் மேலே குறிப்பிட்ட இரண்டு பேருமே மனத் தெளிவற்ற நிலையிலேயே மதம் மாறுகின்றனர் !


சீக்கிய குரு நானக்கிடம்,

" உங்கள் புனித புத்தகத்தில் இருப்பது முழுவதையும் ஒரே வரியில் கூறிவிட்டால் உங்கள் மதத்தை ஏற்றுக்கொள்கிறேன் ! "

என நாத்திகர் ஒருவர் கேட்டதாகவும், அதற்கு குரு நானக்...

" மற்றவர்கள் உனக்கு எதை செய்யக்கூடாது என நீ நினைக்கிறாயோ அதனை நீ அவர்களுக்கு செய்யாதே ! அவ்வளவுதான் !! "

எனக்கூறியதாகவும், அதனை கேட்ட நாத்திகர் சீக்கிய மதத்தில் சேர்ந்ததாகவும் ஒரு குட்டிக்கதை உண்டு.

இந்த கதை சீக்கிய மதத்துக்கு மட்டுமல்ல, உலகின் அனைத்து மதங்களின் சாரமும் இதுதான் !

இந்த தெளிவு இயல்பாகவே இருப்பவர்கள் நாத்திகர்களாகவே தொடரலாம்... இல்லாதவர்கள் சொர்க்கம், நரகம் பயத்துடன் ஆத்திகர்களாக அவரவர் மதத்திலேயே இருக்கலாம்  என்றாலும் ஒருவன் மாற்றுமதம் ஒன்றினால் ஆத்மார்த்தமாக ஈர்க்கப்பட்டு மாறினால் அது தனிமனித உரிமை. அதை பேச வேறு எவருக்கும் உரிமை கிடையாது ! இதற்கு மேலை நாட்டவரின் மதம் பற்றிய கண்ணோட்டத்தை உதாரணமாக குறிப்பிடலாம்...

அவர்களை தீவிர மத பற்றுடையவர்கள், மிதவாதிகள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என மூன்று தெளிவான குழுக்களாக பிரித்துவிடலாம். அந்த மூவருக்குமே இறை சார்ந்த நம்பிக்கை அந்தரங்கமானது ! வெளியில் பேசமாட்டார்கள் ! இதில் மிதவாதிகளில் சிலர் தங்கள் பிள்ளைகளுக்கு அனைத்து மத தத்துவங்களையும் போதித்து, தங்கள் பிள்ளைகளுக்கான மத தேர்வு உரிமையை அவர்களிடமே விட்டுவிடுவதும் அங்கு சகஜம் !

இங்கு மதமாற்றம் உணர்ச்சியுடன் விளையாடுவதாக அமைந்துவிடுவது சோகம் !

காதலுக்காக மதம் மாறுவதை ஒரு முக்கிய உதாரணமாக குறிப்பிடலாம்...

இதையும் மிக கவனமாக அலச வேண்டும் !

இரு வேறு மதங்களை சேர்ந்த ஜோடி திருமணம் முடிந்து ஒன்றாக பல காலங்கள் வாழ்ந்து, ஒருவர் ஏதோ ஒரு காரணத்தினால் மற்றவரின் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு மதம் மாறுவது இயல்பானது ! தனிமனித உரிமை சார்ந்தது.



ஆனால் கண்டதும் காதலாகி, கல்யாணம் நெருங்கியவுடன் மதம் மாறினால்தான் திருமணம் என பெற்றோர்கள் சோல்லிவிட்டார்கள் என உணர்ச்சி மிரட்டலில் இறங்குவது ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்று ! வேற்றுமத திருமணத்துக்கு  பெற்றோர்கள் சம்மதிக்க மாட்டார்கள் என்று தெரியும் என்றால், அதனை எதிர்த்து நிற்கவோ, அல்லது எடுத்துச்சொல்லி சம்மதிக்கவைக்கவோ துணிச்சல் இல்லையென்றால் அந்த காதல் எதற்கு ?

காதலித்த காலத்தில் ஒருவர் மற்றொருவரின் மதத்தின் மீது ஆத்மார்த்த பற்றுக்கொண்டிருக்கலாம்தானே என்ற கேள்வி எழுகிறதா ?...

" இரு வேறு மதங்களை சேர்ந்த ஜோடி திருமணம் முடிந்து ஒன்றாக பல காலங்கள் வாழ்ந்து, ஒருவர் ஏதோ ஒரு காரணத்தினால் மற்றவரின் மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு மதம் மாறுவது இயல்பானது ! தனிமனித உரிமை சார்ந்தது. " ...

அதற்கு காலம் தேவை நண்பர்களே ! தைரியமாய் நின்று பேசக்கூட இடம் கொடுக்காத நம் சமூகத்தில் சில மாதங்களே கடந்த இளம் காதலர்களுக்கு அவரவர் மத தத்ததுவங்களை அலச ஏதய்யா நேரம் ?!!!

காதலுக்காகவும், அரசியலுக்காகவும் மதம் மாறவும், மதம் மாற்றவும் முயற்சிக்கும் வாலிப வயோதிக அன்பர்களே....

காதலிப்பவர்கள் ஓடிப்போயாவது திருமணம் செய்துக்கொண்டு பிள்ளைகள் பெற்று உங்கள் குடும்பத்தை வளர்ப்பதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் ஓட்டு வங்கி வளர்ப்புக்கு பிரியாணி பொட்டலங்களை மட்டும் பயன்படுத்திக்கொள்ளுங்கள் ! ( பிரியாணியில் வெஜிடபிளும் இருப்பதால் அனைத்து தரப்புக்கும் இதுவே போதுமானது ! )  உங்கள் ஓட்டு பிச்சைக்கு கட்சியின் கலர்களும், கறைகளும் படிந்த வேட்டியே போதும் ! தயவு செய்து மத சட்டையை கழற்றிவிடுங்கள் !

கடவுள்தான் மதங்களை படைத்தார் என்றால் அந்த மதங்களையும் அவரே பாதுகாத்துக்கொள்வார் !

இருந்த மதத்தின் அருமையை புரிந்துகொள்ளமுடியாத உங்களால் வந்த மதத்தில் எதையும் புரிந்துகொள்ள முடியாது ! இரண்டு மதங்களுமே உங்களால் கேவலப்படுவது மட்டுமே எஞ்சும் !




பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Thursday, January 1, 2015

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

மதம் ஜாதி
மொழி பிராந்தியம்
என நாம்
பிரிந்திருந்தாலும்
நமக்குள்ளிருக்கும்
மனிதம் ஒன்றுதான் !
அன்பே அதன்
அடிநாதம் !

குடும்பம் உறவு
நட்பு சுற்றம்
தாண்டிய சாமானியனையும்
நேசிப்போம் !
நாம் கடக்கும்
பாதைகளெங்கும்
அன்பு விதைப்போம் !
இனிவரும் வருடங்களில்
இப்பூமியை
நம் அன்பு
விருட்சங்களால்
இன்னும் அழகாக்குவோம் !

                    


                    





தை செய்ய வேண்டும், அதை நிறுத்த வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என பல்வேறு உறுதிமொழிகளுடன் ஒவ்வொரு புத்தாண்டையும்  தொடங்கி, அந்த உறுதிமொழிகளெல்லாம் காலண்டர் தாள்களைவிடவும் வேகமாய் உதிர்ந்து மறைந்த வேகத்தில் ஆண்டின் இறுதியை நெருங்கி, மீன்டும் ஒரு புத்தாண்டினை புது சத்தியத்துடன் தொடங்கி...

ஆகையால் தோழர் தோழிகளே... உறுதியற்ற உறுதிமொழிகளும் சாத்தியப்படாத சத்தியங்களும் வேண்டாம் !

மகிழ்ச்சியாய் இருப்போம் ! இந்த ஆண்டு முழுவதையும் சந்தோசமாய் கழிப்போம் !!

நீண்ட ஆயுள், ஆரோக்யம், செல்வம் என்றெல்லாம் வாழ்த்துகிறோமே தவிர சந்தோசமாக இருங்கள், அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள், உங்களை சுற்றி உள்ள இவ்வுலகின் அற்புதங்களை உணருங்கள் என வாழ்த்துவது கிடையாது !

சற்றே ஓடுவதை நிறுத்திவிட்டு யோசித்தோமானால் இந்த நொடி மட்டுமே நிரந்தரம் என்பது புரியும் ! நிலையற்ற இவ்வாழ்க்கையின் நிலயான இத்தருணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுவோம். இன்னும் நிறைய நேரமிருக்கிறது இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன என்றே நினைக்கிறோம். ஆனால் நாளையே இந்த வாழ்க்கை நின்றுவிடுமானால்... நாம் சாதிக்க நினைத்தையெல்லாம் சாதித்து விட்டோமா ? நாம் நேசிப்பவர்களிடம் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லி விட்டோமா ? நான் எப்படி வாழ நினைத்தேனோ அப்படி வாழ்ந்துவிட்டேன் அல்லது வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என நம்மில் எத்தனை பேரால் சொல்ல முடியும் ?!

நமக்கு  நல்லது என நாம் மனதில் வரித்துக்கொண்ட கற்பனைகளை தேடி நித்தமும் ஓடுவதை  சற்றே நிறுத்திவிட்டு நிதானித்து பார்த்தோமானால் நம்மை சுற்றி நமக்காக நிகழ்ந்து கொண்டிருக்கும் நல்லவைகள் புலப்படும் ! நம்மை தேடிவரும் நன்மைகளை நாம் உணராதது புரியும் !




ங்களின் பெற்றோர்களை கொண்டாடுங்கள். வயோதிகத்தின் நிழல் வேகமாய் படரும் அவர்கள் உங்களுடன் இருக்கும் பொழுதை பெருமையுடன் பயன்படுத்தி கொள்ளுங்கள்.

உங்களை இன்னும் பிள்ளைகளாய் நேசிப்பது அவர்கள் மட்டும்தான். அவர்கள் உங்களை வளர்த்த விதத்தில், உங்களுக்கு அளித்த வசதிகளில் குறைகள் இருந்திருக்கலாம், ஆனால் அவர்களால் முடிந்ததை முழு மனதுடன் உங்களுக்கு அளித்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றும் அவர்கள் உங்களின் பின்னால் இருக்கிறார்கள். உங்களின் வெற்றிகளை பாராட்ட ! தோல்வியின் போது தோள்தொட்டு தூக்க ! உங்களின் மகிழ்ச்சியை அவர்களுடையதாய் கொண்டாட ! உங்களின் துக்கத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ள !

காதலனோ காதலியோ அல்லது கணவனோ மனைவியோ, உங்கள் துணைக்கான நேரத்தை அவர்களுடன் முழுமையாக செலவிடுங்கள்.

நம் வேலை பளு, குடும்ப தேவைகள், அன்றாட காரியங்கள் என பலவற்றுக்கு மத்தியில் நமக்கென காத்திருக்கும், நமக்கென வாழும் நம் துணையின் தேவைகளை பல நேரங்களில் மறந்து விடுகிறோம் ! ஆனால் வாழ்க்கை படகு ஒரு துடுப்பை விட இரு துடுப்புகளால் செலுத்தபடும்போது சீராய் போகும் என்பதை மறந்துவிடாதீர்கள் !பரஸ்பர புரிதலும், ஒற்றுமையும், விட்டுக்கொடுத்தலும் இல்லையென்றால் இல்லறத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் !

உங்களின் குழந்தைகளுடனான நேரத்தை அவர்களுக்காக முழுமையாய் செலவிடுங்கள். மிக வேகமாய் வளரும் அவர்களின் சிறகுகள் விரிந்து அவர்களின் வாழ்க்கைக்காக அவர்கள் பறந்து விடுவார்கள்.

நம் குழந்தைகளை கண்காணிப்பதிலும், கண்டிப்பதிலும், அறிவுரைகள் கூறுவதிலுமே அவர்களுக்கான நேரத்தை செலவிடும் நாம் நம் குழந்தைகளை பற்றி பெருமைபட்டது எப்போது ? அவர்களை கடைசியாய் பாராட்டியது எப்போது ? அவர்களின் வளர்ச்சிக்கு தேவை நம் ஊக்கம். அது மட்டும் தான் நாம் நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அளிக்கும் உறுதியான அஸ்த்திவாரம்.

நண்பர்களை நினைவில் கொள்ளுங்கள் !

எந்த எதிர்ப்பார்ப்புகளும் அற்ற பால்ய பருவத்தில் நம் தோள் மீது கைபோட்டு நடந்தவர்கள் தொடங்கி, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்முடன் இணைந்தவர்கள் எத்தனைபேர் ? ஓடி வந்து உதவியவர்கள் எத்தனை பேர் ? அவ்வப்போது அவர்கள் நமக்காக நம் பாதையை மறைத்த தடைகளை நகர்த்தியிராவிட்டால் நாம் இன்று இங்கிருந்திருப்போமா ? தவறான புரிதல்களால் அவர்களுக்கும் நமக்குமான உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் ! தொடர்பு நின்று போயிருக்கலாம் ! ஆனால் அவர்களுடன் நாம் கழித்த இனிய தருணங்கள் நம் மனங்களில் கல்வெட்டுகளாய் பதிந்தேதான் இருக்கும் !

அந்த நண்பர்களை மீன்டும் சந்திக்க நேர்ந்தால் முதல் புன்னகை நம்முடையதாக இருக்கட்டும் !



மொத்தத்தில் இந்த உலகத்தை, அது நாம் கேட்காமலே நமக்கு கொடுத்திருக்கும் கொடைகளை நேசிப்போம் ! மகிழ்ச்சியாக இருப்போம் ! நிரந்தரமற்ற இவ்வாழ்வின் நிரந்தரமான இத்தருணத்தை நிறைவாக அனுபவிப்போம் ! நம்மை சுற்றியுள்ள இவ்வுலகின் அற்புதங்களை ரசிப்போம் ! நம் அன்பினால் இவ்வுலகுக்கு இன்னும் கொஞ்சம் அழகூட்டுவோம் !

வாழ்க்கை அழகானது ! அதனை அழகாக நீங்கள் நினைக்க நினைக்க, அது இன்னும் அழகாக உருவெடுக்கும் ! ஒரு குழந்தையாய் விளையாடுங்கள் ! பைத்தியமாய் நடனமாடுங்கள் ! கிறுக்கனைபோல் கத்தி ஆழ சுவாசியுங்கள் !!!

இவ்வுலகம் அற்புதங்கள் நிரம்பியது ! இத்தருணத்தில் வாழ்வதால் மட்டுமே அந்த அற்புதங்களை உணர முடியும் !

ஒவ்வொரு விடியலையும் ஒரு புத்தாண்டாய் கொண்டாடுவோம் !


 ( 2013 மற்றும் 2014 வாழ்த்து பதிவுகளின் திருத்தப்பட்ட தொகுப்பு )

பட உதவி : GOOGLE


 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.






Monday, December 15, 2014

விடாது துரத்திய விஷ்ணுபுரம் !



பால்ய வயதில், ஒரு மழைக்கால மாலை நேரத்தில் எனக்கு பரிச்சயமான அட்டை  கிழிந்த  காமிக்ஸில் தொடங்கிய வாசிப்பு என்னை இன்னும் தொடர காரணம் என் பெற்றோர்கள் !

அந்த மாலையிலிருந்து நான் புத்தக புழுவாய் மாறிப்போனேன். வளர்ச்சிக்கு ஏற்ப என் வாசிப்பு ரசனையும் மாற, பள்ளிக்கூடத்துக்கு அடுத்ததாக நான் அதிகம் இருந்தது நூலகங்களில் ! பொது நூலகங்கள் தொடங்கி லெண்டிங் லைப்ரரி வரை ஊரின் அனைத்து நூலகங்களும் எனக்கு அத்துப்படி ! அன்று எனது பெற்றோர்கள் எந்த விதத்திலாவது வாசிப்புக்கு தடைபோட்டிருந்தார்களேயானால் என் வாழ்க்கையே மாறியிருக்கும்... நிச்சயமாக சாமானியனாய் உங்களை தொடர்ந்திருக்க முடியாது ! காமிக்ஸில் தொடங்கி கண்ணில் கண்ட நூல்களையெல்லாம் வாசிக்க தொடங்கிய காலம் வரை எனக்கு எந்த தடையும் போட்டதில்லை அவர்கள் !

 பத்தாம் வகுப்பு தேர்வின்போது நான் வாசித்துக்கொண்டிருந்தது பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் !

 நானூற்றி பதிமூன்று மதிப்பெண்கள் என ஞாபகம்...

" அந்த கன்றாவியை வாசிக்காமல் இருந்திருந்தா இன்னும் அதிகமா மார்க் எடுத்திருக்கலாம்ல... "

ஒரு சொந்தக்காரர் புலம்ப,

" பள்ளிக்கூட கன்றாவியை மட்டும் படிச்சிட்டு வாந்தியெடுத்து அப்படி ஒண்ணும் அதிகமா வாங்க வேண்டாம் ! "

என் அம்மா சட்டென கூறினார். என் கல்வி மதிப்பெண்களை பற்றி பேசுவதைவிட, நான் படிக்கும் புத்தகங்களை பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்கள் !

விகடன் பிரசுரம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பிரான்சில் இருந்தேன். நான் வாங்கி அனுப்ப சொல்லியிருந்த புத்தகங்களில் எய்ட்ஸ் எரிமலையும் ஒன்று ! அந்த புத்தகத்தின் அட்டை தெரியாமல் பைண்ட் பண்ணி அனுப்பி வைத்தார் என் தந்தை ! நான் பிரான்சிலிருந்து குறிப்பிடும் புத்தகங்களுக்க்காக என் பெற்றோரும், குடும்ப நண்பர் தேத்தரவுராஜும் பட்டபாடுகள் சொல்லி மாளாது !

ரண்டாயிரத்தின் தொடக்கம்... இந்தியாவில் முழுவீச்சை அடைந்திருந்த நுகர்வோர்  கலாச்சாரம் எங்கள் ஊரிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்த காலகட்டம். எனது பால்யத்தின் அற்புதங்களில் ஒன்றான ரஹ்மானியா பேப்பர் ஸ்டோர்ஸ் எல்லாம் காணாமல் போக ஆரம்பித்த காலம் !
கி.ராஜநாராயணன்


" கொஞ்சம் புக்ஸ் வாங்கனும்... எங்க கிடைக்கும் ? "

பிறந்த ஊருக்கு அந்நியனாய் மாற தொடங்கியிருந்த நான் சொந்தக்காரர் ஒருவரிடம் கேட்டேன்.

" அட நம்ம பரட்டை டீக்கடையிலேயே விக்கிறானே ?! "

அவர் சட்டென கூற, குழம்பினேன் !

" வாங்க ! இப்பவே ஒரு நடை போயிட்டு வந்துடலாம்... பய பிஸினசை டெவலப் பண்ணிட்டான்ல... எல்லா பொஸ்த்தகமும் வச்சிருக்கான் ! "

பரட்டை கால ஓட்டத்துக்கு ஏற்ப தொழில் விருத்தி பண்ணிக்கொண்டார் போலிருக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் கிளம்பினேன் !

" பாத்தீங்களா ?! நான் சொன்னேன்ல... எது வேணுமோ வாங்கிக்குங்க ! "

கடையை நெருங்கிய சொந்தக்காரர் எனக்கு உதவிய மகிழ்ச்சியுடன் கூற...

 பரட்டை பிஸினஸ் டெவலப் பண்ணியிருந்தது உண்மைதான் ! வடை, டீ, போண்டாவுடன்  தமிழின் முன்னணி வார, மாத சஞ்சிரிகைகளும் கடையில் தொங்கின ! 

நம் சமூகத்தின் பெரும்பாலானவர்களுக்கு வார, மாத சஞ்சிரிகைகளுக்கும், புத்தகங்களுக்குமான வித்யாசம் தெரிவதில்லை ! இன்னும் பலருக்கு வாசித்தல் என்றாலே பள்ளி பாட புத்தகங்கள் மட்டும்தான் !

நமது சமூகத்தில் வாசிப்பு பழக்கம் உள்ளவன் வேலைவெட்டி இல்லாதவன் ! கிடைத்த காசையெல்லாம் வீணாய் செலவு செய்யும் பிழைக்கத்தெரியாதவன் ! புத்தகம் வாங்கி கொடுக்கும் நண்பனைவிட குவார்ட்டருக்கு செலவு செய்பவன் " நண்பேன்டா ! "

ஒன்றுக்கும் உதவாத அரசியல் அலும்புகளையும், அரைவேக்காட்டு சினிமா செய்திகளையும் தலைப்புகளாக்கி, இலக்கியத்தரமிக்க எழுத்தாளர்களின் பேட்டியில்கூட அவர்களின் படைப்புகளை பற்றி விரிவாக குறிப்பிடாத, சிலவேளைகளில் அவர்களின் பதில்களை நையாண்டி பேட்டியாக்கி பிரசுரிக்கும் ஊடங்களை கொண்ட சமூகத்தின் மக்கள் இப்படி இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை !

ஒரு நாட்டின் நூலகங்களின் தரத்தை வைத்தே அந்த சமூகத்தின் வாசிப்பு தகுதியை கணித்துவிடலாம். மேலை நாடுகளில் நூலகர் பணிக்கெனவே மேல்நிலை படிப்புகள் உண்டு. அதையும் தாண்டி, பல்வேறு தேர்வுகளுக்கு பின்னரே அந்த பணியில் அமர முடியும். அங்கெல்லாம் நூலகர்கள் தங்கள் நாட்டின் இலக்கியம் தாண்டி உலக இலக்கியம் வரை அனைத்தையும் அறிந்து விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.

அங்கு குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே அவரவர் நாட்டின் இலக்கியங்கள், குழந்தைகள் புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் எளிமையான படக்கதைகளாய் அறிமுகம் செய்யப்படுகின்றன. முதலாம் வகுப்பு குழந்தைகள் கூட நூலகங்களுக்கு தொடர்ந்து அழைத்து செல்லப்படுகிறார்கள். கலை, இலக்கிய ரசனை அவர்களுக்கு பால்யத்திலிருந்தே பயிற்றுவிக்கப்படுகிறது.

னது பதிணென்பருவத்து நண்பர்களில் ஒருவன் கிரி. கலாட்டா கிரி என்றால் தான் ஊரிலுள்ளவர்களுக்கு புரியும். ஒரு பாட்டில் பீருக்கே சுருதி ஏறி கண்மண் தெரியாமல் கலாட்டாவில் இறங்கிவிடுவான் என்பதால் அந்த பெயர்.

லோக்கல் எம் எல் ஏவின் தொண்டரடிப்பொடியாகி, எப்படியோ  நூலகத்தில் கடைநிலை ஊழியனாக சேர்ந்தவனை சில வருடங்களுக்கு முன்னர் சந்திக்க நேர்ந்தது... தினத்தந்தியை கூட புரட்டியறியாத கிரி நூலகராக பதவி உயர்வு பெற்றிருந்தான் !

தோப்பில் முகம்மது மீரான்


ந்தியா வரும் ஒவ்வொரு முறையும் புத்தகங்கள் தேடி அலையும் போது ஏற்படும் அனுபவங்களையே ஒரு புத்தகமாக எழுதிவிடலாம் !

கி. ராஜநாராயணின் கோபல்லபுரத்து மக்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற நேரம்...  அவர் புதுச்சேரியில் குடியேறியதை பத்திரிக்கைகள் பேசிக்கொண்டிருந்த காலம்...

புதுச்சேரியில்  அந்த புத்தகத்துக்காக அலைந்து கொண்டிருந்தேன் !

" ராஜநாராயணனா ? அவரு யாருங்க ?! "

ஹிக்கின்பாதம்ஸ் புக் ஸ்டாலில் விசாரித்தபோது வந்த கேள்வி !

பல வாரங்கள் விசாரித்து, சென்னையின் முட்டு சந்தின் முனையிலிருந்த ஒரு கடையிலிருந்து " கோபல்லபுரத்து மக்களை " கண்டுபிடித்து பிரான்ஸ் அனுப்பி வைத்தார் நண்பர் தேத்துரவு ராஜ் !

அதே புதுச்சேரியில் அருந்ததி ராயின் " Gods of small things" மற்றும் அப்துல் கலாமின் " wings of fire " ஆகிய ஆங்கில நூல்கள் மிக எளிதாக கிடைத்தன ! பிரதான நேரு வீதியின் பளபள ஷாப்பிங் மால்களின் முகப்பு கண்ணாடியில் பரத்தப்பட்டிருந்தன அந்த நூல்கள்.

பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் புத்தக கடைகளில் அவரவர் மொழி புத்தங்களை மட்டுமே காண முடியும் ( ஆங்கிலம் கற்பதற்கான பாட புத்தகங்கள் இதில் சேர்த்தி இல்லை ! ) இவ்வளவுக்கும் ஆங்கில தேசமான இங்கிலாந்து இவர்களுக்கு பக்கத்து வீடு ! பிரபலமான ஆங்கில நூல்களும் " Best  seller " வகைகளும் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனைக்கு வருமே தவிர, ஆங்கில மூலத்தை தேடி அலைய வேண்டும் !

நமக்கு புத்தகத்தினுள் என்ன இருக்கிறது என்பது முக்கியமில்லை ! அது ஆங்கிலத்தில் இருந்தால், கையில் கொண்டு போவதில் ஒரு பெருமை !  Gods of small things செம cantroversial என பெருமைப்பட்டுக்கொள்பவர்கள் தி. ஜானகி ராமனின் அம்மா வந்தாள் நாவலை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் !  ( தி.ஜானகிராமனின் படைப்புகளை நோக்கி என்னை திருப்பியவர் சகோதரர் ஜோசப் விஜு அவர்கள். )

அந்த ஆங்கிலத்தையும் நம்மவர்கள் உருப்படியாக கற்பதில்லை என்பது இன்னும் கொடுமை !

ஜெ. கிருஷ்ணமூர்த்தியின் Freedom from the  known புத்தகம்...  நம்அன்றாட வாழ்வின் அனுபவங்களின் மூலம் அறிந்த மனப்பிம்பங்களிலிருந்து நாம் விடுபட்டால்தான் பிரபஞ்ச உண்மையை உணர முடியும் என்பது இந்த புத்தகத்தின் ஒரு வரி விளக்கம்.

இதன் தமிழ்மொழியாக்கம் ஒன்றினை படிக்க நேர்ந்தது. தலைப்பு  "உண்மையிலிருந்து விடுதலை " ! ஜே. கே சொல்ல நினைத்ததோ  Freedom from the  known ,  அதாவது அறிந்தவைகளிலிருந்து விடுதலை.  அறிந்தவைகளிலிருந்து மனம் விடுதலை அடைந்தால்தான் உண்மையை காண முடியும். தமிழில் எழுதியவர் புரிந்து கொண்டதோ உண்மையிலிருந்து விடுதலை ! அதாவது  Freedom from the truth !!!

ற்றொரு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான். ராஜநாராயணன் கரிசல் மக்களின் வாழ்வை கண் முன் நிறுத்தினார் என்றால் இவர் நெல்லை முஸ்லீம் சமூகத்தின் வாழ்வியலை, மும்மதங்கள் கலந்த சமூகத்தின் குழப்பங்களை, அத்தனை கலகங்களுக்கிடையேயும் பாமரனிடம் பொங்கும் மனித நேயத்தை ரத்தமும் சதையுமாய் எழுத்தில் கொடுத்தவர்.

இவரது சாய்வு நாற்காலி, ஒரு கடலோர கிராமத்தின் கதை, கூனன் தோப்பு  போன்ற நாவல்களை எனக்காக தேடி ஒரு நண்பர் படையே அலைந்தது !

மீன்டும் அதே கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் தேடி சென்னையில் அலைந்த போது , பழம்பெரும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் கிடைத்த அனுபவம்....

புத்தக பிரிவில் நுனிநாக்கு ஆங்கில இளம் பெண்...

தமிழ் புத்தக அடுக்கில் வழக்கம் போலவே பாலகுமாரன் மட்டும் சிரித்து கொண்டிருந்தார்... கூடவே ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார்.... அவர்களை சுற்றி சமையல் கலை, ஜோதிடம், வாஸ்து.... நட்ட நடுவே,  " முப்பது நாளில் கோடீஸ்வரர் ஆவது எப்படி ? " மற்றும் " சுகமான தாம்பத்ய வாழ்வுக்கு சுவையான யோசனைகள் ! "

" கி. ராஜநாராயணன் எழுதிய  கோபல்ல கிராமம் இருக்கிறதா ? "

புதுச்சேரியின் ஹிக்கின் பாதம்ஸ் ஆசாமியாவது கி.ராஜநாராயணனை யார் என்றுதான் கேட்டார்...

" அதெல்லாம் இங்க கிடையாதுங்க ! "

நான் ஏதோ " அந்த மாதிரி " புத்தகம் கேட்டது போல் பதறினார் நுனிநாக்கு ஆங்கிலி !

சட்டென திரும்பிய என் கண்களில் பட்டது... " அந்த மாதிரி " நூல்களே தான் !  அவற்றில் ஒன்று காம சூத்திரம் முழுவதையும் காமிக்ஸ் வடிவில் கொண்ட புத்தகம் ! மிக உயர்ந்த தரத்திலான ஆங்கில புத்தகம் ! சத்தியமாய் சொல்கிறேன் நண்பர்களே ! நம்மவர்கள் " அந்த சுதந்திரத்துக்கு " உதாரணமாய் அடிக்கடி குறிப்பிடும் பிரான்ஸில் கூட அப்படிப்பட்ட புத்தகத்தை பார்த்ததில்லை நான் !
தி.ஜானகிராமன்


எனக்கு விடலைப்பருவ ஞாபகம்...

எங்கள் ஊரின் பேருந்து நிலையத்தினருகே இருந்த  அந்த பெட்டிக்கடையில் அனைத்து தினசரி, வார, மாத இதழ்களுடன் பருவகாலம் தொடங்கி அவ்வப்போது பெயர் மாறும் குயிலி, டிஸ்கோ, கிளாமர் போன்ற கில்மாக்களும் கிடைக்கும் ! அந்த கடைக்காரர் ஒரு உடல் ஊனமுற்ற இளைஞர். சக்கர நாற்காலியில் வரும் அவரை ஒரு நாள் போலீஸ்க்காரர்கள் இழுத்துபோனார்கள்.

" மாப்ள... ரகசியமா சரோஜாதேவி வித்திருக்கான்டா ! "  என்றான் முபாரக் !

ஏழை பாழைகளுக்காக சரோஜாதேவியை ஒளித்து விற்றால் குற்றம், மேல்தட்டு ஷாப்பிங் மால்களில் குழந்தைகள் எடுத்து புரட்டகூடிய தூரத்தில் காமசூத்திரம் விற்கலாம்  ! இது ஜனநாயகம் !

ப்போது அலைந்தது சரி, இன்றுதான் இணையத்தின் மூலம் எந்த நூலையும் வாங்கலாமே என கேட்கலாம்...

எனக்கு புத்தகங்களை நேரில் சென்று வாங்க வேண்டும் ! நான் தேடியது கிடைத்த பரவசத்துடன்  பார்த்து , அதன் அட்டையை தடவி, புது வாசனையை முகர்ந்து ...முன் அட்டை கிழிந்த புத்தகத்தை என்னால் வாசிக்க இயலாது !

என்னை சைக்கோ என்று வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள் !

சில மாதங்களுக்கு முன்னர், இந்தியா கிளம்புவதற்கு முன்பாக ஆனந்த விகடனை புரட்டிக்கொண்டிருந்தேன்.  உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்பது போல விகடன் புத்தக கண்காட்சி முதல்முறையாக எனது ஊரில் ! அதுவும் நான் அங்கிருக்கும் சமயத்தில் ! பரவசமாக முகவரியை பத்திரப்படுத்திக்கொண்டேன்.

ஊர் வந்த நாள் முதலாய் அந்த முகவரி தேடி அலைகிறேன்,  கிடைக்கவில்லை ! அந்த தெரு என்னவோ எனக்கு நன்கு தெரிந்ததுதான் ! அங்கு கண்காட்சி நடக்கும் அறிகுறியே இல்லை !

என் பால்ய நண்பனிடம் கேட்டேன்...

" கண்காட்சினா திருவிழா கூட்டம்ன்னு நெனைச்சிட்டியா ? நீ திருந்தவே மாட்டடா ! வா ... "

இரண்டு பெரிய கடைக்களுக்கிடையே சொருகலாய் அந்த புத்தகக்கடை.  இருட்டில் அமர்ந்திருந்த கடைக்காரர் எங்களை கண்டதும் அவசரமாய் விளக்குகளை போட்டார் !

கடையின் நடுவே விகடன் பிரசுர புத்தகங்கள் !

நான் பாய்ந்து பாய்ந்து சேகரிப்பதை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் ! பணம் செலுத்தும் வரை அனைத்தையும் வாங்குவேன் என்பதை நம்பவில்லை அவர் !

" லெண்டிங் லைப்ரரிக்கா சார் ? "

" ம்ம்ம்... கேக்குறாருல்ல... சொல்லுடா ! "

நக்கலாய் என் நண்பன் !

" இல்ல சார்... படிக்கத்தான் ! "

அவர் என்னை பார்த்ததின் அர்த்தம் மட்டும் இன்னும் விளங்கவில்லை !

சில நாட்கள் கழித்து மற்றொரு புத்தக கண்காட்சியின் விளம்பரம் கண்டேன்... இந்த முறை சற்றே பெரிய கடை.

தி.ஜானகிராமனின் புத்தகங்கள் இருக்கிறதா எனக்கேட்டேன்...

" நிச்சயமாய் இருக்கும் சார்... தோ அங்க பாருங்க ! "

 கை காட்டினார் கடை முதலாளி...

அவர் காட்டியது கண்காட்சி புத்தகங்கள். கிழக்கு பதிப்பக வெளியீடுகள். எனக்கு தெரிந்து தி.ஜானாகி ராமனின் படைப்புகளை கிழக்கு பதிப்பகம் வெளியிடவில்லை. ஆனாலும் ஜெயமோகனின் சில புத்தகங்கள், சாரு நிவேதிதா என அள்ளிக்கொண்டு வந்தேன்.

" கிடைச்சிதா சார் ? "

நான்கு இலக்கத்தில் நான் செலுத்திய தொகை கொடுத்த மகிழ்ச்சியில் கேட்டார் கடைக்காரர்.

" ஜானகிராமன் இல்லீங்களே... "

" சார் ! ரொம்ப கஸ்ட்டமர்ஸ் ஜானகிராமன் கேக்குறாங்க சார் ! வாங்கி போடுங்க சார் ! "

நான் முடிக்கும் முன்னரே குறுக்கிட்ட கடைப்பெண்னை பார்த்தாரே ஒரு பார்வை... நல்லவேலை அவரது நெற்றிக்கண் திறக்கவில்லை ! அந்த கோபத்துக்கு கடைப்பெண் மட்டுமல்லாது புதகங்களுடன் சேர்ந்து நானும் எரிந்திருப்பேன் !

 இவ்வளவு புலம்பினாலும் புத்தக கண்காட்சிகள், வலைப்பூ சமூகம் என வாசிப்பின் ரசனை நிறைய உயர்ந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் வாசிப்பில் நம் சமூகம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் மிக மிக அதிகம் !
ஜெயமோகன்


ன்னும் தலைப்பை தொடவில்லையே ?... விடாது துரத்திய விஷ்ணுபுரம்...

நீண்ட நாட்களாய் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை வாங்க ஆவல். விகடன் பிரசுர கடைக்காரரிடம் கேட்டபோது வரவழைத்து தருகிறேன் என்றார். சில நாட்களில் இருப்பு இல்லை என கைவிரித்துவிட்டார். இரண்டாம் கடைக்காரரோ அப்படி ஒரு புத்தகமே இல்லை என சாதித்துவிட்டார் ! நான் சென்ற ஒரு மாத காலத்தில் சென்னை போன்ற நகரங்களுக்கு செல்ல நேரமில்லை !

குடும்ப நண்பர் ஒருவருடன் எனக்கு வீடு கட்டித்தந்த பொறியாளரின் வீட்டுக்கு சென்றிருந்தேன்....

வீட்டு ஹாலில் நான் தேடிய விஷ்ணுபுரம் !

" என் பொண்ணு படிப்பா சார் ! "

என்றவர், அவரது மகளை கூப்பிட்டார்.

இருபதிலுள்ள அந்தப்பெண் விஷ்ணுபுரம் படிப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுக்கொண்டே எங்கு வாங்கினாள் என்று கேட்டேன். ஒரு இணைய தளத்தின் பெயரை குறிப்பிட்டது அந்தப்பெண். இன்றைய இளைய தலைமுறையினர் முகநூலுக்கு மட்டுமே லாயக்கு என நான் நினைத்துகொண்டிருந்ததை பொய்யாக்கினாள் அந்தப்பெண் !

ஊர் திரும்ப சில நாட்களே இருந்தன. இணையம் மூலம் வரவழைக்க நாட்கள் போதாது. அதுமட்டுமல்லாமல் எனது ஐரோப்பிய வங்கி அட்டையின் மூலம் இந்தியாவில் பணம் செலுத்த சில நடைமுறை சிக்கல்கள் !

சரி, இந்த முறையும் விஷ்ணுபுர தரிசணம் நமக்கு கிட்டாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...

ஊர் திரும்ப போவதை சொல்லிக்கொள்ள எனது ஆசான் திரு. மைக்கேல் ஜோசப் அவர்களை காண சென்றேன்...  ( நான் படித்த பள்ளியின் ஆதர்ஷம் அவர் ! அந்த நல்லாசிரியரை பற்றி சொல்ல நிறைய இருப்பதால் வேறொரு பதிவிடுகிறேன் !  )

எங்கள் பேச்சு வழக்கம் போலவே புத்தகங்கள், வாசிப்பு என ஓடியது.

" யோவ் ! இருய்யா... ஒரு புக் இருக்கு... உனக்கு பிடிக்குமான்னு தெரியல... ! "

சட்டென புத்தக அலமாரியிலிருந்து எடுத்து நீட்டினார்...

விஷ்ணுபுரம் ! 848 பக்க நாவல் !

" சார்... நான் இன்னும் ரெண்டு நாள்ல... "

" பரவாயில்லய்யா... எடுத்துக்கிட்டு போ ! நான் படிச்சிடேன்... இதைப்பத்தி நிறைய பேசனும்... முதல்ல படி ! "

இப்படியாக  விடாது துரத்தி என்னை வந்தடைந்தது விஷ்ணுபுரம் !

கல்லூரி ஒன்றில் தான் உரையாற்றியபோது ஒரு மாணவர் எழுந்து எல்லோரும் புரிந்து கொள்வது போல இலகுவான நாவலாக விஷ்ணுபுரத்தை ஏன் எழுதவில்லை என தன்னை கேட்டதற்காக எரிச்சல் அடைந்ததை தனது மற்றொரு நூலில் குறிப்பிட்டிருந்தார் ஜெயமோகன்...

தமிழின் சிறுவர் இலக்கியத்துக்காக மட்டுமே தன் வாழ்நாளை அர்ப்பணித்த வாண்டுமாமா என்ன ஆனார் எனத் தேடாமல், நடிகையின் நாபிச்சுழிக்கு டூப் போட்டது உண்மையா என கலந்துரையாடல் நடத்தும் ஊடங்களை கொண்ட சமூகத்து இளைஞனுக்கு விஷ்ணுபுர காலச்சக்கரம் எப்படி புரியும் ?!




இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.