Sunday, January 3, 2016

மனிதம் மலரட்டும் !

மனிதநேயத்தில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். மனிதநேயம் ஒரு சமுத்திரம். சமுத்திரத்தின் சில துளிகள் மாசுபடுவதால் சமுத்திரம் என்றும் மாசடைந்துவிடாது.  - மகாத்மா காந்தி



" இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு சிசுவும் இறைவன் மனித இனத்தை கைவிடவில்லை 

என்பதற்கான சாட்சி "   - ரவீந்திரநாத் தாகூர்


காரைக்காலின் காமராஜர் சாலை... விடியலுக்கும் இரவுக்கும் இடையே மத்திய ரேகையாய் கவிழும் மாலை மறையும் பொழுது...

மொட்டையடிக்கப்பட்டு கோரையாய் முடி வளரத்தொடங்கிய தலை ! எந்த உணர்ச்சியும் இன்றி, இல்லாத இலக்கு ஒன்றை விட்டேத்தியாய் வெறிக்கும் பார்வை ! கால்முட்டிவரை நீண்ட, அழுக்கேறி கிழிந்த சட்டை !  தெருவிளக்குகள் இன்னும் எரியத்தொடங்காத மங்கிய வெளிச்சத்தில், தெருவோரத்தில் தள்ளாட்டமாய் நடக்கும் பெண். அவளுக்கு பின்னே,  அதே கோலத்தில்  மழலை மாறாத இரண்டு குழந்தைகள்.

அவ்வப்போது சாலையோர மண் பரப்பிலிருந்து அவளும் அவள் குழந்தைகளும் சாலையின் தார் பரப்பினுள் தள்ளாட்டமாய் நுழையும் போதெல்லாம் க்ரீச்சிட்டு, ஹாரன் அலறும் வாகனங்கள்... அவ்வாகன ஓட்டிகளின் வசவு வார்த்தைகள் !

தன்னை பின் தொடரும் பிள்ளைகள் பற்றியோ அல்லது தன்னை நோக்கி காற்றில் தெரிக்கும் வசவு வார்த்தைகள் பற்றியோ எந்த பிரக்ஜையும் இன்றி சாவகாசமாய் சாலையோரம் நகரும் சேறு படிந்த கால்கள் !

அவளுக்கு எதிர்புறம் விரைந்துகொண்டிருந்த நான், பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு அவரவர் அவசரத்துடன் பறக்கும் வாகனசாரிகளின் உக்கிர பார்வைகளுக்கிடையே வண்டியை திருப்பிக்கொண்டு வருவதற்குள் நீண்ட தூரம் நடந்து மூடப்பட்ட ஒரு கடை வாசலில் குழந்தைகளுடன் ஒதுங்கியிருந்தாள் ! நான் நீட்டிய பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கியவளின் கண்களில் மனிதனை மற்ற உயிரிகளிடமிருந்து வேறுபடுத்தும் ஆறாவது அறிவு சார்ந்த எந்த உணர்ச்சியும் இல்லை !

மனித இனத்தின் இருட்டு பக்கத்தை வெளிச்சமிடும் இவளைப்போன்ற பெண்கள் தேச எல்லைகள் தாண்டி உலகில் எங்கு வேண்டுமானாலும் தென்படுவார்கள் !


பொருளாதார ரீதியாய் மிகவும் பின் தங்கிய ஐரோப்பிய நாடு ருமேனியா. மற்ற ஐரோப்பிய நாடுகளின்  தெருவோரங்களில் ருமேனியா நாட்டினர்  பிச்சை கேட்பது  சகஜம் !

ஒருமுறை என் பணியிடத்துக்கு அருகேயிருந்த கடை வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்துகொண்டிருந்தாள் ஒரு ருமானிய மூதாட்டி. பிரெஞ்சு மனிதர் ஒருவர் அவளை நெருங்கினார்...

அவரது கையில் " பக்கேத் " எனப்படும் நீண்ட ரொட்டி.

தனக்கு கொடுக்க வருகிறார் என்ற ஆவலுடன் அவள் இரு கைகளையும் ஏந்தினாள்... அவளது உதடுகள் " மெர்ஸி... மெர்ஸி " என பிரெஞ்சு மொழியில் நன்றியை முனுமுனுத்தன...

" பிச்சை எடுக்க உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா ?... உடனடியாக இங்கிருந்து போ ! இல்லையெனில் போலீஸாரை அழைக்கவேண்டி வரும் ! "

நீண்ட ரொட்டியை கம்பினை போல அவளது முகத்துக்கு நேராக ஆட்டி மிரட்டிவிட்டு நகர்ந்தார் அந்த கணவான் !

உலகம் முழுமைக்கும் " நாகரீகமும், ஜனநாயகமும் " உபதேசிக்கும் பிரெஞ்சு தலைநகரத்தில் இப்போதெல்லாம் " தர்மம் " கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது ! மெட்ரோ ரயில்களில் ருமானிய தாய்மார்களுடன் அவர்களது பிஞ்சு குழந்தைகளும் கைகளை நீட்டுகின்றன ! அதிவேக சாலைகள் முடிவடையும் பாரீஸ் நகரின் எல்லை சிக்னல்களில் சிரியா அகதிகள் என்று எழுதிய அட்டைகளுடன் குடும்பங்கள் நிற்கின்றன !

" காப்21 " சுற்றுசூழல் மாநாட்டுக்கு வந்த நூற்றி நாற்பத்து சொச்சம் உலக தலைவர்கள் ஒருவரின் கண்களில் கூட இவர்கள் பட்டிருக்கமாட்டார்கள் !!!

டிக்கடி கண்ணில் படும் ஒரு பெண்மணி... தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்... உடல் சுகாதாரம் பேணுவது குறைந்தது... உடைகளில் அழுக்கேற ஆரம்பித்தது... இப்போது கடும் குளிரிலும் தெருவோரங்களில் தூங்குகிறார் !

றந்த யானைக்கு சக யானைகள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துகின்றன ! காகங்கள் கூட பறக்க முடியாமல் தவிக்கும் காக்கையை சுற்றி வட்டமிட்டு பறந்து, கரைந்து பாதுகாக்க முயற்சிக்கின்றன்...

கண்ணெதிரே மனதாலும் உடலாலும் சோர்ந்து, அணுஅணுவாய் உருக்குலையும் சக மனிதனுக்கு உதவ முடியாத மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியினால், நாகரீக வாழ்க்கையினால் என்ன பலன் ? சக உயிரிக்கு பாசக்கரம் நீட்ட முடியாதவன் நிச்சயப்படுத்த முடியாத வேற்று கிரக உயிர்களுக்கு நேசக்கரம் நீட்டி சமிக்ஜை அனுப்புகிறான் !

மனித குலத்தின் தலையாய குணமாய் திகழ வேண்டிய மனிதம், அவர்கள் அழியும் பேரிடர்களிலும், போர் இழப்புகளிலும் மட்டுமே சேற்றுச் செந்தாமரையாய் தலை தூக்குகிறது !

ஒரு கனிவான பார்வை, ஒரு தொடுதல், சில இதமான வார்த்தைகள், ஆத்மார்த்தமான அரவணைப்பு, சிற்சில உதவிகள் என்ற எளிமையான விளக்கத்துக்குள் அடங்கிவிடும் மனிதம் நாம் பெருமையுடன் பாதுகாக்கும் ஐ போனை விடவும் விலை குறைந்ததுதான் ! நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் !

கிறிஸ்துமஸ் தினத்தன்று வேலை முடித்து வேகமாக கிளம்பிக்கொண்டிருந்தாள் என்னுடன் பணிபுரியும் ஒரு பெண்...

" குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட போகும் அவசரமா ?!... "

" இந்த வருடம் பிள்ளையை என் கணவனுடன் அவனது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்... நானும் என் தோழிகளும் இன்று இரவு முழுவதும் நகரின் தெருக்களில் உறங்குபவர்களுக்கு இலவச உணவு வழங்க போகிறோம் ! "

எனது பதிலுக்கு காத்திருக்காமல் சட்டென வெளியேறிவிட்டாள் !

இந்த பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பெண்ணை போலவே இவளுக்கும் தேச எல்லைகள் கிடையாது... சென்னை மாநகரை அரவணைத்த அதே மனிதம்தான் பாரீஸ் நகரத்தின் தெருவாசிகளுக்கும் உணவளிக்கிறது !

இப்புத்தாண்டில் மனிதம் தழைக்க வேண்டுவோம் ! வலைநட்புகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Monday, December 14, 2015

சென்னை நலமா ?

" நான் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது... "

எனது நல விசாரிப்புக்கு நண்பர் காரிகனின் பதில் இது !

இதனைப் படித்ததும் எனக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த விமான விபத்து ஒன்றின் போது பத்திரிக்கைகளில் பார்த்த, அந்த விமானத்தின் சிதறிய பாகங்களுக்கிடையே பாதிக் கருகிய திருமணப் பத்திரிக்கையும் ஒரு கரடி பொம்மையும் கிடக்கும் புகைப்படம் ஒன்றும் , சுனாமி பேரிடரின் போது கடற்கரையில் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தை ஒரு பெரிய கடல் அலைக்குப் பிறகு மாயமாய் மறையும் காட்சியும் நினைவுக்கு வந்தன ...

விபத்தையும் அழிவையும் உணர்த்தக் கூக்குரல்களையும் சிதறிய உடல்களையும்தான் காட்சி படுத்த வேண்டும் என்பதில்லை. கருகிய திருமணப் பத்திரிக்கையும், தனியே கிடக்கும் ஒரு கரடி பொம்மையும் கூடப் பார்ப்பவருக்கு முழுப் பாதிப்பையும் உணர்த்தி அவரது ஆன்மாவை உலுக்கிவிட முடியும்.

காரிகனின் பதிலில் சென்னை மக்களின் உணர்வு முழுவதும் அடங்கி உள்ளதாகத் தோன்றுகிறது.

தலைநகர் என்பதால் சென்னையைப் பிரதானப்படுத்திக் குறிப்பிட்டாலும் தமிழ்நாடு, புதுவை மாநிலம் என இந்த ஊழி மழை ஏற்படுத்திய பாதிப்பும் இழப்பும் வரலாறு காணாதது. உலகின் ஆகப் பெரும் தேசங்கள் ஒன்றின் நான்காவது முக்கிய நகரம் தனித்தீவாய் துண்டிக்கப்பட்டு ஸ்தம்பித்து நிற்பதைப் பேசாத நாடுகளில்லை !

புயலும், பெருமழையும், பூகம்பமும் இயற்கையின் சீற்றங்கள். மனிதனின் இத்தனை விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், வளர்ச்சிகளுக்குப் பிறகும் அவை ஏற்படுத்த போகும் முதல்கட்ட பாதிப்பை துல்லியமாக மதிப்பிட அவனிடம் எந்த அளவுகோலும் கிடையாது என்பது நிதர்சனமான உண்மைதான் !

2011ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமி பேரிடரில் பாதிப்புக்குள்ளான புக்கூஷிமா அணு உலையின் கதிரியக்க விபத்தை இன்றுவரை கட்டுக்குள் கொண்டுவர இயலவில்லை ! அதே சுனாமியின்போது கடல் அலையினால் தூக்கி எறியப்பட்ட பயணிகள் விமானம் ஒன்று இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களுக்கு இடையே தொங்கி கொண்டிருந்த காட்சியைக் கண்டவர்களுக்கு இயற்கையின் முன்னால் மனிதனும் அவனது கண்டுபிடிப்புகளும் எத்தனை பலவீனம் என்பது புரியும் !

ஆனால் இதையெல்லாம் உதாரணமாகக் காட்டி சென்னையின் அவலத்தை நியாயப்படுத்தலாமா ?...

சென்னை ஒரு கடற்கரை நகரம். நகருக்கு நடுவே கூவம் நதி அமைந்த வசிப்பிடம். இயற்கையின் நியதிப்படி இதுபோன்ற நகரங்களுக்கு நீரினால் வரும் ஆபத்து கடல் ஏறுவதால் மட்டுமே நிகழ முடியும். மாற்றாய் மழைநீர் வேகமாய் வெளியேறி கடலில் கலக்க ஏதுவாக அமைந்த பகுதி !

சென்னை அமிழ்ந்திருப்பது வெள்ளத்தில் அல்ல... மழை நீர்த் தேக்கத்தில் ! ஆமாம் ! இத்தனை இழப்புக்கும் காரணம் மழைநீர் வேகமாக ஓடி வடிவதற்கான வழிகள் அடைக்கப்பட்டதும், புதிய கழிவு பாதைகள் தொலைநோக்கு பார்வையுடன் அமைக்கப்படாததும்தான் !

சென்னை போன்ற பழம்நகரத்தில் அமைந்த வடிகால்கள் எனப்படும் வாய்க்கால்கள் பல நூறுஆண்டுகள் படிப்படியாய் அமைந்தவை. ஒவ்வொரு மழையின் போதும் நீர்ப்பெருக்கு பூமியை ஊடறுத்து நதி மற்றும் கடல் நோக்கி ஓடி இயற்கையாய் அமைந்த வடிகால்கள் ஒருவகை என்றால் சென்னையின் ஆதி மனிதர்கள் அவ்வப்போது தோண்டி ஏற்படுத்திவைத்த வடிகால்கள் மறுவகை.

எத்தனையோ நூறு ஆண்டுகள், காலப்போக்கில் அமைந்த இந்த வடிகால்களையும் வாய்க்கால்களையும் முப்பதே ஆண்டுகளில் திட்டமிட்டு தூர்த்து, மேடு பள்ளம் பார்க்காமல் வீட்டுமனைகளாய் விற்பனை செய்ததின் விளைவை இன்று அனுபவிக்கின்றோம் ! மக்களின் அத்யாவசிய அடிப்படை தேவைகள், பாதுகாப்பு, பேரிடர் நிவாரணம் போன்றவற்றில் எந்த அக்கறையும் இல்லாத, கையாலாகாத, சுயநல அரசியல்வாதிகளை மாற்றி மாற்றி ஆளவிட்டதின் பலன் இது !

மழையினால் மக்கள் படும் இன்னல்களையும், நேர்ந்த இழப்புகளையும் மாற்றாந்தாய் கண்ணோட்டத்தில் பார்க்கும் மத்திய அரசு ! அயல்நாடுகளில் நிகழும் இயற்கை பேரிடர்களுக்கு வல்லரசு கனவுடன் மில்லியன் டாலர் கணக்கில் கொடுக்கும் இந்திய அரசாங்கம் தன் சொந்த நாட்டு அவலத்துக்கு என்ன செய்யத் திட்டம் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை ! தென்னாட்டில் எல்லாம் சுகம் என்பதாய் செய்தி வாசிக்கும் வடநாட்டு ஊடகங்கள் !

மாநில அரசு முற்றிலுமே மழை நீரில் மறைந்துவிட்டதோ எனப் பயப்படும்படியான அரசு செயல்பாடுகள் ! யாருமே வரவில்லை என மக்கள் அலறும் எதிர்க்கட்சிகளின் தொலைக்காட்சி தகவல்கள் ! மக்கள் வரிப்பணத்தில் கொடுக்கும் ஏனோதானோ நிவாரணப் பொருட்களில் கூட முதல்வர் படம் ஒட்டி அரசியல் ஆதாயம் தேடும் ஆளுங்கட்சி செய்திகள் ! முப்பது ரூபாய் பாலை ஆயிரம் ரூபாய்க்கு விற்கும் வியாபாரிகள் ! அனைத்தையும் இழந்து தவிப்பவனின் அரைஞாண் கயிற்றையும் உருவிக்கொண்டு ஓடும் கொள்ளையர்கள் !

இத்தனை அவலங்களையும்தாண்டி தெரியும் மனித நேயம் ! வழக்கம் போலவே சக மனிதனின் துயர்துடைத்து தோள் கொடுக்கும் சாமானிய மக்கள் ! தங்கள் ஜாதி மதம் மறந்து இரவு பகல் பாராமல், உயிரையும் பணையம் வைத்து நிவாரணப் பணிகளிலும், துயர்துடைப்புகளிலும் தொடர்ந்து ஈடுபடும் தன்னார்வலர்கள் !

இந்தத் தேசத்தின் முரண்கள் அனைத்தும் மனதை உறுத்துகின்றன !

மழையினால் பாதித்த மக்களின் கண்ணீர், சுனாமி அலையாய் எழுந்து, அறுபது ஆண்டுகளாக மக்களாட்சி என்ற பெயரில் மானங்கெட்ட பிழைப்பு பிழைக்கும் அரசியல்வாதிகளையும், அவர்களின் விரல் ஆட்டலுக்கு வளைந்தே அரசு இயந்திரத்தை அவலமாக்கிய அதிகாரிகளையும் அடித்துச் சுருட்டி வீசி விடாதா என மனம் ஏங்குகிறது !

சுனாமி பாதிப்புக்கு பிறகு எனது பூர்வீகமான காரைக்காலுக்குச் சென்றிருந்தேன்... அந்தப் பெரும் துயரம் நிகழ்ந்து ஒரு வருடம் கூட முடிந்திருக்கவில்லை...

புதிதாய் முளைத்திருந்த ஆடியோ ரெக்கார்டிங் செண்டரின் பெயர் " சுனாமி ரெக்கார்டிங் செண்டர் " என்றிருந்தது !

மறதிதான் நம் தேசிய குணமாயிற்றே !!!

சென்னை மிக விரைவில் நலம் பெறும்.





பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Saturday, November 7, 2015

க்ளிஷே !

மீபத்தில் இரண்டு பாகிஸ்த்தானியர்களைச் சந்திக்க நேர்ந்தது...

அறிமுகத்தின் போது ஒருவர் தன் பெயர் வாசிம் எனக் கூறினார்.

" வாசிம் அக்ரம் போலவா ? " என்றேன் !

அடுத்தவரின் பெயர் முஷாரப்.

என் வாய் சும்மா இருக்கவில்லை,

" பர்வேஸ் முஷாரப் போல் ! " எனத் திருவாய் மலர்ந்தேன் !

சட்டென என்னைப் பார்த்த வாசிம், ஜாவித்திடம் திரும்பி உருது மொழியில் பேசி சிரித்தார் ...

ரு மொழியின் சம்பாஷனையைப் புரிந்துக்கொள்ள அந்த மொழியை அறிந்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒருவர் பேசும் த்வணி, குரலின் ஏற்ற இறக்கம் மற்றும் முக, உடல் பாவனைகளைக் கொண்டே அவர் குறிப்பிடுவது பாராட்டா, கேலியா அல்லது குட்டலா என்பதைப் புரிந்துகொண்டுவிடலாம் !

இதற்கு மிகச் சரியான " பன்னாட்டு வர்த்தக உதாரணமாக " உலகெங்கும் பரவியிருக்கும் அமெரிக்க மக்டொனால்ட் ரெஸ்ட்டாரெண்ட் ஊழியர்களின் அங்க அசைவுகளைக் குறிப்பிடலாம். கைகளை ஆட்டி, கண்களை உருட்டி பேசியே நமக்குத் தேவை டீயா, கோக்கா அல்லது பிரெஞ்சு பிரையா, சாண்ட்விச்சா எனத் தெரிந்துக்கொள்வார்கள் ! உலகெங்கும் ஒரே தரம், ஒரே உணவு என்பதையும் தாண்டி இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு ஒரே உடல் மொழியும் காரணம் !

சரி, இந்தப் பதிவின் நோக்கம் பன்னாட்டு நிறுவனங்களின் வெற்றி பற்றிய ஜல்லியடி கிடையாது ! பாகிஸ்த்தானிய நண்பர்களிடம் செல்வோம்...

வாசிம் சிரிப்பதை கண்டதும்தான் நான் பேசிய அபத்தம் புரிந்தது ! நான் வெறுக்கும் க்ளிஷேவிடம் நானே சிக்கிக்கொண்ட அபத்தம் !

" இந்த இந்தியர்களுக்கு வாசிம் அக்ரமையும், பர்வேஸ் முஷாரப்பையும் விட்டால் பாகிஸ்த்தான் பற்றி வேறொன்றும் தெரியாது ! " என ஆவர் கேலி செய்தது எனக்கு நன்றாகவே புரிந்தது !


க்ளிஷே என்ற பிரெஞ்சு மூல வார்த்தையே அங்கிலத்திலும் உபயோகத்தில் உள்ளது.ஸ்டீரியோடைப் என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் வார்த்தைக்கு,

" ஒரு தனிமனிதரை பற்றியோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றியோ மற்றொரு மனிதர் அல்லது சமூகம் கொண்டிருக்கும், முன்கூட்டியே தீர்மானித்த, மெரும்பாலும் தவறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட கண்ணோட்டம் அல்லது தீர்மானம் ! "

என அர்த்தம் கொடுக்கலாம்.

நாம் ஒரு சாராரை பற்றி அறிந்த ஒருசில தகவல்களை அவர்களின் ஒட்டுமொத்த குணமாகவோ அல்லது அடையாளமாகவோ பாவிப்பதும் க்ளிஷே வகையைச் சாரும் !


ம்பதாவது இந்திய சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது வைரமுத்து ஆனந்தவிகடனில் எழுதிய ஒரு கவிதையில்,

" ஒரே ஒரு தாஜ்மகால்... ஒரு ஐஸ்வர்யா ராய் ! "

எனக் குறிப்பிட்டிருப்பார்.

தாவணி, சுடிதார் மற்றும் அம்மாக்கள் தயாரித்துக் கொடுக்கும் வாசனை பொடியுடன் தேங்கியிருந்த (!) இந்திய இளம்பெண்களிடம் கடை விரிக்க விரும்பிய லொரியால் போன்ற பன்னாட்டு அழகு சாதன நிறுவனங்கள் இந்திய சந்தைக்காக விரும்பி தேர்ந்தெடுத்த முகம் ஐஸ்வர்யா ராய் ! அவரின் உலக அழகி தேர்வு, நூறுகோடியை தாண்டிய நிலையிலும் ஒரு ஒலிம்பிக் தங்க பதக்கம் வாங்கவே தடுமாறும் தேசத்தின் எழுச்சியாகி போனது !

சரி, இதில் க்ளிஷே எங்கே வருகிறது ?

ஐஸ்வர்யா ராய் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு, பிரான்ஸின் கான்ஸ் நகரில் நடக்கும் புகழ்பெற்ற உலகத் திரைப்பட விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். பிரெஞ்சு நாளிதழ்கள் தொடங்கி அனைத்து பத்திரிக்கைகளிலும் நம் உலக அழகி சிரித்தார். அந்தக் காலகட்டத்தில் டயானாவுக்கு அடுத்தப்படியான புகழ் வெளிச்சம் ஐஸ்வர்யாவுக்கு ஐரோப்பாவில் ஒளிர்ந்தது என்றால் அது மிகையாகாது !

காலம் மிக வேகமாக ஓடியது ! நம்மூர் பாடலாசியர்கள் " பிப்டி கேஜி தாஜ்மஹால் " தொடங்கி " குளித்த நீரை தீர்த்தமாகக் குடிப்பது " வரை எழுதி தீர்த்தார்கள் ! ஐஸ்வர்யா ராய் திருமணம் முடிந்து குழந்தையும் பெற்று ஆண்ட்டியாகிவிட்டார் ! இதே காலகட்டத்தில் இந்திய சினிமாவிலும் நிறைய மாற்றங்கள் நடந்து, எங்களாலும் தரமான படங்கள் தர இயலும் எனப் பேசிக்கொள்ளும்படியான படங்களும் வந்துள்ளன. அவற்றில் சில கான்ஸ் பட விழாவிலும் திரையிடப்பட்டுள்ளன...

ஆனாலும் இன்றுவரை கான்ஸ் நகரின் இந்திய சிறப்பு விருந்தாளி நம்ம உலக அழகிதான் ! அன்று தலைப்புச் செய்தியாக இருந்த ஐஸ்வர்யாவின் வருகை இப்போதெல்லாம் கடைசிப் பக்கத்தில் ஒரு வரிச் செய்தியாகச் சுருங்கிவிட்டது !

இதுதான் க்ளிஷே !



வ்வொரு நாட்டினர் மற்றும் அவர்களது கலாச்சரம் பற்றிய க்ளிஷே கண்ணோட்டம் உலகெங்கும் பரவியுள்ளது.

மேலை நாட்டினரின் க்ளிஷே கண்ணோட்டத்துக்குச் சரியான தீனி இந்திய தேசம் ! இன்றைய அதிவிரைவு தகவல் பரிமாற்ற யுகத்திலும் இந்தியா என்றாலே ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய ஜங்கிள் புக் காலத்துத் தேசத்தைக் கற்பனை செய்யும் மேலைநாட்டினர் இன்றும் உள்ளனர் !

யானையில் ஏறி சந்தைக்குச் செல்லும் மனிதர்கள், மகுடி ஊதி கயிற்றைப் பாம்பாகப் படமெடுக்கசெய்யும் பக்கீர், பசுமாட்டைக் காணும் போதெல்லாம் விழுந்து கும்பிடும் மனிதர்கள் , என்பன தொடங்கி, இந்துக்களும் முஸ்லீம்களும் குழு குழுவாகப் பிரிந்து சதா சர்வகாலமும் சண்டையிட்டுக்கொண்டிருப்பார்கள், தலைநகரின் பிரதான வீதிகளில் கூடஆடுகள், எருமைகள் தொடங்கிப் பன்றி கூட்டங்கள் வரை குறுக்கே புகுந்து போக்குவரத்துத் தடைபடும், இமயம் தொடங்கிக் குமரிவரை இந்தியாவின் ஒரே மொழி ஹிந்தி என்பன வரை இந்தியா பற்றிய சராசரி மேலைநாட்டு மனிதனின் கற்பனை க்ளிஷேக்கள் ஏராளம் !

மேலைநாட்டினருக்கு தெரிந்த ஒரே இந்திய சினிமா உலகம் பாலிவுட் ஒன்றுதான் ! அதற்கு ஈடான கோலிவுட், டோலிவுட் என ஒரு டஜன் மொழிகள் சார்ந்த சினிமாக்கள் இருப்பதும் அங்கிருந்தும் அவ்வப்போது தரமான படங்கள் வருவதெல்லாம் தெரியாது !

" பாலிவுட்டின் சூப்பர் சாதனை படமான பாகுபலியில் ஏன் ஷாருக்கான் நடிக்கவில்லை ?! " எனக்கேட்டார் ஒரு பிரெஞ்சு அன்பர் !

ராஜ்கபூருக்கு பிறகு மேலைநாட்டினர் முதல் ஆப்ரிக்கத் தேசம் வரை தெரிந்த ஒரே இந்திய திரைசட்சத்திரம் ஷாருக்கான் தான் ! அவர்களைப் பொறுத்தவரை ஆல் இந்தியா சூப்பர் ஸ்டார், ஆஸ்கார் நாயகன் எல்லாமே ஷாருக் தான் !

மேலைநாட்டவரை விட்டுத்தள்ளுங்கள் ! நமது நாட்டிலேயே வடக்கு பற்றித் தெற்கும் தெற்கு பற்றி வடக்கும் கொண்டிருக்கும் க்ளிஷேக்கள் எத்தனை ?...

தென்னிந்தியா என்றாலே மதராசி, இட்லி, தோசா ( தோசை இல்லை ! ), சாம்பார், சந்தனம், தங்கநகை, லுங்கி, ரஜினிகாந்த் ! இந்த க்ளிஷேயின் முழுநீள திரைப்படமாய் வந்த சென்னை எக்ஸ்பிரஸை நாமும் சேர்ந்துதானே ஹிட்டாக்கினோம் ?!

மதராசி என்பதற்கு வேண்டுமானால் ஒரு வரலாற்று நியாயத்தை எடுத்து விடலாம்... மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் ஒன்றிணைந்த சென்னை மாகாணமாகத் தென்னிந்தியா இருந்ததால் ஒரேடியாக மதராசி ! ஆனால் வடநாட்டவர்கள் அதற்குப் பிறகு பொது அறிவு " அப்டேட் " செய்ய மறந்துவிட்டார்கள் ! பாவம் ... இட்லி தோசா பவன்களெல்லாம் பீட்சா , பர்கர் சென்ட்டராக மாறியதும் அவர்களுக்குத் தெரியாது ! சில சினிமா டான்ஸ் மாஸ்டர்கள் ஆரம்பித்துவைத்த லுங்கி டான்ஸ் மிகக் குறைந்த காலகட்டத்தில் பரதநாட்டியத்தையும் தாண்டி தமிழ்நாட்டின் கலை அடையாளமாக மாறிவிட்டது தமிழனுக்குப் பெருமை தானே ?!

தங்க நகை மோகம் என்ற உண்மை மட்டும் எப்படி இந்த க்ளிஷேவில் சேர்ந்தது என்று புரியவில்லை !


நம்மவர்களும் அவர்களுக்குச் சளைத்தவர்களா என்ன ?!...

வட இந்தியா என்றாலே இந்தி மட்டும்தான் என்பது தொடங்கி, வெள்ளைத்தோல் வட இந்தியர்களெல்லாம் சேட்டுக்கள், ராஜஸ்த்தான் எங்கும் ஒட்டகங்கள் உலாவும், பஞ்சாபிகள் " பல்லே... பல்லே " என ஆடிக்கொண்டே இருப்பார்கள் என எத்தனை க்ளிஷே கண்ணொட்டம் ?!

மது சினிமா உலகம் இந்த க்ளிஷே வளர்ச்சிக்காக ஆற்றும் பங்கினை பக்கம் பக்கமாக எழுதலாம் !

சினிமா கோயில் குருக்கள், " சொல்லுங்கோ ! என்ன நக்ஷத்திரம் ?... " என்ற ஒரே வரியைதான் பல்லாண்டுகாலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்...

எனது பள்ளி நண்பன் ஒருவன் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றின் தலமை குருக்கள். " வாடா மாப்ள ! " எனச் சாதாரணமாகத்தான் பேசுவான் !

சினிமா இஸ்லாமியர்கள் என்றால் நீண்ட தாடியும் கணுக்காலுக்கு மேலே உயர்த்திக் கட்டிய லுங்கியுமாக, முட்டி தொடும் அங்கியுடன் சதா பிரியாணியைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்கள் அல்லது அடிக்கொருத்தரம் " அரே அல்லா ! " என்பார்கள்...

சகஜ வாழ்க்கையில் பலரின் பெயரை வைத்துதான் மதத்தை ஊகிக்க முடியும். வாரத்தில் பல நாட்கள் சாம்பாரை விரும்பும் நிறைய இஸ்லாமியர்களை எனக்குத் தெரியும் !

சினிமா பாதிரியார் எந்நேரமும் பைபிளை நெஞ்சில் அணைத்தப்படி அடிக்கடி காற்றில் சிலுவை வரைவார்...

எல் கே ஜி தொடங்கி மேல்நிலை கல்விவரை நான் பயின்றது அனைத்துமே கிறிஸ்த்துவக் கல்வி மையங்களில். நான் பயின்ற பள்ளியின் முதல்வரான பாதிரியார் புல்லட்டில் அதிவேகமாகப் பறப்பார். பூஜை நேரம் தவிர மற்ற சமயங்களில் எங்கள் அரட்டையில் கூடக் கலந்துக்கொள்வார் !

" அரே... நம்பிள்கிட்டே ஏமாத்தறான்... " என்றபடி காமெடியனை துரத்தும் தமிழ் சினிமா சேட்டு ஒன்று வட்டிக்கடை வைத்திருப்பார் அல்லது நகைக்கடை வைத்து கள்ள நகையை வாங்குவார் !

என்னுடன் படித்த ஒரு சேட்டுபையனின் அப்பா ஏதோ அலுவலகத்தில் குமாஸ்த்தாவாகப் பணிபுரிந்தார். சுத்தமான தமிழில், எங்களைவிடவும் சரளமாகக் கெட்டவார்த்தைகள் பேசுவான் அந்தப் பையன் !

விதிவிலக்காக அரசியல்வாதிகள் பற்றிய சினிமா க்ளிஷே மட்டும் உண்மையுடன் ஒத்துப்போவது ஆச்சரியம் !

கார்ட்டூன் கோடுகளின் கற்பனையையும்தாண்டி விதம் விதமாக வளைந்து நெளிந்து தலைவியின் காலில் விழுவது, தலைவருக்கு வணக்கம் வைப்பது தொடங்கி ப்ளக்ஸ் போர்டு பிரதாபங்களாகட்டும் அல்லது விஞ்ஞான ரீதியிலான ஊழல்களாகட்டும், ஸ்டீரியோடைப் தொடங்கிக் கார்ட்டுன்கள்வரை எதுவுமே நம் அரசியல்வாதிகளின் உண்மையான அலும்புகளை நெருங்க முடியாது !

இன்னும் அழுக்கான உடையணிந்து ஊருக்கு வெளியே வாழும் பண்ணையாட்கள், வில்லன் வீட்டுக்கு லஞ்சம் வாங்க சீருடையுடன் வரும் போலீஸ், கறுப்பான பிக்பாக்கெட், " ஊய் " என மார்க்கமாக உறுமும் தொண்டரடிப்பொடி , அவலட்சணத்தின் அடையாளம் கறுப்பு, சில சமயம் சிரிக்க வைத்து பல சமயம் முகம் சுழிக்கச் செய்யும் " முருங்கைக்காய் சமாச்சரங்கள் " எனச் சினிமா க்ளிஷேக்களின் பட்டியல் மிக மிக நீளம் !

திரிஷ்யம் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது,

" இந்த மோகன்லால் பெரிய ஆளுப்பா ! " என்றார் நண்பர்...

" ஆமாம்... நம்ம கமல் மாதிரி அந்தக்கரை ஆஸ்கார் நாயகனாச்சே ! " என்றேன்.

" அட, நான் நடிப்பை சொல்லலீங்க... லால்ன்னா வடநாட்டுக்காரந்தானே ?... அங்கேருந்து வந்து கேரளாவுல சூப்பர் ஸ்டார இருக்காரே ! " என்றார் !

ந்த க்ளிஷே விசயத்தில் ஹாலிவுட்காரர்களும் நம்மவர்களுக்குச் சற்றும் சளைத்தவர்கள் கிடையாது !

படங்களில் பாரீஸ் நகர் என்றால் பின்புலத்தில் ஈபிள் டவர் கட்டாயம் ! பாரீஸ்வாசிகள் ஒரு கையில் குடையும் மற்றொரு கையில் " பக்கேத் " எனப்படும் நீண்ட பன்ரொட்டியுடனும் ஓவர் கோட்டுடன் நடந்து கொண்டிருப்பார்கள் !... பிரெஞ்சுக்காரர்கள் ஒயினையும் சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டிகளையும் விரும்பி சாப்பிடுபவர்கள் என்பதால், அவர்களைக் குறிப்பட " புளித்த ஒயினும் நாறும் பாலடை கட்டியும் ! " என்ற சொலவடை மேலைநாடுகளில் பிரபலம் !இங்கிலாந்தின் லண்டன் என்றால் டவுனிங் தெருவின் பிரதமர் இல்லத்தின் வாயிலை காவல் காக்கும் நீண்ட தொப்பிக் காவலர் ஒரு பிரேமிலாவது இடம் பெற வேண்டும் ! வெள்ளை மாளிகையையும், அமெரிக்க தேசிய கொடி பின்புலத்தில் உரையாற்றும் ஜனாதிபதியையும் காட்டாவிட்டால் அமெரிக்கக் காட்சி நிறைவு பெறாது !

ரு சமூகத்தின் குணம், நடை, உடை, பாவனைகள் பற்றிய ஸ்டீரியோடைப் மதிப்பீடுகளை ஒரு புன்முறுவலுடனோ அல்லது ஒரு முகசுளிப்புடனோ புறந்தள்ளிவிடலாம் ஆனால் ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழு இழைக்கும் குற்றத்தினால் அவர்கள் சார்ந்த சமூகத்தின் மீது படியும் ஸ்டீரியோடைப் அபிப்ராயம் அந்தச் சமூகத்துக்கு ஏற்படுத்தும் இன்னல்கள் மிகக் கொடுமையானது.

இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது சீக்கிய சமூகத்தின் மீது படிந்த வெறுப்பு, ராஜிவ் படுகொலையினால் ஒட்டுமொத்த ஈழத்தமிழ் சமூகத்தின் மீது படிந்த சந்தேகக் கண்ணோட்டம், அடிப்படைவாத குழுக்களின் தீவிரவாதத்தினால் இஸ்லாமியர்கள் பற்றிய அபிப்ராயம் என நிறையச் சொல்லலாம் !

" ஸ்டீரியோடைப் " என்ற சொல்லுக்கு ஏற்ப அதீதமாகப் பெரிதாக்கி சொல்லப்படும் இந்த க்ளிஷேக்கள் சில சமயங்களில் உண்மைக்கு மிக நெருக்காமாகிவிடுவதும் உண்டு...

இந்திய தேர்தல், கும்பமேளா போன்ற நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் எனப் பிரான்ஸ் தலைப்புச் செய்தியில் இந்தியா இடம் பிடிக்கவெனச் சில நிகழ்வுகள் உண்டு ! இவற்றுடன் இரு நாடுகள் சமந்தப்பட்ட ராஜாங்க விஜயம், பெரிய அளவிலான ஆயுத ஒப்பத்தம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம் !

சமீபகாலமாக மேல்சொன்னவைகளுடன் மற்றொரு " நிகழ்வுக்காகவும் " இந்தியா அடிக்கடி பேசப்படுகிறது...

அந்த நிகழ்வு " பாலியல் வன்முறை ! "

மேலைநாட்டினர் அனைத்தையும் ஜோக்காக்கிவிடுவார்கள். அவர்களின் கேலிச்சித்திரங்களுக்கு எல்லையே கிடையாது. புனிதமாக மதிக்கும் மதம் சார்ந்த நம்பிக்கைகள்கூட இந்தக் கேலியிலிருந்து மீள முடியாது ! எதையும் கேலி, கேள்விக்கு உட்படுத்தும் குணம் அவர்களுடையது !

அண்மையில் நான் கேட்ட ஜோக் ஒன்று...

" விடுமுறையைக் கழிக்க வேண்டிய நாட்டினை ஐரோப்பிய பெண்கள் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்... ஆப்கானிஸ்த்தான், பாகிஸ்த்தான் தொடங்கி ஆப்ரிக்க நாடுகள் வரை அடிப்படைவாதிகள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்... அவர்களிடம் சிக்கினால் பனையக்கைதிகளாகி தலையை இழக்க நேரிடும் ! அமெரிக்கா சென்றால் எந்தக் கல்லூரி மாணவனாவது மெஷின் கன் மூலம் சல்லடையாக்கிவிடுவான்.... பேசாமல் இந்தியா செல்லலாம்... பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாலும் உயிராவது மிஞ்சும் ! "

மிகக் கொடூரமான க்ளிஷே !... ஆனால் இந்தியாவில் அடிக்கடி நிகழும் அந்த அவலத்தை நினைக்கும்போது தலைகுணிவு மட்டுமே மிஞ்சுகிறது !



 ( ந்தியா பற்றிய ஒரு முக்கியமான க்ளிஷேயை இந்த பதிவில் குறிப்பிடவில்லை ! அதனை சரியாக சொல்லும் அன்பர்களுக்கு அந்த க்ளிஷே பற்றிய எனது அடுத்த பதிவு மின்னஞ்சலில் " இலவசமாக " அனுப்பப்படும் ! )




பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.