Saturday, January 14, 2017

ஜல்லிக்கட்டு



 " னி உலகின் ஒவ்வொரு பிரபலத்துக்கும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே கிடைக்கும் ! " என்ற வரி தனி மனிதர்களுக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, தமிழ்நாட்டு அரசியல் சூழலுக்கு முற்றும் பொருந்தும் !

கச்சத்தீவு, ஈழத்தமிழர் பிரச்சனை, நதிநீர் பங்கீடு போன்றவைகளோடு இப்போது ஜல்லிக்கட்டும் சேர்ந்துவிட்டது ! சேது சமுத்திர திட்டத்தின் இன்றைய நிலை என்ன என்பது யாருக்கும் தெரியாது ! ரூபாய் நோட்டுப் பிரச்சனை தீர்ந்ததா எனத் தெரியாது... ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஐயப்பாடுகள் மறக்கப்படத் தொடங்கிவிட்டன... சென்னையைத் தாக்கிய இரண்டாவது புயலைப்பற்றிப் பேசவே இல்லை ! வரலாறு காணாத தலைமை செயலக வருமானவரி சோதனைக்கான காரணங்கள் மற்றும் அதன் விபரங்கள் அடுத்த ஒரு " அரசியல் மிரட்டலுக்கான " தேவை வரும் வரை வெளியிடப்படமாட்டாது !...

அதற்குள் அடுத்த ஐந்து நிமிடத்தை ஜல்லிக்கட்டுக்காகத் தமிழக அரசியல்வாதிகள் ஒதுக்கிவிட்டார்கள் !

தமிழ்நாட்டின் அனைத்து பிரபலங்களும், முக்கியமாய்த் தமிழனின் கலாச்சாரம் தள்ளாடுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றான சினிமாவின் பிரபலங்களும் வரிந்துகட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள் ! பீப் பாடலின் மூலம் " தமிழர் கலாச்சாரம் " பரப்பிய நடிகர் கூட ஜல்லிக்கட்டு தடையைக் கண்டித்துக் கூவுகிறார் ! இவர்களுக்கெல்லாம் மேடை அளிக்கும் தமிழக ஊடகங்களும் அதன் மக்களைப் போலவே மறக்க பழகிவிட்டன ! மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி, எதிர்கட்சிதான் காரணம், ஆளும் கட்சிதான் காரணம் என வழக்கம் போலவே ஒருவருக்கொருவர் உதைத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள் !

உணர்ச்சிவசப்பட்டுப் பேசி பேசியே பாழாய் போன சமூகம் நாம் என்பதை மீன்டும் ஒருமுறை
நிருபிக்கப் போகிறோம் !

நான் இந்தக் கட்டுரையைப் பதிவேற்றிய வேலையில் தமிழ்நாட்டில் " தன் எதிர்காலம் " கருதி மத்திய அரசு ஏதாவது அவசர சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை அனுமதித்திருக்கலாம் அல்லது ஜல்லிக்கட்டு நடத்தப்படாமலேயே தமிழர் திருநாள் முடிந்திருக்கலாம்... அத்துடன் ஜல்லிக்கட்டுக்கான ஐந்து நிமிடம் முடிந்துவிடும்...
அடுத்தப் பொங்கல் வரை !

ளவட்டக்கல், சிலம்பம் போன்ற எத்தனையோ பழந்தமிழ் வீரவிளையாட்டுகள் மறக்கப்பட்டும் மறைந்துக்கொண்டும் இருக்கும் வேலையில் ஜல்லிக்கட்டை மட்டும் தமிழனின் தன்மானம், வீரத்தின் அடையாளம் என்றெல்லாம் அதிகம் பேசி, ஆராவாரப்படுத்துவதற்குச் சுயநல அரசியலே காரணம். மேலும் வீரம் என்பதின் அடையாளம் காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப மாறக்கூடியது. பழந்தமிழர் போற்றிய அறம், அன்பு, ஈகையுடன்
 " பிறன்மனை நோக்கா பேராண்மையுடன் " வாழ்ந்து கட்டுவதே இன்றைய சூழலில் வீரம் என நான் நினைக்கிறேன்... இவையிரண்டும் என் தனிப்பட்ட கருத்துகள் !

சரி, இனி போராட்டத்துக்கு வருவோம்...

ல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை ! அதனை நடத்துவது நடத்தாதது பற்றித் தமிழ் சமூகம்தான் தீர்மானிக்கவேண்டும் என்பதிலும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது ! ஆனால் ஜல்லிக்கட்டை காக்கிறோம் எனத் தங்களின் மார்க்கெட்டை தக்கவைத்துக்கொள்ளச் சினிமா நடிகர்களும், தங்களின் சுயநல அரசியலுக்காக அரசியல்வாதிகளும் அடித்துபிடித்து ஓடி வருவதுதான் கொடுமை ! தமிழ்நாடு சரியான தலைமை இன்றி எடுப்பார்கைப்பிள்ளையாகக் கிடப்பதுதான் வேதனை !

சரி, அப்படியானால் இந்தப் போராட்டத்தை யார் முன்னெடுக்க வேண்டும் ?

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கெனத் தமிழ்நாடு தழுவிய ஒரு தனி அமைப்பு அல்லது சம்மேளனம் உண்டா எனத் தெரியவில்லை... அப்படி இருக்கும் பட்சத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு அவர்களுக்கே உண்டு ! அரசியல்வாதிகளும் இன்ன பிறரும் அவர்களுக்கு ஆதரவாக இயங்கலாம்... அப்படி ஒரு சம்மேளனம் இல்லாவிட்டால் அதை ஏற்படுத்தவேண்டிய அவசியத்தைச் சற்று விரிவாகவே பார்ப்போம்...

மிருகங்களை மனிதன் அடக்கும் வீரவிளையாட்டுகள் உலகின் அனைத்து ஆதி நாகரீகங்களிலும் உண்டு. இவ்விளையாட்டுகளை இரண்டுவிதமாகப் பிரிக்கலாம்... தனி மனிதனோ அல்லது ஒரு சிறு குழுவோ மிருகத்தை ஆயுதங்களுடன் எதிர்கொண்டு அடக்கி கொன்றுவிடுவது முதல் வகை. எதிர்கொள்ளும் மிருகம் வலுவிழக்கும்வரை அதனை அலைகழித்து, தன் பலத்தின் மூலம் அதனைக் களைப்புறச்செய்வதுடன் நிறுத்திகொள்வது இரண்டாம் வகை. ஜல்லிக்கட்டு இரண்டாம் வகையைச் சார்ந்தது.


ஜல்லிக்கட்டுக்கு ஈடாக ஸ்பெயின் நாட்டின் கொரிதா எனப்படும் எருது அடக்கும் விளையாட்டைக் குறிப்பிடலாம். ஆனால் கொரிதாவில் விடப்படும் எருது " தொரெரோ " என்றைழக்கப்படும் வீரனால் அலைக்கழிக்கப்பட்டுச் சிறு குத்தீட்டிகளால் குத்தப்பட்டு இறுதியில் பரிதாபமாக உயிரிழக்கும்.

இந்தக் கொரிதா விளையாட்டுக்கு எதிராக மேலை நாடுகளில் ஒரு பெரும் இயக்கமே போராடிக்கொண்டிருக்கிறது. இதில் கலைஞர்களும் அடக்கம். இந்த விளையாட்டுக்கு எதிராக, கொல்லப்படும் எருதுவே பாடுவதாக அமைந்த பிரெஞ்சு பாடகன் பிரான்சில் கப்ரேலின் பாடலை கேட்பவர்களின் கண்களில் நீர் கோர்த்துவிடும் !

ஜல்லிக்கட்டின் விதிமுறைகளைக் கொஞ்சமும் அறிந்திராத பீட்டா போன்ற அமைப்புகள் அதனைக் கொரிதா விளையாட்டாகப் பாவிப்பது ஜல்லிக்கட்டு தடைக்கான முதல் காரணம்.

அடுத்ததாக, மிருகவதை காரணத்துக்கு முன்னதாகவே அதில் பங்குபெறுவோரும், பார்வையாளர்களும் காயமடைவதையும், உயிரிழப்பதையும் காரணமாகக் கொண்டு சில அமைப்புகள் ஜல்லிக்கட்டை எதிர்த்ததை இந்தத் தருணத்தில் குறிப்பிட வேண்டும். அதில் உண்மை இல்லாமல் இல்லை ! மேலும் மாடுகளை விளையாட்டு விதிகளுக்குப் புறம்பான வழிகளில் வெறியூட்டும் செயல்களும் உண்டு என்பதை ஜல்லிக்கட்டின் விபரம் அறிந்தவர்கள் மறுக்கமாட்டார்கள் !

காலத்துக்கு ஏற்ப மாறுவதும் மாற்றப்படுவதுமே நிலைக்கும் என்ற இயற்கை விதியையும் கருத்தில் கொள்ள வேண்டும் ! ஒரு காலத்தில் கத்தி சண்டை என்றால் தோற்பவன் காயப்பட வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. அந்தச் சண்டை கலையின் விதிகள் காலத்துக்கு ஏற்ப மற்றப்பட்டதினால்தான் இன்றும் அக்கலை " Fencing " என்ற பெயரில் ஒலிம்பிக்கிலும் விளையாடப்படுகிறது.

நான் குறிப்பிடும் ஜல்லிக்கட்டுக்கான அமைப்பு முதலில் விளையாட்டு நடத்தப்படும் முறையை இக்காலத்துக்கு ஏற்ப, பார்வையாளர்களுக்கும் மைதானத்துக்கும் இடையே பாதுகாப்பு அரண், வாடிவாசலின் அமைப்பு, விளையாட்டில் பங்குபெறும் எருதுகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை என விதிகளை வரையறுக்கவேண்டும். அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகளைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு முழுமைக்குமான அந்த அமைப்பின் அனுமதி மற்றும் கண்காணிப்பின்கீழ்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்படவேண்டும் என்ற விதி முக்கியம்.

மேலும் தமிழ் கலாச்சாரம் இந்திய தலைநகரத்துக்கே சரியாகப் புரியாத நிலையில் பீட்டா போன்ற சர்வதேச அமைப்புகள் புரிந்துகொள்ளும் என நினைப்பது நம் தவறு ! தமிழ் கலாச்சாரச் சூழலை தமிழ்நாட்டின் எந்த அரசியல் பிரதிநிதியும் டெல்லியில் முறையாக, தொடர்ந்து பதிவு செய்யவில்லை என்ற உண்மையையும் நாம் உணர வேண்டும். சுப்ரமணியம் சுவாமி போன்றவர்களை நம்பாமல் (!) இந்தப் பொறுப்பையும் ஜல்லிக்கட்டு அமைப்பே ஏற்க வேண்டும்.

இப்படியான ஒரு கட்டுக்கோப்பான அமைப்புடன் நீதிமன்றத்தில் வாதாடி மட்டுமே ஜல்லிக்கட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும் !

சில நாட்களாய் ஒரு கேள்வியை என் மனதிலிருந்து நீக்கமுடியவில்லை..

தமிழ்நாட்டில் நூறு விவசாயிகளுக்கு மேல் தற்கொலையாலும், அதிர்ச்சியினால் உண்டான மாரடைப்பாலும் இறந்துவிட்டதாகவும், பதிணெட்டு லட்சம் ஏக்கர் அளவுக்கான டெல்டா நிலங்கள் தூர்ந்துவிட்டதாகவும் செய்தி...

ஜல்லிக்கட்டு விவசாயியின் வீர விளையாட்டு... தான் பாடுபட்டு வளர்த்த பயிர் அறுவடையாகி வீடு வந்து சேர்ந்த மகிழ்ச்சியில், உழவில் தனக்குத் துணை நின்ற காளைகளைச் சீண்டி விளையாடி வீரத்துடன் தழுவும் நிகழ்வு...

அந்த விவசாயச் சமூகமே அழியும்போது ஜல்லிக்கட்டை மட்டும் போராடி பாதுகாப்பதினால் யாருக்கு என்ன பயன் ?



இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

 பட உதவி : GOOGLE


Sunday, January 1, 2017

நடப்பவை நன்மைகளாகட்டும் !



மீன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது ! .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது ! அப்படி ஓடி மறையும் ஆண்டுகளுடன் தனிமனித ஒழுக்கம், மனிதநேயம்,சகிப்புத்தன்மை, இரக்கம் போன்றவையும் வேகமாக அடித்துச் செல்லப்படுகின்றனவோ என்ற அச்சம் எழுகிறது...

" நாம் இத்தனை காலமாய்ப் பேணி போற்றும் தனிமனித சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற மனிதகுல மதிப்பீடுகள் அனைத்தும் சட்டெனத் தலைகீழாக மாறக்கூடிய நிச்சயமற்ற ஆண்டாக அமையலாம்... "

பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹோலாந்த் நாட்டு மக்களுக்கு ஆற்றிய புத்தாண்டு உரையின் வரிகள் ! ஒர் அரசியல்வாதியாய் அவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளில் ஒருவர்தான் என்றாலும் இந்த வரிகள் நிதர்சனமானவை !

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமைந்த இடதுசாரி மற்றும் வலதுசாரி அரசுகளின் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. அவர்களின் எழுபது ஆண்டுகால ஆட்சியில் அலுத்துப்போன உலக மக்களின் தேர்வாய் தீவிர வலதுசாரிகள் பல நாடுகளில் ஆட்சிக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்... மதத்தின் நிழலில் குளிர்காயும் பயங்கரவாதமும், பிராந்திய போர்களும் உலகெங்கும் பரவுகின்றன !

மொழி, இனம், நிறம், ஜாதி, பிராந்தியம் என மக்களைப் பிளவுபடுத்தி " பய அரசியல் " நடத்தும் இத்தீவிர வலதுசாரி அரசுகளையும் பின் நின்று ஆட்டுவிப்பது ஒரு பெருவணிகக் கூட்டம் ! ஒவ்வொரு நாட்டின் விதியும், அந்நாட்டு ஏழைபாழைகளின் தலையெழுத்தும் விரல் எண்ணிக்கைக்குள் அடங்கிவிடும் அந்நாட்டு பெருதொழிலதிபர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது !

இலங்கையில் நடந்ததையும், சிரியாவில் நடப்பதையும் சலனமற்றுத்தான் பார்த்துக்கொண்டிருந்தோம்... பார்த்துக்கொண்டிருக்கிறோம் ! இஸ்ரேலில் பூகம்பம் என்றால் பாலஸ்த்தீனியர்களுக்குக் கொண்டாட்டம் ! இந்தியாவில் புயலடித்தால் பாகிஸ்தானில் மகிழ்ச்சி தெரிகிறது ! பாகிஸ்தானில் குண்டு வெடித்தால் இந்தியாவில் குதூகலம் !

"மக்களின் மென்முனைகளைத் தட்டிவிட்டால் நாகரீகத்தின் உச்சியில் இருப்பவர்களுக்கும் இதுதான் நடக்கும் " என, நண்பர் மீரா செல்வக்குமார் காவிரி நதி கலவரத்தின் போது பதிந்த வரிகள் உலகின் அனைத்து பகுதிக்கும் பொருந்துகிறது !

இயற்கைக்கு முன்னால் இஸ்ரேலும் பாலஸ்த்தீனமும், இந்தியாவும் பாகிஸ்தானும், அமெரிக்காவும் ரஷ்யாவும் அனைத்தும் ஒன்றுதான் என்பது ஏனோ இன்னும் புரியவில்லை !

பூமியை, அதன் இயற்கை வளங்களை வன்புணர்ந்த பாவமும் " அந்தப் பெருவணிகக் கூட்டத்தையே " சாரும் ! அந்தந்த கால விஞ்ஞான வளர்ச்சியினால் கண்டு பிடித்தவற்றையும், உற்பத்தி செய்தவற்றையும் நீண்ட காலக் கேடுகளைப் பற்றிச் சிந்திக்காமல், சரியாக ஆராயாமல் வியாபாரம் ஒன்றையே நோக்கமாக்கி சந்தைபடுத்தி, இருந்த ஒரே பூமி பந்தையும் ஓட்டையாக்கிவிட்டார்கள் ! அவர்கள் சந்தை படுத்திய அனைத்தையும் வாங்கித் தின்ற, அடுக்கிச் சேர்த்த ஆட்டுமந்தை கூட்டங்களான நமக்கு இன்னும் விழிப்பு வாய்க்கவில்லை !

சாமானிய மக்கள் சகிக்க முடியாமல் பொங்கியெழுந்த போதெல்லாம் சரித்திரம் சரியாகத் திருத்தப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுச் சான்று ஒன்று தான் இத்தனை அவநம்பிக்கைகளையும் தாண்டித் தெரியும் பெருநம்பிக்கை ஒளி !

ஒவ்வொருவரும் பகுத்தறிவுடன் சற்றே சிந்தித்து அவரவர் " மென்முனைகளை " விழிப்புடன் பாதுகாத்தாலே போதும்... இவ்வுலகின் தலைவிதி மாறும் !

இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !


 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

 பட உதவி : GOOGLE