Monday, December 5, 2016

இரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்





ந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் அவரவர் கேட்டது, யார் யாருக்கோ தெரிந்தது, ஆதரப்பூர்வமானது, ஆதாரமற்றது எனச் சமூக ஊடகங்களில் நூற்றுக்கணக்கான செய்திகள்... பகிர்வுகள்...

முதல்வரின் மறைவை அறிந்த நொடியில், நேற்று வாட்ஸ் ஆப் மூலம் நான் படித்த பகிர்வு ஒன்று சட்டென நினைவில் தோன்றியது !

சில திருத்தங்களுடனான அப்பதிவு...

" வர் சிறந்த முதல்வரா இல்லையா ? அவர் கொண்டுவந்த திட்டங்கள் எல்லாம் மக்களுக்குப் பலனளித்தனவா ? எம்ஜிஆர் அளவுக்கு நற்காரியங்களைச் செய்திருக்கிறாரா ? கலைஞரை விட அரசியல் ஞானம் கொண்டவரா ? தமிழகத்தின் மேல் உண்மையிலேயே பற்று கொண்டவரா ? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தெரியாது என்பதே பதிலாக வந்தாலும்கூட ஒன்று மட்டும் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்...

அந்தப் பெண்மணியின் தைரியம் !

ஆண் சிங்கங்கள் மட்டுமே கோலோச்சிய அரசியல் காட்டுக்குள் ஒற்றைப் பெண்சிங்கமாய் நுழைந்து தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகள் ராஜ தர்பார் செய்தவர் !

இவர்களைப் போன்ற ராஜதந்திரிகளுக்கு மத்தியில் வேறொரு பெண்ணால் இப்படிச் சாதித்திருக்க முடியுமா என்றால் நிச்சயம் பெருத்த சந்தேகம் தான் ! கணவனோடும் குடும்பத்தோடும் சிறு சிறு பிரச்சனைகள் என்றாலே உடைந்து போவதும், சிதைந்து போவதும், செத்துப்போவதுமாய் இருக்கின்ற பெண்களுக்கு மத்தியில் கடைசிவரை போர்க்களத்தில் நின்று, வென்றாலும் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து நடந்து எல்லோரையும் அதிரவைத்த அந்தத் தைரியத்தை ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள வேண்டும்!

சம காலத்தில் வாழ்ந்த, இவரை விடச் சிறந்த சாதனை பெண்மணி வேறு யாருமில்லை!

அவர் வருவாரோ மாட்டாரோ தெரியாது, ஆனால் அவருடைய வாழ்க்கை நெருப்பின் ஊடே நிகழ்ந்த நெடும் வெற்றிப்பயணம் ! அந்த நெருப்புப் பயணத்தை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓராயிரம் கைதாங்கும் பலம் வந்து கஷ்டங்களைக் கடந்துவிடுவார்கள்! குறைகள் பல இருந்தாலும் பெருமைப்பட நிறைய விஷயங்கள் இருக்கிறது ! இயற்கை அவர் பக்கம் நிற்கவே வேண்டுகிறேன் ! "


ன்று இயற்கை அந்த இரும்பு பெண்மணியைத் தன் பக்கம் அழைத்துக்கொண்டுவிட்டது !

" எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன் ! தேசிய தலைவரோ,  பிரதம வேட்பாளரோ யாராயிருந்தாலும் என் தயவு வேண்டுமானால் அவர்கள்தான் என்னைத் தேடி வரவேண்டும்  " என்ற துணிச்சலும் தைரியமும்தான் அவரின் வெற்றிக்கான காரணங்கள் !

ஆழ்ந்து யோசித்தால் சொந்தபந்தங்களை விட்டு விலகி, ஒரு கை விரல்களின் எண்ணிக்கைகளுக்குள் அடங்கிவிடக்கூடிய ( அவருக்கு ) நம்பிக்கையானவர்களுடன் மட்டுமேயான ஒரு தனிமை வாழ்க்கை வட்டத்தினுள் அவர் தன்னை ஒடுக்கிக்கொண்டதுகூட அந்தத் தைரியத்துக்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்பதால்தானோ எனத் தோன்றுகிறது...

னி அவர் விட்டுச்சென்ற வெற்றிடத்தைப் பிடிக்கவும், நிரப்பவும் மற்ற அரசியல்வாதிகள் ஆடுபுலி விளையாடலாம்... அவரது பெயரையும் புகழையும் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த திட்டமிடலாம்... அவர் கட்டிக்காத்த கட்சிக்கு அவர் விரும்பியவரோ விரும்பாதவரோ தலைவராகலாம்... அவரது பெயரை இருட்டடிப்புச் செய்து தங்களை முன்னிறுத்த முயற்சிக்கலாம்... அரசியலில் எதுவும் நிகழலாம்... நிகழும் !

ஆனால் அடிமட்ட அதிமுகத் தொண்டனின் மனதில் அவனது இறுதி மூச்சுவரை " அம்மா " நிறைந்திருப்பார் !

 பட உதவி : GOOGLE

Tuesday, May 3, 2016

முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 2



தாத்தா, சித்தப்பாக்கள் எனக் குடும்பத்தினர் பலர் பிரான்சில் இருந்ததால் அவர்கள் ஊர் திரும்பும் போதெல்லாம் சென்னை சென்று அழைத்து வருவோம். அந்த வயதில் விமான நிலையம் இருக்கும் மீனம்பாக்கத்தையே சென்னை என நம்பியிருந்தேன் !

தனியாக அல்லது குழுவாக எனப் பிரான்சிலிருந்து திரும்புபவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் கொண்டு வரும் பெட்டிகளின் அளவுக்கேற்ப வாடகை காரிலோ வேனிலோ பயணம் அமையும் ! பைபாஸ் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளெல்லாம் தோன்றாத என்பதுகளில் எங்கள் ஊரிலிருந்து சென்னை செல்ல பத்து பதினோரு மணி நேரம் பிடிக்கும். அதுவும் மதுராந்தகம் எல்லையில் லாரிகளுக்கு மத்தியில் சிக்கிகொண்டால் இன்னும் இரண்டு மணி நேரம் கூடிவிடும் !

பின்னிரவு மூன்று மணிவாக்கில் தூக்கம் கலையாத கண்களின் எரிச்சலுடன் கிளம்பினால் அதிகாலையில் சிதம்பரத்தினுள் நுழைவோம். சென்னை போகும்போதெல்லாம் அங்கிருந்த நாயர் கடை ஒன்றில் காபி குடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் அப்பா ! ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, அதிகாலையில் ஐந்தே நிமிடம் நீடிக்கும் நட்பு என்றாலும் ஞாபகமாக வரவேற்று உபசரிப்பார் நாயர் ! வழக்கமாய்ச் சாப்பிடும் உணவகங்கள், டீக்கடைகள் தொடங்கி அவ்வப்போது இளைப்பாற நிற்கும் சிற்றூர்கள் மற்றும் கிராமங்களின் சிலர் கூட எங்களை அறிந்துவைத்திருந்தனர் !

மிகவும் நெரிசலான சிதம்பரம், சீர்காழி சாலைகள், திருத்தமான அகலமான சாலைகளுடன் பளிச்சென்ற பாண்டிச்சேரி, லாரிகள் வரிசைகட்டி நிற்கும் மதுராந்தகம், கார்பாய்டு தொழிற்சாலையின் மணத்துடன் வரவேற்கும் கடலூர் என மனிதருக்கு மனிதர் வேறுபடும் குணம் மற்றும் மணம் போலவே ஒவ்வொரு ஊருக்கும் மணமும் குணமும் உண்டு !

ஒவ்வொரு ஊரை தாண்டும் போதும் ஒவ்வொரு விதமான உணர்வு தோன்றும் !

ன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியிலிருந்து கொடைக்கானல், கேரளா என மூன்று நாட்கள் சுற்றுலா சென்றோம்...

வகுப்பு தோழன் ஒருவனின் தந்தை தனியார் போக்குவரத்துக்கழக உரிமையாளர். சுற்றுலா பேச்சு ஆரம்பித்ததுமே தன் தந்தையிடம் பேசி " சகாய விலையில் " பேருந்து ஏற்பாடு செய்வதாகச் சொல்லி தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கிவிட்டான் அவன் ! வகுப்பு லீடரான என்னையும் சேர்த்து ஒரு பத்து மாணவர்கள் பள்ளியின் " பெரிய பையன்கள் ! " ஆசிரியர் தினம், குடியரசு தினம் தொடங்கி ஆண்டு விழா போட்டிகள், நாடகம் என அனைத்திலும் முன்னால் நிற்கும் சட்டாம்பிள்ளைகள் !

பள்ளி சுற்றுலா என்றால் பேருந்து கணக்குதான். ஆனால் அவன் எப்படியோ பேசி பேருந்து மட்டுமல்லாது ஏ சி வேன் ஒன்றுக்கும் சேர்த்து அனுமதி வாங்கிவிட்டான் ! " பெரிய பையன்கள் " நாங்களெல்லாம் வேனிலும், மற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேருந்திலும் கிளம்பினோம். பள்ளிக்கூடத்திலிருந்து கிளம்பிய போது எங்கள் வேனில் ஏறிய ஆசிரியர், எங்களின் திட்டமிட்ட ரகளைத் தாங்காமல் ஊர் எல்லையைத் தாண்டுவதற்கு முன்னரே பேருந்தில் தொற்றிக்கொண்டுவிட்டார் !

செங்கோட்டை வழியே கேரளா செல்லும் உத்தேசம். செங்கோட்டையின் கேரள சோதனை சாவடியில் " ரூட் பெர்மிட் " எனப்படும் பயணத் திட்ட அனுமதியை வாங்கிப்பார்த்த மலையாள சேட்டன் இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை !

" இது செங்கோட்டா... நீ சாரிக்கோட்டா வழியா போய்க்கோ ! "

அவர் கோபத்துடன் பறைய, எங்களுக்குப் பதைத்தது !

காரணம், எங்கள் போக்குவரத்துக்கழக நண்பன் வேன் ஏற்பாட்டுடன் நிறுத்திக்கொள்ளாமல் தன் ஆங்கிலப் புலமையைத் தந்தைக்குக் காட்ட பயண அனுமதியையும் தானே தட்டச்சுச் செய்திருக்கிறான். அவனுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் செங்கோட்டையைச் சாரிக்கோட்டை எனத் தவறாகத் தட்டச்சு செய்ததின் விளைவு !

" டேய் ! இதையெல்லாம் வேற மாதிரி டீல் பண்ணனும் ! "

நாதன் சார் பணப்பையுடன் இறங்கி இன்ஸ்பெக்டரை ஒதுக்குப்புறமாய் அழைத்துச் சென்றார். திரும்பி வந்த இன்ஸ்பெக்டர் சிரிப்புடன் அனுமதி கொடுத்ததோடு அல்லாமல் " குட் ஜர்னி ! " என்று வாழ்த்தி வழியனுப்பினார் !

எங்களுக்கு லஞ்சம் புரிந்த தருணம் அது !

கேரளாவிலிருந்து திரும்பும் வழியில், ஆளரவமற்ற சாலையின் இருமருங்கிலும் மலையடி போல உயர்ந்த மண்மேட்டின் மீது தென்னை மரங்களுக்கிடையே அமைந்த வீடுகள். சூரியன் தன் கதிர்களில் குளுமை கலந்து அடங்கும் நேரம். ஒரு வீட்டின் வாசலில் குத்துக்காலிட்டு கைகளைக் கன்னங்களுக்கு முட்டுக்கொடுத்து அமர்ந்திருந்தாள் எங்கள் வயதையொத்த ஒரு பெண்பிள்ளை. பேருந்திலிருந்த எங்களின் கூச்சலை கேட்டு துள்ளி எழுந்தவள் மகிழ்ச்சியும் சிரிப்புமாய்க் கைகளை ஆட்டி குதித்தாள் !

ஒரு சில நொடிகளே நீடித்த அந்த நிகழ்வு ஒர் ஓவியமாய், காட்சிக்குள் அடங்கிய கவிதையாய், தேர்ந்த நிழல்படக் கலைஞன் படம் பிடித்த காட்சியாய் எனக்குள் தங்கிவிட்டது !

யணத்தின் சுவாரஸ்யம் போகும் பாதைகளில் நாம் சந்திக்கும் மனிதர்களும், நிகழ்வுகளும்தான். சொந்தம், நட்பு, சுற்றம் என வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணிப்பவர்கள் மீது நமக்கிருக்கும் நேசத்தின் அதே அளவு பயணங்களில் சில நிமிடங்களே நாம் சந்திக்கும் ஒரு சில மனிதர்களின் மீதும் படிந்துவிடுவதை உணர்ந்ததுண்டா ?


" நமக்கு எந்த ஊரு ?... "

சில பனைமரங்களுக்கு நடுவே அமைந்த குடிசை வீட்டுத் திண்ணையில் சிகரெட், கோலி சோடா, சர்பத் தொடங்கிப் பழைய பாலித்தீன் பைகளில் தொங்கும் முறுக்கு, கடலைமிட்டாயுடன் ஒரு வாழைத்தாரும் தொங்கும் கடை. கோடையின் அனலுடன் நாம் பயணிக்கும் வாகனத்தின் வெப்பமும் சேர்ந்து வாட்டும் பொட்டல்வெளி பயணத்தின் நடுவே இளைப்பாற நிறுத்துமிடத்தில் பேச்சு தொடங்கும் !

" அங்க நம்ம ஒண்ணுவிட்ட மாமா பையன் ஒருத்தன் இருக்கான்... எப்படிக் காஞ்சு கிடக்கு பாத்தீங்களா ?... உங்க பக்கம் எப்படி ?... "

" பொம்பளைங்களை வீட்டுக்கு பின்னால கால் கழுவ சொல்லுங்க... "

வாகனத்தினுள் தெரியும் பெண்களைக் கண்டு பேசுபவர் பதிலுக்குக் காத்திருக்காமல் தன் வீட்டுப் பெண்களைத் துணைக்கு அனுப்புவார் !

" திரும்பறப்போ முடிஞ்சா நிறுத்தி சொல்லிட்டு போங்க !... "

திரும்பும் வழியில் பெரும்பாலும் நிறுத்த தோன்றாது ! பின்னர் அந்த இடத்துக்குப் போகும் வாய்ப்பே கிட்டாது என்றாலும் அந்த மனிதரின் உபசரிப்புக் கோடை பயணங்களின் போதெல்லாம் இளநீர் இனிப்பாய் மனதின் ஏதோ ஒரு மூலையில் ஊற்றெடுக்கும் !

பூம்புகாரில் நண்பர்களுடன் நாள் முழுவதும் சுற்றி அலைந்து அரட்டையடித்த நினைவுகளைவிட அங்கிருந்து திரும்பும் வழியில் தரங்காம்பாடி அருகில் காரை நிறுத்தி ஒன்றும் பேசிக்கொள்ளாமல் அமைதியாய் டீயும் பக்கோடாவும் சாப்பிட்ட நினைவு கறுப்பு வெள்ளை புகைப்படத்தின் அழகுடன் மனச்சுவரில் இன்னும் தொங்குவதின் விந்தை புரியவில்லை !

ன்று கரைக்கால் நாகூர் சாலையின் முகம் மாறிவிட்டது !

இரு போக மகசூல் தந்த நிரவிச்சாலை நிலங்கள் தரிசு நிலங்களாக மாற்றப்பட்டு, வீட்டுமனை விற்பனையாளார்கள் நட்ட எல்லை கற்களுக்குள் அடங்கிவிட்டன ! தைக்கால் குளம்கூடக் குட்டையாய்ச் சுருங்கிவிட்டது ! சிறு தோட்டம் சூழ்ந்த குடிசைவீடுகளின் திண்ணைக்கடைகள் இருந்த நிலங்களிலெல்லாம் நாளுக்கு ஒரு நட்சத்திர ஹோட்டல் தோன்றி, சனிப்பெயர்ச்சிக்கு வரும் பிரபலங்களை எதிர்பார்த்து நிற்கின்றன !

வாஞ்சூர் சாலை வயல்வெளியின் ஒரு பக்கத்தைக் கார்பாய்டு தொழிற்சாலை விழுங்க, மறுபக்கம் துறைமுக வளர்ச்சிக்கு தாரை வார்க்கப்படுவிட்டது ! சிறு கடைகளெல்லாம் ஷாப்பிங் மால்களாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை ! இத்தனை மாற்றங்களுக்குப் பிறகும் எனது பால்ய அனுபவத்தின் மிச்சமாக நிற்பது மதகடியும், வாஞ்சூரும் ! இன்றும் பச்சை விளக்கு மதுக்கடைகள் அப்படியே இருக்கின்றன.தடுமாறும் குடிமகன்கள் தள்ளாடி பாலம் கடந்து செல்கிறார்கள் !

விரைவுச் சாலைகள், அதிவிரைவுச் சாலைகள் என இன்றைய பயணங்கள் இலக்கை மட்டுமே அண்ணாந்துபார்த்துக்கொண்டு ஓடும் ஓட்டங்களாக மாறிவிட்டன !

சில மாதங்களுக்கு முன்னர் பாரீசிலிருந்து முன்னூறு கிலோ மீட்டர்கள் தள்ளி அமைந்த தோவீல் என்னும் கடற்கரை சிற்றூருக்கு வார இறுதி ஒன்றினை கழிக்கச் சென்றேன்...

கட்டணத்துடன் கூடிய அதிவிரைவுச்சாலைகள் நாடு முழுவதையும் இணைத்தாலும், அவற்றினைத் தவிர்த்து ஊர்களுக்குள் செல்லும் சாலைகளையும் பயன்படுத்தலாம். விரைவுச்சாலைகளிலிருந்து மாற வசதியாக இருவகைச்சலைகளையுமே அருகருகே அமைத்து இணைத்த, தொலைநோக்கு பார்வையுடைய உள்கட்டமைப்பு ! விரைவுச்சாலைகள் வழியே செல்லாமல் சிற்றூர்கள், கிராமங்கள் வழியே பயணித்தேன்.இனம், மொழி, கலாச்சாரம் என அனைத்துமே வேறுபட்டாலும் சந்தித்த மனிதர்களாலும், இயற்கையின் அழகினாலும் அந்தப் பயணம் என் பால்ய பருவத்து பயணங்களின் மீட்சியாய் அமைந்தது !

விரைவுச்சாலைகளைத் தவிர்த்து சென்று வந்ததை நண்பர்களிடம் கூறியபோது, மூன்று மணி நேர பிரயாணத்தை ஆறுமணி நேரத்தில் கடந்த ஆமை என்ற பட்டம் கிடைத்தது ! இன்றைய விடுமுறை பயணங்கள் கூடச் சீக்கிரமாய் ஊர் போக வேண்டும் என ஓடி, ஊர் சென்றவுடன் சீக்கிரமாய்த் திரும்ப வேண்டும் என்ற அவசரம் தொற்றிக்கொள்ளும் படபடப்பு பிரயாணங்களாய் தான் அமைகின்றன !

சென்ற முறை பிரான்ஸ் திரும்பச் சென்னைக்குக் கிளம்பிய போது கிழக்கு கடற்கரைச் சாலை வழியே சென்றால் ஐந்து மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்றார் நண்பர்.

இரவு நேரம்...

ஊர்களுக்கு வெளியே அமைக்கப்பட்ட அந்த விரைவுச் சாலை எனக்குக் கான்கிரீட் பாலைவனம் போலத் தோன்றியது !

பனைமரங்கள் கூட இல்லாத வெட்டவெளிகளில் " அதிநவீன வசதிகளுடன் " கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள், மனிதர்களின் அருகாமையற்று மனிதர்களாய் வாழ ஆசைப்படும் புதிய மேட்டுக்குடி தலைமுறை குடும்பங்களுக்காகக் காத்திருக்கின்றன ! ஐம்பது நூறு குடியிருப்புகளைக் கொண்ட தொகுப்புகளில் ஒன்றிரண்டில் மட்டுமே விளக்கு வெளிச்சம் !

ஏதோ வேற்றுக்கிரகத்தில் பயணிக்கும் உணர்வுடன் கண்ணயர்ந்தேன் !

சென்னையை நெருங்கிய சமயத்தில் கண்விழித்தபோது சாலையின் இருபுறமும் பீட்சா ஹட், கே எப் சீ, குவிக் எனப் பிரான்சில் நான் அன்றாடம் காணும் உணவகங்கள் ! தூக்க கலக்கத்தில் பாரீஸ் விமான நிலையத்தை வந்தடைந்துவிட்டதாக ஒரு கணம் திகைத்து உடமைகளைத் தேட தொடங்கினேன் !

உள்நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் பன்னாட்டு நிறுவனங்களின் லாபத்துக்காக அறிமுகப்பத்தப்படும் நுகர்வோர் கலாச்சாரம் என்ற கரப்பான் உலகின் ஆதி நாகரீகங்களில் சில தோன்றிய, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட தேசத்தின் அடையாளங்களையும், கலாச்சாரப் பண்பாடுகளையும், பழக்கவழக்கங்களையும் மிக வேகமாய் அரித்துக்கொண்டிருப்பது புரிந்தது !

முகலாய மன்னர் அக்பர் பீர்பாலை முதல்முறையாய்ச் சந்தித்தது பற்றிய கதை ஒன்று உண்டு.

வேட்டையின் போது வழி தவறிய மன்னர் காட்டு பாதை ஒன்றில் தன்னை மறந்து பாடிக்கொண்டு செல்லும் இளைஞர் பீர்பாலை எதிர்க்கொள்கிறார். படை பரிவாரங்களுடன் வரும் மன்னருக்கு கூட ஒதுங்காமல் செல்பவரை நிறுத்தி,

" இந்தப் பாதை எங்கே செல்கிறது ? " எனக் கேட்கிறார்.

அந்த இளைஞரோ,

" இந்தப் பாதை எங்கும் செல்லாது ! மன்னரே ஆனால் கூட நீங்கள் தான் இந்தப் பாதையில் எங்குச் செல்ல வேண்டுமோ அங்குச் செல்ல வேண்டும் ! " என்கிறார் !

அந்த இளைஞரின் புத்தி சாதுர்யத்தில் வியந்து அவரைத் தன்னுடன் அழைத்துக்கொள்கிறார் அக்பர் !

பீர்பால் கூறியது உண்மையென்றாலும், பயணிப்பவரின் பார்வைக்கும், நோக்கத்துக்கும் ஏற்ப விரிபவை பாதைகள் ! முட்டுச்சந்தில் முடியும் பாதைகள் கூட அதற்கு முன்னால் ஒரு கிளைப்பாதையைத் திறந்து வைத்து விட்டுத்தான் முடிகின்றன ! ஆண்டிப்பட்டியில் தொடங்கும் பாதை ஒரு நாடோடியின் நோக்கத்துக்காக அண்டார்டிகாவில் முடியும் ! அங்கே பனியில் சரிந்து தொடங்கிய பாதைவெளி ஆண்டிப்பட்டிக்கும் அழைத்துவரும் ! முடிவுகள் அற்றவை பாதைகள் !

ராபர்ட் ப்ராஸ்டின் கவிதை வரிகள் மழை நீர் அருந்திய மண்ணின் மனமாய் மனதில் எழுகிறது...

அடர்ந்து பரந்து அழகாய் இருக்குது காடு,
ஆனாலும் என் கடமைகள் முடியவில்லை,
உறக்கத்துக்கு முன்னான என் பயணமும் ,
உறக்கத்துக்கு முன்னான என் பயணமும் .

பாதைகளைப் போலவே நம் பயணங்களும் முடிவதில்லை !

 பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Friday, April 1, 2016

முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1

என்னை பயணம் பற்றி எழுதத் தூண்டிய சகோதரி மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கனுக்கு நன்றிகள் பல.


யணம் என்ற வார்த்தை ஏற்படுத்தும் அதிர்வுகளையும், கால அட்டவணைக்குள் அடங்காத மனவெளியில் அந்த வார்த்தை மத்தாப்பு கோடுகளாய் விசிறிவிடும் நினைவொளித் துகள்களையும், வெளிச்சமாய், இருட்டாய், ஈரமாய், வரட்சியாய், பசுமையாய், பாலைவனமாய் அது பரவவிடும் பாதைகள் அனைத்தையும் எழுத்தில் பதிந்துவிட முடியுமா எனத் தெரியவில்லை ! ...

மனிதனுக்குப் பயணங்கள் சாத்தியமற்றுப் போயிருக்குமானால் அவனது ஆறாம் அறிவு இவ்வளவு கூர்மை பெற்றிருந்திருக்காது ! மொழிகள் தழைத்து, கலாச்சாரங்கள் ஸ்திரப்பட்டு மனிதனின் அறிவும் ஞானமும் விருத்தியானதற்கு அவனது இடைவிடாத பயணங்களே காரணம். நாம் தீர்மானித்த இலக்கைவிடப் பலபடங்கு அதிகமான ஆச்சரியங்களையும், புதிர்களையும் நாம் கடக்கும் பாதைகளில் நிரப்பி வைத்திருப்பவை பயணங்கள் !

பயணம் என்ற சொல்லைவிட யாத்திரை என்னும் சொல் ஆழமானதாகத் தோன்றுகிறது. எப்படி வாழ்ந்தாலும் நிறைவு தோன்றாமல், வாழ்க்கையையே யாசிக்கும் பயணம் ! நாடோடி இன்னும் மேன்மையாகத் தோன்றுகிறது.எந்த தேடுதலுமற்று, வாழ்க்கை பற்றிய தர்க்க, தத்துவங்களற்று இடம் பெயர்தல் மட்டுமே நோக்கமாய்க் கொண்ட ஒரு நாடோடியின் வாழ்க்கை பெரும்பேறு ! மண்ணைத் தேடி, அதன் மனிதர்களை, அவர்களின் மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைத் தேடியலைந்த மனிதர்களால்தான் மனித குலம் கடந்த பாதை வரலாறாய் நிலைத்தது.

பிரான்ஸ் வந்த புதிதில், கட்டாய ராணுவ சேவையின் போது போர் பயிற்சி நிமித்தமாய்ப் பல இடங்களுக்குக் குழுவாய் பயணித்த போது அந்தத் தேசத்தின் பூகோள அமைப்பு, அதன் மனிதர்கள், அவர்களின் குணம் மற்றும் கலாச்சாரம், கிராமபுற, நகர் புற வாழ்க்கை முறை என அந்த ஓராண்டு வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த அனுபவம் அதற்குப் பின்னர் வேலை, குடும்பம் என்ற வட்டத்தினுள் தங்கிவிட்ட இருபதாண்டுக்கும் மேலான வாழ்க்கையில் கிடைக்கவில்லை !

பதினான்கு வயதளவில் படித்த ஒரு கவிதையின் ஞாபகம் வருகிறது...

பிறந்த தெருவிலிருந்து நகராமல், பக்கத்து தெருவிலேயே மணமுடித்து, பிள்ளைகள் பெற்று, பேரக்குழந்தைகளையும் பார்த்து இரண்டு தெருவுகளுக்குள்ளேயே தன் வாழ்க்கையை வாழ்ந்து முடிக்கும் ஒரு பெண்மனியின் கதைசொல்லும் " ஆயிஷா பீபியின் உலகம் " என்ற கவிதை !

மீசை அடரத்தொடங்கிய பதிணென் பருவத்தில் எங்கள் தெருக்கோடி சலவை கடைக்கு உடைகளை இஸ்த்திரி போட கொண்டு செல்வேன்.

நடுத்தர வயது கணவன், மனைவி இருவரும் கடையில் உழைப்பார்கள்.

ஒரு முறை சலவைக்காரர் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்...

" அது நம்ம ஊரைத்தாண்டி எங்கேயும் போனது கிடையாதுங்க... "

" ஆமாண்ணே... தோ பக்கத்திலிருக்கற நிரவிக்குக் கூடப் போனதில்லைண்ணே... "

வெள்ளந்தியாய் ஆமோதித்துக்கொண்டிருந்தார் அவர் மனைவி !

உலகம் சுற்றியும் வாழ்க்கை புரியாமல் போனவர்களும் உண்டு ! இரண்டு தெருக்களுக்குள் முடிந்த வாழ்க்கையிலேயே உலக ஞானம் படித்தவர்களும் உண்டு !!

ஜூலியஸ் வெர்னேயின் " உலகை சுற்றிவர எண்பது நாட்கள் " என்னை மிகவும் கவர்ந்த படைப்புகளில் ஒன்று.

பிரெஞ்சு இலக்கியகர்த்தாக்களில் ஒருவரான ஜீலியஸ் வெர்னேயின் " உலகை சுற்றிவர எண்பது நாட்கள் " இந்தியாவின் முதல் இருப்பு பாதை, கல்கத்தாவின் டிராம் என அன்றைய இந்தியாவின் விஞ்ஞான வசதிகள் முதல், சமூகத்தின் மூட நம்பிக்கைகள், உடன்கட்டை ஏற்றும் பழக்கம் வரை ஆங்கிலேயர் காலத்து இந்தியாவுக்குப் படிப்பவர்களைக் கடத்திவிடும் புதினம் ! இந்தியா மட்டுமல்லாது கதை நகரும் தொழிற்புரட்சி காலத்து நாடுகள் அனைத்தை பற்றியும் துல்லியமான விபரங்களைக் கூறும் நாவலாசிரியர் பயண அனுபவமே இல்லாதவர் என்று கூறினால் நம்ப முடியாது ! பாரீஸ் நகரசபையில் பணிபுரிந்த ஜீலியஸ் வெர்னே பிரான்ஸை தாண்டி வேறெங்கும் பயணிக்காதவர் ! அவர் சந்தித்த மாலுமிகளின் வழியே கேட்டறிந்த பயண அனுபவங்களை வைத்து எழுதியது தான் உலகை சுற்றிவர எண்பது நாட்கள் புதினம் !

ன் தாய் வழி பாட்டியின் தந்தை ஊரின் முக்கியஸ்த்தர்களில் ஒருவர். அந்தக் காலத்திலேயே பல தொழில்கள் செய்த, பிரெஞ்சு காலனி நகரசபையில் உறுப்பினராக இருந்த பிரபலம் !

அடிக்கடி நின்றுவிடும், மோட்டரில் இரும்பு கம்பி போட்டு சுழற்றி கிளப்பும் காரில் அவருடன் பல நாட்கள் பயணித்துச் சென்னை சென்றதையும், ஒரு ஊரே வசிக்கும் அளவுக்கு வியாப்பித்திருந்த மரத்துக்குக் கீழே நின்றிருந்த போது குருவிகள் போல வானத்தில் பல விமானங்கள் பறந்த நிகழ்வையும், வெள்ளைக்காரன் குண்டு போடப்போகிறான் என அறிந்து உடனடியாக ஊர் திரும்பியதையும் பாட்டி கதையாய் சொல்லும்போதெல்லாம் கற்பனைகதை என நினைத்து அலட்சியப்படுத்தியது உண்டு. அவள் குறிப்பிட்ட காலம் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்த காலம் , அந்த மரம் அடையாறு ஆலமரம், அவள் குறிப்பிட்ட குண்டு ஜெர்மனியின் எம்ட்டன் கப்பல் என்பதெல்லாம் புரியத்தொடங்கி, அவளிடம் இன்னும் பல செய்திகள் கேட்க ஆசைப்பட்ட காலத்தில் பாட்டி இல்லை !


பால்ய வயதில் என் தந்தையுடன் காரைக்காலிலிருந்து அவரது கடை இருந்த நாகூருக்கு விடுமுறை தினங்களில் சென்று வருவதுதான் முழுவதும் நினைவிலிருக்கும் எனது முதல் பயணம். இரு ஊர்களுக்கும் இடைபட்ட அந்தப் பதிமூன்று கிலோமீட்டர் சாலை பயணம் ஒவ்வொரு முறையும் எனக்களித்த அனுபவங்கள் அற்புதமானவை.

பேருந்துகளின் கடைசி இருக்கைகளில் பயணிப்பது என் தந்தைக்குப் பிடிக்கும். ஏறும் பேருந்தின் வயதுக்கு ஏற்ப ஆட்டங்களும், குலுங்கல்களுமான பயணம் பரபரப்பான காலை வேளைகளில் ஒரு அனுபவத்தையும் உழைத்த அலுப்புடனான மாலை மயங்கும் வேளைகளில் ஒரு அனுபவத்தையும் இரவு நேரங்களில் வேறு ஒரு அனுபவத்தையும் ஏற்படுத்தும்.

நாகூர் தர்காவின் சந்தனக்கூடு வைபவத்தின் போதெல்லாம் மல்லிகை, ரோஜா, சந்தன வாசத்துடன் கந்தூரி கடைகளில் விற்கபப்டும் எல்லுமிட்டாய்களின் வாசமும் காலந்த வாசனையுடன் நாகூர் ஹனிபாவின் பாடல்களைக் காற்றில் வீசி விரையும் பேருந்துகள் வேளாங்கன்னி திருவிழா சமயங்களில் மாதா படம் ஏந்திய யாத்ரீகர்களுடன் " எனையாளும் தேவமாதா " பாடி விரையும். திருநள்ளாறு கோயில் விழாக்களின் போது நாகை வழியே வரும் பக்தர்களைச் சுமக்கும் பேருந்து முழுவதும் திருநீறு, குங்கும மணம் வீசும் !

காலை பயணங்களைவிட இரவின் ஏகாந்தத்தில் பயணித்த அனுபவங்கள் இதயச்சுவர்களில் பசுமையான பாசியாய் இன்றும் படர்ந்து கிடக்கின்றன !

கோடை, மழை, முன்பனி என ஒவ்வொரு காலத்தின் காற்றுக்கும் ஒரு தனி வாசனை உண்டு ! முன்னிரவை தாண்டிய அமைதியான சாலை வழியே விரையும் பேருந்தின் ஜன்னல் இருக்கையில் கண்கள் மூடி அமர்ந்து பயணிக்கையில் வேகமாய் முகத்தில் வழுக்கி முடி கலைத்து அலம்பும் காற்றில் கோடையின் வெப்பத்தையும், மழை நாட்களின் ஈரத்தையும் முன்பனியின் குளிரையும் நுகர்ந்து உணர்ந்து, பேருந்து நிற்கும் போதேல்லாம் காற்றுத் தடைபட்ட இடைவெளியில் ஒரு வெறுமையை உணரும் அனுபவமுள்ளவர்கள் ஆயுளுக்கும் பேருந்து பயணங்களை மறக்க மாட்டார்கள் ! தான் சுமந்து சென்றவர்களின் வாசனைகளையெல்லாம் தேக்கியபடி பேருந்துகள் பெருஞ்சாலைகளில் விரைய, அவற்றின் குலுங்கல்களும் அதிர்வுகளும் நம் மனதடியில் தங்கிவிடுகின்றன.

இறங்கும் போதெல்லாம் தன் தடதடப்பில் கொஞ்சத்தை நம் இதயத்தில் இறக்கிவிட்டு விரைந்து மறையும் புகைவண்டியை போல, யாருமற்ற ஊர் எல்லை நிறுத்தத்தில் இறங்கும்போது அறுவடைக்குக் காத்திருக்கும் முற்றிய நெற்கதிர்களின் வாசனையைச் சுமந்து சஞ்சரிக்கும் காற்றில் டீசல் மணம் வீசும் புகையையும் கலந்துவிட்டு விரையும் பேருந்து நம்முள் விட்டுச் செல்லும் தாக்கமும் அலாதியானது !


ஒரு டி வி எஸ் வாங்கினார் அப்பா ! ...


வண்டியில் அவருக்கு முன்னாலோ பின்னாலோ அமர்ந்து நாகூர் செல்வேன்...

அந்த வயதிலேயே என்னை ஒரு தோழன் போலப் பாவித்து அவரது பால்யம் தொடங்கி அன்றைய அரசியல் நிலவரம் வரை சொல்லிக்கொண்டே ஓட்டுவார்.


ரவு பத்துமணிக்கு கடையை மூடிவிட்டு கிளம்புவோம்.

என் தந்தை சரியான முன் ஜாக்கிரதை முத்தண்ணா ! கடையின் மூன்று பூட்டுகளையும் சரியாகப் பூட்டப்படிருக்கின்றனவா என இழுத்து ஆட்டி பார்த்த பின்னரே கிளம்புவார். அப்படியும் சில இரவுகளில் நாகூர் பாலம் தாண்டிய பிறகு சரியாகப் பூட்டினோமா என்ற சந்தேகம் அப்பாவுக்கு வந்துவிடும் ! மீன்டும் திரும்பிப்போய்ச் சரிபார்த்த நாட்களும் உண்டு !

சைக்கிள் கூட முந்திவிடும் " வேகத்தில் " வண்டி ஓட்டும் என் தந்தை நாகூர் பாலத்தைக் கடக்கும் போதும், காரைக்காலின் எல்லையான மதகடியை நெருங்கும் போதும் இன்னும் மெல்ல உருட்டுவார் ! காரணம் அந்த இரு எல்லைகளில் இருந்த மதுக்கடைகளிலிருந்து வெளியேறி சாலையில் அலம்பும் குடிமகன்கள் !

இரண்டு சக்கர வாகனங்கள் தொடங்கிப் பேருந்துகள் கூட அதிகம் இல்லாத காலம் அது. வாஞ்சூரிலிருந்து திருமலைராயன் பட்டிணம் வரை சாலையோர மரங்கள் மற்றும் இருபுற வயல்வெளிகளைத் தவிர்த்து வேரெதுவும் கிடையாது. சர்வகாலமும் தெருவிளக்குகள் பழுதுபட்டு இருண்ட சாலை !

ஹாரன் அலற விரைந்து மறையும் கடைசிப் பேருந்துக்குப் பிறகு, சாக்கு போர்வைக்குள் குத்துக்காலிட்டு தூங்கும் வண்டி ஓட்டிகளுடன் லாந்தர் விளக்கு ஆடும் வண்டிகளை இழுக்கும் பாதைக்குப் பழகிய மாடுகள், அரிதாகக் கடந்து செல்லும் லாரிகள் என வெறிச்சோடிய சாலை ! முகத்தில் மோதி மேலெழுந்து தலைமுடி கலையும் காற்றில் உழுத நிலத்தின் மணம், கோடையின் காய்ந்த மண்ணின் மணம், முற்றி தலை சாய்த்த நாற்றின் மணம் என அந்தந்த பருவத்துக்கான மணத்துடன் வண்டியில் தொங்கும் பையிலிருக்கும் கோலா மீனின் மணமோ அல்லது மாம்பழ, பலாப்பழ மணமோ கலந்திருக்கும் !

பெரிய பாலத்தின் விளக்கு வெளிச்சம் கண்ணில் தென்படும் தருணத்தில் என்னைப் பயம் பற்றிக்கொள்ளும் !


மீன், மல்லிகைப்பூவுடன் சைக்கிளில் பாலத்தைக் கடந்தவர் இரத்தம் கக்கியது, நள்ளிரவு பேருந்து தானாக நின்றது என அந்தப்பாலத்தைப் பற்றிப் பாட்டிகள் சொன்ன கதைகளெல்லாம் ஞாபகம் வரும் ! பேய் பயத்தைச் சொன்னால் பெரியாரின் கொள்கைகளில் ஈர்ப்புக் கொண்ட அப்பா கோபிப்பார் என்ற பயமும் சேர்த்துக்கொள்ள, எங்கே வண்டி நின்றுவிடுமோ என்ற பயம் திருமலைராயன் பட்டின எல்லைவரை என்னை ஆட்டும் !

அதுவரையிலும் காதில் ஒலித்த சில்வண்டுகளின் ரீங்காரம் மறைந்து, "  டடட டட் டட்... டடட டட் டட்... "  என கொத்துப்புரோட்டா சத்தத்துடன் திருமலைராயன் பட்டிணம் தாண்டினால் மறுபுற எல்லையிலிருக்கும் மஸ்த்தானியா ஹோட்டல் முதலாளி அப்பாவின் வண்டி தென்பட்டதும் தெருவில் இறங்கி கையாட்டுவார்...

" கந்தூரி ஸ்பெசல் பரோட்டா... ஒரு பார்சல் நீங்க வருவீங்கன்னு எடுத்து வச்சேன்... வேளாங்கன்னி திருவிழா பிரியாணி... சிக்கன் பீஸ் ... "

எனச் சீசனுக்குத் தகுந்தமாதிரி எடுத்துவிடுவார் !

" விக்கலைன்னு சொல்லுங்க நானா !... நம்மகிட்டேயே கதையா ?... "

" காசெல்லாம் நாளைக்குக் காலையில பாத்துக்கலாம் ! "

என் தந்தை பேசுவதைக் காதில் வாங்காதது போல, அசட்டு சிரிப்புடன் பொட்டலத்தை வண்டியில் தொங்கும் பையில் தினித்து விடுவார் !

பட்டிணம் பாலம் தாண்டினால் பளிச்சென்ற விளக்குகளுடன் அகலமான யூனியன் பிரதேச சாலை ! நிரவி நெருங்குவதை உணர்த்தும் ஓ என் ஜீ சி வளாகத்தின் சோடியம் வேப்பர் விளக்குகள் ! இருபுறமும் பசுமையான வயல்கள் சூழ்ந்த நிரவி எலந்தர் ஹலந்தர் தைக்காலின் குளத்தில் கோடையில் கூடத் தண்ணீர் மிச்சமிருக்கும் !

அம்பாள் சத்திரத்தில் தொடங்கும் காரைக்கால் எல்லையில் அரசலாற்றில் ஏறி வரும் கடல் காற்று உடல் வருடும் ! வீட்டு வாசலில் வண்டி நின்றதும் சட்டென ஒரு வெறுமை தோன்றும் ! இழுத்துபோர்த்திக்கொண்டு தூங்கும் வரையிலும் பயணக் குளிர் உடம்பில் சிலிர்ப்பாய் ஒட்டிக்கொண்டிருக்கும் !

பயணம் அடுத்தப் பதிவில் முடியும் !


 பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.





Sunday, January 3, 2016

மனிதம் மலரட்டும் !

மனிதநேயத்தில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். மனிதநேயம் ஒரு சமுத்திரம். சமுத்திரத்தின் சில துளிகள் மாசுபடுவதால் சமுத்திரம் என்றும் மாசடைந்துவிடாது.  - மகாத்மா காந்தி



" இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு சிசுவும் இறைவன் மனித இனத்தை கைவிடவில்லை 

என்பதற்கான சாட்சி "   - ரவீந்திரநாத் தாகூர்


காரைக்காலின் காமராஜர் சாலை... விடியலுக்கும் இரவுக்கும் இடையே மத்திய ரேகையாய் கவிழும் மாலை மறையும் பொழுது...

மொட்டையடிக்கப்பட்டு கோரையாய் முடி வளரத்தொடங்கிய தலை ! எந்த உணர்ச்சியும் இன்றி, இல்லாத இலக்கு ஒன்றை விட்டேத்தியாய் வெறிக்கும் பார்வை ! கால்முட்டிவரை நீண்ட, அழுக்கேறி கிழிந்த சட்டை !  தெருவிளக்குகள் இன்னும் எரியத்தொடங்காத மங்கிய வெளிச்சத்தில், தெருவோரத்தில் தள்ளாட்டமாய் நடக்கும் பெண். அவளுக்கு பின்னே,  அதே கோலத்தில்  மழலை மாறாத இரண்டு குழந்தைகள்.

அவ்வப்போது சாலையோர மண் பரப்பிலிருந்து அவளும் அவள் குழந்தைகளும் சாலையின் தார் பரப்பினுள் தள்ளாட்டமாய் நுழையும் போதெல்லாம் க்ரீச்சிட்டு, ஹாரன் அலறும் வாகனங்கள்... அவ்வாகன ஓட்டிகளின் வசவு வார்த்தைகள் !

தன்னை பின் தொடரும் பிள்ளைகள் பற்றியோ அல்லது தன்னை நோக்கி காற்றில் தெரிக்கும் வசவு வார்த்தைகள் பற்றியோ எந்த பிரக்ஜையும் இன்றி சாவகாசமாய் சாலையோரம் நகரும் சேறு படிந்த கால்கள் !

அவளுக்கு எதிர்புறம் விரைந்துகொண்டிருந்த நான், பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு அவரவர் அவசரத்துடன் பறக்கும் வாகனசாரிகளின் உக்கிர பார்வைகளுக்கிடையே வண்டியை திருப்பிக்கொண்டு வருவதற்குள் நீண்ட தூரம் நடந்து மூடப்பட்ட ஒரு கடை வாசலில் குழந்தைகளுடன் ஒதுங்கியிருந்தாள் ! நான் நீட்டிய பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கியவளின் கண்களில் மனிதனை மற்ற உயிரிகளிடமிருந்து வேறுபடுத்தும் ஆறாவது அறிவு சார்ந்த எந்த உணர்ச்சியும் இல்லை !

மனித இனத்தின் இருட்டு பக்கத்தை வெளிச்சமிடும் இவளைப்போன்ற பெண்கள் தேச எல்லைகள் தாண்டி உலகில் எங்கு வேண்டுமானாலும் தென்படுவார்கள் !


பொருளாதார ரீதியாய் மிகவும் பின் தங்கிய ஐரோப்பிய நாடு ருமேனியா. மற்ற ஐரோப்பிய நாடுகளின்  தெருவோரங்களில் ருமேனியா நாட்டினர்  பிச்சை கேட்பது  சகஜம் !

ஒருமுறை என் பணியிடத்துக்கு அருகேயிருந்த கடை வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்துகொண்டிருந்தாள் ஒரு ருமானிய மூதாட்டி. பிரெஞ்சு மனிதர் ஒருவர் அவளை நெருங்கினார்...

அவரது கையில் " பக்கேத் " எனப்படும் நீண்ட ரொட்டி.

தனக்கு கொடுக்க வருகிறார் என்ற ஆவலுடன் அவள் இரு கைகளையும் ஏந்தினாள்... அவளது உதடுகள் " மெர்ஸி... மெர்ஸி " என பிரெஞ்சு மொழியில் நன்றியை முனுமுனுத்தன...

" பிச்சை எடுக்க உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா ?... உடனடியாக இங்கிருந்து போ ! இல்லையெனில் போலீஸாரை அழைக்கவேண்டி வரும் ! "

நீண்ட ரொட்டியை கம்பினை போல அவளது முகத்துக்கு நேராக ஆட்டி மிரட்டிவிட்டு நகர்ந்தார் அந்த கணவான் !

உலகம் முழுமைக்கும் " நாகரீகமும், ஜனநாயகமும் " உபதேசிக்கும் பிரெஞ்சு தலைநகரத்தில் இப்போதெல்லாம் " தர்மம் " கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது ! மெட்ரோ ரயில்களில் ருமானிய தாய்மார்களுடன் அவர்களது பிஞ்சு குழந்தைகளும் கைகளை நீட்டுகின்றன ! அதிவேக சாலைகள் முடிவடையும் பாரீஸ் நகரின் எல்லை சிக்னல்களில் சிரியா அகதிகள் என்று எழுதிய அட்டைகளுடன் குடும்பங்கள் நிற்கின்றன !

" காப்21 " சுற்றுசூழல் மாநாட்டுக்கு வந்த நூற்றி நாற்பத்து சொச்சம் உலக தலைவர்கள் ஒருவரின் கண்களில் கூட இவர்கள் பட்டிருக்கமாட்டார்கள் !!!

டிக்கடி கண்ணில் படும் ஒரு பெண்மணி... தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்... உடல் சுகாதாரம் பேணுவது குறைந்தது... உடைகளில் அழுக்கேற ஆரம்பித்தது... இப்போது கடும் குளிரிலும் தெருவோரங்களில் தூங்குகிறார் !

றந்த யானைக்கு சக யானைகள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துகின்றன ! காகங்கள் கூட பறக்க முடியாமல் தவிக்கும் காக்கையை சுற்றி வட்டமிட்டு பறந்து, கரைந்து பாதுகாக்க முயற்சிக்கின்றன்...

கண்ணெதிரே மனதாலும் உடலாலும் சோர்ந்து, அணுஅணுவாய் உருக்குலையும் சக மனிதனுக்கு உதவ முடியாத மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியினால், நாகரீக வாழ்க்கையினால் என்ன பலன் ? சக உயிரிக்கு பாசக்கரம் நீட்ட முடியாதவன் நிச்சயப்படுத்த முடியாத வேற்று கிரக உயிர்களுக்கு நேசக்கரம் நீட்டி சமிக்ஜை அனுப்புகிறான் !

மனித குலத்தின் தலையாய குணமாய் திகழ வேண்டிய மனிதம், அவர்கள் அழியும் பேரிடர்களிலும், போர் இழப்புகளிலும் மட்டுமே சேற்றுச் செந்தாமரையாய் தலை தூக்குகிறது !

ஒரு கனிவான பார்வை, ஒரு தொடுதல், சில இதமான வார்த்தைகள், ஆத்மார்த்தமான அரவணைப்பு, சிற்சில உதவிகள் என்ற எளிமையான விளக்கத்துக்குள் அடங்கிவிடும் மனிதம் நாம் பெருமையுடன் பாதுகாக்கும் ஐ போனை விடவும் விலை குறைந்ததுதான் ! நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் !

கிறிஸ்துமஸ் தினத்தன்று வேலை முடித்து வேகமாக கிளம்பிக்கொண்டிருந்தாள் என்னுடன் பணிபுரியும் ஒரு பெண்...

" குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட போகும் அவசரமா ?!... "

" இந்த வருடம் பிள்ளையை என் கணவனுடன் அவனது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்... நானும் என் தோழிகளும் இன்று இரவு முழுவதும் நகரின் தெருக்களில் உறங்குபவர்களுக்கு இலவச உணவு வழங்க போகிறோம் ! "

எனது பதிலுக்கு காத்திருக்காமல் சட்டென வெளியேறிவிட்டாள் !

இந்த பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பெண்ணை போலவே இவளுக்கும் தேச எல்லைகள் கிடையாது... சென்னை மாநகரை அரவணைத்த அதே மனிதம்தான் பாரீஸ் நகரத்தின் தெருவாசிகளுக்கும் உணவளிக்கிறது !

இப்புத்தாண்டில் மனிதம் தழைக்க வேண்டுவோம் ! வலைநட்புகளுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !


பட உதவி : GOOGLE

இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.