Monday, June 23, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன ?




ஸ்த்ரேலியாவுல‌ இருக்கற சொக்கன் சுப்ரமணியன் அபுதாபியில இருக்கற நம்ம கில்லர்ஜீயை உசுப்பிவிட்டு அவரு, பிரான்ஸ் ஈபில் டவருக்கு கீழ தேமேன்னு நின்னு எதையோ கிறுக்கிக்கிட்டிருந்த‌  என்னை இதுல மாட்டி, சாரி அவர்  பாஷையில கோர்த்துவிட்டு...நியாயமாரே... ஏன் ? ஏன்ங்கறேன் ?!... சென்னை விமான நிலையத்துல ஒரு நாளைக்கு சந்திக்காமலா போயிடுவோம் ? அப்ப நாட்டாமையை சொம்போட சேர்த்து தூக்கிடுவோம்ல !


மேட்டர் ஒண்ணுமில்ல மக்களே ! ஒரு பத்து கேள்விகளுக்கு நான் பதில் சொல்லனுமாம்... யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்ன்னு நான் ஒரு பத்துபேரை இதுல கோர்த்துவேற‌ விடனும் ! சரி, சரி, ஆனந்த விகடன்லேருந்து பேட்டி காண விரும்பற அளவுக்கு நாம ஒண்ணும் பவர் ஸ்டார் கிடையாது ! கில்லர்ஜீ பேட்டியே போதும் !


படிக்க சகிக்காதுதான் என்றாலும் அன்பர்கள் இறுதிவரை படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்... இறுதியில் அவர்களின் பெயர் பட்டியலில் இருக்ககூடிய வாய்ப்பு உள்ளதால் !




1. உங்களுடைய நூறாவது பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள் ?
குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் ( வளைப்பூ நண்பர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை  உண்டு ! ).., முடிந்தால் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டாட ஆசை !


2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் ?


கற்றுக்கொள்வதற்கு முன்னால் இந்த வாழ்க்கை ஓட்டம் எனக்கு என்ன கற்றுத்தர முயற்சித்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன் !


3. கடைசியாக சிரித்தது எப்போது ? எதற்காக ?


இந்த பதிவை எழுத தொடங்குவதற்கு முன்னால்...


நண்பர் கில்லர்ஜி  இந்த சுழற்சி பதிவில் என்னை சேர்த்திருப்பதாக அவர் எனக்கு அனுப்பிய கமெண்ட்டை  படித்தபோது  ! அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்...


" நண்பா, உங்களை ஒருமேட்டரில் கோர்த்து விட்டு இருக்கிறேன்... "


அப்பாடா... மேட்டர், கோர்த்துவிட்டிருக்கிறேன்னுல்லாம் நீங்க பீடிகை போட்டதை படித்ததும் ஏதோ மோகனாவின் மோகினியாட்டம், மோகனின் மோகமுள் மாதிரி எதுகை மோனையா சாமானியனின் சல்லாபங்கள்ன்னு பதிவு போட்டுட்டீங்களோன்னு பயந்துட்டேன் ஜீ !


குட்டி, புட்டி மாதிரி மேட்டர் ( இது தமிழ் வார்த்தை இல்லன்னாலும் ! ), கோர்த்துவிடறது வார்த்தைக்கெல்லாம் எத்தனை அர்த்தமிருக்கு பாருங்க !


4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன ?


இனிமேல் பழங்கால வாழ்க்கைக்கு திரும்புவோம் என மக்களுக்கு பிரச்சாரம் செய்வதோடு தாமஸ் ஆல்வா எடிசன் என்றொரு மனிதரை அனைவரும் உடனடியாக மறக்க வேண்டும் என கோரிக்கை வைப்பேன் !


( பதில் உபயம் : கில்லர்ஜீ. ( இந்த பதிலுக்கான அனைத்து உலக உரிமைகளும் அவருக்கே சொந்தமானது ! )


இத்துடன் நான் சேர்க்க நினைப்பது...


மின்சாரம் இல்லாத காரணத்தால் பிளேடு, ஜல்லியடி பதிவுகளை வளைப்பூவில் பிரசுரிக்க முடியாத வலைப்பூ நண்பர்களை கூட்டி சங்கம் ஆரம்பித்து இயற்கை விவசாயம் செய்வேன்  ! ஒருவர் வெட்டிய பாத்தியை பற்றி மற்றொருவர் " லைக் " போடும் வசதியுடன் !


5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் நீங்கள் அவர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன ?


உங்களின் பிரச்சனைகள் அனைத்தையும் நான்கு சுவற்றுக்குள், உங்களுக்குள் பேசி தீர்த்து கொள்ளுங்கள். ஒரு ஜோடியின் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் மூன்றாவது நபரின் பெயர்தான் பிரச்சனை ! உங்கள் பிரச்சனை மற்றவர்களுக்கு பொழுதுபோக்கு செய்தி மட்டுமே என்பதை மறந்துவிடாதீர்கள்.


பெண்ணியம், ஆணியம் போன்ற பட்டிமன்ற தலைப்புகளையெல்லாம் வாழ்க்கைக்குள் நுழைத்து குழம்பாதீர்கள் ! இல்லறம் என்பது விட்டுகொடுத்தல்... ஈகோ அறுத்தல் !


6. உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் ஒன்றை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள் ?


பட்டினி சாவு !


" தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் " என முழங்கிய பாரதியின் புத்த‌கங்கள் அலமாரியை அலங்கரிக்க, ஊர் மொத்தமும் எலும்பும் தோலுமாய் சிறுக சிறுக செத்துக்கொண்டிருக்கும் ஆப்ரிக்க பஞ்ச காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து உச் கொட்டியபடி பிட்சா, பர்கரை விழுங்கி, கோக் குடித்து ஏப்பம் விடும் நாகரீக மனித குணம் ... மானுட அவமானம் !


7. நீங்கள் யாரிடம் அட்வவைஸ் கேட்பீர்கள் ?

பிரச்சனையை பொறுத்து நெருங்கியவர்களிடம் கலந்தாலோசித்தாலும் இறுதி முடிவு மிஸ்ட்டர் மனசாட்சி தீர்மானிப்பதுதான் !


8. உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள் ?


தவறானவர்களால்தான் " தவறான " தகவலை பரப்ப முடியும் ! என்னை பற்றி எனக்கும், என்னை நேசிப்பவர்களுக்கும் நன்றாகவே தெரியும் ! ஆகையால்... மெளனம் என்னும் மிக வலிமையான ஆயுதத்தை பயன்படுத்துவேன் !


9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?


... அந்த இழப்பின் வலியை அனுபவித்து, வடுவை சுமப்பவன் என்ற முறையில், வாழும் காலம் முழுவதும் இணந்து வருவாள் என்ற நம்பிக்கையுடன் கைப்பிடித்தவளை வாழ்வின் ஆரம்பத்திலேயே இழக்கும் நிலை என் நண்பர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் வரவேண்டாம் என இறைவனை பிரார்த்தித்துகொண்டு...


உன் குழந்தைகளுக்கு தாயுமானவனாக இரு ! இனி வாழ்க்கையில் நீ எடுக்கும் எந்த முடிவும் உன் குழந்தைகளின் நல்வாழ்க்கைக்கு சாதகமானதாகவே இருக்க வேண்டும் ! உன் குழந்தைகளை நீ நடத்தும்விதம்தான் நீ உன் மனைவியை எப்படி நேசித்தாய் என்பதை சொல்லும்.


இழப்பை பொறுத்தவரை...

இதுமட்டுமல்ல...
எதுவும் கடந்துபோகும் !
மனவெளியில்
அதன் ஞாபக துகள்களை
நிரந்தரமாய் விட்டுவிட்டு !!


10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?


வாசிப்பு... மற்றும் எழுத்து !


இந்த வாய்ப்பை எனக்களித்த நண்பர் கில்லர்ஜீக்கு நன்றி ( மெய்யாலுங்க... காமெடி கீமெடி பண்ணல ! )


இனி யான் பெற்ற துன்பத்தை பகிர்ந்துகொள்ளப்போகும் என் வலைநண்பர்கள்...


கிங் விஸ்வா - tcuintamil.blogspot.fr
கார்த்திக் சோமலிங்கா - www.bladepedia.com
காரிகன் - kaarigan-vaarththaiviruppam.blogspot.fr
அமுதவன் - amudhavan.blogspot.fr
மது எஸ் - www.malartharu.org
அருணா செல்வம் - arouna-selvame.blogspot.com
ஊமைக்கனவுகள் - oomaikkanavugal.blogspot.fr
ஸ்கூல்பையன் - www.schoolpaiyan.com
வாலிமீகி தேவகோட்டை - valmeegi.blogspot.com
முட்டா நைனா - muttanina.blogspot.com


பின்குறிப்பு : இந்த பத்து பேரில் பதிலளிக்கும் முதல் மூன்று பேருக்கு, எனது சாமானியனின் கிறுக்கல்கள் முதல் பாகம் புத்தகம் இனாமாக அனுப்பிவைக்கப்படும். ( நான் இப்படியே எழுதிகொண்டிருந்து, மக்கள் தாமஸ் ஆல்வா எடிசனை மறக்கும் சூழ்நிலையும் ஏற்படாதிருந்தால் இந்த புத்தகம் 2020ல் வெளிவரும் என்பதை தெரிவித்துகொண்டு, புத்தகத்தை பெற சுய விலாசமிட்ட பெரிய கவருடன், பிரான்சிலிருந்து உங்கள் முகவரிக்கு அனுப்ப தேவைப்படும் தொகையையும் தாங்கள் அனுப்பவேண்டும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் !!! )

Sunday, June 15, 2014

முற்பகல் செய்யின்... ( சிறுகதை )

பிரபல ஐந்துநட்சத்திர ‍ஹோட்டல் ஒன்றின் அறை...


" கொண்டாந்துட்டீங்கல்ல...நம்ம வாக்கு சுத்தம்... என்னால முடியும்ங்கற காரியத்துக்குதான் ஒத்துக்குவேன் ! நமக்கு... கையில காசு... ம்ம்ம்... டேய் அப்புறம் என்னா ?! "


" ...ம்ம்ம்... வாயில தோச தலைவரே ! "


சோடாவில் கலந்த விஸ்கியை விழுங்கியபடி இழுத்த‌ அமைச்சரின் பேச்சுக்கு எடுத்துகொடுத்தான் அவருக்கு பக்கத்தில் நின்றிருந்த அந்தரங்க தொண்டரடிபொடி !


" இதுல நீங்க கேட்ட ஒரு கோடி இருக்கு சார் ! "


எதிரிலிருந்த கோட்சூட் மனிதர் தயக்கமாய் சூட்கேஸை நீட்டினார் !



" ம்ஹும்... அதை நான் தொட மாட்டேன்... கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு படம் புடிச்சிட்டா... "


போதையிலும் புத்திசாலித்தனமாக (!) அமைச்சர் பேச, விழித்தார் கோட்சூட் !


" ஐயா வாங்கமாட்டாரு... நான் வாங்குவேன்ல... ! "


பாய்ந்து பெட்டியை பிடுங்காத குறையாக வாங்கிய தொண்டரடிபொடியிடமிருந்து வீசிய பட்டை வாடைக்கு முகம் திருப்பிகொண்டார் கோட்சூட் !


" ஐயா... நீங்க மத்தவங்க மாதிரியா ? படம் புடிக்கறவன் கொடலை உருவிட மாட்டோம் ?! " 


கை உயர்த்தி சொறிந்து கொள்வது போன்ற பாவனையில் இடுப்பு வேட்டியில் சொருகியிருந்த பிச்சுவாவை தொட்டுக்காட்டியபடி தொண்டரடிபொடி உறும, ஏஸியை மீறி கோட்சூட்டின் முகத்தில் வியர்வை ஊற்று !


" சார் மெர்ஸலாகிட்டாபோல... சும்மா தமாசுக்கு சார் ! "


" அப்ப நான் கிளம்பறேங்க ! காண்ட்ராக்ட் கிடைச்சதும் மிச்சத்தை செட்டில் பண்ணிடறேன்... "



தொண்டரடிபொடியின் தமாசுக்கு அமைச்சரும் பெரிதாய் சிரிக்க, அவசரமாய் கிளம்பினார் கோட்சூட் !


" டேய்... சாரை வாசலாண்ட விட்டுட்டு வா... "


"லைவரே... யாரோ ஒரு சின்ன பொண்ணு உங்களாண்ட பேசனும்னு டார்ச்சர் கொடுக்குது தலைவரே.... "


" அது யாருடா ? நான் இங்க இருக்கறது நம்ம கட்சிகாரனுங்களுக்கே தெரியாதே... "


கோட்சூட்டை வழியனுப்பிவிட்டு வந்த தொண்டரடிபொடி சொல்ல சற்றே உஷாரானார் அமைச்சர் !


" இல்லீங்க தலைவரே நல்லா மிரட்டி உருட்டி விசாரிச்சிட்டேன்... தப்பா தெரியல... நீங்க கார்லேருந்து இறங்குனதை பாத்திருக்கு... இளசு தலைவரே... இருபது இருபத்திரெண்டுதான் இருக்கும்... சும்மா சினிமா ஸ்டாராட்டம் இருக்கு தலைவரே ! "


" எங்கடா ? "


தலைவரின் சபலம் விழிக்க தொடங்கியது !


" கெஞ்சிக்கினே என் பின்னாடியே ரூம் வாசல் வரைக்கும் வந்துடிச்சி தலைவரே... தோ கூப்பிடறேன் ! "


" ணக்கம் சார் ! "


அலைபாயும் கூந்தலும், டைட் டீ ஷர்ட்,  ஜீன்சுமாய் அறைக்குள் நுழைந்த இளம் பெண்ணை கண்டதும் போதையில் இடுங்கியிருந்த அமைச்சரின் கண்கள் அகல விரிந்தன !


" ‍ஹய்யோ... நான் உங்க பேன் சார்... நீங்க செஞ்ச நல்ல காரியங்களையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கேன் சார்... யூ ஆர் ரியலி கிரேட் சார் ! "


ஏதோ சினிமா நடிகரிடம் பேசுவதை போல அவள் வழிகிறாள் என புரிந்தாலும் அது அமைச்சருக்கு பிடித்திருந்தது ! அவள் கைகள் உயர்த்தியபோது குட்டை டீ ஷர்ட் விலகி தெரிந்த சிவந்த சின்ன இடுப்பு இன்னும் பிடித்திருந்தது !


" ம்ம்ம்... சொல்லும்மா என்ன வேணும் ? "


" அது வந்து... சார் ! இந்த ஆளை கொஞ்சம் வெளிய அனுப்புங்க சார் ! மீசையும் தொப்பையுமா... ஐயே ! "


சட்டென அருகில் வந்து கிசுகிசுத்தவளை கண்டு அமைச்சரின் இதயதுடிப்பு எகிறியது !



" டேய் ! நீ கீழ பார்ல இரு... கையில செல்போனை வச்சிக்க... நான் பாப்பாகிட்ட பேசிட்டு கூப்பிடறேன்... "


தனது தொப்பையை ஒரு கையாலும் மீசையை மறுகையாலும் தடவிகொண்டே  தொப்பை தொண்டரடிபொடியை விரட்டினார் அமைச்சர் !


" டேய்... இரு ! இரு ! இந்த பெட்டியை எடுத்துக்கிட்டு போயிடு... இல்ல ! வேணாம் ! பாருல வச்சுக்க வேணாம் ! "


உஷாராக ஆரம்பித்து படு உஷாராக முடித்தார் அமைச்சர் !


" ம்... இப்ப சொல்லும்மா ! "


" அது வந்து சார்... ‍ஹய்யோ ! என்ன சார் இது ? விஸ்கியை சோடாவுல கலந்து... நானே ரா தான் சார் ! "


அமைச்சரின் முகத்துக்கு நேராக அலைபாய்ந்த அவளின் கூந்தல் மணத்திலும், பெர்ப்ப்யூமிலும் அவரின் ரத்தத்தில் ஒரு பெக் கூடியது ! அவளோ உரிமையாய் அவரின் கிளாசில் ஸ்காட்சை தாராளமாய் கவிழ்த்துவிட்டு பக்கத்து கிளாசில் தனக்கென கொஞ்சமே கொஞ்சம் ஊற்றிகொண்டாள் !


" ஆ‍ஹா ! இந்த காலத்து பொண்ணுங்க இருக்கீங்களே... "


முடிக்காமலேயே அவள் கொடுத்த கிளாசை தன் வாயில் கவிழ்த்துகொண்டார் அமைச்சர் !


" வா ! வா ! வந்து சீக்கிரமா வண்டில ஏறு ! "


சூட்கேசுடன் ஓடிவந்தவளை அவ‌சரப்படுத்தினான் அவன் !


" தூ... உங்கப்பன் இருக்கானே.... சரியான தூ....டா ! எங்க கிழவன் கையைபிடிச்சி இழுத்துடுவானோன்னு பயந்துட்டேன் ! அதோட... ரூமுலேருந்து வெளியே வந்தப்போ ரிசப்சன்ல போலீஸ்க்காரங்க அவரோட ரூமை விசாரிச்சிக்கிட்டிருந்தாங்க...


" அந்தாளை பார்க்க போலீஸ் வர்றது சகஜம்... அதுவும் மாச ஆரம்பம்... மாமுலுக்கா இருக்கும்...


" ஏன்டா ? என்ன இருந்தாலும் அப்பா காசையே இப்படி... "


" சும்மா இருடீ ! நல்லவாயன் சம்மாதிச்சதை நாரவாயன் திங்கறான்னு சொல்வாங்க... எங்கப்பனே ஒரு நாரவாயன்தாண்டி ! இது மாதிரி எத்தனை சூட்கேஸ் அந்தாளு பெட்ரூமுல திறக்காம கிடக்கு தெரியுமா ?... சரி ! சரி ! பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் போன் பண்ணி இன்னைக்கு நைட் பார்ட்டியோட ஜமாவை ஆரம்பிக்கறோம்ன்னு சொல்லு ! "


" மிஸ்டர்... அந்த பெட்டியை கொடுத்துட்டு எங்ககூட வர்றீங்களா ப்ளீஸ் ! "


" யோவ் ? யாருய்யா நீ ? நான் யாருன்னு தெரியுமா ? "


" தெரிஞ்சுதான் பேசறேன் தம்பி ! நான்... லஞ்ச ஒழிப்பு துறை... "


புன்சிரிப்போடு தன் அடையாள அட்டையை காட்டினார் நான்கைந்து பேர் புடைசூழ நின்றிருந்த மனிதர் !


" ஏய்... நீ எங்கம்மா ஓட பார்க்குற ? "


சட்டென ஓட யத்தணைத்த இளம்பெண்ணை பாய்ந்து பிடித்தார் மப்டியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி !


ஞ்சம் வங்கிய அமைச்சர் மதுபோதையில் கைது செய்யப்பட்டார் ! லஞ்ச பணத்துடன் தப்பிக்க முயன்ற அமைச்சரின் மகனும் இளம் அழகியும் பிடிபட்டனர் !!


மறுநாள் தினசரிகளின் தலைப்பு செய்தியில் அச்சிடப்பட்டிருந்த புகைப்படங்களில் மட்டுமே அமைச்சர் சிரித்துகொண்டிருந்தார் !





இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.

Wednesday, May 28, 2014

முபாரக்

வாழ்க்கையின் சில சமயங்களில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் " கைப்புள்ள " கேரக்டர்களை  சந்திக்கவும், அவர்களுடன் பழகவும் நேரிடும் ! வாய்ச்சவடாலும், குடித்துவிட்டு சலம்புவதுமாக சமூக வரைமுறைகளை இவர்கள் அசால்ட்டாக மீறினாலும் இந்த  கைப்புள்ளைகளின் பேரில் நமக்கு கரிசணமே மிஞ்சும் ! காரணம் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் கள்ளங்கபடமற்ற மனசு ! எப்படி உதார்விட்டு திரிந்தாலும், எவ்வளவு அவமானப்பட்டாலும் நட்புக்கு ஒரு உதவியென்றால் இவர்கள்தான் முதலில் நிற்பார்கள்.

முபாரக்கும் அப்படிப்பட்டவன் தான் !

விடலைப் பருவத்தில் நாங்களெல்லாம்   தெருவோரமாய்  நின்று பயபார்வையுடன் சைட் அடிப்பதை மட்டுமே கெட்டபழக்கமாக (!) கொண்ட சுமார் கெட்டவர்கள் என்றால் எங்களைவிட இரண்டு வயது மூத்தவனான முபாரக் பாரில் அமர்ந்து குடிக்கும் அளவுக்கு தைரியமான ராஜா ரெக்கார்டிங் சென்ட்டர் குரூப்பை சேர்ந்த மகா பொல்லாதவன் !!

நான் முபாரக்கை முதன் முதலில் சந்தித்ததே ஒரு சுவாரஸ்யமான கதை !

தனியாக நின்று சைட் அடித்தால் பிகர் மடங்காது என்பது ஜொள்ளுதாத்தா காலத்து நம்பிக்கை என்பதால் ரொம்ப சுமார் மூஞ்சி குமாரான நான் தான் என் ஏனைய சுமார் மூஞ்சி குமார் நண்பர்களுக்கு சைட் துணை ! அப்படி ஒரு நாள் நண்பனின் காதலுக்கு துணையாக தெருவோரத்தில் நின்ற சமயத்தில் எதிர்கொண்டு மடக்கினான் முபாரக் ! என் நண்பன் சைட் அடித்தது முபாரக்கின் ஆள் !

எங்களிருவரையும் பக்கத்திலிருந்த பெட்டிக்கடைக்கு தள்ளி சென்றவன், ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு அவனின் காதல் பிரதாபங்களைப் பேச தொடங்கிவிட்டான் !

அந்த பெண்ணை காலேஜுக்கு அழைத்துவரும் ரிக்சாக்காரருக்கு சட்டை வாங்கிகொடுத்ததிலிருந்து, அவள் வரும் ரிக்சாவை சைக்கிளில் துரத்தி சென்று ரோஜாப்பூ வீசியது வரை அவன் சொல்லிமுடித்தபோது இருட்டிவிட்டது ! ஒரு வழியாய் அவனிடமிருந்து தப்பித்து ஓடினோம் !

ஒரு வாரம் கழித்து என்னை மீன்டும் கடைதெருவில் வைத்து மடக்கினான் !

" என்னாடா ?! அந்த காலேஜ் பக்கமே காணோம் ?....! "

"  அந்த பொண்ணை நான் சைட் அடிக்கல முபாரக்  ! என்னோட பிரெண்டு தான்... இப்ப அது உன்னோட ஆளுன்னு தெரிஞ்சதும்.... "


" ஏண்டா... நான் அவளை லவ் பண்றேன்னு சொன்னனே தவிர அவ என்னை லவ் பண்றான்னு சொல்லலையே ! "

நான் ஜகாவாங்கி முடிக்கும் முன்னரே ஒரே போடாக போட்டான்  முபாரக் !

அந்தப் பெண் என் நண்பனையும் ஏறெடுத்து பார்க்கவில்லை என்றாலும் முபாரக்குடனான  என்  நட்பு இறுகியது !

ரு நல்ல முகுர்த்தத்தில் என்னை ராஜா ரெக்கார்டிங் செண்ட்டர் குரூப்புக்கு அறிமுகம்  செய்துவைத்தான் ! கடைக்கு வரும் மற்ற நண்பர்களெல்லாம் வேலை முடித்தோ, காலேஜிக்கு பிறகோ வருவார்கள். ஆனால் கடையின் முழுநேர உறுப்பினன் முபாரக் !  சரியாக கடை திறக்கும் நேரத்தில் வெள்ளை வேட்டி, ஏதாவது ஒரு கலர் பிளெய்ன் முழுக்கை சட்டையில் ஆஜராகிவிடுவான் முபாரக். மதியத்துக்கு முன்னால் வடை, சமோசா, இரண்டு மூன்று டீ, சிகரெட்... மதியம் உணவுக்கு செல்பவன் குட்டித்தூக்கத்துக்கு பிறகு மீன்டும் வருவான் ! இரவு கடை மூடும்வரை டீ, சிகரெட் !


ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் முபாரக்கின் திருநாள் !

" அண்ணே ! சீக்கிரமா கடையை மூடுங்க... பாருல டேபிள் அரேஞ்செல்லாம் பண்ணிட்டேன்... கிளம்புங்க கிளம்புங்க ! "

ஆரம்பத்திலிருந்தே பரபரப்பவனின் சலம்பல் பாரில் சுருதி ஏறியவுடன் அதிகமாகும் !

" அண்ணே... பில்லை நல்லா பாருங்கண்ணே...போன தடவை ரெண்டு வாட்டர் பாக்கெட்டை கூட்டிட்டான் ! "

புல் மப்பிலும் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக சலம்புவான் !

ரிட்சையில் பிட் அடித்ததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டான் எனபது தெரியுமே தவிர,அவன் படித்தது எத்தனை வகுப்புகள் என்பது யாருக்கும்  தெரியாது !

" ம்ம்ம்... சவுத் ஸ்கூல்ல சிங்கமா  சுத்திக்கிட்டிருந்த என்னை அந்த பி டி மாஸ்டர் மட்டும் பிடிக்காம விட்டிருந்தா.... "

மப்பில் சலம்பும்போது வகுப்பை  கேட்டால் தலையில் குட்டுவான் !

" டேய் ! டேய் ! நிறுத்து ! எங்க சைட் அடிக்கவா ? இடுப்புயரம் வளரல... அதுக்குள்ள... சரி சரி ! ‍‍ஹீரோ யாரு நீயா ? அப்ப நீ கேரியருக்கு போ ! டேய் துணைக்கு போற நாயி நீ சைக்கிள் மிதி ! பின்னால  உக்காந்து வர்றவனுக்குதான் பிகர் மடங்கும் தெரியும்ல.... அப்புறம்... சட்டையை  இன் பண்ணாத.... "

பெண்கள் உயர்நிலைப்பள்ளி பக்கம் சுற்றும் விடலைகளை அவ்வப்போது நிறுத்தி லவ் டிப்ஸை அள்ளி வீசுவான் !

" இவளையெல்லாம்.... இவளையெல்லாம்.... "

ஒரு மாலை கடைக்கு வந்தவன் திரும்ப திரும்ப பேசிக்கொண்டே புகைவிட்டான் !

" ஏன் முபாரக் ? என்னாச்சி... ? "

தான் ரெக்கார்ட் செய்துகொண்டிருந்த பாட்டுக்கு ஷார்ப்பை ஏற்றிவைத்துவிட்டு வந்து முபாரக் அருகில் அமர்ந்து கேட்டார் கடை ஓனர் சகாயம் அண்ணன் ! மெல்லிய சிரிப்புடன் எந்த சலனமுமில்லாமல் பேசி, பசங்களை பேச வைக்கும் கலையில் சகாயம் அண்ணன் கைதேர்ந்தவர் !

" அது வந்துண்ணே... நம்ம மில் ஓனர் பொண்ணு இருக்கால்ல... அவ... அவ... என்ன சொல்லியிருக்கா தெரியுமா ?.... "

" ம்... சொல்லு... சொன்னாதானே தெரியும் ?! "

முபாரக் பேச்சில் சுவாரஸ்யமாக, அவனின் கையிலிருந்த சிகரெட் அண்ணன் கைக்கு மாறியது !

" அவளோட பிரெண்ட் ஒருத்தி அவ குஸ்பூ மாதிரி இருக்கான்னு சொன்னதுக்கு இவ, நான் என்னா அவ்ளோ அசிங்கமாவா இருக்கேன்னு கேட்டிருக்காண்ணே ! இவளையெல்லாம்... "

" சரி, விடு முபாரக் ! மேக்கப் இல்லாத குஸ்பூவை நாம யாருமே பார்த்ததில்லதானே ?! "

கூலாக பேசிக்கொண்டே முடிந்துபோன சிகரெட் துண்டை தூரவீசிவிட்டு மீன்டும் ரெக்கார்டிங் போய்விட்டார் சகாயம் அண்ணன் ! நாங்கள் சிரிக்க தொடங்குவதற்கு முன்னாலேயே வேறு சிகரெட் வாங்க தெருவில் இறங்கியிருந்தான் முபாரக் !

" ச்சீ ! போய்யா... ஆண்டவன் உனனக்கு புண்ணியம் பண்ணாததாலதானே நீயே பிச்சை எடுக்கறே... இதுல எனக்கு புண்ணியமா ?! "

" அய்யா தர்மம் பண்ணுங்க ! ஆண்டவன் உங்களுக்கு புண்ணியத்தை கொடுப்பார் !..."

என இரைஞ்சும் பிச்சைக்காரரை எரிந்து விழுந்து விரட்டுவான் !

மதியம் அதே பிச்சைக்காரருக்கு கையேந்திபவன் மாமி கடையில் மீல்ஸ் வாங்கிகொடுத்துவிட்டு இவன் சிங்கிள் டீ அடித்துகொண்டிருப்பான் !

" யப்பா... தர்மபிரபு... உண்னோட கணக்கு நோட்டே முடியபோகுதுப்பா... சீக்கிரமா காசைகொடு ! "

" தலைவர் சொல்லிட்டாரு மாமி ! ஆண்டவன் எனக்கு புண்ணியம் கொடுத்ததும் முதல் போனி மாமிக்குதான் ! "

புலம்பும் மாமிக்கு நக்கல் பதில் !


விசிறி, ரசிகன் என்பதையெல்லாம் தாண்டி இளையராஜா வெறியன் முபாரக் ! அவரின் பாடல்களைதான்,அவரின் பாடல்களை மட்டும்தான் கேட்பான்.

" என்னா மியூசிக்... நம்ம மொட்டை... மொட்டைதாண்டா ! "

ஒரு கையில் சிகரெட்டும் மறுகையில் டீயுமாய் கண்கள் மூடி சொக்குவான் ! ( ராஜாவின் ரசிகர்கள் மன்னிப்பார்களாக ! இளையராஜாவுக்கு முபாரக் வைத்திருந்த செல்லப்பெயர்தான் மொட்டை ! )

ரோஜா பாடல்கள் வெளிவந்து ரஹ்மான் புயல் வீச தொடங்கிய காலம்...

" ம்ம்‍ஹும் ! வேதம் புதிது அது இதுன்னு எத்தனை பேரை பாத்துட்டோம்... ?! இதெல்லாம் சும்மா சீசன் மியூசிக் ! நாளைக்கு நம்ம மொட்டையோட படப்பாட்டு ரிலீசாகுதுல்ல... அண்ணே ! நம்ம ரெக்கார்டிங் செண்ட்டருல அந்த ரோஜா பட பாட்டு வரக்கூடாது ! "

" டேய் லூசு ! ராஜா ரெக்கார்டிங்ன்னு பேர்தான் வச்சிருக்கேன்.... ராஜா பாட்டு மட்டும்தான் கிடைக்கும்ன்னு எழுதலை ! ஏன்டா ? எம்.எஸ்.வி, சங்கர் கணேஷ் பாட்டுக்கெல்லாம் ஒன்னும் சொல்லாத இப்ப இந்த சின்ன பையனோட பாட்டு மட்டும் வேணாங்கற... ஏன் உங்க தலைவரை இந்த பையன் மிஞ்சிடுவான்னு பயமா இருக்கா ?! "

சகாயம் அண்ணனின் கிண்டலுக்கு சட்டென எழுந்துபோய்விட்டான் முபாரக்.

அடுத்தடுத்த நாட்களில் அவர் வியாபார தேவைகளை விளக்கி கூறியும் மசிவதாயில்லை முபாரக் ! அவனுக்கு தெரியாமல் ரோஜா பட ரெக்கார்டை வாங்கிவிட்டார் சகாயம் அண்ணன். விசயம் தெரிந்ததும் கோபித்துகொண்டு போய்விட்டான் முபாரக் !

" விடுங்கடா நாளைக்கு காலையில கடைக்கு முன்னால நிப்பான்..   இல்ல... வார கடைசியில பாருக்கு  வரனுமுல்ல... ! "

இல்லை ! ஒரு மாதம்வரை கடைபக்கமே வரவில்லை முபாரக் ! வெற்றிலை பாக்கு நீங்கலாக அனைவரும் சகாயம் அண்ணன் தலைமையில் அவன் வீட்டுக்கு கிளம்பினோம்...

" புரிஞ்சிக்கோ முபாரக்... இன்னைய தேதிக்கு அந்த பட பாட்டை தான் அத்தனைபேரும் ரெக்கார்ட் பண்ணி கேக்கறான்... கடை மேல இருக்கற லோன் உனக்கு தெரியும்தானே... "

வீட்டு திண்ணையில் குந்தி அமர்ந்திருந்த முபாரக்கிடம் தங்கையின் கல்யாணம்,தம்பியின் படிப்பு என,  சொந்த சோக கதைகளையெல்லாம் கலந்துகட்டினார் சகாயம் அண்ணன் !

" ஆனா ஒரு கண்டிசன்... நான் இருக்கறப்போ அந்த பட பாட்டை ரெக்கார்ட் போட கூடாது ! "

நீண்ட பஞ்சாயத்துக்கு பிறகு மனமிறங்கினான் முபாரக் !

" நீ சொல்லிட்டீல்ல... சரி முபாரக் ! "

"  கிழிஞ்சுது போ ! இவன் கடையில இல்லாத நேரம்ன்னு ஒன்னு இருந்தாதானே... "

சகாயம் அண்ணனின் பதிலுக்கு கமெண்ட் அடித்த ரமேஷின் வாயை அவசரமாய் பொத்தினேன் !

" சரிப்பா ! வாங்க கடைக்கு கிளம்பலாம் ! "

" இல்ல... இல்ல... முதல்ல பாருக்கு... அப்புறமா கடைக்கு ! "

" எல்லா கோட்டையும் அழிச்சிட்டு முதல்லேயிருந்து " கதையாய் திண்ணையிலிருந்து குதித்தான் முபாரக் !

" பாருடீ ! இந்த வெட்டி ஆபீசரை அழைச்சிக்கிட்டு போக இத்தனை வெட்டிங்க ! நல்லவேலை... திண்ணை தேய்ஞ்சிடுமேன்னு பயந்துக்கிட்டிருந்தேன் ! "

ஜன்னலிலிருந்து கேட்ட முபாரக்கின் பெரிய அக்காவின் குரல் சத்தியமாய் எங்கள் காதுகளில் விழவில்லை !

 ளையராஜாவின் சிம்பொனி வெளியீட்டுவிழா நடந்த நேரத்தில், ஊரின் பிரமுகர் ஒருவருக்கு வந்திருந்த அந்த விழா அழைப்பிதழை எப்படியோ வாங்கிகொண்டு வந்துவிட்டான். இளையாராஜாவின் முகம் ஆயில் பெயிண்ட்டினால் வரையப்பட்ட ஓவியம் அச்சிடப்பட்ட அழைப்பிதழ் !

நான் கொஞ்சம் சுமாராக வரைவேன் ! ஒரிஜினலின் மீது கட்டமிட்டு வரையும் பாணியில், ஏறக்குறைய தத்ரூபமாய் வரைந்துவிடுவேன் ! இளையராஜா ஆயில் பெயிண்டிங் படத்தை என்னிடம் வரைந்து கேட்டான் முபாரக். அதுவும் கேன்வாசில் ! அதனை ரெக்கார்டிங் செண்ட்டரில் மாட்ட வேண்டுமென்பது அவன் ஆசை ! அது எனக்கு சரியாக வராது என எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஓவியத்துக்கான அனைத்து உபகாரணங்களையும் வாங்கி வந்துவிட்டான் !

பல மாதங்கள் உழைத்து, ஒரு வழியாய் வரைந்து முடித்து, ஒரு சுபமுகுர்த்த நாளில் கடைக்கு எடுத்து சென்றேன்...

" என்னாடா ?... முபாரக் இளையராஜா படம் கேட்டான்... நீ அவரோட பையன் கார்த்திக் ராஜாவை வரைஞ்சி கொண்டுவந்திருக்க... "

சகாயம் அண்ணன் சீரியசாக கேட்க, சிறிது நேரம் என்னை முறைத்த முபாரக்...

" சரி விடுங்கண்ணே ! ராஜாவோ ராஜாவோட மகனோ... மாட்டிடுவோம் ! "

ராஜா ரெக்கார்டிங் செண்ட்டரில் கார்த்திக் ராஜா கொஞ்ச காலம் முறைத்துக்கொண்டிருந்தார் !



" இதென்னா புஸ்த்தகம் ?!... டேய் உள்ளார கில்மா புக் தானே ஒளிச்சி வச்சிருக்கற... ? "

" இல்ல முபாரக்... பாலகுமாரன் புக்தான் ! "

" பாலகுமாரனா ?... அது யாரு ! "

நான் லைப்ரரியிலிருந்து எடுத்து சென்றிருந்த புத்தகத்தை பிடுங்கி வைத்துகொண்டு சலம்பியவன், கடைக்கு இளம் பெண்கள்கூட்டம் ஒன்று வருவதை கண்டதும் சட்டென புத்தகத்தை விரித்துவைத்துகொண்டான் !

" சும்மா சொல்லக்கூடாதுடா.... பலகுமாரன் பாலகுமாரன் தான் ! இவரும் நம்ம மொட்டையை போல பெரிய ஆளுடா ! "

" டேய் முபாரக் !உன் மாமாடா ! "

ஸ்டைலாய் தம் இழுத்தபடி கடைக்கண்ணால் பெண்களை பார்த்துகொண்டே உச் கொண்டி கொண்டிருந்தவன் சகாயம் அண்ணன் அலர்ட் கொடுத்ததும் சட்டென எழுந்தான்...

" டேய் ! அந்த முப்பதாவது பக்கத்தை படிச்சி பாரு...இன்னாமா எழுதியிருக்காரு தலைவரு ! "

புத்தகத்தை சட்டென மூடி என் கையில் திணித்துவிட்டு போயே போய்விட்டான் !

சில நிமிடங்களிலேயே முபாரக்கை பாலகுமாரன் விசிறியாய் மாற்றியதில் நான் மகிழ...

" டீ ! ஏதோ தீயிற ஸ்மெல் வருதுல்ல ! "

பெண்கள் கூட்டம் கிசுகிசுக்க...

" சொல்றாங்கள்ல... அவன் சொன்ன முப்பதாம் பக்கத்தை பாரு ! "

சகாயம் அண்ணன் நமுட்டு சிரிப்புடன் கூற, புரியாமல் புத்தகத்தை திறந்தேன்... மாமாவிடமிருந்து முபாரக் மறைத்த சிகரெட் துண்டு... பாலகுமாரன் பல பங்கங்களுக்கு பொத்தலாகியிருந்தார் !

முபாரக் மீன்டும் வருவான் !

 இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.